Friday, April 09, 2010

சின்னத் தம்பி – செழியன்

எனது வகுப்பில் இருந்து முப்பத்தி ஏழு மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியை திருமதி பிரகாஸ்பதி முன்பாக எனது பிட்டத்தில் அதிபர் ராஐகோபால் ஆறு தடைவை ஓங்கிப் பிரம்பால் அடித்தார். ஆறு என்பது என்ன கணக்கு? என்பது குரூரமாக பார்த்துக் கொண்டிருந்த சக மாணவன் இராமச்சந்திரனுக்கோ, கோபத்துடன் இருந்த ஆசிரியை பிரகாஸ்பதிக்கோ, அமைதியாக இருந்த ஏனைய மாணவர்களுக்கோ, அல்லது இறுகிய மனத்துடன் விறைத்து நின்ற எனக்கும் சரி தெரியவே தெரியாது. அது அதிபர் ராஐகோபாலின் அதிஸ்ட எண்ணாகக் கூட இருக்கலாம். ஆனால், நாவலப்பிட்டி கதிரேசன் குமாரா மகா வித்தியாலயத்தில் பிட்டத்தில் ஆறு அடி வாங்கி சாதனை படைத்தது என்னைத் தவிர இன்று வரை வேறு யாருமாக இருக்கமுடியாது.

மாணவர்களைத் திருத்துவதற்காக ‘பிட்டத்தில் பிரம்பால் ஆசிரியர்கள் அடிப்பதுண்டு’ என்பது உண்மைதான். அடிவாங்கிய மாணவன் துடிதுடித்துப் போனதாகவும் துவண்டு விழுந்ததாகவும் பலவிதமான கேள்விக் கதைகள் உள்ளன. அந்த பிரம்படியின் தழும்புகள் இன்றுவரை சிலரது பிட்டத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. இந்த வீரக்கதைகளை தமது மனைவியிடம் கூறி ‘மாவீரன்’ என்ற பெயரை இரகசியமாகப் பெற்றுக்கொண்ட வீரர்களும் உள்ளதாகக் கதைகள் உலாவுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் பள்ளிக்கூடங்களில் நடந்த இவை, மனித உரிமை மீறல் என்பதால் இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நமது ஐ.நாடுகள் சபை விருப்பப்படலாம். வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும் தானே. ஆனால், நிச்சயமாக நமது அரசு தமது மக்களின் பிட்டத்தை ஆராய்வதற்கு ஐ.நா.வை அனுமதிக்கத் தயாராக இருக்காது என்று நாம் நம்பலாம். அதனிலும், பார்க்க ‘போராடி மடிந்து போகலாம்’ என்று அந்த சகோதரர்கள் நினைக்கலாம். இதற்காக ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு கையாலாகாத அமைப்பு என்றோ, களங்கப்பட்ட அமைப்பு என்றோ வாய்க்கு வந்த படி உடனே நாம் சொல்லி விட முடியாது.

பெரும்பான்மையான நாடுகளின் வாக்குகளின் அடிப்படையில் பெண்களையோ, ஆண்களையோ பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது சரியா, பிழையா? என்று ஐ.நா. தீர்மானிக்கும் வரை அது ஒரு ‘ஐனநாயக அமைப்பு’ என்றும், பூமிப் பந்தையும் அதில் வாழும் மனிதர்களையும் காப்பாற்றும் ஒரு காவல் தெய்வம் என்றும் நிச்சயமாக இல்லாவிட்டாலும், ஓரளுவுக்கேனும் நம்பலாம்.

அந்தக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அருளம்பலம், ராஐன் செல்வநாயகம், தியாகராஐட, மந்திரி குமார சூரியர், மேயர் துரைப்பாவைப் பற்றியெல்லாம் எனது கையெழுத்து சஞ்சிகையில் அவமரியாதையாக எழுதினேன் என்பது என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. கையெழுத்துச் சஞ்சிகையை கைப்பற்றி வகுப்பாசிரியை மூலமாக அதிபரின் அறைக்கு என்னை விசாரணைக்காக அனுப்பிவைத்த கைங்கரியத்தை செய்தவன் இராமச்சந்திரன் என்ற மாணவன்.

மதிய இடைவேளையின் போது என்னை அதிபர் விசாரணைக்காக அழைத்தார். உப அதிபர் முன்னிலையில் சஞ்சிகையை புரட்டிப்பார்த்துவிட்டு,‘மந்திரிமாரைப் பற்றியெல்லாம் கூட இப்படி எழுதி இருக்கின்றான்’ என்று ஆச்சரியமாகக் கூறியவர், என்ன நினைத்தாரோ சில நிமிடங்களில் விடுதலை செய்தார். எனது அப்பாவின் முகம் சமயத்தில் அவருக்கு வந்திருக்கலாம் என்றும் எனக்கு ஒரு நினைப்பு.

இதை இராமச்சந்திரனுக்கு மட்டுமல்ல, வகுப்பாசிரியை பிரகாஸ்பதிக்கும் தாங்கமுடியவில்லை. அதிபரிடம் மீண்டும் சென்றார்கள். என்ன பேசினார்கள் என்பது மட்டும் ஒரே மர்மம். இடைவேளை முடிந்ததும் அதிபர் தனது நீளமான பிரம்புடன் வந்தார். கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தது போன்று, இந்தப் பிரம்பு தன்னுடனேயே பிறந்தது என்ற பெரு நினைப்பு அவருக்கு. கூட வகுப்பாசிரியை பிரகாஸ்பதியும் வந்தார்.

‘கட்டுரைகள் எழுதியது யார்?’, ‘ஓவியங்கள் வரைந்தது யார்?’, ‘கவிதைகள் எழுதியது யார்’, ‘யாருடைய கையெழுத்தில் சஞ்சிகை உள்ளது?’ என்று பலவகையான கேள்விகள் அதிபர் கேட்டார். எனக்குப் பதில் சொல்வதில் எந்தக் கஸ்டமும் இருக்கவில்லை. ஏன் என்றால், எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்.

‘நான் தான் செய்தேன், வேறு வேறு பெயர்களில்’ என்ற எனது பதிலால் சஞ்சிகையில் ஓவியம் வரைந்தவர், கவிதை எழுதியவர், சிறுகதை எழுதியவர் என்று எல்லாரும் சற்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டனர்.

விசாரணையின் முடிவில் எனக்கு பிரம்படி என்று அதிபர் தீர்மானித்தார். அது விசாரணைக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட முடிவு என்பதுதான் உண்மை.

அதிபர் ராஐகோபால் அந்தக் காரியத்தை செய்ய முன்னர் சுவரைப் பார்க்கும் படி என்னைக் கேட்டுக்கொண்டார். அது ஏனைய மாணவர்கள் எனது பிட்டத்தை பார்ப்பதற்கு வசதியாகவா? அல்லது பிரம்பால் அடிக்கும் போது எனது முகத்தைப் பார்ப்பதற்கு தைரியம் இல்லாததாலா? என்று தெரியாது. ஆறு அடிக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் துளி கூட வரவில்லை. ஆனால், அதற்குப் பிறகு அந்தக் கல்லூரியில் என் மனம் துளியளவும் ஒட்டவில்லை. யாழ்ப்பாணத்தில் சென்று படிக்கும் திட்டம் ஏற்கெனவே இருந்தது. அதன் படி அடுத்த ஆண்டு மீண்டும் எட்டாம் வகுப்பில் உரும்பராய் இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன்.

ஒரு நாள் காலை கல்லூரிக்கு செல்லும் வழியில், ‘ இன்று துக்க தினம். பாடசாலையை பகிஸ்கரியுங்கள்’ என்று வீதியில் நின்ற சில இளைஞர்கள், மாணவ மாணவிகளை வழிமறித்து திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என்னை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இது முன் எப்போதும் பார்க்காத ஒரு புதினமாக எனக்கிருந்தது. கல்லூரி வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பில் இருந்த சில மாணவர்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தனர். என்ன விசயம் என்று மெல்லக் கேட்டேன். ‘திரவியம் செத்துப்போட்டான்’ என்று கலக்கத்துடன் கூறினார்கள். எல்லாருடைய முகத்திலும் யாரோ நெருங்கிய உறவினரை இழந்த துக்கம் வழிந்தது. கோப்பாய் வங்கியை கொள்ளை அடித்துக்கொண்டு செல்லும் வழியில், பொலிசார் துரத்திச் சென்று கைது செய்ததால் சயனைட் அருந்தி திரவியம் இறந்து போனதாக ஒருவன் சொன்னார்.

‘யார் இந்தத் திரவியம்?’ என்று எனக்கு மனது குடைந்தாலும், கேட்க வெட்கமாக இருந்தது.

‘துவக்கு வாங்கத்தான் திரவியத்துக் காசு தேவைப்பட்டது’ என்று இன்னொருவர் சொன்னான்.

‘அவனோட போன ஆட்கள் எல்லாம் தப்பிவிட்டினம். திரவியம் மட்டும்தான் பிடிபட்டுப் போனான்’ என்று இன்னொருவன் சொல்ல, ‘நீர்வேலிச் சனங்கள் தான் திரவியத்தை யார் என்று தெரியாமல் பொலிசுக்கு பிடிச்சுக் கொடுத்திட்டுதுகள்’ என்று எவனோ ஆவேசப்பட்டான்.

யார் இது? எதற்காக மாணவர்கள் கலங்குகின்றனர். ஆசிரியர்கள் தமது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இளைஞர்கள் வீதியில் நிற்கின்றனர். எனது காதுக்குள் மிக இரகசியமாக இரஞ்சித் சொன்னான். திரவியம் என்பதுதான் சிவகுமாரன். ஆயுத மூலமே இனி விடுதலை என்று, இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போராளி. பொலிஸ் அதிகாரிக்கே குண்டு வைத்தவன். தற்போது தலைமறைவாக இங்குதான் எங்கோ வாழ்ந்து வருகின்றான். பொலிசார் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறியோடு அலைகின்றனர்.

சிவகுமாரனின் உடல் உரும்பராயில் தகனம் செய்யப்பட எடுத்து வரப்பட்டது. வழமையாக ஒருவர் ஊரில் இறந்தால் எனது வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஒரு நூறு, இருநூறு பேர்கள் செல்வார்கள். ஆனால், சிவகுமாரனின் உடல் தகனத்துக்காக எடுத்து வரப்பட்ட போது இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் எனது வீதிவழியாகச் சென்றனர். எனது ஊர் மக்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தின் எல்லா ஊர்களில் இருந்தும் இளைஞர்கள், யுவதிகள் அணி திரண்டு வந்திருந்தனர்.

பனைகளும் வடலிகளும் கொய்யா மரங்களும் முள்ளு மரங்களும் எந்த வித தடைகளும் இன்றி மிக சுதந்திரமா தங்கள் விருப்பப்படி வளர்ந்து இருந்த எனது கடைசி வளவின் எல்லையிலே அந்த மயானம் இருந்தது. உயரமான ஒரு கொய்யா மரத்தின் உச்சியில் ஏறி, தாய் நிலம் பிளந்து தந்த வீரனின் இறுதி நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த சிவகுமாரன் இருக்கும் போது ஒரு புதிய வழியைக் காட்டினான். அது மட்டுமல் இல்லாமல் போன பின்னரும் அவன் புதிய வழிமுறைகளை எழுதிச் சென்றான். தமிழர்களின் முறைப்படி பெண்கள் யாருமே மயானத்துக்குச் செல்லக் கூடாது. அவர்கள் படலி வரை மட்டுமே வருவார்கள். ஆனால், சிவகுமாரனின் இறுதிக் கிரிகைகள் நடைபெற்ற மயானத்தில் பல நூறுக்கும் அதிகமான பெண்கள் கூடி நின்று ஒப்பாரி வைத்து அழுதார்கள். அதற்கு மேலாக சிவகுமாரனின் இறுதி முகத்தை தாங்கள் பார்க்க வேண்டும் என்று மக்கள் கூக்குரல் இட்டனர். வழமைப்படி பெட்டியில் அடைக்கப்பட்ட உடல் மீண்டும் திறந்து பார்க்க அனுமதிக்கப்படாது. ஆனால், மக்களின் விருப்பத்துக்கு இணங்கி அந்த வீரனின் உடல் ஒரு வானின் உச்சியில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி பா.உ நவரத்தினத்தினம் உட்பட சில பா.உ க்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டு எல்லா மக்களுக்கும் காண்பிக்கப்பட்டது. குழந்தைத் தனமான அந்த முகத்தை கண்டதும் எல்லா மக்களும் உணர்ச்சி வசப்பட்டுப் போனார்கள். எல்லார் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகி ஓடியது. சிலர் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை. அவனை வெறித்துப் பார்த்தார்கள். அவர்கள் மனதில் வைராக்கியம் வளர்ந்தது.

கடைசியில் நான் ஏறி இருந்த கொய்யா மரத்தின் அடியில் இருந்து சுமார் பத்து அடி தூரத்தில் அந்த வீரனின் தியாக உடல் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த அக்கினியை வெகு நேரமாக அந்த கொய்யாமரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். வீடு திரும்ப மனம் இல்லை. ஒருவாறு நமது பங்கு கிணற்றின் உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.

‘செத்த வீட்டுக்குப் போட்டுவந்து தாகத்துக்கு எனது கையால் கிணத்துத் தண்ணியை வாங்கிக் குடிச்சிட்டு போன பெடியங்கள், பழிக்கு பழி வாங்குவோம் என்டு சத்தியம் பண்ணிவிட்டுப் போறாங்கள்’ என்று கண்கள் மலர லாலி மச்சாளின் கணவர் சொன்னார். சந்தோசமாய் இருந்தது.

ஒரு இந்து மயானத்தில் வழமைக்கு மாறாக ஒரு சமாதி கட்டப்பட்டது. பொன். சிவகுமாரன் என்ற பெயர் அதில் பொறிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அந்த சமாதியில் சிவகுமாரனின் தாயர் பூக்களையும் தீபங்களையும் ஏற்றி வைப்பார். சமயத்தில் தண்ணீரும் புல்லு வெட்ட மண்வெட்டியும் எனது வீட்டில் இருந்து கொடுக்கப்படும். இந்த நாட்களில் ஒரு நாள் திடீரென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணிவகுத்து எனது வீட்டைத் தாண்டி மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து மயானத்துக்குச் சென்றேன். அவர்கள் பொன். சிவகுமாரனின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அந்த இளைஞர்கள் ‘தமிழ் இளைஞர் பேரைவையினர்’ என்றும், அதன் தலைவர் சந்ததியார் என்றும் தெரியவந்தது. அவர்கள் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தந்தை செல்வாவின் ‘தமிழ் ஈழமே இனி நமது இறுதி முடிவு’ என்று முழங்கம் எழுப்பி, காங்கேசன்துறை இடைத்தேர்தலின் இறுதி பிரசாரக் கூட்டத்திற்காக கால்நடையாக முற்றவெளிக்கு செல்லுகின்றார்கள் என்பதும் சந்ததியாரின் பேச்சில் இருந்து தெரியவந்தது.

மந்திரம் சபிக்கப்பட்ட ஒருவனைப் போல அவர்களை நான் பின்தொடர்ந்தேன். சந்ததியாரின் கட்டளைப்படி இரண்டு இரண்டு பேராக வீதியின் ஓரமாக நாம் நடந்தோம். எனது வீட்டைக் கடந்து நான் செல்லும் போது கூட வீட்டில் இருந்த யாருமே என்னைத் தடுக்கவில்லை. சந்ததியாரின் தலைமையில் வாகனங்களுக்கு இடைஞ்சல் இன்றி வீதிகளின் ஓரமாக நாம் நடை பயணம் செல்லுகின்ற போது எல்லா வீடுகளில் இருந்தும் மக்கள் படலைக்கு வந்து எங்களைப் பார்த்து மனமார வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் இருந்து தாகத்துக்கு எமக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது. பலாலி வீதி வழியாக கோண்டாவில் சந்தியைக் கடந்து நாம் சென்று கொண்டிருக்கும் போது, தடால் அடியாக பொலிசாரின் சில வாகனங்கள் எம்மை வழி மறித்தன. சந்ததியாரின் பின்னால் ஒரு இரண்டடி தூரத்தில் இருந்த எனக்கு சற்று பயமாக இருந்தது.

ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அதிகாரி சந்ததியாரை கேள்விக்குள்ளாக்கினார். அவருக்கு தமிழ் தெரியாது. சந்ததியாருக்கு சிங்களம் தெரியாது. எனவே, அந்த பொலீஸ் அதிகாரி ஆங்கிலத்தில் பேசினார். தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சந்ததியார் கூறினார். உடனே இன்னொரு பொலிஸ் அதிகாரி மொழிபெயர்ப்புக்காக அமர்த்தப்பட்டார்.

‘அனுமதி இல்லாமல் ஊர்வலம் போவது சட்ட விரோதம். உடனே கலைந்து செல்லுங்கள்’ என்றார் உதவிப் பொலிஸ் அதிகாரி.

‘இது ஊர்வலம் அல்ல; பஸ்சுக்கு காசு இல்லாதல், தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடந்து செல்லுகின்றோம்.’

‘இது சட்ட விரோதம். போது மக்களுக்கு நீங்கள் இடைஞ்சல் செய்கின்றீர்கள்’.

‘நாங்கள் வீதியில் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. ஒரு ஓரமாக நடந்து செல்லுகின்றோம்.’ இது சந்ததியாரின் பதில்.

ஒரு சில நிமிட பேச்சுகளின் பின்னர் சந்ததியார் எதற்கும் மசியாத படியால் பொலிஸ் வாகனங்கள் திரும்பிச் சென்று விட்டன. நமது கூட்டம் ஒரு பெரிய ஆர்ப்பாட்ட ஒலி எழுப்பியது. தொடர்ந்து நாம் நடந்தோம். திருநெல்வேலி விவசாய கழகத்தை கடந்து நாம் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் எம்மை வழி மறித்தது. அதில் இருந்து மிக ஆவேசமாக இறங்கி வந்தார் தளபதி அமிர்தலிங்கம் அண்ணா.

‘என்ன சந்ததியார். நீங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு, என்னை முன்வைத்துக் கொண்டு வழங்கிய உறுதி மொழி என்ன?… பிறகு, எப்படி கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் ஊர்வலம் செய்வீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டார்.

‘அண்ணா! இது ஊர்வலம் இல்லை. பஸ்சுக்கு காசு இல்லாததால் நாங்கள் நடந்து வருகின்றோம்’ என்று மிக அமைதியாக சந்ததியார் பதில் அளித்தார்.

‘சரி அப்படியானால் இப்பவே உங்கள் எல்லாரையும் கூட்டத்திற்கு நான் அனுப்பி வைக்கின்றேன்’ என்று கூறிய அமிர்தலிங்கம், அந்த பலாலி வீதியால் வந்த பஸ், கார் என்று எல்லா வாகனத்தையும் கைநீட்டி மறித்தார். அவருடைய கைகாட்டலுக்கு எல்லா வாகனங்களும் சட்டுப் புட்டு என்று நின்றன. அமிர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று வழியால் வந்த எல்லா பஸ்களும், ஏதோ ஏதோ வேலைகளுக்காக அந்த வழியால் வந்த கார்களும் எந்தவித ஆட்சேபனையும் இன்றியும், கட்டணங்கள் எதுவும் இன்றியும் எங்களை ஏற்றிக் கொண்டன. ஒரு பத்து நிமிட நேரத்தில் அங்கிருந்த எல்லாரும் ஏற்றப்பட்டனர்.

‘சின்னத் தம்மி… இந்தக் காருக்குள் ஏறுங்கள்’ என்று அமிர் அண்ணா என் தோளைத் தட்டிச் சொல்ல, என்னை ஒரு கார்க்காரர் ஏற்றிக்கொண்டார்.

நாங்கள் எல்லாரும் தந்தை செல்வாவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். தமிழர்களின் உரிமைக்கான முழக்கம் அன்று முத்தவெளியில் எழுப்பப்பட்டது. சுமார் ஐம்பதினாயிரம் பேர் அதில் கலந்து கொண்டிருப்பார்கள். அந்த நிகழ்வு சுமார் இரவு பத்து மணியளவில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு எப்படி நான் வீடு வந்து சேர்ந்தேன் என்பது இன்றுவரை எனது நினைவில் இல்லை.

‘எங்கு போய்விட்டு இந்த அர்த்த இராத்திரியில் வருகின்றாய்’ என்றும் எனது வீட்டில் யாரும் கேட்கவும் இல்லை. எனது வீட்டு நாய் மட்டும் என்னைக் கண்டதும் சத்தமில்லாமல் குதித்து வாலை ஆட்டியது. இரவுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அதற்கும் தெரியும்.

(ந‌ன்றி: 'கால‌ம்' இத‌ழ் 34)

1 comment:

அருண்மொழிவர்மன் said...

நானும் கதையை வாசித்தவுடன் அண்ட் போராட்ட ஆரம்ப காலங்களை உணர்ந்து கொண்டேன். செழியன் அண்மைக்காலமாக காலத்தில் எழுதிவரும் சிறுகதைகள் ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களை நன்றாகக் காட்டி வருகின்றன. அவை ஒரு தொகுப்பாக வரும் இடத்து ஒரு முக்கியமான பதிவாக இருக்கும்
`