Saturday, August 25, 2007

Akonம் அஸினும்



Akonனின் அண்மையில் வெளிவந்த பாடலிது. ஒரு பலவீனமுள்ள மனிதனாய், தான் பிறருக்குத் தீங்கிழைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களுக்கும் மன்னிப்புக் கேட்கின்றார். ஆரம்ப காலங்களில் கார்களைத் திருடுபவராய் இருந்ததிலிருந்து(அதில் பிடிபட்டு ஜெயிலில் சில வருடங்களாய் இருந்திருக்கின்றார்) சமீபத்தில் நடந்த அனைத்துச் சம்பவங்கள் வரை எல்லாவற்றிற்கும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கின்றார். முக்கியமாய் அண்மையில் கரீபியன் தீவுகளின் கிளப் ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும்போது பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்ணோடு தகாத வழியில் ஆடியிருந்தார் என்ற சம்பவம் அனைவரும அறிந்ததே. 21 வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்காத கிள்ப்பிற்கு எப்படி ஒரு பதினெட்டு வயதுக்குட்டபட்ட பெண் வருவார் என்று தான் எதிர்பார்க்கமுடியும் என்று இப்பாடலில் Akon கூறுகின்றபோதும், அந்தச் சம்பவத்திற்காய் வெளிப்படையாக அவர் மன்னிப்புக்கேட்கின்றார். அத்தோடு அந்தச்சம்பவத்தால் மூடப்பட்ட கிளப்பிற்கும், மேலும் இதனால் வெரிஸன் வயர்லஸின் பெரும் விளம்பரத்திலிருந்து தான் நீக்கப்பட்டதையும் தெரிவிக்கின்றார். இவ்வாறான சம்பவங்களைச் செய்துவிட்டு அதையொரு வீரதீரச்செயலாய் ராப் பாடல்களில் பாடிக்கொண்டிருப்பவர்கள் போலல்லாது தனது குறைகளை குறைகளாகவும் அப்படி நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்கவும் செய்கின்ற Akonனின் ஆளுமை, அவரது பாடல்களைப்போல என்னை வசீகரிக்கின்றன.

...I'm sorry for the hand that she was dealt
And for the embarrassment that she felt
She's just a little young girl trying to have fun
But daddy should of never let her out that young

I'm sorry for Club Zen getting shut down
I hope they manage better next time around
How was I to know she was underage
In a 21 and older club they say

Why doesn't anybody want to take blame
Verizon backed out disgracing my name
I'm just a singer trying to entertain
Because I love my fans I'll take that blame...


அவரது அழகான 'ஆபிரிக்கா தாய்' (Mamma Africa) பற்றிக்கூறும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். எத்தனை குறைகள் இருந்தாலும், தாய் நாடு தரும் சுகத்திற்கு இணையேது?


......
நயன்தாரா இரசிகர்களைச் சந்தோசப்படுத்துகின்றேன் என்று வி.ஜெ.சந்திரன் இப்பதிவில் (கடைசிப்பாடலிற்கு முதல்) எங்களின் அஸினை இருட்டிப்புச் செய்து அஸினின் அருமையான நடனத்தை மறைத்து, நயன்தாராவை சிம்புவோடு சேர்க்கஸ் ஆடவைத்ததைக் கண்டித்து அசல் பாடல் இங்கே...

Friday, August 17, 2007

எனக்கும் அ.முத்துலிங்கத்தைப் பிடிக்கும்தான்....எப்போது என்றால்....?

நீங்கள் ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் தீவிர வாசகர்கள் என்றால் நேரடியாக ஜெயமோகனின் குறிப்பை வாசிக்கவும் (தயவு செய்து கொஞ்சம் மவுஸைக் கீழே கொண்டு போகவும்) . மற்றவர்கள் விரும்பினால் இவனென்ன -வழக்கம்போல- அலட்டுகின்றான் என்று பார்க்கவிரும்பின் என்னுடைய குறிப்புக்களையும் வாசித்துவிட்டுச் செல்லவும்.)

ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் தொகுப்பொன்றை முன்வைத்து எழுதிய உரையொன்றை கீழே பதிவிலிடுகின்றேன். ஷோபா சக்தி போன்ற படைப்பாளிகளே, 'திரு.மூடுலிங்க' என்று அ.முத்துலிங்கத்தின் 'பாதிப்பால்' அலசிப் பிழிந்து கதையெழுதும்போது என்னைப்போன்றவர்கள் அ.முத்துலிங்கத்தை வாசிக்காவிட்டால், தமிழ் கூறும் நல்லுலகம் வாசகர்களின் பட்டியலில் என்னைச் சேர்க்காது என்பதும் நன்கு தெரியும்..

'தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர்.' என்று ஜெயமோகன் சொல்வதை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. நானும், அ.முத்துலிங்கத்தின் கதைகளை/கட்டுரைகளை 'சுவாரசியத்துடன்' வாசிப்பதை மறைக்க வேண்டிய அவசியமுமில்லை.

ஜெயமோகன், எழுதிய இந்தப்பதிவு குறித்து சில விடயங்கள் எழுத விருப்பு உண்டு. ஆனால் ஏற்கனவே சில இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக்கேள்வி கேட்டதற்கே, உனக்கென்ன தெரியுமென்று எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்துத் திட்டியவர்கள்தான் இந்தக்கணத்தில் பயமுறுத்துகின்றார்கள் :-). ஆனால் அது கூடப்பரவாயில்லை; 'நான் நாய்தான் குரைக்கத்தான் செய்வேன்' என்று அந்தப் பல்லக்குத்தூக்கிகளுக்கு எதிராய் எழுதியதை -நண்பரொருவர் எதிர்ப்பார்க்காமல்/கேட்காமல்- அச்சுப்பிரதியொன்றில் எடுத்துப்போட்டதுதான் இன்னும் கூட வினையாகிவிட்டது.. எழுதப்பட்டது எந்தச்சந்தர்ப்பம் அல்லது அந்தக்கவிதை எதைக் கூறவருகின்றது என்றறியாமல் யாரோவொரு நாய்ச்சித்தர் என்னோடு (?) அச்சுப்பிரதியொன்றில் சொறிந்துகொண்டிருக்கின்றார். அவரை நோக்கி நான் மீண்டு வள்ளெனப் பாய்வதா அல்லது வாலையாட்டியபடி பாதம் பணிந்து அவர் கால் நக்குவதா என்று அவதியில் தற்சமயம் நிற்கின்றேன் (இதைவிட நீண்டகாலமாய் ஏன் அஸினின் படமொன்றும் வரவில்லை என்ற கவலையும் உண்டு) ஆகவே, இப்போது ஜெயமோகனின் பதிவை அலசி ஆராய்ந்து நீண்ட பதிவெழுதும் எண்ணமிலை என்க.

சின்னதாய் சில குறிப்புகள் மட்டும்:
(1) பதிவில் வரும் உரையாடலில் ஜெமோ அறிந்தோ அறியாமலோ ஒரு உண்மையைக் கூறிவிடுகின்றார்...

''படிச்சிட்டேன் சார். சூப்பர். சிரிச்சு சிரிச்சு மண்டைக்குள்ள ஒருமாதிரி டிரா·பிக் ஜாம் ஆயிட்டேன் சார்... ''என்றபடி சிரிக்க ஆரம்பித்தார். ''யார் சார் இவரு?'' என்றார்.

''இலங்கைக்காரர் சார்''

நண்பரால் நம்ப முடியவில்லை''அப்டியா சார்? அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க


ஆக, இங்கே அ.முவை வாசித்த -அ.மு எந்த நாட்டுக்காரர்- என்றறியாத சக பணியாளருக்கு வியப்பு வருகின்றது....அதாவது 25 வருடங்களாய் போர் தீவிரமாய் நடக்கின்றதாய் சொல்லப்படும் நாட்டிலிருந்து வந்தவரின் ஒரு முழுத்தொகுப்பிலிருந்து ஒரு சிறுகுறிப்புக்கூட போரின் வடுவை வாசிப்பவருக்கு ஏற்படுததவில்லை என்றால், அ.மு எவரை அடையாளப்படுத்துகின்றார் என்ற கேள்வி வருகின்றது.
இதுவே முக்கிய புள்ளி. இங்கிருந்து தான் அ.முவின் படைப்புகளின் எழுச்சியும் (பரவலாய் பலரைப் போய்ச் சென்றடைவதும்), வீழ்ச்சியும் ஆரமபிக்கின்றது.

போருக்குள் வாழ்ந்திருக்கவேண்டும் என்றுதானில்லை. புலம்பெயர்ந்து இருக்கும்போதே வானொலி, பத்திரிகை, இணையம் இன்னும் எத்தனையோ ஊடகங்களால் நாம் எம்மண்ணின் நிகழ்வுகளோடு தொடர்புபட்டிருக்கின்றோமே... அவை எதுவும் கூட அ.முவை பாதிக்கவில்லையா? அட, போர் நடக்கும் ஈழத்தில் வாழாத எத்தனையோ தமிழகத்து நண்பர்கள்கூட தமக்கான புரிதல்களுடன் அக்கறையுடன் ஈழ அரசியல் குறித்து எத்த்னை குறிப்புகள் எழுதிக்கொண்டிருக்கின்றனரே? இப்படியொரு தொகுப்பில் போர் நடைபெற்ற நாட்டிலிருந்து நீங்கள் வந்தீர்கள் என்பதை சிறுகுறிப்பில் கூட வாசகருக்கு உணர்த்தாமல் இருப்பது அவமானம் அல்லவா அ.மு?

(2) ஜெயமோகன் இந்தப்பதிவில் அ.முத்துலிஙகம் எந்த சாதி என்பதைக் குறிப்பிட்டுகின்றார். இதற்கு முன், அ.முத்துலிஙகம் தான் இன்ன சாதியென்று எங்கையாவது தனது எழுத்தில்/நேர்காணலில் குறிப்பிட்டிருந்தாரா? இதையேன் அ.முவின் பின்புலம் அறியவிரும்பாதா/ இதுவரை அறியாத ஒரு வாச்கருக்கு வெளிப்படையாக ஜெமோ முன்வைக்கவேண்டும்? ஒரு எளிய கேள்வியாக, 'இப்படிச் சாதியை வெளிப்படையாகக் கூறுவதில், உயர்சாதியிலிருந்து ஒரு நல்லதொரு படைப்பாளி வந்திருக்கின்றார் என்று பூடகமாய் வெளிப்படுத்தும் அரசியல் தான்' இது என்று நான் சொன்னால் என்ன எதிர்வினையாக ஜெமோவினது இருக்கும்?

சரி, அ.மு 30 வருடங்களுக்கு முன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டார், அவரால் ஈழ அரசியல் குறித்து பேசக் கஷ்டந்தான் என்று சும்மா ஒரு சாட்டுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு உயர்சாதி ('Quote noted:'வேளாளராக') ஈழத்திலிருந்த அ.மு தனது படைப்புக்களில் ஈழத்தில் பஞ்சமர்கள் ஒடுக்கப்பட்டதை எங்கையாவது வெளிப்படையாக எழுதியிருக்கின்றாரா? அந்த ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கை முறை குறித்து எங்கேனும் கரிசனையாக பதிவுசெய்திருக்கின்றாரா? எங்களைப்போன்ற சந்ததிகளுக்குத்தான் போர் வ்ந்து சாதிப்போராட்டங்கள் குறித்து அறியமுடியவில்லை என்றாவது கூறமுடியுமென்றாலும், பஞ்சமருக்கான போராட்டங்கள் தீவிரமாய் நடைபெற்ற காலங்களில் அ.மு ஊரிலிருந்த போதும் ஏன் அதைத் தனது படைப்புகளில் இன்றுவரை வெளிப்படுத்தாது மவுனஞ்சாதித்துக்கொண்டிருக்கின்றார்? எழுத்தாளருக்கென்று இருக்கவேண்டிய கொஞ்ச நஞ்ச அறத்தையாவது அ.முத்துலிங்கத்திடம் என்னைப்போன்றோர் எதிர்பார்ப்பது தப்பா? அது குறித்துக்கூட ஜெயமோகன், நீங்கள் உங்கள் வாயை சிப் (ஜிப்) போட்டு இழுத்துமூடிவிட்டு ஆகா ஓகோவென்று பாராட்டிக்கொண்டிருப்பது எத்தகைய அரசியல்?

(3) ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் விமர்சனப்பார்வைகள் கூட 'மிகக்கறாரானவை' என்கின்றார். என்னைப்பொறுத்தவரை, எல்லோருக்கும் நல்லவராய் இருந்து எல்லா இலக்கிய இதழ்களுக்கும் அ.முத்துலிஙக்ம் படைப்புக்கள் அனுப்புவதுபோலத்தான், அவரது அநேக விமர்சனங்களும் நிறையப் பாராட்டிவிட்டு எளிமையாக நின்றுவிடும். உதாரணத்திற்கு இதைப்பாருங்கள்.

திருவள்ளுவர் எத்தனை நூல்கள் எழுதினார். ஒன்றுதான், அது திருக்குறள். கணியன் பூங்குன்றனார் 1800 வருடங்களுக்கு முன்னர் படைத்த ஒரு கவிதைக்காக இன்றுவரை போற்றப்படுகிறார். ஹார்ப்பர் லீ தன் வாழ்நாளில் எழுதிய புகழ் பெற்ற ஒரேயொரு நாவல் To Kill a Mocking Bird. பிரிட்டிஷ் இளம் பெண் Emily Bronte படைத்த வாழ்நாள் சாதனை இலக்கியம் Wuthering Heights.

இந்த வகையில் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூல் அடங்கும். ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது.


பரீட்சைத்தாள்களில் கேள்வி வருவதுபோல, ஜெமோ இந்தக் கட்டுரையிலுள்ள 'கறாரான விமர்சனம்' எதுவென்பதை எங்களுக்காய் கட்டுடைப்பாரா?

(4) அ.முத்துலிஙக்ம், இங்குள்ள மற்றமொழி எழுத்தாளர்களோடு சந்தித்ததை காலச்சுவட்டிலோ, உயிர்மையிலோ தொடர்ந்து எழுதிக்கொண்டு வந்திருந்தார். நானும் அதை விருப்புடன் வாசித்து, சிலாகித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன் (இங்கிருந்து தோழியொருவர், தனக்கும் தொடர்ந்து செலவுக்கு பணம் வந்து, அ.முத்துலிங்கம் போல நேரங்கிடைத்தால் இதைவிட இன்னும் சிறப்பாகச்செய்வேன், நீயேன் இப்படி வியக்கின்றாய் என்பார்.)

அதுவல்ல விசயம், அ.மு, மேரி ஆன் மோகன்ராஜ் பற்றி எழுதிய குறிப்புத்தான் அ.முத்துலிங்கம் எழுதிய மற்றக்குறிப்புகள் குறித்து என்னை யோசிக்க வைத்தது. . மிக எளிமையாக மேரியின் கதைகளைப் புரிந்துகொண்டு ஒரு பதிவு எழுதியிருந்தார். மேரியின் படைப்புக்களின் ஆழங்களுக்குச் செல்வதை விடுத்து, அவரை எப்படி நேர்கண்டேன், என்ன மேரி அப்போது செய்துகொண்டிருந்தார் என்றெழுதுவதில்தான் அதிக அக்கறையைத்தான் அ.மு. அதில் எடுத்திருந்தார்.

அந்த எரிச்சலில்தான், அந்தப்பதிவு 'பதிவு'களில் வந்தபோது, எற்கனவே வலைப்பதிவுகளில் எழுதியிருந்த மேரியின் படைப்பை நான் 'பதிவுகள்' இணையத்தளத்துக்கு அனுப்பியிருந்தேன். ஆக, 'கறாரான விமர்சனத்தை முத்துலிஙகம் செய்கின்றார்' என்று பெருமிதமாய் கூறும் ஜெமோ, -நீங்களும், அமுவும் மாறி மாறி முதுகுசொறியும் நட்புக்காகத்தான்- இப்படி பெருந்தன்மையாய்ப் பாராட்டியிருக்கின்றீர்கள் என்று நான் கூறினால் கோபப்படமாட்டீர்கள்தானே?

எப்படி சிறுகதைகள் இருக்கவேண்டும் என்று 'பதிவு'களில் எங்களுக்கு ஜெயமோகன் வகுப்பு எடுத்ததுமாதிரி, விமர்சனம் எழுதுவது எப்படியென இப்போது வகுப்பு எடுக்க - 'நான் கடவுளில்' ஜெ.மோ பிஸியாக இருப்பதால்- அவருக்கு நேரம் இருக்காது என நினைக்கின்றேன். (இதே சமயம் ஆரம்பத்தில் பாவனாவை நடிக்க வைக்க இருந்த பாலாவையும், பாவனாவை படத்தின் இடைநடுவில் விலத்தியபோது அதற்கு- பாவனாவின் தீவிர இரசிகர்கள்- மனம் புண்படும் என்று எதிர்ப்புக்குரல் சிறிதும் கொடுக்காத ஜெ.மோவையும் கண்டிக்கின்றேன்).


சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

-ஜெயமோகன்

என் அலுவலகத்தில் அ.முத்துலிங்கத்தின் இந்தக் கட்டுரைத்தொகுதியை மேஜைமேல் வைத்திருந்தேன். ஒரு சக ஊழியர் பார்த்துவிட்டு சும்மா மேஜைமேல் வைத்தே புரட்டிப்பார்த்தார். ஏதோ சினிமாபற்றிய கட்டுரை அவருக்கு ஆர்வமூட்ட அதை படித்துப் பார்த்தவர் அப்படியே படிக்க ஆரம்பித்துவிட்டார்.


''சார் படிச்சுட்டு குடுத்திடறேனே'' என்றார்.

எனக்கு பயம். நான் அதைப்பற்றி படித்துவிட்டு பேசவேண்டியிருக்கிறது. நண்பருக்கு எதையுமே படிக்கும் பழக்கம் கிடையாது.

ஏற்கனவே ஒருமுறை இந்த நண்பர் என் மேஜைமேல் இருந்த ஒரு நூலை எடுத்துப் பார்த்துவிட்டு ''இது எப்டி சார் வாராவாரம் வருமா?'' என்று கேட்டவர்.

''இல்லீங்க, இது ஒண்ணுதான் வரும்'' என்றேன், எப்படி விளக்குவது என்று தெரியாமல்.

''மாசாமாசமா சார்?''.

நான் பொறுமை காத்து ''சார் இது இப்டி ஒண்ணுதான் சார் ...தொடர்ச்சியா வராது''என்றேன்.

''நிறுத்திட்டானா?''என்றபடி அதைப்புரட்டிப்படித்து ''எண்பது ரூபாயா? அச்சடிச்ச தாளுக்கா? என்னசார் அநியாயமா இருக்கு!'' என்றார்.

''ஏன் சார்?'' என்று பரிதாபமாகக் கேட்டேன்

'சார் விகடனேகூட பத்து ரூபாதானே? எம்பது ரூபா போட்டா எவன் வாங்குவான்? அதான் நின்னிருச்சு'' என்றார்.

நண்பர் நன்றாக படித்து நல்ல பதவியில் இருப்பவர். ஆனால் அவர் பாடநூல்கள், இதழ்கள் தவிர நூல்கள் என ஒரு விஷயமும் உண்டு என்பதையே அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட நண்பர் புத்தகத்தை இரவல் கேட்கிறார். ஆனால் அவர் ஒன்றை நினைத்தால் நடத்தாமல் விடமாட்டார். என்னால் எதையும் எவருக்கும் மறுக்கவும் முடியாது. கொண்டுபோய்விட்டார்.

நான்காம் நாள் திருப்பிக் கொண்டுவந்தார். சரிதான், இரும்புக்கடலை கடித்து பல்வீக்கம் என நான் நினைத்தேன்.''படிச்சீகளா சார்?''என்றேன்.

''படிச்சிட்டேன் சார். சூப்பர். சிரிச்சு சிரிச்சு மண்டைக்குள்ள ஒருமாதிரி டிரா·பிக் ஜாம் ஆயிட்டேன் சார்... ''என்றபடி சிரிக்க ஆரம்பித்தார். ''யார் சார் இவரு?'' என்றார்.

''இலங்கைக்காரர் சார்''

நண்பரால் நம்ப முடியவில்லை''அப்டியா சார்? அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க?''.

நான் ''கஷ்டம் இருந்தாத்தானே சார் நல்லா சிரிப்பு வருது?'' என்றேன்.

''ஆமா சார். எங்கம்மா சொல்லுவா, எங்கப்பா செத்துப்போய் பிள்ளைகளோட தனியா நின்னப்போ அழுது அழுது தீந்துபோய் ஒருநாள் ராத்திரி சிரிச்சுட்டாளாம். அன்னையோட கஷ்டம் போச்சுடான்னு சொல்வாள்.வாஸ்தவம்''என்றார் ''என்ன சார் வேலபார்த்தார்?''

''இவரு பெரிய அதிகாரியா வேல பார்த்தார் சார்...''

''சும்மாருங்க சார்,வெளையாடாதீங்க...''

''இல்ல சார் நிஜம்மாவே பெரிய அதிகாரிதான்''

''சார் எனக்கு முப்பதுவருச சர்வீஸ். நான் இன்னை தேதிவரை சிரிக்கிற மூஞ்சியோட ஒரு அதிகாரிய பாத்தது இல்ல...நிஜம்மாவே அதிகாரியா, இல்ல அதிகாரி மா....திரியா?''

நான் யோசித்து ''ஐநாவிலே இருந்தார்...'' என்றேன்.

''அது சரி, ஐநாவே நம்ம சுப்பிரமணியம் சாமி மாதிரி ஒரு ஜோக்குதான் சார்''. என்றபின் ''சார் நான் இதைப் படிச்சிட்டு குடுக்கறேன்''என்று நான் அதிர்ச்சியில் வாய் திறக்கும் முன் கோணங்கியின் 'பொம்மைகள் உடைபடும் நகர'த்துடன் நடந்து போனார்

நண்பர் மிக பரபரப்பான ஆள். விவசாயம் உண்டு. ஆகவே இரவு பதினொரு மணிக்குமேல் பன்னிரண்டுமணிவரைத்தான் படிக்க நேரம் கிடைக்கும். அந்நேரத்தில் தூங்காமல் உட்கார்ந்து படித்தேன் என்றார். அதன் பின் என் மனைவியும் அதேபோல நள்ளிரவில் விளக்கைப் போட்டுக்கொண்டு இதைப்படிப்பதைக் கண்டேன். இவ்வளவுக்கும் இது ஒரு கதைத்தொகுப்பு அல்ல. இது கட்டுரைத்தொகுப்பு.

* ஒரு உயர் அதிகாரி. சிறு வயதில் மாணவராக இருந்த போது கைலாசபதியால் தூண்டுதல் அடையப்பெற்று அக்கா என்று ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டார். அதன் பெரிய வேலைக்கு போய் விட்டார். ஈழ இனப்பிரச்சினை காரணமாக வெளியேறி சியரா லியோன் சென்றார். அங்கிருந்து ஐநா அதிகாரியாக ஆப்ரிக்கா மேற்காசியா நாடுகளில் வேலைக்குச் சென்றார். அந்நாட்களில் பல வருட உழைப்பின் விளைவாக கணிப்பொறி மென்பொருளை நிர்வாக இயலுக்கு பயன்படுத்துவது பற்றி தடிமனான மூன்று பகுதிகள் கோண்ட ஒரு நூலைஎ ழுதினார். அது புகழ் பெற்ற மேலைநாட்டு பதிப்பகம் ஒன்றால் வெளியிடப்பட்டது. நூல் வெளிவந்த சில மாதங்களில் அந்த மென்பொருளே இல்லாமலாயிற்று

மனம் சோர்ந்திருந்த நாளில் இலங்கை சென்றபோது அங்கெ ஒரு இலக்கியக்கூட்டத்தில் ஒருவர் அக்கா தொகுதியின் ஒரு கதையைக் குறிப்பிடுவதைக் கேட்டார். முப்பது வருடமாகியும் இலக்கியம் காலாவதியாகவில்லை! நான் கூட அக்கா தொகுதி பற்றி அப்போது எழுதியிருக்கிறேன்.

அதன்பின்னர்தான் * இலக்கியத்துக்கு வந்தார். இனி தன் வாழ்நாள் முழுக்க இலக்கியத்துக்கே என எண்ணும் * இலக்கிய சர்ச்சைகளுக்குக் கூட ஒதுக்க நேரம் இல்லை என்று எண்ணுபவர். இன்று தமிழில் மிக விரும்பி படிக்கப்படும் முக்கியமான எழுத்தாளர். இத்தனை நாள் வரலாற்றில் எந்த ஈழ எழுத்தாளரும் தமிழ்நாட்டில் இத்தகைய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றதில்லை

தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர். ஆனால் அ.முத்துலிங்கம் வணிக எழுத்தாளர் அல்ல. எழுத்தை ஒவ்வொரு கணத்திலும் தீவிரமாகவே அணுகிய இலக்கியவாதி. அவ்வகையில் அவரை நாம் புதுமைப்பித்தனின் மரபுவரிசையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தவேண்டும். கி.ராஜநாராயணன்,நாஞ்சில்நாடன் வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்தமாக இவர்களை சுவாரஸியமான எழுத்தாளர்கள் என்று சொல்கிறோம். நீண்டநாளாக தமிழ்ச் சிற்றிதழ் உலகில் சுவாரஸியம் என்பது இலக்கியத்துக்கு எதிரான ஒன்று என்ற எண்ணம் இருந்தது. இலக்கியம் என்றால் சுவாரஸியமே இல்லாமல் வரண்டுதான் இருக்கும் என்ற மனப்பிம்பம். தமிழ் சிற்றிதழ்களுக்கு அழகியல் ரீதியாக இரண்டு முகங்கள்தான் இருந்தன. ஒன்று இயல்புவாதம்[ நாச்சுரலிசம்] இன்னொன்று அதிலிருந்து சற்றே முன்னகர்ந்த நவீனத்துவம்.

அன்று ஓங்கி நம் பண்பாட்டையே நிறைத்திருந்த வணிக இலக்கியத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டு சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தமிழ் சிற்றிதழ் உலகம் என்பதைக் காணலாம். ஒருபக்கம் அகிலன்,நா.பார்த்த சாரதி, சாண்டில்யன் என பெரும் பட்டியல். லட்சக்கணக்காக விற்கும் இதழ்கள். லட்சக்கணக்கான வாசகர்வட்டம். பணம் புகழ் . அதற்கு எதிராக இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்களில் தமிழ் நவீன இலக்கியம் உருவானது.

அந்த வணிக எழுத்து சுவாரசியத்தையே அடிப்படையாகக் கொண்டது. மிதமிஞ்சிய கற்பனாவாதம் மூலமும் செயற்கையான உத்திகள் மூலமும் சுவாரஸியத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது அது. ஆகவே நவீன இலக்கியம் சுவாரஸியத்துக்கு எதிராக ஆகியது. வாழ்க்கை அப்படி கனவுக்கொந்தளிப்பாகவும் திடுக்கிடும் திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்ததாகவும் இல்லை என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் வலுவாக உருவாயிற்று.

வாழ்க்கை சலிப்பூட்டுவது. சாதாரணமான விஷயங்களால் ஆனது. அதை அப்படியே சொல்ல முயல்வதுதான் இலக்கியம் என்று எண்ணினார்கள். இந்த நோக்கே இயல்புவாதத்தை உருவாக்கியது. நீல பத்மநாபன், ஆ.மாதவன் ஆ.மாதவன் போன்றவர்களை இதற்கு சிறந்த முன்னுதாரணமாகச் சொல்லலாம். இங்கே நவீனத்துவம் உருவானபோது இயல்புவாதத்தின் நீட்சியாக அது இருந்தது. இயல்பான அன்றாடவாழ்க்கையின் தளத்தில் வைத்து வாழ்க்கையின் சாரமின்மையையும் மனிதவாழ்க்கையின் தனிமையையும் அது பேசியது.இப்போக்கின் முன்னுதாரணமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்றவர்கள்.

நவீனத்துவம் பின்னகர்ந்த காலகட்டத்தில் இலக்கியம் தன்னை உருமாற்றிக் கொண்டபோது மீண்டும் கற்பனைவீச்சுக்கும், வாசிப்புச் சுவாரஸியத்துக்கும் முன்னுரிமை அளிக்க ஆரம்பித்தது. இறுக்கமான வடிவமுள்ள படைப்புக்குப் பதிலாக நெகிழ்வான ஆனால் சிக்கலான அமைப்புள்ள படைப்புகள் வெளிவந்தன. அ.முத்துலிங்கம் அந்த மாற்றத்தை முன்னெடுத்த படைப்பாளி.

ஓர் எழுத்தின் ஆழம் என்பது அதன் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், கருத்துச் சரடு ஆகியவற்றில் உருவாகும் நுட்பமான மோதலின் விளைவாக உருவாவது. ஆழம் என்பது எப்போதும் ஒரு முரணியக்கமாகவே உள்ளது. ஆழத்தை நிராகரிக்கும் இலக்கியப் படைப்பு இருக்க முடியாது. ஆழம் என்று ஏதுமில்லை, மேல்தளம் மட்டுமே உள்ளது என்று வாதிடும் பின்நவீன இலக்கியப்படைப்புகளுக்கும் இது பொருந்தும். ஒரு எழுத்தை இலக்கியமாக்குவது அதன் ஆழமேயாகும்.

ஆனால் இன்றைய 'நவீனத்துவத்துக்கு பிறகான எழுத்து' என்பது எப்படியோ சுவாரஸியத்தை கட்டாயமாக்குகிறது. பிடிவாதமாக அதற்கு எதிரான நிலை எடுக்கும் சில படைப்புகள் உண்டு. அவை தங்களை காவியமாகவோ ஆய்வாகவோ ஆவணத்தொகையாகவோ உருவகம்செய்துகொள்ளும் படைப்புகள். ஆனால் இன்றைய சூழல் என்பது சுவாரஸியம் தேவை என்று வலியுறுத்துகிறது.

முதல் காரணம் இன்றைய எழுத்துப்பெருக்கம். நவீனத்துவம் ஆண்ட காலத்தில் தமிழில் வருடத்துக்கு நாநூறு நூல்கள் வெளிவந்தன. இப்போது பன்னிரண்டாயிரம் நூல்கள் வெளிவருகின்றன. இதைத்தவிர இணையத்தில் வெளியாகும் ஆயிரக்கணக்கான பக்கங்கள். இந்த பெரும்பரப்பில் வாசகனை தன்னிடம் அழைக்கும் பொறுப்பு எழுத்துக்கு வந்துவிடுகிறது. தன்னை கவனிக்கச் செய்யவும் வாசிக்க வைக்கவும் அது முயல்கிறது. ஆகவே சுவாரஸியமான மேல்தளம் தேவையாகிறது. ஆய்வுக்கட்டுரைகள் செய்திக்கட்டுரைகள் எல்லாமே சுவாரஸியமாக எழுதப்பட்டாக வேண்டுமென்ற நிலை படிப்படியாக உலகமெங்கும் உருவாகி வருகிறது.

இந்த இயல்பை இன்றைய எழுத்துக்களில் நாம் சாதாரணமாகக் காணலாம்.லெஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களின் எழுத்து இந்த சுவாரஸிய அம்சத்துக்கு முக்கியத்துவமளிப்பதைக் காணலாம்.


சுவாரஸியம் என்பது என்ன? எப்படி உருவாகிறது அது? எதற்காக நாம் சிரிக்கிறோம்?திரைப்பட நண்பர் ஒருவர் சொன்னார், நமது கதாநாயக நடிகர்களை தெலுங்கிலும் கன்னடத்திலும் கொண்டு செல்ல முடியும். நகைச்சுவை நடிகர்களை தமிழை விட்டு வெளியே எடுக்க முடியாது. காரணம் அவர்கள் மண்ணுடன் கலந்தவர்கள் என.

சுவாரஸியம் என்பது ஒரு பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. ஒரு பண்பாட்டின் உணர்ச்சிகரமான ஈடுபாடுகள், வெறுப்புகள், இடக்கரடக்கல்கள் ஆகியவற்றை அறிந்த ஒருவரால்தான் அப்பண்பாட்டின் நகைச்சுவையை ரசிக்க முடியும். நகைச்சுவை என்பது இப்படிப்பட்ட 'பண்பாட்டு ஒழுங்குமுறைகள்' மூலம் அன்றாட வாழ்க்கையில் உருவாகும் அபத்தத்தை சுட்டிக்காட்டுவதன் மூலமே நம்மைச் சிரிக்க வைக்கிறது.

இதற்குச் சிறந்த உதாரணமாக இந்நூலில் உள்ள அக்காவின் சங்கீத சி¨க்ஷ என்ற கட்டுரையைச் சுட்டிக்காட்டலாம். கட்டுப்பெட்டியான யாழ்ப்பாணத்து வேளாளச் சூழலை நம் மனத்தில் உருவகித்துக் கொள்ளும்போதே ''தெருவில் வாரானோ என்னை திரும்பிப்பாரானோ'' என்று ஒரு கன்னிப்பெண் பாடி இசைபயிலும்போது ஏற்படும் அபத்தம் உறைக்கிறது.

கல்கி ஒரு குட்டிக்கதையை ஒரு இடத்தில் சொல்கிறார். நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம். அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகள் குளத்தில் விழுந்து கால் ஒடிந்துவிட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ''டேய், நீ என்ன பண்றே , ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே? ''ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீ புஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளிக் கொண்டிருக்கிறார்' அப்டீன்னு சொல்லணம் புரியறதோ?''

சரி என்று குப்பன் ஓடிப்போய் நான்குநேரி மடத்தில் ஜீயரைக் கண்டு சுருக்கமாகச் சொன்னான் ''மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்''

இந்த நகைச்சுவையில் நாம் சிரிப்பது அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீயில் உள்ள நீண்டகால பண்பாடு ஒன்றின் உள்ளீடற்ற படோடோபத்தைப் பார்த்துதான். நகைச்சுவை என்பது எப்போதும் நுண்ணிய பண்பாட்டு விமரிசனமாகவே அமைகிறது. தன் எழுத்தின் முதல்தளத்தில் மென்மையாக இந்த விமரிசனத்தைப் படரவிட்டிருப்பதனாலேயே அ.முத்துலிங்கத்தின் எல்லா எழுத்தும் நம்மால் சிறு புன்முறுவலுடன் படிக்கப்படுகிறது. அக்காவும் அவரும் சேர்ந்தே படிக்க ஆரம்பித்தவர்கள். 'அக்கா மு.வரதராசனார், நா.பார்த்த சாரதி என்று படிப்படியாக முன்னேறி இப்போது ரமணி சந்திரனை எட்டியிருக்கிறாள்' என்ற வரி மூலம் அ.முத்துலிங்கம் முன்வைப்பது மிக ஆழமான ஒரு பண்பாட்டு விமரிசனத்தை.

ஆனால் அ.முத்துலிங்கம் ஒருபோதும் நக்கல் செய்வதோ மட்டம் தட்டுவதோ இல்லை. பண்பாட்டின் பலதளங்கள் பல முகங்களைப்பற்றிய புரிதல் கொண்ட ஒருவரின் சமநிலை எப்போதும் அவரிடம் உள்ளது. ஒவ்வாத விஷயங்களை நோக்கி ஒரு சிறு புன்னகையே அவரது எதிர்வினையாக இருக்கிறது.

சுவாரஸியத்தை உருவாக்கும் இரண்டாவது அம்சம் நடையழகு. நடை என்று நாம் சொல்லும்போது எப்போதும் மொழியையே உத்தேசிக்கிறோம். ஆனால் மொழித்தேர்ச்சிக்கும் நடைக்கும் தொடர்பே இல்லை. நல்லநடை என்பது முழுக்க முழுக்க கவனிப்புத்திறன் சார்ந்தது. வெளியுலகையும் அக உலகையும் கூர்ந்து பார்ப்பதும் அவற்றை துல்லியமாகச் சொல்லி விட முயல்வதுமே நல்ல நடையாக ஆகிறது. நல்ல நடை என்று சொல்லப்படும் படைப்புகளை கூர்ந்து ஆராயுங்கள் அவற்றில் மொழியாலான சித்திரங்கள் நிறைந்திருக்கும்.

அ.முத்துலிங்கம் ஒரு கதையில் கனகி என்ற பெண்ணைப்பற்றிச் சொல்கிறார். அவள் வாய் மூடியிருக்கும்போதும் வட்டமாக இருக்கும். அத்துடன் ஓர் உவமை. மீனின் திறந்த வாய் போல.

இத்தகைய வர்ணனை என்பது குழந்தைத்தனம் மிக்க ஒரு கவனிப்பினூடாக உருவாகக் கூடியது என்பதை கவனிக்கலாம். உலகத்தின் சிறந்த இலக்கிய நடை எல்லாமே உள்ளே ஒரு குழந்தைப்பார்வையை கொண்டிருக்கிறது. உலகம் நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தொடர்ந்து பழகி வருகிறது. அதன் புதுமையால் நாம் உலகை அடையாளப்படுத்துவதில்லை அதன் பழகிய தன்மையால் அடையாளப்படுத்துகிறோம். குழந்தைகள் உலகை எப்போதும் புதிதாகப் பார்க்கின்றன. வேறுபாடுகளால் அடையாளப்படுத்துகின்றன. இலக்கியமும் அதையே செய்கிறது.

அப்படி அவதானிப்பைச் சொல்லும் போது எழுத்தாளனின் மன இயல்பும் வந்து கலந்துகொள்கையிலேயே நடை முழுமைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் கல்விமான்களும் சாதாரணர்களும் ஒன்றாக ஒரே ரொட்டியை பிய்த்து தின்பார்கள். கல்விமான்கள் ஏழாம் வாய்ப்பாடு தெரிந்தவர்கள். மற்றவர்கள் தெரியாதவர்கள் என்று ஒரு வரி வருகிறது. நட்பார்த்த ஒரு கிண்டல். ஒரு புன்முறுவல். இவை இரண்டும் கலந்ததே அ.முத்துலிங்கத்தின் நடை.

இந்த நூலின் முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு, இதுவரை சொன்னவற்றின் நீட்சியாகவே அதைக் கொள்ளவேண்டும். இந்த நூல் அ.முத்துலிங்கத்தின் பிரமிக்கத்தக்க பலதுறை அலைதலுக்கான சான்று. இதில் திரைப்பட விமரிசனங்கள்,உலக நவீன இலக்கிய நிகழ்வுகள், நூல் விமரிசனங்கள், மனிதர்களைப்பற்றிய குணச்சித்திரங்கள், நினைவோட்டங்கள், பல்வேறு அன்றாடவாழ்க்கைக் குறிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. ஒரு சமகால எழுத்தாளனின் அக்கறைகள் எந்த அளவுக்கு விரிய வேண்டுமென்பதற்கான சான்றுகளாக உள்ளன இக்கட்டுரைகள். கணிப்பொறி முதல் சமையல் வரை இவற்றின் கைகள் நீண்டு தொடுகின்றன.

இந்நூலுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு நூல் சுஜாதா எழுதி கணையாழியின் கடைசிப்பக்கமாக வெளிவந்துள்ள 'கணையாழியின் கடைசிப்பக்கங்கள்'. சுஜாதாவின் அக்கறைகளும் ஆண்டாள் முதல் அணுகுண்டு வரை நீள்கின்றன. ஓயாது தன் சமகாலத்தை எதிர்கொண்டபடியே இருப்பதன் பதிவுகள் இவை. அந்த கனத்த நூலையும் நாம் மிகச் சுவாரஸியமாக புன்னகையுடன் வாசித்துச் செல்ல முடியும்.

ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல அ.முத்துலிங்கத்தின் ரசனையும் தெரிவும் ஆழமானவையும் கறாரானவையும் ஆகும். தீபா மேத்தாவின் வாட்டர் படத்தையோ அல்லது கிரண் தேசாயின் நாவலையோ அவர் மதிப்பிடும்போது வெளிப்படும் கறார்தன்மை தமிழின் மிக ஆக்ரோஷமான விமரிசகர்களுக்கு நிகரானது, ஆனால் மென்மையான நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது, தீபா மேத்தாவின் காலைத்தொட்டு சீமா பிஸ்வாஸ் கும்பிடும்போது ''என்ன தொலைத்தார்கள்?''என்று கேட்கும் கனடாக்கிழவியின் சித்திரம் 'தண்ணீரின் ஓட்டம் பலவந்தமாக திசைதிருப்பப்பட்டிருக்கிறது, தண்ணீரை தண்ணீராகவே ஓடவிட்டிருக்கவேண்டும்' என்ற கடும் விமரிசனத்துடன் கலக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ஒரு சமகால கலை இலக்கியப் பயணத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. வெளிநாடுகளில் மிகுந்த பயிற்சியுடன் நகைச்சுவையும் தகவல் திறனும் கலந்து பேசி கொண்டுசெல்லும் வழிகாட்டிகளைக் கண்டிருக்கிறோம். அத்தகைய ஒரு தேர்ச்சிமிக்க வழிகாட்டியாக அ.முத்துலிங்கத்தின் குரல் நம்முடன் வருகிறது.

[11-08-07 அன்று மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை வெளியீடான அ.முத்துலிங்கத்தின் 'பூமியின் பாதி வயது' என்ற நூலை வெளியிட்டு ஆற்றிய உரை]

நன்றி: திண்ணை

Wednesday, August 15, 2007

மாயா அருள்பிரகாசம் (M.I.A)

எம்.ஐ.ஏ யின் (M.I.A), இரண்டாவது இறுவட்டான 'கலா' வருகின்ற வாரம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் வெளியாகின்றது (ஜப்பானில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது). தனது தந்தையின் இயக்கப்பெயரை முதல் இறுவட்டுக்கு வைத்ததுபோன்று (அருளர்), இப்போது தனது தாயாரின் பெயரை (கலா) இரண்டாவது இறுவட்டிற்கு வைத்துள்ளார்.

ஏற்கனவே முதல் இறுவட்டு வந்தபோது -வெளியிடப்பட்ட நாளன்றே- கடை திறந்த காலையிலேயே வாங்கியது மாதிரி (இவ்விறுவட்டில் வரும் அநேக பாடல்களை ஏற்கனவே கேட்டுவிட்டேன் என்றாலும்) இதையும் வாங்காமல் விடுவேனா என்ன?

Jimmy


Boys: இந்தப்பாடல் ஏற்கனவே வந்த Bird-flu beatஐ நினைவுபடுத்துகின்றது.


'கலா'வில் வரும் மேலேயுள்ள இந்த இரண்டு வீடியோ அல்பங்களோடு 'அருளரில்' வந்த இந்தப்பாடலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாயாவின் Innocent face போய்விட்டதுபோலத்தோன்றியது. ஒரு கலகக்காரிக்கு அதுவும் நல்லதுதான்.

SunShowers


அரசியல் பாடலென மிகவும் விவாதிக்கப்பட்ட இப்பாடலில், செக் ஷேர்ட்டுக்களோடு, ரிபன்களால் இழுத்துக்கட்டப்பட்ட பின்னல்களுள்ள பெண்கள் எவரைக் குறிப்பிடுகின்றதெனச் சொல்லத்தேவையில்லை. மாயா அமெரிக்கா வருவதற்கான் விஸா பத்து மாதங்களாய்த் தடுக்கப்பட்டதற்கும், இன்னும் அவரது பெயர் சிவப்பு நாடாவில் இருப்பதற்கும் இந்தப்பாடலே முக்கியகாரணம் எனச்சொல்லப்படுகின்றது.

Thursday, August 09, 2007

நேர்காணல்: அழகிய பெரியவன்

இங்கு நல்ல விமர்சகர்களே இல்லை: அழகிய பெரியவன்
நேர்காணல் கண்டவர்கள்:: மினர்வா & நந்தன்
...........................
............................
வெகுஜன பத்திரிகைகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி தலித் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது போன்ற தோன்றம் அண்மைக்காலமாகத் தென்படுகிறது. தலித் எழுத்துக்கு தரப்படும் இந்த முக்கியத்துவம் தலித் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

வெகுஜனப் பத்திரிகைகள் தமிழில் அதிகரித்து விட்டன. பத்திரிகைகள் அதிகரித்த அளவுக்கு தலித் எழுத்தாளர்களின் கவிதைகள், அனுபவம் சார்ந்த படைப்புகள் இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை. தலித் எழுத்தாளர்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச்சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.

வெகுஜன பத்திரிகைகள் சினிமா, பரபரப்பு போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதால் சமூக மாற்றம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக கவனம் தருவதில்லை. ஒரு சில நேரங்களில் தலித் பிரச்சனைகளுக்கு எதிராகவே வெகுஜனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன. உதாரணமாக மதுரை நல்லக்காமன் பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம். மதுரையைச் சேர்ந்த நல்லக்காமன் என்பவர் மீது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மனித உரிமை மீறல் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கின் பெயரால் மனித உரிமைகளை மீறுவதைத் தான் அவர் தொடர்ந்து செய்து வந்தார். பல பதவி உயர்வுகள் பெற்று பல முக்கியமான வழக்குகளையும் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் தொடர் புகார்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த வாரமே ஆனந்த விகடனில் அவரைக் கதாநாயகன் போல் சித்தரித்து கட்டுரை வெளியானது. அவரது சொந்த ஊருக்கே போய் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டிருந்தார்கள். இது எவ்வளவு அநியாயமான ஒரு விஷயம். அடிவாங்கியவனை கண்டுகொள்ளாமல் விடுவதும், அடித்தவனை தூக்கிப் பிடிப்பதும் போன்ற இயல்பு வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பத்துக் கொலை செய்தவனின் வாழ்க்கையை தொடராக வெளியிடுவதில் தான் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன. வெட்டுப்பட்டவனின் வாழ்க்கை, அவனது குடும்பம் பற்றி யோசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. வெகுஜனப் பத்திரிகைகள் தலித் பிரச்சனைக்கு தரும் முக்கியத்துவம் இவ்வளவு தான்.

தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் தலித் பிரச்சனைகளை சொல்வதற்கு இடம் இருக்கிறது. அதிலும் சில பத்திரிகைகள் தலித் பிரச்சனைகளை பிரச்சாரம் சார்ந்த இலக்கியம் என்று சொல்லி நிராகரித்து விடுகின்றன. இடம் தரும் பத்திரிகைகளும் சில படைப்பாளிகளுக்கே இடம் தருகின்றன. அதனால் புதிய சிந்தனைகள், புது எழுத்துக்கள், புது படைப்பாளிகளுக்கு இங்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
...........................
...............................
..................................
தலித் சிந்தனையாளர்கள் சிலர் பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதியை ஒழித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதி ஒழிப்பு என்பது சாத்தியமா?

நான் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிடச் சிந்தனைகள் எனக்குள் ஊறிப்போன விஷயம். பெரியாரின் பங்களிப்பை நாம் சரியாக மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவை தான் காரணம். பெரியாரை முன்னிறுத்துவதால் தனக்கான இடம் இல்லாமல் போய்விடுமோ என்று இவர்கள் நினைக்கிறார்கள். தலித் தலைவர்களைத் தான் அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

பெரியாரின் பங்களிப்பை மறுத்து விட்டு சாதி ஒழிப்பு பேசுவது என்பது ஒருவகையான துரோகம் தான். பெரியாரின் பங்களிப்பு தான் நம் சமூகத்தில் பரவலான, வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. சாதிய ஒழிப்பை நீங்கள் கடுமையாக இன்று பேச முடியும் என்றால் அதற்கு பெரியார் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். தலித் அறிவுஜீவிகளைத் தான் பெரியார் இடத்தில் நிறுவ வேண்டும், பெரியாருக்கு பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்று திரண்டிருக்கிறது அதனால் தலித்களுக்கான இடம் பறிபோய்விட்டது போன்ற விமர்சனங்களை, தவறான அனுமானங்களால் எழக்கூடிய விமர்சனங்களாகத் தான் நான் பார்க்கிறேன்.

இந்திய அளவிலேயே தலித்துகளுக்கான போராட்டத்தில் தலித்கள் அல்லாத இடைச்சாதியினரும் தீவிரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பகுஜன் போன்ற கருத்தோட்டங்கள் வடமாநிலங்களில் உருவானது. அந்தச் சிந்தனை ஏன் தமிழ்நாட்டில் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரை நிராகரித்து விட்டு தலித்துகளின் முன்னேற்றம் சாத்தியமே இல்லை. அவரை வைத்துக்கொண்டே நாம் அந்தப் பாதையில் பயணிப்பதுதான் நம்முடைய பலம்.
..........................
...........................
.............................
பெண் எழுத்தாளர்கள் உடல் எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக, ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கும் தலித் முரசுவில் ஒரு விமர்சனம் வெளிவந்தது. கவிஞராக, சக படைப்பாளியாக நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தப் பிரச்சனையில் பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவானது தான் என்னுடைய குரல். பெண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வெளிப்படையாக எழுதுவது அவ்வளவு தவறா, ஆண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக பேசுவதில்லையா? போன்ற கேள்விகள் இந்த இடத்தில் எனக்குத் தோன்றுகிறது.

காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தான் நான் இதை பார்க்கிறேன். பெண்கள் உரத்துப் பேசக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வந்து பேசக்கூடாது, பஞ்சாயத்திலோ, பொதுவிடங்களிலோ பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்த சமுதாயம் தானே இது. அதன் எச்சங்கள் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் பெண்கவிஞர்கள் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு.

இந்த ஆணாதிக்க மனநிலை தான் பெண் கவிஞர்களின் வெளிப்படையான எழுத்தை கொச்சையானதாக, அருவருப்பாக பார்க்கிறது. பெண் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள், எதன் அடிப்படையில் எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் தலித் எழுத்துக்கு இருந்த எதிர்ப்பை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

தலித் எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்கிறது, அதிகம் வசவுச்சொற்களை பயன்படுத்துகிறார்கள் போன்று மிகக்கடுமையாக விமர்சித்தார்கள். தலித்களின் மொழியை அப்படியே பயன்படுத்திய காரணத்திற்காக என்னுடைய சில கதைகள் கூட தொகுப்புகளில் இடம்பெறாமல் போயிருக்கிறது. இந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ, சுவாரஸ்யத்திற்காகவோ பயன்படுத்துவதில்லை. கதையில் வரும் தலித் கதாபாத்திரங்களின் கோபம், ஆத்திரம் வெளிப்பட வேண்டுமானால் உக்கிரமான வார்த்தைகளைத் தான் பயன்படுத்தியாக வேண்டும். இதேபோன்று தான் பெண் படைப்பாளிகளும் உடல்சார்ந்த மொழியை பயன்படுத்துகிறார்கள்.

அந்த வார்த்தைகள் வைத்திருக்கக் கூடிய அரசியல் என்ன, அந்தக் கவிதை என்ன மாதிரியான அரசியலில் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இப்படியான கேள்விகள் எழாது என்று நினைக்கிறேன்.

விரிவான வாசிப்புக்கு....


நன்றி: கீற்று