Wednesday, July 30, 2008

விக்கிர‌மாதித்ய‌ன் எனும் பெரும் ந‌க‌ர‌ப் பாண‌ன்

-எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்

இந்த ஆண்டு சென்னைப் புத்தகச் சந்தையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிஞர் விக்ரமாதித்யனைப் பார்த்தேன். நண்பர்கள், இளைஞர்கள் புடைசூழ மிதமான போதையும் சிரிப்புமாக அலைந்துகொண்டிருந்தார். அருகில் சென்று அண்ணாச்சி என்று அழைத்தவுடன் முகத்தில் பரவசம் மின்னக் கைகளைப் பிடித்துக்கொண்டு உரிமையும் அன்புமாக விசாரித்தார். அடர்ந்து நரைத்த தாடி சற்றே தளர்ச்சியடைந்து போன தோற்றம். எதற்கெனத் தெரியாத படபடப்பு. எப்போதும் போலவே புதிதாகக் கவிதை எழுதத் துவங்கியுள்ள இளம் கவிஞர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அண்ணாச்சி நீங்க அப்படியே இருக்கீங்க என்று சொன்னவுடன் வெடித்துப் பீறிட்டது சிரிப்பு. பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைவில் தெரிந்த இன்னொரு நண்பருக்குக் கையசைப்பு. கையில் என்ன புத்தகம் வைத்திருக்கிறேன் என்று வாங்கிப் பார்க்கும் ஆர்வம். சமீபத்தில் படித்த நாவல் பற்றிய விமர்சனம். புதிதாக வந்துள்ள சிறு பத்திரிகைகள் பற்றிய விசாரிப்பு என்று பத்து நிமிசத்திற்குள் அவர் மனதில் இருந்ததைப் பகிர்ந்து தந்து விட்டு வேறுசில நண்பர்கள் அழைக்க என்னைக் கடந்து சென்றுவிட்டார்.

விக்ரமாதித்யனிடம் எனக்குப் பிடித்தது அவரது அசலான சிரிப்பு. மற்றும் எப்போதும் தன்னைச் சுற்றி இளைஞர்களோடும் கொண்டாட்டத்துடனும் உள்ள இயல்பு. நான் அறிந்தவரை தமிழ்க்கவிஞர்களில் இவரைப் போல இளம்கவிஞர்களை வாசித்து, பாராட்டி, கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வைக்கும் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட கவி வேறு எவருமில்லை. இதை ஒரு கவிஇயக்கமாகவே செய்கிறார் எனலாம்.

அந்த வகையில் நவீனத் தமிழ்க் கவிதையுலகின் மிக முக்கியமான ஆளுமை விக்ரமாதித்யன். எப்போதும் என் நினைவிலுள்ள அவரது கவிதைகளில் ஒன்று.


கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்குத் தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்


*

எழுத்தின் மீதான வேட்கையில் சென்னைக்கு வர நினைப்பவர்கள் எவருக்கும் ஆதர்சபிம்பமாக நிற்பது கவிஞர் விக்ரமாதித்யன் உருவமே. காரணம் விக்ரமாதித்யன் கவிஞராக மட்டுமே வாழ்வது என்ற சவாலில் தன்வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்து இன்றும் சென்னையில் தனக்கெனத் தனியாகத் தங்குமிடம் இன்றி, கையில் காசின்றி பெருநகரப் பாணனைப் போலத் தன் வீரியம் குறையாமல் கவிதைகளின் வழியாக மட்டுமே தன் இருப்பை சாத்தியமாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

பத்திரிகை அலுவலகங்களில் தற்காலிக வேலைகள், நண்பர்களின் உதவி என்று நிரந்தரமான வருமானம் குறித்து எவ்விதமான உத்தரவாதமும் இன்றி மனைவி பிள்ளைகள் என்று சொந்த வாழ்வின் நெருக்கடிகள் காலைக் கவ்விய போதும் கூடத் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாது அதே உற்சாகத்துடன் செயல்பட்டவர் விக்ரமாதித்யன். இருபத்தைந்து ஆண்டுக் காலமாகச் சென்னைக்கு வருவதும் போவதுமாகவிருக்கிறார். எந்த அறையில் தங்குகிறார். யார் யாரைச் சந்திக்கிறார் என்பது ஒவ்வொரு முறையும் புதிராகவேயிருக்கும்.

அவரது பயணங்களின் பின்னால் உள்ள இடர்களும் சிரமமும் நான் அறிவேன். பறவைகள் இளைப்பாறுதலுக்காக வழியில் உள்ள மின்சாரக் கம்பிகளில் அமர்வது போன்றதுதான் அவரது சென்னைப் பயணங்கள். சொந்த வலிகள் குறித்து அதிகம் பகிர்ந்து கொள்கின்றவர் இல்லை அவர். அவர் கவிதைகளில் வெளிப்படும் ஆதங்கம் அளவுகூட நேர்ப் பேச்சிலிருக்காது. ஆனால் தன்னைச் சந்திக்கின்றவர்களை உற்சாகப்படுத்துவதில் அவர் தனித்துவமானவர்.

ஒரு வகையில் வண்ணநிலவன், வண்ணதாசன், கலாப்ரியா, சி. மோகன், கந்தர்வன், துவங்கி, நான், கோணங்கி, ஜெயமோகன், வித்யாசங்கர், லட்சுமி மணிவண்ணன், அஜயன்பாலா, குறுமலை சுந்தரம், சமயவேல், பிரான்சிஸ் கிருபா, சங்கர ராம சுப்ரமணியம், தளவாய் சுந்தரம், பாலைநிலவன், முத்துமகரந்தன், மலைச்சாமி, திருப்புவனம் சரவணன், கனகசபை, ராஜகோபால், ரமேஷ் வைத்யா, யவனிகா ஸ்ரீராம், கைலாஷ்சிவன், சிவா, அப்பாஸ், ஸ்ரீநேசன் என நீளும் மூன்று தலைமுறைப் படைப்பாளிகள் அனைவரின் படைப்புகளுக்கும் பின்னால் விக்ராமதித்யனின் நெருக்கமான பகிர்தலும், உண்மையான அக்கறையும் கலந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

*

கவிஞனாக மட்டுமே வாழ்வது என்பது தமிழ்ச் சூழலில் ஒரு பெரிய சவால். வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு பக்கம் இழுபட மறுபக்கம் கவிதைக்கான உரிய அங்கீகாரம் இன்றியும் படைப்பு சார்ந்த எதிர்வினைகள் , மறுவாசிப்புகள் அற்றும், புறக்கணிக்கபட்ட தனிமையில் தள்ளப்படுவதே காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஒரு வேளை தமிழ்ப்பாரம்பரியமே இதுதான் போலும். கவிஞனாக உரிய கௌரவத்துடனும் சுதந்திரமான மனதோடு எக்காலத்திலும் ஒரு கவிஞன் கூட வாழ்ந்தாக நான் அறியவில்லை.

மனம் நிறைய கவிதைகளுடன் காடு, மலை, கடல் என நடந்து அலைந்து புரவலனின் இடம் தேடிச் சென்ற கவிஞர்களைத்தான் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. கவிதை பாட வயதும் இளமையான பெண் உடலும் தடையாக இருக்கிறது என்று முதுமை கொள்கிறாள் ஔவையார். உலக இலக்கியத்தில் கவிதைக்காக இப்படி உருச்சிதைவு செய்துகொண்ட கவிஞர் வேறு எவரும் இருப்பார்களா எனத் தெரியவில்லை.

தமிழ் மரபில் கவிஞனாக வாழ்வது விரும்பி ஏற்றுக்கொண்ட சாபம் என்றே தோன்றுகிறது.

கவிஞனாக வாழ்வது என்பது ஒரு எதிர்ப்புணர்ச்சி. தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே வாழ்வைக் கொண்டு செல்ல முடியும் என்று உயர்நம்பிக்கை. கவிதைகளின் வழியாக மட்டுமே தன் இருப்பு அர்த்தப்படுகிறது என்ற பேருண்மை.

ஆனால் நடைமுறை வாழ்க்கை சாதாரண மனிதன் மீது சுமத்தும் பிரச்சினைகள், மனத்துயர்கள், வெளிக்காட்ட முடியாத அக நெருக்கடி போல நூறு மடங்கைக் கவிஞன் மீது அழுத்துகிறது. கற்பனைக்கும் நடப்பிற்கும் இடையில் அலைபடும் பாவை போலச் சிக்கித் தவிக்கிறான் கவிஞன். இத்தனையும் மீறி அவனை முன்னெடுத்துச் செல்வது கவிதைக்கான மனநிலை மற்றும் இன்னும் கவிதை மீது அக்கறை கொண்ட நிஜமான வாசகர்கள்.

புதுமைப்பித்தனில் துவங்கி நேற்று முதல்கவிதைத் தொகுதி வெளியிட்டவர்கள் வரை பலரும் எழுத்தை நம்பி வாழ்ந்துவிடலாம் என்று சென்னைக்கு வந்து இறங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எப்போதுமே எழும்பூர் ரயில் நிலையம் எனக்கு ஒரு பலிபீடம் போலத்தான் தோன்றும். காரணம் இங்கே வந்து இறங்கி எத்தனையோ கனவுகளுடன் நகருக்குள் வாழவந்தவர்கள் எத்தனை ஆயிரம் கலைஞர்கள். அவர்களில் அறியப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள். புதைசேறு இழுத்துக் கொள்வதைப் போல சப்தமின்றி சென்னை மாநகரம் வந்தவர்களைத் தன்னுள் இழுத்துக் கொண்டுவிடுகிறதா?

சென்னையில் தங்க இடமில்லாமல், வேலை இல்லாமல், எழுத்தாளராக , கவிஞராக மட்டுமே வாழ்வது என்று வந்து இறங்குவது பெரும் சாகசம். இந்த சாகசத்தில் என் வாழ்வின் பதினைந்து வருடங்கள் சென்னையில் வீசி எறியப்பட்ட வாழைப்பழத்தோலைப் போல எந்த முக்கியமும் அடையாளமும் இன்றிக் கழிந்திருக்கின்றன. ஆனாலும் இந்த வலி, நிராகரிப்பு, வெளிக்காட்ட முடியாத அவமானம் இவைதான் என்னை எழுத வைத்தன. எனக்கான இடத்திற்கான போராட்டத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன.

உலகின் பெரும்கவிஞர்கள் பலரும் கொண்டாட்டத்தைத் தன்னோடு கூடவே வைத்திருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் மனது சகலகோடித் துயர்களையும் தாண்டி ஒவ்வொரு நிமிசமும் புதிதாக உள்ள வாழ்வினைப் பருகவே முனைந்திருக்கிறது.

லோர்க்காவின் கவிதைகளை வாசிப்பவன் அடையும் நெருக்கம் அவன் வாழ்வைப் பற்றி அறியும் போது இன்னும் அதிகமாகிறது. பிரெஞ்சுக் கவிஞனான ழான் காக்தூ கலகக்கவிஞன் என்னும் சிறப்பு அடையாளத்துடன் குடி, கொண்டாட்டம், கலையை மட்டுமே நம்பி வாழ்வது என்று இயங்கிய தீவிரம் இன்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறது.

போராட்டமே உலகம் என்று உரத்துக் குரல் கொடுத்த பாப்லோ நெருதாவின் வாழ்வில் எத்தனை காதல்கள், எவ்வளவு கொண்டாட்டங்கள். நடனம், இசை, குடி, பெண்கள் என்று வாழ்வை அவர் ருசித்த விதம் அலாதியானது. அவ்வளவு இசைக்கும் காதலின் பிரிவுகளுக்கும் இடையில்தான் அவர் சமூகவிடுதலைக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்.

*

தமிழ்க் கவிஞர்களில் விக்ரமாதித்யன் ஒருவர் மட்டுமே தன்னைச் சுற்றி எப்போதுமே கொண்டாட்டத்தையும் பெரிய இளைஞர் கூட்டத்தையும் உடன் வைத்திருப்பவர். ஒருவகையில் விக்ரமாதித்யனின் சந்திப்பு என்பது கொண்டாட்டத்திற்கான துவக்கமாகவே எவருக்கும் இருக்கிறது.

விக்ரமாதித்யன் வேதாளத்தைச் சுமந்துகொண்டு திரிவதாகப் புனைகதை சொல்கிறது. நான் அறிந்த வரையில் கவிஞர் விக்ரமாதித்யன் தான் வேதாளம். எப்போது அவர் விக்ரமாதித்யனாக இருப்பார். எப்போது வேதாளமாக மாறி தன்னைச் சுமக்கவிடுவார் என்பது சூழலும் விருப்பமும் பொறுத்தது.

எழுத்தாளர்களில் நகுலனுக்குப் பிறகு விக்ரமாதித்யன் குறித்தே அதிகம் புனையப்பட்ட கதைகள் உள்ளன. குறிப்பாக விக்ரமாதித்யன் இலக்கியக் கூட்டங்களில் நடந்து கொண்ட விதம், தனிப்பட்ட நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதில் உருவான நகைச்சுவை, கவிஞர்கள் பற்றிய அவரது பதிலடிகள், அவர் எழுதிய குறுங்கவிதைகள் என்று அவர் ஒரு நாட்டார்தெய்வம் போல எண்ணிக்கையற்ற கதைகளும் கற்பனைகளும் சூழப்பட்டிருக்கிறார். அக்கதைகளில் சிறிதளவாவது உண்மையிருக்கும் என்பதே நிஜம். ஆனால் அந்தக் கதைகள் சுவாரஸ்யமானவை. ஒரு எழுத்தாளன் எவ்வளவு பெரிய ஆளுமையாக, எதிர்ப்புக் குரல் தரும் கலைஞனாக இருந்திருக்கிறான் என்பதற்கான சாட்சிகள் அவை.

தமிழ் இலக்கியத்தில் அண்ணாச்சி என்னும் சொல் விக்ரமாதித்யன் ஒருவரை மட்டுமே குறிக்கக்கூடியது. பலநேரங்களில் அவரைவிட வயதில் மூத்த சிலர் கூட அவரை அண்ணாச்சி என்றே அழைப்பதைக் கண்டிருக்கிறேன். அண்ணாச்சியைப் பார்த்தேன். அண்ணாச்சி கூடப் போயிருந்தேன் என்று சொல்லும் இளைஞர்களின் கண்களில் உற்சாகம் வழிந்து கொண்டிருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.

ஒரேயொரு கவிதையை எழுதி முடித்திருந்த இளைஞனைக்கூட உலகின் ஒப்பற்ற கவிதையை அடையாளம் கண்டுவிட்ட சந்தோஷத்தைப் போலப் பாராட்டிப் பேசிச் சிறப்பிக்க வேறு எவருக்கு மனதிருக்கிறது. விக்ரமாதித்யனின் பாராட்டும் தொடர்ந்த அக்கறையும் பலரைக் கவிஞர்களாக்கியிருக்கிறது.

தன்னைச் சுற்றிய இளைஞர்களை இவ்வளவு சந்தோஷமாக ஒரு மனிதனால் வைத்திருக்க முடியுமா என்று பொறாமை கொள்ளுமளவு உற்சாகி விக்ரமாதித்யன். அதே நேரம் இத்தனை நண்பர்களிருந்தும் பல நேரங்களில் பின்னிரவில் படுக்க இடம் கிடைக்காமல் யார் யாருக்கோ போன் செய்து எங்காவது ஒரு அறை தேடிச் சென்று குப்பை படிந்த மூலையில் பையைத்தலைக்கு வைத்து உறங்கிச் செல்லும் அடிநிலையும் இவருக்கு மட்டுமே நேரக்கூடியதாக இருக்கிறது.

நானோ, கோணங்கியோ செல்லும் இலக்கற்ற பயணங்களில்கூட எங்களை அறியாத சில தயக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். விக்ரமாதித்யனிடம் அது கிடையாது. உண்மையில் அவர் ஒரு தீராத சஞ்சாரி. கிடைத்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு, மனம் விரும்பிய ஊரில் இறங்கி, கவிஞர்கள், நண்பர்கள், இளம்வாசகர்கள், இலக்கியப் பரிச்சயமே அறியாதவர்கள் என்னும் பேதமின்றி எவரோடும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் ஆகிவிடக் கூடியவர்.

கவிதை குறித்தும் அவர் எவரையும் மிரட்சி கொள்ள வைக்கின்றவர் இல்லை. கவிதை எழுவது எல்லோருக்கும் சாத்தியமாகும் ஒரு மனநிலை என்று சொல்வதோடு தான் போகின்ற இடங்களில் எல்லாம் கவிதைகள் சொல்லி எழுத வைத்து நிரூபணமும் செய்கின்றவர். சங்ககாலப் பாணர்களைப் போல அவர் செல்லுமிடம் எல்லாம் கவிதைக்கான நிகழ்வெளிகளே.

குடிப்பதில் அதிக விருப்பம் கொண்டிருந்தபோதும் எந்த போதையின் உச்சத்திலும் கூட அவர் வழிமாறிப் போய்விடுவதில்லை. மாமிசம் உண்டதில்லை. அறியாத நபரைத் தவறாக ஒரு சொல் பேசிவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் வரையில் குடி என்பது சேர்ந்து உரையாடுவதற்கான பரிமாற்ற பானம் மட்டுமே. குடிக்காதவர்களை அவர் கட்டாயம் செய்வதில்லை. தான் குடிக்கக் கூடாது என்று மறுப்பவர்களை அலட்சியம் செய்யத் தவறுவதுமில்லை.

எனக்கு விக்ரமாதித்யன் என்னும் ஆளுமையைப் பிடிக்கும். அவர் கவிதைகளை ரொம்பவும் பிடிக்கும். அன்னம் வெளியீடாக ஆகாசம் நீல நிறம் என்னும் விக்ரமாதித்யனின் முதல் கவிதைத் தொகுப்பு நவகவிதை வரிசையில் 1982ஆம் ஆண்டு வெளியானது. அன்னம் வெளியிட்ட மிக முக்கியமான பங்களிப்பு இந்த நவகவிதை வரிசை.

இதில்தான் வண்ணநிலவன், கோ. ராஜராம், அப்துல்ரஹ்மான், மீரா, முதலியவர்களின் கவிதைத் தொகுதிகள் வெளியாகின. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவற்றைத் தேடித்தேடி வாங்கிப் படித்தேன். விக்ரமாதித்யனை அப்போது அறிமுகமாகவில்லை.

அதன் சில வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை கோணங்கியோடு குற்றாலம் செல்லப் புறப்பட்ட போது தென்காசிக்கு ஒரு காலை நேரம் வந்திறங்கினோம். இளமஞ்சள் வெயிலோடு கூடி விட்டுவிட்டு சாரல் அடித்துக்கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தின் அருகில் தான் விக்ரமாதித்யனின் வீடு இருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்றார். இருவரும் வீட்டைத் தேடிப் போனோம்.

கோவிலின் அருகாமையில் ஒண்டுக்குடித்தனங்கள் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாதி இருள் மங்கிய வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் எட்டிப் பார்ப்பதும் மறைவதுமாக இருந்தது. மின்சார மற்றுப்போன பகலில் ஓலைவிசிறியால் வீசியபடியே அக்னிநதி நாவலைப் படித்துக் கொண்டிருந்தார் விக்ரமாதித்யன். மெலிந்த உடம்பு. சீவப்படாத தலை. புகைப்பதற்கான பீடிகள், தீப்பெட்டி. ஒரு பக்கம் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்து மூடப்பட்டிருந்த உணவு. வீட்டில் வேறு யாருமில்லை.

எங்களைப் பார்த்த மாத்திரத்தில் அவரது முகத்தில் புன்னகை ததும்பத் துவங்கியது. மாப்ளே என்று உரிமையுடன் கோணங்கியை அழைத்து அருகில் உட்கார வைத்தார். என்னை, கோணங்கி அறிமுகம் செய்து வைத்தவுடன் யோவ் உன்னைத்தான்யா.. ராமச்சந்திரன் சொல்லிக்கிட்டே இருந்தான். உன் கதை ஒண்ணைப் பத்தி ரொம்ப நல்லாச் சொன்னான்யா.. அவன் சாதாரணமா யாரையும் பத்தி சொல்லமாட்டான். உன்னைப்பத்தி ரொம்பச் சொன்னான்யா என்று உற்சாகத்துடன் பேசத் துவங்கினார்.

அவர் சொல்வது வண்ண நிலவனைப்பற்றி என்று கோணங்கி குறுக்கிட்டு என்னிடம் சொன்னார். என்னுடைய சிறுகதை குறித்து வண்ணநிலவன் சொன்ன விஷயத்தை அன்றைய உரையாடலில் நாலைந்து முறை நினைவுபடுத்தியதோடு நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன், எது போன்ற புத்தகங்களில் விருப்பம் அதிகம் என்று விக்ரமாதித்யன் கேட்டார்.

நான் ரஷ்ய இலக்கிய புத்தகங்களைப் பற்றிச் சொன்னவுடன் 'முதல்ல நீ கெஸ்டா பெர்லிங் சாகாபடி. சல்மா லாகெர்லெவ்வோட நாவல். மதகுருங்கிற பேர்ல க.நா.சு தமிழ்ல மொழிபெயர்த்திருக்கிறார். அது கிடைக்கலேன்னா தேவமலர் படி. கோணங்கி, உன்கிட்டே ஒளிச்சிவச்சிருப்பியே. அதுல இருந்து எடுத்து படிக்கக் குடுறா' என்று உரிமையோடு சொன்னார்.

கோணங்கியிடம் அப்படியொரு ரகசிய சேமிப்பு அறையிருந்தது. அதில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான நாவல்கள் அத்தனையும் இருந்தன. மதகுருவைப் படிக்கத் தருவதாக உறுதியாகச் சொன்னார் கோணங்கி. பின்பு மூவரும் குற்றாலம் புறப்பட்டுச் சென்றோம். நல்ல சீசன். வழி முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அருவியின் பெரும்சப்தம் ஊரை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. மங்குஸ்தான் பழம் விற்பவர்களின் குரல்கள் கடந்து சென்றோம்.

சித்திரசபைக்குப் போய்விட்டுப் பிறகு அருவியில் குளிக்கலாம் என்றார். சித்திரசபை சிவனின் ஐந்து சபைகளில் மிக முக்கியமானது. அங்கே நாங்கள் சென்றபோது அதிகம் ஆட்கள் இல்லை. அங்கிருந்த ஒவ்வொரு ஓவியமாக விளக்கிச் சொல்லிக்கொண்டே வந்த போது மரபு இலக்கியங்கள் குறிப்பாக சைவ சித்தாந்த இலக்கியங்களில் அவருக்கு உள்ள புலமையை அறிந்துகொள்ள முடிந்தது.

அருவிக்குச் சென்று குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு வந்தபோது நடை சாத்தியிருந்தது. கல்தூண்கள் உள்ள பிரகாரத்தில் நின்றபடியே ஈரத்தலையுடன் அவர் திரிகூட ராசப்ப கவிராயர் எழுதிய குற்றாலக்குறவஞ்சியைப் பற்றிச் சொல்லத் துவங்கினார். உணர்ச்சி வேகத்தில் ஒரு கவிதையைச் சொல்லி முடித்து ஆழ்ந்த பெரு மூச்சுடன் அங்கிருந்த சிவனை நோக்கி வணங்கிவிட்டு மௌனமாகிவிட்டார்.

ஈரஉடைகளுடன் பெண்கள் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். குரங்குகள் இரண்டு மரக்கிளையில் ஊசலாடிக் கொண்டிருந்தன. செண்பகப்பூவைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அருவியின் மீது ஒளிர்ந்துகொண்டிருந்தது சூரியன். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. திரும்பி வருவதற்காகப் பேருந்தில் ஏறிய போது விக்ரமாதித்யன் இரண்டு வரிக் கவிதை சொல்லி அதைக் குறித்துக் கொள்ளும்படியாகச் சொன்னார்.

விக்ரமாதித்யனின் பெரும்பான்மைக் கவிதைகள் அவர் அவ்வப்போது நண்பர்களிடம் சொன்னவை. அவர் சொல்லி இளம் வாசகர்களால் எழுதப்பட்டவை. பயண நேரங்களில் டயரிகளில் குறிக்கப்பட்டவை. நாலைந்து இளம் கவிஞர்களுடன் ஒன்று சேர்ந்து நீள் கவிதைகள் படைப்பது வரையிலான தடையற்ற மனச்சுதந்திரம் அவருக்கு இருந்தது.

விக்ரமாதித்யன் கவிதைகளில் நான்கு குரல்கள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன. ஒன்று கவிஞனாக தான் வாழ்வதின் இடர்ப்பாடுகள் குறித்த ஆதங்கம். மற்றது, பெண்கள் மற்றும் பாலுணர்வு குறித்து அடக்கி வைக்கப்பட்ட மனநிலை. மூன்றாவது, மரபான தமிழ் இலக்கியம் குறித்த அவரது உயர்வெண்ணம் மற்றும் அது கவனிப்பாரற்றுப் போய்விட்டதே என்ற கோபம். நான்காவது, தன்னைச் சுற்றிய உலகின் துவேசங்கள். அதிகார நெருக்கடிகள், எதிலும் சார்பு கொள்ள முடியாது தவிக்கும் மனப்பாங்கின் வெளிப்பாடு. இந்த நான்கும் பல நேரம் ஒரே கவிதையிலும் வெளிப்படும். கவிதை குறித்து அதிகக் கவிதைகள் எழுதியவர் இவரே.

இவரது கவிதையில் அதிகம் உருவகங்கள், கவித்துவப்படிமங்கள் இடம்பெறுவதில்லை. மாறாக இயல்பான அன்றாட மொழியைக் கவிதையின் மொழியாக உயர்த்துவதே இவரது வெற்றி. அத்தோடு நேரடியான சொல்லும் தன்மை அவர் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. இது மரபான தமிழ்க் கவிதையின் குரல். அத்தோடு தான் ஒரு நவீனக் கவிஞன் அல்லன். மாறாக, தமிழ்மரபின் பாணன் என்று சொல்லிக் கொள்ளும் கவித்துவ வெளிப்பாடு . இவையே விக்ரமாதித்யன் கவிதைகளைத் திரும்பவும் வாசிக்க வைக்கின்றன.

இவரது கவிதைகள் குறித்துப் பொதுவான குறையும் அதன் நேரடியான எளிமையான கூறலே. பல கவிதைகள் வெறும் ஸ்டேட்மெண்ட்டுகளாக முடிந்துவிடுகின்றன. சில கவிதைகள் அது உருவாக்கப்படும் அதிர்ச்சிக்காக மட்டுமே எழுதப்பட்டிருக்கின்றது. போதும் என்ற அளவை மீறிய சுய ஆதங்கம். கவிதையின் ஊடாடும் மௌனமின்மை என்பது போன்ற குறைகளைத் தாண்டி இவரது கவிதைகள் தனித்த வகையாக அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து முக்கியக் கவிதைகளாகக் கவனம்பெறுகின்றன.

முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் விக்ராமதித்யன். சங்க இலக்கியம் துவங்கி காப்பியங்கள், தனிப்பாடல்கள் வரை தேர்ந்து கற்றவர். அதே நேரம் தமிழின் முக்கிய படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தேடித்தேடிப் படிக்கும் இயல்பும் அவருக்கு உண்டு. எனது நாவல்கள் அத்தனைக்கும் வெளியான சில வாரங்களில் படித்து விட்டு விரிவான விமர்சனம் செய்தவர் விக்ரமாதித்யன். ஜெயமோகனும் கோணங்கியும் இதை நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் விக்ரமாதித்யனின் கவிதைகள் மொத்தத் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கின்றன. சிறுகதைகள், கவிதைகள் குறித்த கட்டுரைகள் தனி நூல்களாக வெளியாகியிருக்கின்றன. விக்ரமாதித்யன் கவிதைகள் குறித்து இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கவும் விமர்சிக்கவும் தேவையுள்ளது.

*

விக்ரமாதித்யனோடு உள்ள என்னுடைய உறவு எண்ணிக்கையற்ற நினைவுகளால் நிரம்பியது. யோசிக்கையில் கடந்து செல்லும் ஒவ்வொரு பயணத்தில் ஏதாவது ஒரு ஊரில் அவரைச் சந்திக்காமல் இருந்ததேயில்லை என்றே தோன்றுகிறது. திருப்புவனத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு நான் போய் இறங்கும் போது உள்ளிருந்து ஈரத்தலையும் சிரிப்பாக வெளியே வந்துநின்றார் விக்ரமாதித்யன். அந்த அளவு இலக்கியமே வாழ்வு என்றலையும் சஞ்சாரி அவர்.

ஒரு முறை பத்தமடையில் உள்ள எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வீட்டில் நான், கோணங்கி, ஜோதிவிநாயகம், விக்ரமாதித்யன் நால்வரும் தங்கியிருந்தோம். கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தார்கள் என்பதால் தமிழ்ச்செல்வன் மட்டுமே தனியாக இருந்தார். நாங்கள் சென்றபோது அவரும் தன் வேலைக்காகக் கிளம்பி திருநெல்வேலி சென்றுவிட்டார்.

நாங்களாக சமையல் செய்து சாப்பிட்டபடியே இரண்டு நாட்கள் பகலிரவு பாராமல் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ்ச்செல்வனின் வீடு அருகே ஆற்றின் படித்துறை உள்ளது. குளிப்பதற்கு மிக அழகான இடம். குளிப்பதும் வீடு திரும்பி பேசுவதுமாக நீண்டது பகல். அன்றிரவு விக்ரமாதித்யன் மிக அதிகமாகக் குடித்திருந்தார். வீட்டில் இருந்த மாவடு உள்ள ஜாடியை அருகில் எடுத்து வைத்துக்கொண்டு போதையுடன் தான் ஒரு கதை எழுத விரும்புவதாகச் சொல்லி என்னை எழுதும்படியாகச் சொன்னார்.

நான் உடனே ஒரு பேடும் பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். மணி பத்தரையிருக்கும். கதையைச் சொல்லத் துவங்கினார். இரண்டு வரிகள் எழுதியிருப்பேன். அதற்குள் திரும்பப் படித்துக் காட்டச் சொல்வார். கதை ஒரு டாக்சி டிரைவரைப் பற்றியது. கதையின் துவக்கத்தில் அவன் திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்குக் கிளம்புகிறான். திருநெல்வேலிக்குள்ளாகவே ஒவ்வொரு இடமாக நின்று நின்று டாக்சி போகின்றதே அன்றி, கதை ஒரு துளிகூட நகரவேயில்லை.

இடையில் அவராக மறைவில் போய்க் குடித்துவிட்டு வருவார். வந்தவுடன் ஊறுகாய் சாப்பிடுவார். பின்பு கதையைத் தொடரச் சொல்வார். இப்படியாக கதையில் டாக்சி திருநெல்வேலியை விட்டுத் தாண்டுவதற்குள் விடிகாலை மூன்று மணியாகிவிட்டது. அதற்குள் பதினைந்து பக்கங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. எனக்கோ தூக்கம் தாங்க முடியவில்லை. அவரும் தூக்கமும் கதைசொல்லும் உற்சாகமும் ஒன்று சேர்ந்திருந்தார்.

முடிவில் பேனாவின் ரீபில் தீர்ந்துபோனது. நல்லவேளை தப்பிவிட்டேன் என்பது போல நினைத்து நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். ஆனால் அதுவரை உறங்கிக்கொண்டிருந்த கோணங்கி எழுந்து வந்து பேனா இல்லேன்னா என்ன பென்சில் தர்றேன் என்று புதிதாக ஒரு பென்சிலைச் சீவி எடுத்து வந்து தந்தார். விடிய விடிய அந்தக் கதையை எழுதினோம். கதை முடியும்போது தமிழ்ச்செல்வன் வீட்டிலிருந்த ஒரு ஜாடி மாவடு ஊறுகாய்களும் ஒரே இரவில் காலியாகிப் போயிருந்தது.

மறுநாள் காலை கதையைத் திருத்தம் செய்து தன்னிடம் வாங்கி வைத்துக்கொண்டார். பின்பு அதை எடிட் செய்து காலம் என்னும் தலைப்பிட்டு வெளியிட்டதோடு அதை எனக்கே சமர்ப்பணமும் செய்திருந்தார். ஒருவகையில் அந்த நிகழ்வு வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் அவருக்குள் இருந்த கதை சொல்லும் உத்வேகத்தைக் காட்டுகிறது. இதைப் போலவே கலாப்ரியா நடத்திய கவிதைப் பட்டறைகள், முன்றில் கருத்தரங்கு. பிரமீளுடன் ஆன விக்ரமாதித்யனின் நட்பு, கழுகு மலையில் நடந்த இலக்கிய விவாதம் என்று மனம் ததும்பும் அளவு அவரோடு சந்தோஷமான நட்பும் நினைவும் சாத்தியமாகியிருக்கின்றன.

*

விக்ரமாதித்யனின் கவிதைகள் எளிய மனிதர்கள் பால் மிகுந்த அக்கறை கொண்டவை. நடுத்தர வயதில் வேலையற்றுப்போன ஒரு மனிதன் வேலை தேடி, குடும்பத்தைப் பிரிந்து செல்லும் ஒரு அதிகாலையைப் பற்றிய அவரது கவிதை வலி நிரம்பியது. அந்தக் கவிதை பல நேரங்களில் என் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவமாக இருந்திருக்கிறது. அந்த வகையில் ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு பயணத்திலும் அந்தக் கவிதையை நினைத்துக்கொள்வேன்.

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர்வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக்
கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது
கண்ணுக்குள் . . .

பொருள்வயின் பிரிவு கவிதையிலிருந்து

ந‌ன்றி: உயிர்மை(ஜூலை, 2008)

No comments: