Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Friday, February 05, 2010

ஆயிர‌த்தில் ஒருவ‌ன்: சாருவின் அப‌த்த‌ உள‌ற‌ல்க‌ள்

'ஆயிர‌த்தில் ஒருவ‌ன்' ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் பார்த்த‌போது, க‌ற்ற‌து த‌மிழுக்கு வ‌ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளே நினைவிற்கு வ‌ந்த‌ன‌. ஒருசாரார் அதிக‌ம் புக‌ழ‌வும் இன்னொரு சாரார் வைய‌வும் என‌... க‌ட‌ந்த‌கால‌த்தில் க‌ற்ற‌து த‌மிழுக்கு நிக‌ழ்ந்த‌தே ஆயிர‌த்தில் ஒருவ‌னுக்கு நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. சில‌ க‌ருத்துக்க‌ளோடு உட‌ன்ப‌டாவிட்டாலும் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் ப‌ற்றி(நான் வாசித்த‌ளவில்) சுகுணா திவாக‌ர், அபிலாஷ் போன்ற‌வ‌ர்க‌ளின் க‌ட்டுரைக‌ள் முக்கிய‌மான‌வை. ஆயிர‌த்தில் ஒருவ‌ன் குறித்து ந‌ண்ப‌ர்க‌ளுடான‌ என் ப‌கிர்த‌ல்க‌ளை சிறுசிறு துண்டு ரூவிற்ற‌ர்களை இர‌ண்டு சிறு ப‌திவுக‌ளாக‌ தொகுத்திருக்கிறேன். சாரு நிவேதிதாவின் ஆயிர‌த்து ஒருவ‌ன் ப‌ற்றிய‌ மிகுந்த‌ அப‌த்த‌மான‌ உயிர்மைக் க‌ட்டுரையைப் பார்த்த‌பின், சிலவ‌ற்றையாவ‌து உட‌ன‌டி எதிர்வினையாக‌ முன்வைத்த‌ல் அவ‌சிய‌மென‌ப்ப‌டுகிற‌து.

சாரு குறிப்பிட்ட‌ பிற‌ (ஆங்கில‌) திரைப்ப‌ட‌ங்க‌ளின் பாதிப்புக்க‌ளை ஏற்க‌ன‌வே ப‌ல இட‌ங்க‌ளில் குறிப்பிட்டு ப‌ல‌ர் எழுதிய‌தால் அவ‌ற்றைத் த‌விர்த்தே எழுதுகின்றேன். முக்கிய‌மாய் இரும்பு உருண்டையில் க‌யிற்றைக் க‌ட்டிய‌டிக்கும் (கிளேடியேற்ற‌ர்) காட்சியைக் கூட‌ த‌மிழ்ச்சூழ‌லிற்கு ஏற்ப‌ மாற்ற‌ முய‌லாத‌ செல்வ‌ராக‌வ‌னின் ப‌டைப்பு ம‌ந்த‌த்தை எல்லாம் ஏற்றுக்கொண்டே சாருவின் ப‌திவிற்கு எதிர்வினையாற்றுகிறேன்.

வ‌ர‌லாற்றில் ந‌ம‌க்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ சோழ‌ர்க‌ளின் பொற்கால‌ம் என்ப‌து குறித்து நிறைய‌க் கேள்விக‌ள் பிற்கால‌த்தில் எழுப்ப‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இவ்வ‌ள‌வு பெரிய‌ இராஜ்ஜிய‌த்தைக் க‌ட்டிய‌மைத்த‌ சோழ‌ர்க‌ளின் வ‌ர‌லாறு நிச்ச‌ய‌ம் இர‌த்த‌த்தாலே நிறைந்திருக்கும் என்ப‌து சொல்லாம‌லே எவ‌ருக்கும் புரியும். அவ‌ர்க‌ள் க‌ட்டிய‌ மிக‌ப்பெரும் கோயில்க‌ளிலேயே எத்த‌னை அடிமை ம‌க்க‌ளின் இர‌த்த‌மும் விய‌ர்வையும் உறைந்துகிட‌க்கும் என்ப‌து நாம் அறியாத‌தும‌ல்ல‌.

அவ்வாறான‌ ஒரு சோழ‌ ப‌ர‌ம்பரையில் வ‌ந்த‌வ‌ரை சாரு...
"சோழ மன்னன் தன் குடிமக்களை அடித்துக் கொல்லுகிறான்; வெட்டிச் சாய்க்கிறான். நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டியை விடக் கேவலமாக நடந்து கொள்கிறான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு மன்னன் ஒரு காவிய நாயகனைப் போல் படத்தின் பிரதான பாத்திரமாகவும், பார்வையாளர்களின் கருணையைக் கோருபவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது எப்படி? நம்முடைய இதிகாச நாயகன் ராமனை எடுத்துக் கொள்வோம். ஒரு காட்சியில் ஏக பத்தினி விரதனாகவும், இன்னொரு காட்சியில் தன் குலப் பெண்டிரையே வன்புணர்ச்சி செய்பவனாகவும் சித்தரித்தால் எப்படி இருக்கும்? அதேதான் சோழ மன்னனின் பாத்திரப் படைப்பில் நடந்திருக்கிறது."
என்றெழுதுகின்றார். ஏன் அவ்வாறு இருக்க‌முடியாது என்றொரு கேள்வியை நாம் சாருவிட‌ம் திருப்ப‌ எழுப்ப‌ வேண்டியிருக்கிற‌து? வ‌ர‌லாற்றில் பேர‌ர‌சுக‌ளை க‌ட்டியெழுப்பிய‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே தாம் சார்ந்த‌ ப‌குதியின‌ருக்கு திரு உருக்க‌ளாக‌வும், பிற‌ருக்கு கேவ‌ல‌மாக‌வும் ஆகிய‌து ய‌தார்த்த‌ம் என்றால், மாபெரும் பேர‌ர‌சைக் க‌ட்டிய‌ சோழ‌ர்க‌ளும் ஏன் அப்ப‌டி இருந்திருக்க‌முடியாது? ந‌ல்ல‌தும் கெட்ட‌தும் பிரிக்க‌முடியாது அல்ல‌து ந‌ல்ல‌தும் கெட்ட‌தும் இணைந்திருப்ப‌தே இய‌ல்பான‌து என்று எத்த‌னையோ சிந்த‌னையாள‌ர்களை ப‌டித்துக் க‌ரைத்த‌தாய்க் கூறும் சாருவால் ஏன் இதை விள‌ங்கிக்கொள்ள‌முடியாது இருக்கின்ற‌து. த‌ன்னையொரு 'பின்ந‌வீன‌த்துவ‌வாதி'யாக‌ ம‌ட்டுமின்றி, 'பின் ந‌வீன‌த்துவ‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள்' என்று பிற‌ரையும் சுட்டிக்காட்டுகின்ற‌ சாருதான் ஒரு க‌தாபாத்திர‌ம் ந‌ல்ல‌தாக‌/உய‌ர்ந்த‌தாக‌ ம‌ட்டுமே சித்த‌ரிக்க‌வேண்டும் என்று அடித்துக்கூறுகிறார். ஆக‌ இதுநாள் வ‌ரை எழுதிய‌து/வாசித்த‌தும் எல்லாம் பட‌ங்காட்ட‌த்தானா சாரு?

அடுத்து, "இந்திய ராணுவமே ஏதோ கூலிப்படையைப் போலவும், சினிமாவில் வரும் அடியாள் கூட்டத்தைப் போலவும்தான் காண்பிக்கப்பட்டிருக்கிறது."
இதில் சாருவிற்கு ஏன் க‌வலை வ‌ருகின்ற‌து?. இந்திய‌ இராணுவ‌ம் கூலிப்ப‌டை போல‌ த‌ன்னைச் சுற்றியிருக்கும் நாடுக‌ளில் ந‌ட‌க்க‌வேயில்லையா? நான் யதார்த்தில் ஈழ‌த்தில் பார்த்த‌ இந்திய‌ இராணுவ‌ம் ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் கூலிப்ப‌டையை/அடியாள் கூட்ட‌த்தை விட‌வும் மிக‌வும் மோச‌மாக‌த்தானே இருந்திருக்கிற‌து? உண்மையை உண்மையாய்ச் சொன்னால் சாருவிற்கு வ‌லிக்கிற‌து என்கின்ற‌போது அவ‌்ர் அண்மைக்காலமாய் அருந்திவரும் அருட்பாலில் 'இந்திய‌த் தேசிய‌ப் பாலையும்' கொடுத்துவிட்டாரோ என்றூதான் ச‌ந்தேகிக்க‌ வேண்டியிருக்கிற‌து. தேசிய‌ப்பாலிற்காவ‌து ஏதாவ‌து விஷ‌ம் கொடுத்து இற‌க்கி வைக்க‌லாம். ஆனால் சாருவிற்கு உதார‌ண்க்காட்ட‌ வேறு ஒருவ‌ருமில்லாது இராம‌னே வ‌ர‌வேண்டியிருந்த‌தால், வ‌ந்திருக்கும் இந்துத்துவ‌க் காய்ச‌லிற்கு எந்த‌ ஊசி குத்துவ‌து என்றும் தெரிய‌வில்லை? அது கூட‌ப்ப‌ர‌வாயில்லை சோழ‌ர‌து காலமாவ‌து வ‌ரலாற்றில் இருந்திருக்கிற‌து, க‌ட‌வுளான‌ இராம‌ரின் க‌தையெல்லாம் 'இதிகாச‌ங்க‌ளிற்கு' ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும்.

மேலும்,"நீலப் படங்களில் fetish என்ற ஒருவகை படம் உள்ளது. அதில் சிறுநீரைக் குடிப்பார்கள். இன்னும் அதுபோல் கற்பனைக்கே எட்டாதபடி கண்ட கண்ட கண்றாவியெல்லாம் வரும். அந்த ஃபெடிஷ் ரக நீலப் படங்களை ஞாபகப்படுத்தும்"
அட‌டா சாரு நீங்க‌ள் முன்பு நீங்க‌ள் எழுதிய‌வ‌ற்றின் பிர‌க்ஞையோடு தான் இதையெல்லாம் எழுதுகின்றீர்க‌ளா? உங்க‌ளின் 'உன்ன‌த‌ ச‌ங்கீத‌த்தில்' ஒரு ப‌தின்ம‌க்காரியை மூத்திர‌ம் பெய்ய‌ச் சொல்லி அதை ந‌க்க‌ விரும்புகின்ற‌ பாத்திர‌ப் ப‌டைப்பு 'க‌லைத்துவ‌மாக‌' இருக்கும்போது ஏன் உங்க‌ளிற்கு ரீமா சென் நின்ற‌ப‌டியே மூத்திர‌ம் பெய்வ‌து எரிச்ச‌லூட்டுகிறது; நீல‌ப்ப‌ட‌ங்க‌ளை நினைவுப‌டுத்துகிற‌து. ழார் ப‌த்தாயின் 'விழியின் க‌தை'யை(The Story of Eye) வாசித்துக் கொண்டுமா இப்ப‌டிக் கூசாம‌ல் சிறுநீரைக் க‌ழிப்ப‌தையெல்லாம் fetish வ‌கைக்குள் உள்ளட‌க்குவீர்க‌ள்? உன்ன‌த‌ ச‌ங்கீத‌த்தில் சிறுநீரைக் க‌ழித்தால் விழியின் க‌தையும், ஆயிர‌த்தில் ஒருவ‌னைப் பார்த்தால் fetish வ‌கையும் நினைவுக்கு வாச‌க‌ருக்கு/பார்வையாள‌ருக்கு வ‌ர‌வேண்டும் என்று நினைவூட்டுவ‌து கூட‌ ஒருவ‌கை வ‌ன்முறைதான்.

இன்னும் சாரு, "ஆயிரத்தில் ஒருவன் மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்ட படம் என்பதால் இடையில் பிரபாகரனின் மரண சம்பவம் வேறு நிகழ்ந்து விட்டதால் கதை திடீரென்று பாதை மாறி இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பக்கம் நகர்ந்து விடுகிறது. புலிக்கொடி தாங்கிப் போராடும் சோழர்கள் புலிகள். அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம். புலிகளைக் கொன்று குவித்து, அவர்களின் பெண்களைக் கற்பழிக்கும் இந்திய ராணுவம். என்ன ஒரு வரலாற்றுப் பார்வை! அப்படியானால், இந்திய ராணுவம் சோழனின் குடிமக்களை என்ன செய்ததோ அதைத்தானே சோழ மன்னனும் செய்தான்? மிகக் கொடூரமான காட்டுமிராண்டியாகத்தானே சோழ மன்னனைப் படைத்திருக்கிறார் இயக்குனர்? அவனுக்கும் இந்திய ராணுவத்துக்கும் என்ன வித்தியாசம்? காவிய நாயகன் இறுதிக் காட்சியில் சாகும் போது நமக்குள் கண்ணீரல்லவா சுரக்க வேண்டும்? பதிலாக சோழ மன்னன் சாகும் போது ‘இது என்னடா பெரிய மண்டைக் குடைச்சலாக இருக்கிறது? ’ என்ற மன உளைச்சலே ஏற்படுகிறது. அதுவும் தவிர, இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்றால், விடுதலைப் புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது?"
இல்லாத‌ வாசிப்பை இருக்கிற‌து போல‌ச் செய்ய‌வேண்டும் என்ப‌த‌ற்கு மேலேயுள்ள‌துதான் பொருத்த‌ம். செல்வ‌ராக‌வ‌னே த‌ன‌து ப‌ட‌ப்பிடிப்பு ஈழ‌ப்போர் ந‌ட‌க்க‌முன்ன‌ரே முடிந்துவிட்ட‌து என்று கூறியிருக்கிறார் என்று அறிகிறேன். ஆனால் பார்ப்ப‌வ‌ருக்கான‌ எல்லை விரிந்துள்ள‌து என்ப‌தை ஒப்புக்கொண்டு ஆயிர‌த்தில் ஒருவ‌னை ஈழ‌த்து வ‌ர‌லாற்றோடு ஒப்பிடுப‌வ‌ர்க‌ளை ம‌றுக்க‌வும் முடியாது (என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்தாய் இது ஈழ‌த்தின் வ‌ர‌லாற்றோடு ஒப்பிட‌முடியாது என‌த்தெளிவாக‌ எழுதியிருக்கிறேன்).

ஆனால் ஒரு பேச்சுக்கு சோழ‌ ப‌ர‌ம்ப்ப‌ரைதான் விடுத‌லைப்புலிக‌ளாக‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருந்தால் கூட‌ அதிலென்ன‌ த‌வ‌றிருக்கிற‌து என்று, சாரு மேலே எழுதிய‌தை வைத்து புரிந்துகொள்ள‌ முடிய‌வில்லை. இந்திய‌ இராணுவ‌ம் ஈழ‌ம் போன்ற‌ சிறு நாடுக‌ளில் ம‌ட்டுமில்லை, ம‌ணிப்பூர் காஷ்மீர் ப‌குதிக‌ளிலும் பெண்க‌ளிட‌ம் அத்துமீறியிருக்கிற‌து. ச‌த்திய‌ம‌ங்க‌ல‌ம் காடுக‌ளில் வீர‌ப்ப‌ன் வேட்டை என்று  ஆதிவாசிப் பெண்க‌ளிட‌ம் இந்திய‌ இராணுவ‌ம் அதிர‌டிப்ப‌டை எந்த‌ 'வேட்டை'யை ந‌ட‌த்திய‌து? (பால‌முருக‌னின் 'சோளகர் தொட்டி'யை வாசித்தால் 'அதிர‌டிப்ப‌டை' என்று எழுத‌வே இந்திய‌த் த‌மிழ‌ரிற்கு கூச்ச‌ம் வ‌ர‌வேண்டும்). இதே இராணுவ‌ந்தான் போராடும் இய‌க்க‌ங்க‌ளை மிக‌ மோச‌மாக‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ஒடுக்கியிருக்கிற‌து. புலிக‌ள் அழிக்க‌ப்ப‌ட்ட‌தைப் பாட‌மாக‌ வைத்துக்கொண்டு மாவோயிஸ்டுக்க‌ளை கோர‌மாக‌ அழிக்க‌ இந்திய‌ இராணுவ‌ம் இப்போது ஓட‌வில்லையா? ஆக‌வே செல்வ‌ராக‌வ‌ன் ச‌ரியாக‌த்தான் இந்திய‌ இராணுவ‌த்தை சித்த‌ரித்திருக்கின்றார். அதே ச‌ம‌ய‌ம் சோழ‌ர்தான் புலிக‌ள் என்ற‌ க‌ருத்தை வைப்பவ‌ர்க‌ளின் க‌ருத்தை ஏற்றுக்கொண்டால் சோழ‌ன் போல‌ புலிக‌ளின் வ‌ர‌லாறும் அவ்வ‌ளவு ஒன்றும் புனித‌ம‌ல்ல‌ என்றுதானே செல்வ‌ராக‌வ‌ன் கூறியிருக்கின்றார் என்றும் எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ந‌ம‌து சாருவிற்கு "புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது?" என்று உட‌னே அறிவுஜீவிக் கொம்பு முளைத்துவிடுகிற‌து. அட‌ முட்டாள் ம‌னுசா சோழ‌ன் த‌ன் அடிமைக‌ளைக் கொலை செய்ய‌விட்டு மகிழ‌வில்லையா என்ன‌??

இந்த‌ச் சாருதான் ஈழ‌த்தின் இறுதிப்போரின்போது க‌ள்ள‌ ம‌வுன‌ம் சாதித்த‌வ‌ர் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் எடுக்க‌வேண்டும். அதைவிட‌ உன்ன‌த‌ ச‌ங்கீதத்தில் இந்திய‌ இராணுவ‌ம் சிங்க‌ள‌ப் பெண்ணைப் பாலிய‌ல் வ‌ல்லுறவு செய்வ‌தாய்ச் ச‌ம‌கால‌த்தின் வ‌ர‌லாறே தெரியாம‌ல் எழுதிய‌வ‌ர்; இன்று  செல்வ‌ராக‌வ‌னிற்கு சோழ‌ரின் வ‌ர‌லாறு தெரியாது என்று பாட‌ம் ந‌ட‌த்துகிறார். எழுதுவ‌த‌ற்கு ஓரிட‌ம் இருக்கிற‌து என்ப‌த‌ற்காய் தான் எழுதிய அனைத்தையும் வ‌ச‌தியாய் மூடிம‌றைத்துவிட்டு எழுதுவ‌து எந்த‌வ‌கையில் அறஞ்சார்ந்த‌ நியாய‌ம்?

இவையெல்லாவ‌ற்றையும் விட‌ மிகுந்த‌ அப‌த்த‌மாய் அவ‌தார்(Avatar) ப‌ட‌த்தை உய‌ரிய‌ ப‌டைப்பாய் வைத்து ஒப்பிடுவ‌து. அவ‌தாரில் கூற‌ப்ப‌டுவ‌து எல்லாம் இங்கே ஆதிக்குடிக‌ளின் வாழ்க்கை முறைய‌ல்ல‌வா? வெள்ளையின‌ வெறி இதைத்தான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஆதிக்குடிக‌ளிற்கு செய‌தது? ஆதிக்குடிக‌ள் ப‌ற்றிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் கூட‌ தேவையில்லை, ஆதிக்குடிக‌ள் ப‌ற்றிய‌ சாதார‌ண் ஒரு க‌ட்டுரையை வாசித்தால் கூட‌ க‌ம‌ரூன் அவ‌தாரில் குறிப்பிடுகின்ற‌ விட‌ய‌ங்க‌ளை (being so close with nature) அறிந்துகொள்ள‌லாம். இதை (Avatar) ஏதோவோர் மாஸ்ர‌ர் பீஸ் போல் எழுதுகின்ற‌ சாருவை என்ன‌ செய்ய‌? வெள்ளையின‌ வெறியை நேர‌டியாக‌க் காட்ட‌க்கூட‌ வ‌க்கில்லாத‌ க‌ம‌ரூன் இப்போது Global Warming மாற்ற‌த்தால் தாங்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட‌ப்போகின்றோம் என்ப‌த‌ற்காய் ஆதிக்குடிக‌ளை ஒரு  க‌ச்சாய்ப்பொருளாய் பாவித்து எந்த‌ வெட்க‌முமின்றி 'உய‌ரிய‌ ப‌டைப்பாய்' எடுக்கிறார்   சாருவிற்கு நாங்க‌ளும் உல‌க‌ வ‌ரலாறு ப‌டிக்க‌ ப‌ரிந்துரைக்க‌த்தான் வேண்டுமா? அதுவும் அவ‌தாரில் இறுதியாய் இவ‌ர்க‌ள்தான் போய் அந்த‌ ம‌க்க‌ளைக் காப்பாற்றுவார்க‌ளாம்? அமெரிக்கா, க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளை ஆக்கிர‌மித்த‌ வெள்ளையின‌த்த‌வ‌ரில் ஏவ‌ரேனும் ஒருவ‌ர் இப்ப‌டி மாறி அந்த‌ ம‌க்க‌ளைக் காப்பாற்றியிருந்தால் அந்த‌ ம‌க்க‌ள் இந்த‌ளவு கொடுமையான‌ வாழ்வை இன்று தேர்ந்தெடுக்க‌வேண்டி வ‌ந்திருக்காது அல்ல‌வா? ஆக‌க்குறைந்து அவ‌ர்க‌ள் எப்ப‌டி இய‌ற்கையை தெய்வ‌மாக‌, ப‌ரிசுத்த‌ பொருளாய்ப் ப‌ய‌ன்ப்டுத்தினார்க‌ள் என்று க‌ற்றுக்கொண்டிருந்தால் 'இன்று அய்யோ உல‌க‌ம் கால‌நிலை மாற்ற‌ங்க‌ளினால் அழிய‌ப்போகின்ற‌து' என்று க‌த‌றிக்கொண்டிருக்க‌ வேண்டியிருக்காது? இந்த‌ எந்த‌ புரித‌லில்லாம‌ல் சாரு அவ‌தாரை ஆகா ஒகோவென்று புக‌ழும்போது வ‌ரும் எரிச்ச‌லில் எங்க‌ள் த‌லையை எங்கே கொண்டுபோய் இடிப்ப‌து? (அவ‌தாரை நான் முற்றுமுழுதாக‌ நிராக‌ரிக்க‌வில்லை; அவ‌தார் ப‌ற்றிய‌ உரையாட‌லைத் தொட‌க்க‌ இக்க‌ட்டுரையை வாசிக்க‌ப் ப‌ரிந்துரைக்கிறேன்)

ஆக‌ இத்த‌கைய‌ அப‌த்த‌ங்க‌ளைக் கொண்டு எழுத‌ப்ப‌ட்ட‌ சாருவின் க‌ட்டுரையை 'சாருவின் பாணியிலேயே' நாம் கிழித்தெறிய‌லாம். இன்னும் நிறைய‌ விவாதிக்கலாம். இப்போதைக்கு இது போதும்; வேறு 'உருப்ப‌டியான‌' வேலைக‌ள் எங்க‌ளுக்கும் இருக்கிற‌து.

(இது ஆயிர‌த்தில் ஒருவ‌ன் ப‌ற்றிய‌ ப‌திவ‌ல்ல‌; சாருவின் க‌ட்டுரை மீதான‌ எதிர்வினை என்ப‌தைக் க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வும்)

ஆயிர‌த்தில் ஒருவ‌ன் (Twitter)

Tuesday, November 04, 2008

காஷ்மீர் ப‌ற்றிய‌ இர‌ண்டு க‌ட்டுரைக‌ள்

(1)மானுட‌த்தை நேசித்த‌வ‌ர்க‌ள் ஏன் தேச‌ப‌க்தியை வெறுத்தார்க‌ள்
அ.மார்க்ஸ்

(2)
அஸாதி, அஸாதி, அஸாதி…
-சாரு நிவேதிதா

---------------------
அ.மார்க்ஸின் தீராந‌தி க‌ட்டுரை ந‌ன்றியுட‌ன் (நேர‌டியாக‌ வாசிக்க‌ அனும‌தியில்லாத‌தால்) ‍ மீள் பிர‌சுரிக்க‌ப்ப‌டுகின்ற‌து. சாரு நிவேதிதாவின் க‌ட்டுரையை அவ‌ர‌து த‌ள‌த்திலேயே சென்று வாசிக்க‌லாம்.

~டிசே
---------------------



மானுட‌த்தை நேசித்த‌வ‌ர்க‌ள் ஏன் தேச‌ப‌க்தியை வெறுத்தார்க‌ள்

-அ.மார்க்ஸ்


நகைச்சுவை என்கிற பெயரில் தமிழ்ச் செல்வன் தொடங்கி விக்ரமாதித்தன் வரை சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் கேலி செய்து எழுதியுள்ள ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

ஏதோ பாகிஸ்தானில் பாலும் தேனும் ஓடுவதாகவும், ஜனநாயகம் செழித்திருப்பதாகவும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். அமெரிக்க விசுவாசத்திலாகட்டும், சொந்த மக்களை ஒடுக்குவதிலாகட்டும் இந்திய அரசுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பாகிஸ்தான்.

காஷ்மீர் பிரச்சினையை, 1. பாகிஸ்தானின் தூண்டுதல், 2. `ஜிஹாதி' பயங்கரவாதம், 3. தேசப் பிரிவினையின் எச்ச சொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷ்மீர மக்களின் சுய நிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய ராஜ தந்திரத்தின் சதித் திட்டங்களில் ஒன்று. இந்தச் சதியைத் தோலுரித்து அவர்களின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திக் காட்டுவதே அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களின் கடமையாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமை அதுதானே. வாழுங் காலத்தின் சமூக அநீதிகைளக் கண்டு கொதித்து சம காலத்தையே நிராகரிப்பவன்தானே எழுத்தாளன். டால்ஸ்டாய் முதல் ஆஸ்கார் வைல்ட் வரை அப்படித்தானே வாழ்ந்துள்ளனர். எழுத்துக்கள் காலத்தைக் கடந்து நிற்கவில்லை என்பதன் பொருளும் இதுதானே.

பாகிஸ்தான் தூண்டுதல், பயங்கரவாதப் பிரச்சினை எல்லாவற்றையும் மறைத்து அதை ஒரு சுதந்திர வேட்கையாகச் சொன்னதைச் சுட்டிக் காட்டி அதற்காகவே அருந்ததியை `குருவி மண்டை' எனவும், கூலிக்கு எழுதுபவர் எனவும் இழிவு செய்கிறார் ஜெ.மோ. ஒரு எழுத்தாளனின் மண்டைக்குள் சம கால ராஜதந்திரியின் மூளை அமைந்துள்ளதெப்படி? ஜெ.மோ. ஒரு வினோதப் பிராணிதான்.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காஷ்மீரி மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர். காஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐ.நா. அவையின் முன் அளித்தது. இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரிகள் இன்று போராடிக் கொண்டுள்ளனர்.

இன்று காஷ்மீர மக்கள் அமைதி வழியை நோக்கித் திரும்பியுள்ளனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து காஷ்மீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் போதே இந்திய மண்ணில் பயங்கரவாதம் முடிவுக்கு வரத் தொடங்கும். தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குச் செலவிட இயலும்.

ஜெயமோகன் கக்கியுள்ள இதர விஷக் கருத்துக்களைச் சுருக்கம் கருதி விட்டு விடுகிறேன். இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அஃப்சல் குருவின் மனைவி குடியரசுத் தலைவரைச் சென்று மிரட்டினாராம். ``இந்தியச் சமூகம் அளிக்கும் வாய்ப்புக்கள்'' மூலம் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் முன்னேறி வருகிறார்களாம் (பார்க்க : சச்சர் அறிக்கை); உலகப் பரப்பில் வாழும் முஸ்லிம் சமூகங்களை ஆங்காங்கு புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளாக மாற்றுகின்றனவாம் முஸ்லிம் அமைப்புகள் (எத்தனை கொடூரச் சித்திரிப்பு பாருங்கள்); மாற்று தேசியங்களை மத நோக்கில் அழிக்க முஸ்லிம்களுக்குத் தயக்கம் இருக்காதாம்.

``காரணம், இஸ்லாம் என்பது ஒரு தேசிய கற்பிதம் - ஒரு தேசிய கற்பிதம் - ஒரு மதமோ வாழ்க்கை முறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய அற்புதங்களை ஏற்காது'' - ஜெ.மோ.

ஜெயமோகனுக்கு இஸ்லாம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்று மட்டுமே மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாமின் `தேசியம்' என்கிற கருத்தாக்கமே கிடையாது. `உம்மா' - சமூகம், நம்பிக்கையாளர்களின் கூட்டமைப்பு என்பதற்கே அங்கு முக்கியத்துவம். பிற நம்பிக்கையாளர்களுடன் சமூக இணக்கத்தை அது மறுத்ததில்லை. காஷ்மீர மக்கள் அதற்கொரு நடைமுறை எடுத்துக்காட்டு.

சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்கும் தமிழ் எழுத்தாளர்களைப் பெயர் குறித்து ஏசுகிறார் ஜெ.மோ. மாவோயிஸ்டுகளுக்கு சீனாவிலிருந்து நிதி வருகிறதாம். ``ஆங்கில இதழ்களின் ஞாயிறு இணைப்பில்'' வரும் கட்டுரைகளைப் பார்த்து தமிழில் எழுதுகிறவர்களாம் இத்தகைய அறிவுஜீவிகள். இப்படிச் சொல்வதற்கு ஜெயமோகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதை, ``மனச்சாட்சியுள்ள வாசகர்கள்'' யோசிக்க வேண்டும். தமிழில் வெளிவந்த நூற்களையே ஈயடிச்சான் காப்பி அடித்து பொ. வேல்சாமி போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டு குடும்ப சகிதமாக அவமானப்பட்டவர் ஜெ.மோ. இவர் ஆங்கில இதழ்களைப் பார்த்து கட்டுரை எழுதுவதில்லை என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் எதையும் படிப்பதில்லை. மலையாளத்தில் வரும்வரை அவர் காத்திருப்பார்.

``தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச் சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்ற போதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே `வெல்க பாரதம்' '' எனக் கட்டுரையை முடிக்கிறார் ஜெ.மோ. அவரது கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள் - முத்திரையை வேறு யாரும் அவர் மீது குத்த வேண்டுமா என்பது விளங்கும். முத்திரை குத்துவதற்கு அவர் முதுகில் இடமில்லை. அவரது உடல் முழுவதும் காவி முத்திரை படிந்துள்ளதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி.

`தேசபக்தி பாவமென்றாகி விட்ட சூழல்' என அவர் சமூகச் சுரணையுள்ள எழுத்துக்களைக் குறிப்பிடுகிறார். உண்மைதான். தேசபக்தியைப் பாவமென்று மட்டுமல்ல, கொடூரம், அயோக்கியத்தனம், vicious என்றெல்லாம் பெரியார் ஈ.வெரா மட்டுமல்ல, டால்ஸ்டாய் உள்ளிட்ட மனிதரை நேசித்த, சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் அவ்வளவுபேரும், ஆம் அவ்வளவு பேரும் சொல்லித்தான் உள்ளனர்.

ஜெயமோகனைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு `தேசபக்தி', `தேசியம்' ஆகியன குறித்தும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்போம்.

குறிப்பு : ஜெ.மோ போன்றவர்களுக்காக ஒரு தகவல்: காஷ்மீர் பயணம் முழுக்க முழுக்கச் சொந்தச் செலவில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவர் செலவு ரூ.19,200/-.
(அடுத்த இதழில் முடியும்..)