Sunday, November 06, 2011

கவிதை நூல்/ காலம்-38 வெளியீடு


-பெயரிடாத நட்சத்திரங்கள்
(கவிதை நூல் வெளியீடு)

-'காலம்' இதழ்- 38 வெளியீடு

Time: Nov 13, 4.30 to 8.30 p.m
Place: Mid-Scarborough Community Centre  (Kennedy/Eglinton)

Contact: Selvam @ 416 731 1752

Wednesday, November 02, 2011

பரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம்

-வ‌.கீதா

1957 முதல் இன்று வரையிலும் முதுகுளத்தூர் பகுதியிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் நீடித்து வரும் சாதி வெறியும், வன்மமும் – ஒவ்வொரு ஆண்டும் தலித் உயிர்களை பலி வாங்கி தம்மைப் புதுப்பித்துக்கொள்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்புகூட, சாதியப் படிநிலை அமைப்புக்குள் முற்றிலும் இணையாத வகுப்புகள், கொஞ்சம் கொஞ்சமாக அப்படிநிலையில் இடம் பிடித்துக் கொண்டதுடன், அவ்வமைப்பின் தர்க்க நியாயங்களை காப்பவையாகத் தம்மை வடிவமைத்துக் கொண்டுள்ளன. "முக்குலத்தோர்' என்ற அடையாளத்தின் கீழ் திரண்டுள்ள இந்த வகுப்புகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையோர் – அவர்களுடைய சமூக, அரசியல் தலைவர்களாக உள்ளவர்கள் கடைப்பிடிக்க விழையும், கடைப்பிடித்து வரும் தீண்டாமையை தாமும் வெறித்தனமாகப் பின்பற்றி வருகின்றனர்.

ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்துள்ள தலித் மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தியும் கொன்றும் வந்துள்ளனர். அதே சமயம், பொருளாதார ரீதியாகவும் சரி, கல்வி ரீதியாகவும் சரி, ஆதிக்க சாதியினரின் வாழ்நிலைமைகள் அவர்கள் வரித்துக் கொள்ள விரும்பும் சாதிப் பெருமைக்கும் அதிகாரத்துக்கும் உரிய வகையில் இல்லை. முக்குலத்தவர்களில் கணிசமானவர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை இது.

ஆதிக்க சாதியினருக்கு எதிராக தலித் மக்கள் எதிர்வினை புரிந்துள்ள தருணங்களில், காவல் துறையும் சட்டமும் அவர்கள் பக்கம் உள்ள வரலாற்று நியாயத்தை என்றுமே முழுமையாக உள்வாங்கிக் கொண்டதில்லை. தலித் மக்களின் கோபமும் அதிலிருந்து பிறக் கும் வன்முறையும் – அவர்கள் மீது தொடர்ந்து திணிக்கப்படும் இழிவு, வெறுப்பு ஆகியவற்றின் விளைவுகள்தான் என்பதை கருத்தில் கொள்வதில்லை. சராசரி சட்ட நியதிகளின் படியே இந்த எதிர்வினைச் செயல்கள் அளக்கப்படுகின்றன, மதிப்பிடப்படுகின்றன. இதன் பொருள், தலித்துகள் சட்ட நியாயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல – ஆனால், மிக மோசமான, அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு வாழ்பவர்களின் நடவடிக்கைகளை எடை போட, புரிந்து கொள்ள சட்டவிதிகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் மட்டுமே போதுமானவையாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் பி.சி.ஆர். சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய, மத்திய உள்துறை அமைச்சகம் 1979 இல் அமைத்த விசாரணைக் குழு இதை அன்றே சுட்டிக் காட்டியதுடன், சாதிக் கலவரங்களில் தொடர்ந்து தலித்துகள் குற்றவாளிகளாக்கப்படும் அவலத்தையும் பதிவு செய்தது. ஆதிக்க சாதியினரின் அடாவடிச் செயல்பாடுகளுக்கு அரசு அரணாக இருப்பதையும் அவ்வறிக்கை சுட்டியது.

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்திய காவல் துறையினர் மேற்கூறப்பட்டுள்ள சராசரி சட்ட நியாயங்களை முன்வைத்தே தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கியுள்ளனர். அவற்றின் அடிப்படையிலேயே தமக்கான நியாயங்களை வகுத்துக் கொண்டுள்ளனர். ஒரு முக்கியமான அரசியல், பண்பாட்டு நிகழ்வுக்காக அணி திரண்டிருந்த மக்கள் திரளின் மீது, முன் அறிவிப்பு ஏதுமில்லாமல், சட்ட – ஒழுங்கு, தற்காப்பு ஆகியனவற்றின் பெயரில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவது சரியானதே என்று அவர்களும், அவர்களது வாதங்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ள முதலமைச்சரும் நியõயம் பேசியுள்ளனர்.

இத்தகைய சட்ட நியாயங்களின்படி நடக்க வேண்டிய நிர்பந்தம் ஏதும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். நடந்து முடிந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களின் உடல்களை குறைந்தபட்ச மரியாதையுடனும், மாண்புடனும் நடத்தக் கூட அவர்கள் தயாராக இல்லை. ஏதோ விலங்கு ஒன்றை அடித்துக் கொன்று தூக்கிச் செல்வது போல, 21 வயது ஜெயபாலின் உடலை அவர்கள் தெருவில் இழுத்துச் சென்றதை சம்பவம் நிகழ்ந்த போது, அங்கிருந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தில் காண முடிந்தது.

இப்புகைப்படத்தைப் பார்த்ததும், மறைந்த சிவில் உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபாலின் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது. குஜராத்தில் 2002 இல் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கொடூரமான தாக்குதல்களையும், அவை ஏற்படுத்திய நாசங்களையும் நேரில் சென்று வந்த பிறகு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார் : “குஜராத்தில் நடந்த கொலைகள், பொருள் நாசம், மோசமான வல்லாங்குச் செயல்கள் ஆகியன இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ அரசியல் மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவுகள்தான் என்பது புரிந்தது. அப்பிரச்சாரத்தின் வீச்சையும் ஆழத்தையும் கண்டு பீதியும் கோபமும் ஏற்பட்டாலும், அதைப் பகுத்தாய்ந்து விமர்சிக்க முடிந்தது. ஆனால், அப்பிரச்சாரத்தின் விளை வாக, மிகப் பழமையான இஸ்லாமிய புனிதர்களின் கல்லறைகளை சிலர் சூறையாடி அழித்திருந்ததைக் கண்டபோது, அவர்களை விரட்டிய வெறுப்பின் உக்கிரமானது, நம்மை மனம் தடுமாறச் செய்கிறது. வெறுப்பின் ஆற்றலை எண்ணி நடுங்குவதைத் தவிர, வேறு எதையும் செய்ய முடியவில்லை. அன்புக்கு அத்தகைய ஆற்றல் இல்லையோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது.''

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை பகுத்தாய்ந்து பார்க்கும்போது, நமக்கு அது நியாயமற்றது என்பது புரிகிறது. ஆனால், இந்த அநியாயத்தின் தன்மை, அதன் உள்ளார்ந்த வெறுப்பு, அவ்வெறுப்பை செயலாக மாற்றவல்ல அதிகார வெறி – இவற்றை நம்மால் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சாதிய சமூகத்திற்கேவுரிய வக்கிரங்களின் நீட்சியாக இத்தகைய செயல்பாடுகள் அமைவதுடன், அத்தகைய வக்கிரங்களை நியாயங்களாக அறிவிக்கின்றன. அதிகாரத்தில் உள்ள, சாதியுணர்வுடைய ஆதிக்க வகுப்பினரின் மனப்பாங்கு, இத்தகைய வெறுப்பால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அதே சமயம், இக்கொடூர நிகழ்வுக்கான குறிப்பிட்ட வரலாற்றுப் பின்புலம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது. 1957 இல் இம்மானுவேல் சேகரன் அவர்கள் கொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டதும் நம்மில் பலர் அறிந்ததே. இந்த நிகழ்வுகளின் நீட்சியாக நடந்த கலவரங்களில் – தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டன; பயிர்கள் அழிக்கப்பட்டன; மாதா கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த தலித்துகளை ஆதிக்க சாதி தேவர்கள் விரட்டிக் கொன்றனர். தலித்துகள் நடத்திய எதிர்த் தாக்குதல்களிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. அன்று ஆட்சியில் இருந்த காமராசர் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கலவரங்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையினரை துணைக்கழைத்துக் கொண்டது. காவல் துறையினர் ஆதிக்க சாதியினரில் பலரை சுட்டுக் கொன்றனர்.

இந்த பயங்கரங்கள் நடந்து முடிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவற்றையொட்டிய கசப்பான நினைவுகளும், அவை ஏற்படுத்தியுள்ள மனக்காயங்களும் முற்றிலுமாக மறையவில்லை. இரு தரப்பிலும், ஒவ்வொரு தலைமுறையும் இந்நினைவுகளை புதுப்பித்து வந்துள்ளன. மேலும், இப்பகுதிகளில், தீண்டாமைக்கும், சாதி ஏற்றத்தாழ்வு களுக்கும் ஆதாரமாகவுள்ள கருத்து நிலைகளும், பொது உளவியலும் பெரிய அளவுக்கு மாறியுள்ளதற்கான சான்றுகள் இல்லை. இப்பகுதிவாழ் தலித் மக்களின் வாழ்நிலைச் சூழலில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சாதி இழிவுதான் – அவர்களது சமூகத் தகுதியை தீர்மானிக்கிறதேயொழிய, அவர்கள் அடைந்துள்ள பொருளாதார மேம்பாடும், கல்வியும், அவர்கள் பெற்றுள்ள அரசியல் ஆதாயங்களும் அல்ல. பரமக்குடி நிகழ்வுகளை இந்தப் பின்னணியில் வைத்தும் நாம் ஆராய வேண்டியுள்ளது.

அடுத்து, அன்று காவல் துறையினரின் தலையீடு எத்தன்மையானதாக இருந்தது என்பதை இன்று நாம் சற்றே நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவின் பொருத்தப்பாடு தொடர்பான கேள்வி மட்டுமல்ல இது. அன்று, அம்முடிவு தவிர்க்க முடியாததாக இருந்தது என்பது உண்மை. ஆனால், அது ஏற்படுத்திய பாதிப்பை, குறிப்பாக, அது தோற்றுவித்த பகையுணர்வையும் வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் அரசியலையும் தணிக்க, அந்தக் கால அரசும் சரி, அதற்கு பின்னால் வந்த தி.மு.க. ஆட்சியும் சரி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு மேற்கொள்ளவில்லை என்பதும் உண்மை. இடதுசாரி அமைப்புகளும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டும். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கும் சாதி வெறுப்பை ஊடறுத்துச் செல்லக்கூடிய வளமான அரசியல் பண்பாடு உருவாகவில்லை. 1980களுக்குப் பிறகு தமிழ்நாடு கண்ட தலித் எழுச்சியானது, தலித் மக்களின் போராட்டங்களுக்கு பெரும் உந்துதலாக அமைந்தபோது, இந்த எழுச்சியை வன்முறையால் எதிர்கொள்ளத் துடித்த அரசியல்தான் அங்கு வளர்ந்திருந்தது.

எனவே, சமூக அரசியல் பிரச்சனைகள் முற்றி வரும்போது அவற்றை சமாளிக்க ஓர் அரசு காவல் துறையை "சரி'யான வகையில் பயன்படுத்து வதைக் குறித்தும்கூட நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும், முதுகுளத்தூர் கலவரங்களைத் தடுத்து நிறுத்த மட்டும் காமராசர் அரசு காவல் துறையை பயன்படுத்தவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்களின் நியாய மான போராட்டங்களை ஒடுக் கவும் அவர் இதைச் செய்தார். அவரது ஆட்சியில் தமிழ் நாடு பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கண்டாலும், அந்த ஆட்சிக் காலகட்டத்தில் தான் வால்பாறை தோட்டத் தொழிலாளிகளை காவு கொண்ட துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. துறைமுகத் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தபோதும் அதைக் கலைக்க காவல் துறையினர் தருவிக்கப்பட்டனர். 1957இல் திராவிடர் கழகம் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தியபோது, காமராசர் ஆட்சிதான் 3000 போராளிகளை சிறை பிடித்ததோடு, சிறையிலேயே பலர் இறக்கக் காரணமாக இருந்தது.

இப்பிரச்சினையை வேறொரு கோணத்திலிருந்தும் நாம் அணுகலாம். 1950களுக்குப் பிறகு நடந்த சாதி கலவரங்களை எடுத்துக் கொண்டால், காவல் துறை மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் ஏன் சட்டத்துறையுங்கூட ஆதிக்க சாதித் தலைமைகளுக்கு சார்பாக நடந்து கொண்டதை காணலாம். 1968 வெண்மணி படுகொலைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, “மிராசுதாரர்களைப் போன்ற கனவான்கள் கொலை செய்யக் கூடியவர்கள் அல்லர்'' என்று தீர்ப்புரைத்தார். 1979 இல் விழுப்புரம் நகரில் 12 தலித்துகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட போதும் சரி, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத் தலைவர்கள் தலித்துகளுக்கு எதிராக, அப்பகுதி வன்னியர்களை உசுப்பிவிட்டு தலித்துகளின் வீடுகளை எரிக்கச் செய்தபோதும் சரி, ஆளுங்கட்சியினருக்கும், அவர்கள் முன்னிறுத்திய வன்னியர் தலைமைக்கும் ஆதரவாகவே விழுப்புரம் நகர காவல் துறை செயல்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டபோது கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. 1980 தொடங்கி 1990கள் வரை, தென் மாவட்டங்களில் சாதி இந்துக்களின் அதிகாரத்துக்கும் சாதி வெறிக்கும் எதிராக தலித்துகள் நடத்திய எதிர்வினைகள், உள்ளூர்க் காவல் துறையினரையும், நிர்வாகத்தையும் அவர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டது. குறிப்பாக, ஜான் பாண்டியன் தலைமையில் தென் மாவட்ட தலித் இளைஞர்கள் களமிறங்கியபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் அவர்களுக்கு பல தொல்லைகளை அவர்கள் கொடுத்தனர். அவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.

1995 இல் கொடியங்குளத்தில் வெடித்த கலவரங்களின்போது, ஆதிக்க சாதி தேவர்களின் நலன் காக்க காவல் துறை களமிறங்கியது. தலித்துகளின் வீடுகளை சூறையாடியது. தலித் பெண்களை வன்முறைக்கு ஆளாக்கியது. இச்சம்பவங்களை ஆய்ந்தறிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கோமதிநாயகம் ஆணையம், காவல் துறையினர் அத்துமீறி நடக்கவில்லை என்று தெரிவித்தது. அப்பட்டமான பொய்யை, விளக்கங்களுடனும், வியாக்கியானங்களுடனும் தனது ஆணையம் அறிந்த "உண்மை' என கோமதிநாயகம் அறிவித்தார். 1999இல் தங்களது வாழ் நிலைமைகளில் மாறுதல் வேண்டும் என்று மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் – இவர்கள் அனைவருமே தலித்துகள் – போராடியபோது, அவர்களது போராட்டத்தின் நியாயத்தை அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தது. அவர்கள் தங்களது உரிமைகளுக்காக நடத்திய பேரணியை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தி, அம்மக்களில் 17 பேரை கொன்று குவித்தது.

தலித்துகளின் வாழ்வுரிமையை இம்மியளவுகூட மதிக்கத் தயாராக இல்லாத அரசு ஊழியர்களின், குறிப்பாக காவல் துறையினரின் இச்செயல்பாடுகளில் ஏறக்குறைய அனைத்துமே அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றவைதான் (மாஞ்சோலை பயங்கரம் நடந்தபோது தி.மு.க . ஆட்சியில் இருந்தது). ஆனால், ஆதிக்க சாதிகளின் நலன்களை தி.மு .க. அரசுமே வெகு கவனமாக பாதுகாத்து வந்துள்ளது. அன்றைய தஞ்சை மாவட்டத்தின் அரசியல் நிலைமை கள் குறித்து நன்கு அறிந்திருந்தும், வெண்மணி படுகொலைக்கு இட்டுச் சென்ற அநீதிகள் தொடர்ந்து நடைபெறாமலிருக்க, அது எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை. வெண்மணியிலிருந்து 3 மைல் தொலைவில் இருந்த காவல் நிலையத்திலிருந்து எரிந்து சாம்பலாகிப் போன ராமைய்யாவின் குடிசைக்கு வர, காவல் துறையினருக்கு 12 மணி நேரம் பிடித்தது. அக்கொலைகளைப் பற்றி விசாரிக்க தி.மு.க. அரசு அமைத்த கணபதியா பிள்ளை ஆணையம், அப்பகுதி தலித்துகளின் போராட்டங்களையும் கோபத்தையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. "கூலிப் பிரச்சனை'தான் நடந்த சம்பவத்துக்குக் காரணம் என்று கூறி, தஞ்சை மண்ணில் புரையோடிக் கிடந்த வன்மமான வர்க்க – சாதி அரசியல் குறித்த எந்தவொரு பயனுள்ள விமர்சனத்தையும் அது முன்வைக்கவில்லை.

கொடியங்குளம் நிகழ்வுகளை விசாரித்த கோமதிநாயகம் குழுவினரின் அறிக்கையை தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவே செய்தது. சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையை யும் அது எடுக்கவில்லை. மாஞ்சோலைக் கொலைகளை நடத்தி முடித்த காவல் துறையினருக்கு ஆதரவாகவே அன்று முதல்வராக இருந்த கருணாநிதி பேசினார். தோட்டத் தொழிலாளர்கள் பேரணியாக வந்தபோது காவல் துறையினரை தாக்கினர் என்றும், இதனாலேயே காவலர்கள் அவர்களை நோக்கிச் சுட வேண்டியிருந்தது என்றும், விளக்கமளித்தார். அவரது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் விசாரணை ஆணையமும் பேரணியில் வந்த தொழிலாளர்கள் மீதே குற்றம் சுமத்தியது.

காவல் துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் வாச்சாத்தி வனக்கிராமத்தை சூறையாடி, ஆதிவாசிப் பெண்களை வல்லாங்குச் செய்தது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் என்றாலும், அச்சம்பவங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை "தமிழக மலைவாழ் மக்கள் முன்னணி' முன்வைத்தபோது, அச்சமயம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க., அந்த கோரிக்கையை ஒட்டி எந்த முடிவை யும் மேற்கொள்ளவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேர வேண்டிய நிவாரணத் தொகையை செலுத்த வழக்குத் தொடரப்பட்டதன் விளைவாக, அவர்களுக்கு அத்தொகை உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க. அரசு மெத்தனமாகவே செயல்பட்டது.

அ.இ.அ.தி.மு.க.வின் சாதிய நிலைப்பாடு வேறு வகையானது. குறிப்பாக, ஜெயலலிதாவின் அரசியல் சூட்சுமங்கள் தனி÷ய ஆராயப்பட வேண்டியவை. அவரது ஆங்கிலப் படிப்பு, வர்க்கப் பெருமை, சாதி ஆணவம் ஆகிய மூன்றும் அவரது சார்புநிலையை நமக்குத் தெளிவாகவே உணர்த்துகின்றன. பிரச்சனை என்னவெனில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும்தான் அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகளும்தான் – ஜெயலலிதாவையும், அ.இ.அ.தி.மு.க.வையும் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளனர். அவருடைய பார்ப்பன சமூகம் எந்தளவுக்கு அவரை எண்ணிப் பெருமிதம் கொள்கிறதோ, அந்த அளவுக்கு பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களில் பலரும் அவரது அரசியலில் நம்பிக்கையுடையவராய் உள்ளனர்; அல்லது அதில் ஆதாயம் தேடுகின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில், ஜெயலலிதா தனிப் பெரும் தலைவி. ஜெயலலிதாவோ இவர்களை ரட்சித்து பாதுகாக்கும் "தாயா'க தன்னை கட்டமைத்துக் கொண்டுள்ளார். இதனால்தானோ என்னவோ, தனது ஆண் ஆதரவாளர்களை சிறு பிள்ளைகளாக பாவித்து அவர்களை கண்டிக்கிறார், மெச்சுகிறார், திருத்துகிறார். அவர்களுக்கு நீதிக் கதைகளை சொல்கிறார். அரசியல் நடத்தை நெறிகளைப் புகட்டுகிறார். சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

“பார்ப்பனியம் சைவமாக வந்து கெஞ்சி யும், வைணவமாக வந்து கொஞ்சியும் தனது மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டுள் ளது என்றும், இதைக் கண்டு நாம் மயங்கிவிடக் கூடாது என்றும், முடிவில் அது அரவணைப்பது போல் அரவணைத்து (கம்யூனிஸ்ட்) ஏகலைவனின் பெருவிரலை தானமாகக் கேட்கும்'' என்று 1940களில் குத்தூசி குருசாமி எச்சரித்தார். இன்று கெஞ்சலும் கொஞ்சலும் உள்ளதோ இல்லையோ, கோடானுகோடி ஏகலைவர்களின் சுயமரியாதையை தானமாகப் பெற்றே தமிழகத்தில் வர்ணதரும ஆட்சி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள் ளது என்பது மட்டும் கண்கூடு.

இந்த நீண்டநெடிய வரலாற்றுப் பின்னணியில், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினைப் பற்றி நாம் சிந்திப்போமேயானால், இரண்டு விஷயங்களை கவனப்படுத்தலாம். அ.இ.அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்ல விழையும் சாதிய அரசியல், தற்காலச் சூழலில் நிலைத்து இருக்க வேண்டுமானால், இத்தகைய ரத்தக் களறிகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சமரசங்களை செய்தும், உள்ளூர் தலித் தலைவர்களை விலைக்கு வாங்கியும், அரசதிகாரத்தில் அவர்களுக்கு இடமளித்தும் தலித் மக்களின் கோரிக்கைகளை ஆளுங்கட்சிகள் ஒன்றும் இல்லாமல் செய்ய, இன்னமும் வாய்ப்புகள் உள்ளன என்பதை நாம் மறுக்கவில்லை. தி.மு.க. இதைத்தான் தொடர்ந்து செய்து வந்துள்ளது. இனியும் அக்கட்சி இதைத் தொடர்ந்து செய்யும். (அ.இ.அ.தி.மு.க.வும் இந்த உத்தியை முற்றிலுமாக கைவிட்டு விட்டதாக சொல்ல முடியாது.) தலித் கட்சிகளின் தலைவர்களும் பதவி ஆசையினாலும், இவ்வாறு ஆளுங்கட்சியினரை அண்டியேனும் தமது மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர முடியும் என்ற தன்னம்பிக்கையின் காரணமாகவும் சமரசங்களை செய்து கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

ஆனாலும் சாதி வெறி சார்ந்த வகுப்பு நலன் என்ற ஒன்றின் உக்கிரத்தில் இத்தகைய சமரசங்கள் கருகி சம்பலாகி விடுகின்றன. சாதிய வெந்தீயில் அவை கரைந்து போய்விடுவதுடன், அச்சமரசங்களை ஏற்றுக்கொண்ட தலித் தலைவர்களின் நம்பிக்கையும் ஆசைகளும் வீண்போய் விடுகின்றன. ஒவ்வொரு தேர்தல் நடந்து முடியும்போதும் ஆட்சிகள் மாறும்போதும் நாம் இதைப் பார்க்கத்தான் செய்கிறோம். சமூக மாற்றம் கோரும் அரசியலுக்கும், அதை ஏற்காது சமரசங்களை நாடும் அரசியலுக்கும் இடையிலான ஒவ்வாமை முடிவில் வன்முறைக்கே இட்டுச் செல்கிறது.

கருத்தியல் வாதங்களாலும் அதிகாரப் பங்கீடு என்ற மாயமந்திரத்தாலும் உருவாக்கப்படும் சமரசங்கள் கலைந்து போவது எதனால்? தலித் மக்களின் மாண்பையும் உரிமைகளையும் மறுக்க வேறு பல "அகிம்சா' ரீதியான வழிகளை தமிழக அரசாங்கம் கையாண்டு வந்துள்ள போதிலும், வன்முறையைப் பயன்படுத்துவதை – அதனால் ஏன் எக்காலத்திலும் கைவிட முடிவதில்லை? இதற்கு பல காரணங் களைச் சொல்லலாம். தலித் மக்களிடையே தன்னுணர்வும் எழுச்சியும் கூடியுள்ளது. கல்வியும் ஆதிக்க சாதியினரை சாராத பொருளாதார வளர்ச்சியும் வளர்ந்த வண்ணம் உள்ளன. தமிழ் அறிவுலகில் தலித் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இனியும் "தமிழர் பொதுநலம்' என்று கூறியும், "திராவிடப்' பெருமை பேசியும், எம்.ஜி.ஆர். என்ற தனிமனிதரை சுற்றி பொருத்தப்பட்டுள்ள ஒளிவட்டத்தைக் காட்டியும் – இந்த வரலாற்று ரீதியான மாற்றங்களைப் புறந்தள்ள முடியாது.

இத்தகைய வார்த்தை ஜாலங்களுக்கு தலித் அரசியல் தலைவர்கள் சில வேளை பணிந்து போனாலும், களத்தில் போராடும் தலித் மக்களுக்கு அதிகாரப் பங்கீடும், அடையாள அரசியலும் எல்லா நேரங்களிலும் உவப்பானதாக இருப்பதில்லை. காரணம், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சாதிய வெறியும், அதிகாரமும் இந்த சமுதாயத்தின், அது பேணும் அரசியலின் நிதர்சனங்களை அவர்களுக்கு உணர்த்தி விடுகின்றன. இந்த நிதர்சனங்களை உள்ளவாறே தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், ஆளும் வர்க்க – சாதியினருக்கும், அவர்களுக்கு துணையாக நிற்கும் அரசாங்கத்துக்கும் வன்முறையை விட்டால் வேறு வழியில்லை.

தி.மு.க. அரசாங்கம் வன்முறையில் இறங்குவோரை பாதுகாத்தும், தேவைப்பட்டபோது வன்முறையைப் பயன்படுத்தியும் வந்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வோ இவை இரண்டையும் செய்வதுடன் அரசு தரப்பு வன்முறையை தொடர்ந்து நியாயப்படுத்தியும் வந்துள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சியில் சாதிய காழ்ப்புணர்வுடன் மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு, உச்சபட்ச பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தான் சாதி செருக்குடன் இருப்பதை எண்ணி சஞ்சலம் அடையத் தேவையில்லை என்று பார்ப்பனர்களும், பிற ஆதிக்க சாதிகளும் நினைக்கும் அளவுக்கு, ஜெயலலிதா ஆட்சியில் அவர்களுக்கு கருத்தியல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

சாதி, பார்ப்பனியம் குறித்தும் வரலாற்றில் இவை கண்டுள்ள மாற்றங்களைக் குறித்தும் பக்கம் பக்கமாக எழுதியுள்ள டி.டி. கோசாம்பியின் கூற்றை இங்கு நினைவு கொள்ளுதல் பொருத்தமாக இருக்கும். சாதிய அமைப்பு என்பது, வரலாற்றின் ஓட்டத்துக்கு எதிரானது என்கிறார் அவர். சமூக, பொருளாதார வெளிகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களின் வழி சென்று மாறுவதற்கு பதிலாக, அவற்றை தனது படிநிலை இருப்புக்கு உகந்த வகைகளில் உட்செரித்துக் கொள்ளும் ஆற்றலை சாதியமைப்பு கொண்டுள்ளது. இதைப் புரிந்து கொண்டு வரலாற்றின் பக்கம் நிற்பது முக்கியம் என்று பொருள்பட அவர் வாதிட்டுள்ளார். தலித் மக்கள் வரலாற்றின் பக்கம் நின்று போராடுவதை ஏற்க விரும்பாது, அவர்கள் கடந்து வந்துவிட்ட இருண்ட காலத்துக்கு மீண்டும் அவர்களை நகர்த்திச் செல்ல ஆளும் வர்க்க – சாதிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளன. இம்முயற்சிகள் கருத்தியல் தளத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அரசியல் தளத்தில்தான் நிறைவு பெறுகினறன – ஒரு புறம் சமரசங்களை செய்து கொண்டே மறுபுறம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் உத்தியை நமது ஆளும் வர்க்க – சாதிகள் கச்சிதமாக செய்து முடிக்கின்றன.

இரண்டாவதாக, தீண்டாமையை கடைப்பிடித்தே தீருவோம் என்ற வெறியில் உழலும் முக்குலத்தவர்களின் மனவிழைவை நனவாக்க உதவுபவற்றை குறித்தும் நாம் மேலும் சிந்திக்கலாம். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போதுதான் – 1970கள் தொட்டுதான் – இச்சமூகத்தினரின் அரசியல் செல்வாக்கு வெகுவாக வளர்ந்தது. அரசியல் துறையில் மட்டுமில்லாமல், உள்ளூர் நிர்வாகத்திலும், காவல் துறையிலும் இவர்களது பங்கு அதிகரித்தது. சட்டசபையிலும் இவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படும் திருநாளாக மாறியதும் இந்த கட்சியினரின் ஆட்சிக் காலத்தில்தான்.

தேவர் ஜெயந்தி என்றும், குரு பூசை என்றும் அழைக்கப்படும் இந்த விழாவில் பங்கேற்காத அரசியல் தலைவர்களே இல்லை என்றளவுக்கு இது முக்கியத்துவம் பெற்ற நிகழ்வானது. அரசியல் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய சினிமா துறையிலும் இந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதுடன், தமக்கான வாழ்வியலை, தனித்துவமான அனுபவங்களை "தமிழர்' அனைவருக்குமான அசல் அனுபவங்களாக உருமாற்றியுள்ளனர். இவர்களது நயமும் கற்பனையும் இச்சமுதாயத்தினரின் மேலாதிக்கத்திற்கு மெருகேற்றி யுள்ளது; அதனை கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது. தமிழ் சினிமா உருவாக்கியுள்ள தென்னாட்டு "கிராமி'யத்துக்கு முக்குலத்தவர்களின் "மண்'தான் ஆதாரம் என்றுகூட சொல்லலாம். இவர்கள் வகுத்த பாதையில் நடந்துதான் தமிழ் நாட்டிலுள்ள பிற ஆதிக்க சாதிகளின் பெருமையைப் பேசும் படங்களை ஏனையோர் உருவாக்கினர்.

இவ்வாறாக, வெகுமக்கள் பண்பாட்டுத் தளத்தில் தழைத்தோங்கியுள்ள சாதியப் பெருமிதமானது, தன்னை எதிர்க்கத் துணிபவரை அலட்சியமாகக் கருதுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? காவல் துறை தரும் பாதுகாப்பு, அரசியல் கட்சிகள் காட்டும் அக்கறை, முற்போக்கு அரசியலுக்குள் தப்பித் தவறிக்கூட தமது மக்கள் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தலைவர்கள் – இவை அனைத்தும் சேர்ந்தே தலித் விரோத அரசியலை சாத்தியப்படுத்தியுள்ளன. சமூக முரண்களைத் தீர்க்கையில் அரிவாள் எடுப்பதை பெருமையாக நினைக்கும் பண்பாட்டை வளர்த்த இந்த அத்தனை போக்குகளும் – சாதி எதிர்ப்பு சிந்தனைகளுக்கும், வர்க்கமும் சாதி இழிவும் இணையும் புள்ளியில் பிறக்கும் தீவிர இடதுசாரி அரசியலுக்கும் எதிரானவையே என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

பிரச்சனை என்னவெனில், அரசின் அதிகாரமும் சாதிய பெருமிதப் பேச்சும் செயல்பாடுகளும் கைக்கோத்து செயல்படும் பாங்கான அரசியலுக்கு எதிராக எத்தகையை அரசியல் செல்லுபடியாகும் என்பதுதான். தேர்தல் அரசியலுக்குள் வந்துவிட்ட கட்சிகள், ஆதிக்க சாதி அரசியலை முன்னெடுக்கும் திராவிட கட்சிகளுடன் சமரசம் செய்து கொள்வது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. பரமக்குடி நிகழ்வுகளை வன்மையாகக் கண்டித்த சி.பி.எம்., மாண்டவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, அதே மூச்சில் அ.இ.அ.தி.மு.க.வுடன் உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்தனர். முடிவில் அவர்கள் தனியாகப் போட்டியிட முடிவெடுத்தாலும், பரமக்குடி படுகொலைகளை முன்னிட்டு இதைச் செய்யவில்லை. ஜெயலலிதா இவர்களை தனது அணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதால், இத்தகைய முடிவை அவர்கள் எடுக்க வேண்டியிருந்தது.

முதலில் தேர்தல் அரசியலுக்குள் வரத் தயங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அவர்கள் நடத்திய போராட்டங்கள் சந்தித்த அரசு கெடுபிடிகளாலும், அரசியல் பின்னடைவுகளாலும் வேறு காரணங்களாலும் தேர்தல் அரசியலுக்குள் வந்து, தொடர்ந்து ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். புதிய தமிழகத்தின் அனுபவமும் இதுதான் – நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, "அம்மா'வின் புகழ்பாடி போற்றி வணங்கிய பிற்பாடும், பரமக்குடி குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சட்ட சபையில் பேச முற்பட்டபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தேர்தல் அரசியல் பெற்றுத் தரும் அரசியல் பிரதிநிதித்துவத்தை, ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்த வல்ல அரசமைப்புகளை நாம் வென்றெடுக்காததால், ஏற்கனவே உள்ள, உளுத்துப்போன அமைப்புகளுள் நமக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு மட்டுமே நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டி யுள்ளது. இது, பெண்களுக்கும் பொருந்தும், தலித்துகளுக்கும் பொருந்தும். ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து விலகி, பொது வெளியில் நின்று நாம் கேள்விகளை கேட்க முற்படுகையில் வாயடைக்கப்படுகிறோம்.

தேர்தல் அரசியல் வேண்டாம், தொலைநோக்குப் பார்வை யுடன் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியமைக்கலாம், இந்திய ஒன்றியத்தின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தலாம் என்ற எண்ணத்தில், சி.பி.அய். முதல் சிறுத்தைகள் வரையிலும் அனைத்து கட்சிகளும் களமிறங்கிய பொழுதுகளில், சாதிப் பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுக்க தமிழர் பெருமை பேசுவோர் முன்வராதது வேதனையளிப்பதாக உள்ளது. இதுவரைக்கும் சாதி எதிர்ப்பு பேசியவர்களும்கூட, தூக்கிலிடப்பட இருக்கும் மூன்று தமிழர்களுக்காக அ.இ.அ.தி.மு.க. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதும் ஜெயலலிதாவின் பார்ப்பன சார்பையும் – இந்துத்துவ சார்பையும் மென்று விழுங்கி அவரைப் போற்றினர். பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் இதைச் செய்தது மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இந்திய ஒன்றியத்தை எதிர்ப்பவர்கள், இந்திய தேசியத்தை கட்டிக்காத்து இயக்கும் பார்ப்பனியத்தையும், அதை செயல்படுத்தும் அரசியல் சக்திகளையும் எவ்வாறு திடீரென்று நட்பு சக்திகளாகக் கண்டனர் என்பது பெரும் புதிராகவே உள்ளது.

மேலும், தமிழ்த் தேசியம் என்பது எத்தகைய அரசமைப்பை சாத்தியப்படுத்தும்; வர்க்க, சாதி முரண்களையும், பாலின முரண்களையும் எவ்வாறு இந்த அரசமைப்பு கையாளும் என்ற எந்த சிந்தனையுமின்றி உணர்ச்சிப் பெருக்காக மட்டுமே ஊற்றெடுக்கும் அரசியலால் யாருக்கு என்ன பயன் என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. "சாதி ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் தொடர்ந்து விமர்சிக்காத தமிழ்த் தேசியத்தை தங்களால் ஏற்க முடியாது' என்று ‘தலித் முரசு' பொறுப்பாசிரியர், சில ஆண்டுகளுக்கு முன் பழ.நெடுமாறனிடம் தெரிவித்ததை இந்நேரத்தில் நாம் நினைவு கோரலாம். மக்கள் திரளினரை உள்ளடக்கி தலித் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் போராட்டங்களை நடத்திய காலத்தை, மரபுகளை எண்ணிப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு எதையாவது செய்ய முடியுமா? மக்களை இயக்கமாக்காமல், கருத்தியல்களை மட்டுமே முன்நிறுத்தும் மாற்று அரசியலால் என்ன பயன் இருக்க முடியும்? விவாதிப்போம்.

ந‌ன்றி: த‌லித் முர‌சு

Monday, May 30, 2011

Tulips and Lilacs

-Royal Botanical Garden, Hamilton-

எதையாவது எழுதிப் பயமுறுத்தும்போது மனிதர்கள் விலகிக்கொள்கின்றார்கள்; படங்காட்டினால் எவரும் கோபிக்கப் போவதில்லை; இயற்கையை அரவணைத்தும் கொள்ளலாம்.














படங்களுக்கான உரிமை: இயற்கைக்கானது!

Wednesday, May 11, 2011

அறிவிப்பு:சுட‌ருள் இருள்

சுட‌ருள் இருள்
நிக‌ழ்வு-06

ஆளுமைக‌ளும் அனுப‌வ‌ங்க‌ளும்
  • வ‌.கீதா (இந்தியா)
சும‌தியின் 'உறையும் ப‌னிப்பெண்க‌ள்'
  • சிறுக‌தைத்தொகுப்பு: வெளியீடும் அறிமுக‌மும் - சுல்பிகா
த‌மிழ் அக‌திக‌ளுக்கெதிரான‌ அமைப்புசார் வ‌ன்முறை
  • ச‌சிகுமார் பால‌சுந்த‌ர‌ம் (அமெரிக்கா)
த‌மிழ்ந‌தியின் 'கான‌ல் வ‌ரி'
  • வாசிப்பு: ம‌யூ ம‌னோ

SUNDAY, MAY 15
AT 5.30 P.M

Scarborough Village Recreation Centre
3600 Kingston Road
(Markham & Kingston)

416 725 4862 || 647 293 0673 || 416 854 6768






Friday, February 18, 2011

ஜெய‌மோக‌னிற்கான வாசக‌ர் க‌டித‌ம்

எழுதிய‌வ‌ர்: குட்டி யாழ்ப்பாண‌த்தான் 

அன்புள்ள‌ ஜெய‌மோக‌ன் சார்,

உங்க‌ளுக்கு நான் முத‌ன்முத‌லாய் எழுதும் க‌டித‌ம் இது. ஒவ்வொருமுறையும் உங்க‌ளுக்கென‌ க‌டித‌ம் எழுத‌ முய‌ற்சிப்பேன். ஆனால் ஏதோ அமானுஷ்ய‌ ச‌க்திக‌ளால் அது முழுமை பெறுவ‌தில்லை. நீங்க‌ள் உங்கள் ப‌டைப்புக்க‌ளை உங்க‌ளைய‌றியாம‌லேயே எதுவோ எழுதிக்கொண்டுச் செல்கிற‌து என்று கூறுவ‌துபோல‌, உங்க‌ளுக்கு நான் எழுதும் க‌டிதங்க‌ளையும் என்னைய‌றியாம‌லே எதுவோ ஒரு ச‌க்தி அழித்துவிட்டுச் செல்கிற‌து. என‌க்கென்ன‌வோ அது 'அராபிய‌ இர‌வுக‌ளும் பக‌ல்க‌ளும்' நாவ‌லில் வ‌ருகின்ற‌ ஜீனியின் சித்து விளையாட்டோ என்கின்ற‌ ச‌ந்தேக‌மும் உண்டு. அத‌னால்தான் இன்றுவ‌ரை உங்க‌ளுக்கு ஒழுங்காய் ஒரு க‌டித‌ம் எழுதி அனுப்ப‌ முடிந்த‌தில்லை.

செரி அத‌ விடுங்க‌ள்.

நீங்க‌ள் ச‌மீப‌த்தில் எழுதிய‌ 'அற‌ம்', 'சோற்றுக்க‌ண‌க்கு', 'ம‌த்துறுத‌யிர்' ஆகிய‌ மூன்று க‌தைக‌ளையும் வாசித்துவிட்டு இனியும் பொறுக்க‌முடியாது என‌ ஒரு க‌டித‌ம் எழுத‌ ஆர‌ம்பித்துவிட்டேன். மூன்று க‌தைக‌ளும் மிக‌ அருமை சார். சான்சே இல்லை, க‌ல‌க்கிட்டீங்க‌ சார்.

இனியும் நான் பேசாம‌ல் இருந்தால் த‌மிழ‌னாய் இருப்ப‌தில் ப‌ய‌னே இல்லை. ஒன்று த‌ற்கொலை செய்தாக‌ வேண்டும், இல்லாவிட்டால் உங்க‌ளுக்கு ஒரு க‌டித‌ம் எழுத‌ வேண்டும். வாழ்விலே போராடி ஜெயிக்க‌வேண்டும் என‌ச் சொல்வார்க‌ள். நானும். இருப்ப‌திலே க‌டின‌மான‌ பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன், அத‌னால் உங்க‌ளுக்கு இந்த‌க் க‌டித‌த்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

உங்க‌ள‌து 'ம‌த்துறு த‌யிர்' வாசித்த‌ அனுப‌வ‌த்தை நிச்சய‌மாக‌ உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்துகொள்ள‌வேண்டும் சார். க‌தையை வாசித்த‌வுட‌ன் அப்ப‌டியே க‌ம்பியூட்ட‌ரைப் பார்த்த‌ப‌டி உறைந்துபோய்விட்டேன். க‌ண்க‌ளிலிருந்து க‌ண்ணீர் பொல‌ பொல‌வென்று கொட்டிக்கொண்டிருந்திருக்க‌ வேண்டும். இதைப் பார்த்துவிட்டு ப‌க்க‌த்து சீட்டு ஜெனீஃப‌ர், 'குட்டி வாட் ஹப்ப‌ண்டு வாட் ஹ‌ப்ப‌ண்டு?' என்று ச‌த்த‌மாக‌க் கேட்கிறா...என்னாலை ஒரு சொல் வாய் திற‌ந்து பேச‌முடிய‌லை. நாக்குக் குழ‌றுகிற‌து. சும்மாவா என்ன‌? உங்க‌ள் க‌தையிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் துரோண‌ருக்கு அர்ஜூன‌ன் இறுதியில் அம்புக‌ளால் ப‌டுக்கை அமைத்த‌ மாதிரிய‌ல்லவா என்னையும் க‌ட்டிப் போட்டிருந்த‌து. நான் ஒருமாதிரி ச‌மாளித்து, 'ஜெனிபார் ஐ ஹாவ் 'மெட்ராஸ் ஜ‌', அத‌னால்தான் க‌ண்ணீர் கொட்டுகிற‌தென்றேன். அவ‌ளுக்கு புரிய‌லை, 'வாட்? வாட் இஸ் மெட்ராஸ் ஐ?' என்கிறா. நான் அதெல்லாம் உன‌க்குப் புரியாது, அத‌ற்கு நீயொரு த‌மிழ‌ச்சியாக‌ பிற‌ந்திருக்கனும்னு சொல்லி அனுப்பிட்டேன். பின்ன‌ என்ன‌ சார்... அவாளுக்கு இதெல்லாம் புரியுமா என்ன‌? இந்த‌ வெள்ளைக்கார‌ர்க‌ளிட‌ம் என்ன‌ இருக்கு? எங்க‌ளைப் போல‌ க‌ல்தோன்றா முன்தோன்றிய‌ க‌லாசார‌ம் இருக்கா, ப‌ண்பாடு இருக்கா? அதைவிட‌ முக்கிய‌மாய் நாம‌ எல்லோரும் எப்போதும் பெருமை கொள்ள‌க்கூடிய‌ சாதியாவ‌து இவ‌ங்க‌ளிட‌ம் இருக்கா?

ம‌த்துறு த‌யிரில் நீங்க‌ள் குறிப்பிடுகிற‌, த‌யிர் க‌டைகிற‌து..., க‌ம்ப‌ராமாய‌ண‌ம் பாட‌ல்க‌ளுக்குப் பேராசிரிய‌ர் பொருள் சொல்கிற‌தெல்லாம் என் ப‌ழைய‌ நினைவுக‌ளைக் கிள‌றிவிட்ட‌து சார். அதைச் சொல்ல‌முன்ன‌ர் நீங்க‌ள் இந்த‌க்க‌தையில் சொல்கிற‌ 'பேராசிரிய‌ர்' யாரென‌ என‌ மூளையைக் க‌ச‌க்கி க‌ச‌க்கி அது ச‌க்கையான‌துதான் மிச்ச‌ம், விடையைக் க‌ண்டுபிடிக்க‌வே முடிய‌வில்லை. இறுதியில், வேலையில் இருக்கிற‌ எங்க‌ளின் வெள்ளைக்கார‌ பாஸ் தான் அந்த‌ விடையைக் க‌ண்டுபிடித்துச் சொன்ன‌வ‌ர் என்றால் உங்க‌ளால் ந‌ம்ப‌முடியுமா சார்? என்னால் கூட‌ ந‌ம்ப‌முடிய‌வில்லைத்தான். ஆனால் அதுதான் உண்மை சார். நான் இப்ப‌டி க‌ண்ணீர் உகுத்த‌தைப் பார்த்து ப‌ய‌ந்துபோய் இந்த‌ ஜெனீப‌ர் போய் எங்க‌ள் பாஸிட‌ம் சொல்லிவிட்டாள். அவ‌ரும் என் சீட்டுக்கு வ‌ந்துவிட்டார். 'ஹேய் குட்டி...வாட் ஹ‌ப்ப‌ண்டு?' என்று கேட்க‌த்தொட‌ங்கிவிட்டார். நான் உண்மையைச் சொல்ல‌முடியுமா என்ன‌? இவ‌ங்க‌ள் எப்ப‌டி எங்க‌ளின் வேம்பையும், ம‌ஞ்ச‌ளையும் த‌ங்க‌ள் உடைமையாக்க‌ முய‌ற்சித்தார்க‌ளோ அப்ப‌டியே உங்க‌ள் சிந்த‌னைக‌ளை க‌ள‌வெடுத்து த‌ங்களுடைய‌தாக்கிக் கொள்வார்க‌ள் என்ப‌து என‌க்குத் தெரியாதா என்ன‌? எவ்வ‌ள‌வு கால‌மாய் உங்க‌ள் த‌ள‌த்தை வாசித்துக்கொண்டு வ‌ருகின்றேன். இந்த‌ வெள்ளைக்காரங்க‌ளிட‌ம் ஒன்றுமே இல்லையென‌த்தானே நீங்க‌ள் உறுதியாக‌ கூறி வ‌ருகின்றீர்க‌ள். முக்கிய‌மாய் இல‌க்கிய‌த்தில் இருக்கும் வெற்றிட‌த்தை உங்க‌ளின் சிந்த‌னைக‌ளை கொண்டு நிர‌ப்ப‌ முய‌ற்சிக்க மாட்டார்க‌ள் என்ப‌து என்ன‌ நிச்சய‌ம்?  சார் இவ்விட‌த்தில் ஒன்றைச் சொல்ல‌வேண்டும். நீங்க‌ள் எழுதுப‌வ‌ற்றையெல்லாம் காப்பி ரைட்டுச் செய்து ப‌த்திர‌மாக‌ சுவிஸ் பாங்கில் போட்டு விடுங்க‌. இல்லேன்னா, இப்ப‌ இல்லாட்டிக்கூட‌ எப்ப‌வாவ‌து ஒருகால‌த்தில் உங்க‌ள் ந‌ற்சிந்த‌னைக‌ளை இவ‌ங்க‌ள் அப‌க‌ரித்துவிடுவாங்க‌ள் சார்.

இத‌னால்தான், இந்த‌க் க‌தையிலை வ‌ருகிற‌ பேராசிரிய‌ர் யார் என்று என் பாஸ் க‌ண்டுபிடித்த‌தை என்னாலை ந‌ம்ப‌ முடியாதிருந்த‌து. என‌க்கென்ன‌வோ இந்த‌ வெள்ளைக்கார‌ர்க‌ள் உங்க‌ளின் த‌ள‌த்தை உங்க‌ளுக்குத் தெரியாம‌லே வேவு பார்க்கிறாங்க‌ள் போல‌த்தான் தோணுது. ஆனால் சார், என் பாஸுக்கு த‌மிழில் 'அ' கூட‌ வாசிக்க‌த் தெரியாதே? எப்ப‌டி க‌ண்டுபிடித்தார் என்றுதான் என்னால் ஊகிக்க‌ முடிய‌வில்லை. செரி அத‌ விடுங்க‌ சார்.

என் சீட்டுக்கு வ‌ந்து என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று பாஸ் கேட்க‌, நான் க‌ண்ணிலை ஏதோ விழுந்துவிட்ட‌து அதான் என்று சொல்லிச் ச‌மாளித்தேன். எங்க‌ளின் பாஸும் உங்க‌ளின் க‌தையில் வ‌ருகின்ற‌ பேராசிரிய‌ரின் ம‌னைவி போல‌ ஒரு அல்லோல‌யா கேசுதான். என்ன‌ பேசினாலும் இறுதியில் வீ ஆர் ஸ்லேவ்ஸ் ஆஃப் ஜீஸ‌ஸ் (we are slaves of Jesus) என்பார். இப்ப‌டி அன்னைக்கும் சொன்ன‌ப்போதான் என‌க்கு 'கிளிக்'கான‌து. ஜீஸ‌ஸ் என்றால் யேசு. ஸ்லேவ்ஸ் என்றால் அடிமை. அத‌ இன்னொருவித‌மாய் 'தாச‌ன்'னும் கூற‌லாம். ஆக‌ இந்த‌க் க‌தையில் வ‌ருகிற‌ பேராசிரிய‌ர் பெயர் 'யேசுதாச‌ன்'. என்ன‌தான் என்றாலும் வெள்ளைக்கார‌ன் வெள்ளைக்கார‌ன்தான் சார். த‌மிழே தெரியாம‌ல் நீங்க‌ள் குறிப்பிட்ட‌ பேராசிரிய‌ர் யார்னு க‌ண்டுபிடித்துவிட்டான் இல்ல‌! என‌க்கென்ன‌வோ சார், நீங்க‌ள் அமெரிக்கா ஆஸி என‌ ப‌ய‌ண‌ம் செய்த‌போது, ஜேம்ஸ் பாண்டுப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருகிற‌மாதிரி, உங்க‌ளின் உட‌ம்பிலை உங்க‌ளைய‌றியாம‌லே எதோ எல‌க்ரானிக் சிப்ஸ் ஐ இவ‌னுங்க‌ பொருத்திவிட்டிட்டாங்கா போல‌த் தோணுது. அந்த‌ச் 'சிப்'புத்தான் நீங்க‌ள் த‌மிழில் சிந்திக்கிற‌தை எல்லாம், இங்கிலீஷிலை மொழிபெய‌ர்த்துச் சொல்லுது போல‌. எத‌ற்கும் உங்க‌ள‌ ஆருயிர்த் தோழ‌ர், ந‌ம‌து அறிவிய‌ல் த‌ந்தையோடு க‌ல‌ந்துரையாடுங்க‌ள் சார்.  இந்த‌ ஸீரிய‌ஸ் மாட்ட‌ரை ஸும்மா இப்ப‌டியே விட‌க்கூடாது.

ம‌த்துறு த‌யிர்ல வ‌ந்த‌ க‌ம்ப‌ராமாய‌ண‌ம் என‌க்கு நெருக்கமான‌துன்னு சொன்னேன் அல்லவா? நேக்கு சார் ப‌தினான்காம் வ‌ய‌திலையே காத‌ல் அரும்பிடுச்சு. அவாளும் ஒரே வ‌குப்புத்தான். ஆனால் அவாள் என்னை காத‌லிக்க‌மாட்டேன்னு அட‌ம்பிடிக்கிறா. ஏன் என்னைப் பிடிக்கலைன்னு கேட்க‌, நோக்கு ஒரு திறமையும் இல்லைங்கிறா... நேக்கு வ‌ந‌தே கோப‌ம்...அற‌ம் க‌தையில‌ பெரிய‌வ‌ர் ச‌ன்ன‌த‌ம் ஆடுற‌மாதிரி ஒரு ஆட்ட‌ம் போட்டேன்னு வைச்சுக்கோங்க‌. அவாள் பேய் பிடிச்ச‌மாதிரி ப‌ய‌ந்துட்டா. செரி ஒன‌க்குத் திற‌மை இருக்க‌ன்னா, பாட‌ப்புத்த‌க‌த்திலை இருக்கிற‌ 30 க‌ம்ப‌ராமாய‌ண‌ப் பாட‌ல்க‌ளையும் பார்க்காம‌ல் ம‌ன‌ன‌ம் செய்து ஒப்புவி என்கிறா. ஒரு வார‌ம் ட‌ய‌ம் கேட்டேன். ப‌க‌ல் இர‌வுன்னு பார்க்காமா வெறியோட‌ ம‌னப்பாட‌ம் செய்தேன். அம்பாளை அபிராமியாய் நெனைச்சுப் பாடிய‌ அபிராமிப்ப‌ட்ட‌ர் போல‌ன்னு வைச்சிக்கோங்க‌. ஒரு வார‌த்துக்குப் பிற‌கு உன்ம‌த்த‌த்தோடு ஒவ்வொருபாட‌லா அவாளிட‌ம் ஒப்புவிக்கிறேன். அவாளும் புத்த‌க‌த்தை விரித்து வைத்து ஒவ்வொரு பாட‌லாய் ச‌ரியா என‌ ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறா. முப்ப‌தாவ‌து பாட‌லுக்கு வ‌ந்திட்டேன். அவாளுக்குத் தான் தோற்க‌ப்போகிறேன் என‌த் தெரிந்துபோயிட்டுது...முக‌மெல்லாம் வேர்க்கிற‌து. சிவாஜி ப‌ட‌த்தில‌, ஸ்ரேயா விரும்பிக் கேட்டிட்டாங்க‌ என்ப‌த‌ற்காய் ர‌ஜினி சார் வெள்ளைக்கார‌ன் போல‌ வ‌ந்து நிற்பாரில்ல‌...அப்ப‌ ஸ்ரேயா முக‌த்திலை வ‌ருமே ப‌த‌ட்ட‌ம்..அதுபோல‌ இவாள் முக‌த்திலையும் ஒரு ப‌த‌ட்ட‌ம் (ஆமாம் சார், நீங்க‌ இப்ப‌ திரைத்துறையில‌தானே இருக்கீங்க‌. ர‌ஜினி சாரை எங்கையாவ‌து நேரிலை ச‌ந்தித்திருக்கிறீங்க‌ளா? எந்திர‌ன் ப‌ட‌த்தில் ர‌ஜினி சாரின் ந‌டிப்பு அருமை சார். தலைவ‌ர் பின்னிட்டாரில்ல‌)

முப்ப‌தாவ‌து பாட‌லிலை நிற்கிறேன். இனி அவாள் என‌க்குத்தான் சொந்த‌ம்னு த‌லைக்க‌ன‌ம் என‌க்குள் ஏறிட்டீது. முப்பதாவ‌து பாட‌லிலை க‌டைசி வ‌ரியைப் பிழையாய் ஒப்புவித்துட்டேன் சார். ப‌க‌வானுக்கு த‌லைக்க‌ன‌ம் வ‌ர்லாம்...ஆனா ம‌னுஷாளுக்கு வ‌ர‌லாமோ? இந்த‌ வ‌ய‌சிலை த‌லைக்க‌ன‌ம் கூடாதுன்னு புரியிது. அந்த‌ வ‌ய‌திலை இதெல்லாம் புரியுமா? அம்பிகாப‌தி நூறாவ‌து பாட‌ல்ல‌ ச‌றுக்கி அம‌ராவ‌தியைத்த் த‌வ‌ற‌விட்ட‌ க‌ண‌க்காய் நானும் என் அம‌ராவ‌தியையும் க‌டேசி வ‌ரியிலை த‌வ‌ற‌விட்டு விட்டேன். ஆனா ஒன்னு சார். இந்த‌ப் பொண்ணுங்க‌ளே இப்ப‌டித்தான் என்று என‌க்கு என் ப‌தின்நான்காவ‌து வ‌ய‌சிலையே புரிஞ்சிடுச்சு. பின்ன‌ என்ன‌ சார், க‌டைசிப் பாட‌லில் க‌டைசியில் வ‌ரியில் த‌வ‌றுவ‌தை... க‌ண்ணுல‌ விள‌க்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தேடுவாங்க‌ளா? ஆமா சார் அன்னைல‌ இருந்து க‌ம்ப‌ராமாய‌ண‌மும் பிடிக்கிற‌தில்லை; பெண்ணுங்க‌ளுக்கும் என்னைப் பிடிக்கிற‌துமில்லை. அத‌ற்குப் பிற‌கு எந்த‌ப் பெண்ணை ல‌வ் ப‌ண்ணினாலும், ஒன்னு அவ‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கு ஏற்க‌ன‌வே பாய்பிர‌ண்டு, கேர்ள்பிர‌ண்டு இருக்காங்க‌ள் என்கிறாங்க.... இல்லாட்டால்,கொஞ்சூண்டு கால‌ம் ல‌வ் ப‌ண்ணீட்டு என்னை அம்போன்னு கைவிட்டு யாரோ பின்னாலை ஓடிறாங்க‌. ஆமாம் சார், நீங்க‌ள் ம‌ன‌சுக்குள்ள‌ நெனைக்கிற‌து செரி.  பிஞ்சிலேய‌ வெம்பிட்டேனுங்க‌. 'சொல்லாம‌லே பிர‌ம‌ச்சாரிய‌ம் செய்'னு பெரிய‌வா சும்மாவா சொல்வாங்க‌.

ம‌த்துறு த‌யிர்'ல‌ வருகிற‌ ராஜ‌ம் ம‌லையாள‌க் குட்டியை ம‌ற‌ந்திட்டு பின்னாலை குடும்ப‌ஸ்த‌ராய்ப் போயிருக்க‌லாம். ஆனால் என‌க்கு அந்த‌க் கொடுப்பினை இன்ன‌மும் வ‌ர‌லைங்க‌. அத‌த‌ற்கென‌ ஒரு ந‌ல்லூழ் வேணுமா இல்லையா?  இப்ப‌ கூட‌, எந்த‌க் குட்டியைப் பார்த்தாலும் அது என்னிட‌ம் க‌ம்ப‌ராமாய‌ண‌த்தை ஒப்புவிக்க‌க் கேட்டிரும்மோன்னு ப‌ய‌மாருக்கு சார். 'ப‌ய‌ப்பிடாதைங்க‌, ஆற்றுல‌ இற‌ங்கினாத்தானே சுழி தெரியும்...க‌ரையிலை நின்னு க‌த‌ற‌க்கூடாது'ன்னு நீங்க‌ சொல்ற‌து என் உள்ம‌ன‌வெளிக்குத் கேட்கிது. 'த‌மிழ் தெரிந்த‌வ‌ங்க‌தான் க‌ம்ப‌ராமாய‌ண‌ம் ப‌த்திக் கேட்பாங்க‌...ஏன் நீங்க‌ த‌மிழ் தெரியாத‌ பெண்ணுக்கு முய‌ற்சிக்க‌க் கூடாது'ன்னு கூட‌ நீங்க‌ கேட்க‌லாம். உண்மையைச் சொன்னா இந்த‌ ஜெனிப‌ர் பெண்ணுக்குக் கூட‌ என் மேல‌ ஒரு க‌ண்ணு இருக்கு சார், . ஆனால் அந்த‌ ஜெனீப‌ர் பொண்ணு எங்கிட்ட‌ ஷேக்ஸ்பிய‌ரை ம‌ன‌ப்பாட‌ம் செய்து ஒப்புவின்னு கேட்காதுன்னு என்ப‌த‌ற்கு என்ன‌ உத்த‌ர‌வாத‌ம்? க‌ம்ப‌ராவ‌து ப‌ர‌வாயில்லை, இராமாய‌ண‌த்தோடு நின்னுட்டாரு. ஆனா இந்த‌ ஷேக்ஸ்பிய‌ரு எதோ வெறிநாய் க‌டிச்ச‌ ம‌னுஷ‌ன்க‌ண‌க்காய் இல்ல‌, நிறைய‌ புஸ்த‌க‌ங்க‌ள் எழுதிக் குவித்திருக்காரு....ஏன் எங்க‌ளின் பாஸ்க்கு கூட‌ ஒரு ம‌க‌ள் இருக்கா...அஸினும் பாவ‌னாவும் க‌ல‌ந்துருவாகி அச‌ல் ம‌லையாள‌ குட்டியாட்ட‌ம் இருப்பா... அவ்வ‌ப்போது ஆபிஸுக்கும் வ‌ருகிற‌வா. நான் இன்னும் க‌ல்யாண‌ம் க‌ட்டிக்கிட‌லைன்னு தெரிஞ்சுக்கிட்டு, 'ஹேய் மேன், ஆர் யூ ஸ்டில் வர்ஜின்'ன்னு கேட்டுக்  கூட‌வே க‌ண்ணும‌டிப்பா. இப்ப‌டிக் கேட்கிறான்னா, 'உன்னை வ‌ர்ஜின் இல்லாம‌ல் செய்ய‌ட்டுமா? என்ப‌துதானே அர்த்த‌ம் சார். இந்த‌ வெள்ளைக்கார‌ பொண்ணுங்க‌ளே இப்ப‌டித்தான்...வெட்க‌ம், மான‌ம் எதுவுமில்லாது எல்லாத்தையும் திற‌ந்து வைத்துக்கிட்டு திரிவாங்க‌. அதாவ‌து ப‌ர‌வாயில்லை சார், ச‌கிச்சுக்கிட‌லாம். இவ‌ங்க‌ள் குடும்ப‌மே அல்லோல‌யா கூட்ட‌ம்னு சொன்னேன் இல்லியா? புதிய‌ வேதாக‌ம‌ம் ப‌ழைய‌ வேதாக‌ம‌ம்னு ரெண்டையும் நிச்ச‌ய‌மாக‌ வைச்சிருப்பாங்க‌... அதைப் பாட‌மாக்க‌ வேணும்னு சொல்லிடுவாங்க‌ள்ன்னு இப்ப‌ நினைச்சாக் கூட‌ வ‌யித்தைக் க‌ல‌க்குதுங்க‌. வேண்டாம் சார், ந‌ல்ல‌ மாட்டுக்கு ஒரு சூடு போதும். நான் இப்ப‌டியே பிர‌ம‌ச்சாரியா இருந்துக்கிற‌ன் சார். நகுல‌ன், பிர‌மிள், ஏ.ஜேன்னு நிறைய‌ப் பேரு அப்ப‌டித்தானே இருந்திருக்கிறாங்க‌. அவ‌ங்க‌ளைப் போல‌ இல்லைன்னாலும் ஓர் ஓர‌மாய் நானும் இந்த‌ப்பூமியில‌ ஒருத்த‌ருக்கும் உப‌த்திர‌மில்லாம‌ வாழ்ந்திட்டு போறேன் சார்.

இந்த‌க் க‌தையில‌, நீங்க‌ த‌யிரைக் க‌டைகிற‌து ப‌த்தி எழுத‌ற‌ப்போதான் என‌க்கு ப‌ழைய‌ நியாப‌க‌ம் (ஆமா சார் 'ஞாப‌க‌மா', 'நியாப‌க‌மா' எது ச‌ரி? நிறைய‌ப் பேர் இணைய‌த்துல‌ 'நியாப‌கம்'ன்னு எழுதிறாங்க‌. ச‌மீப‌த்தில த‌மிழ்நாடு அர‌சு ஏதாவ‌து வார்த்தை மாற்ற‌ம் செய்தாங்க‌ளா... நான் த‌மிழ் ப‌டிக்கேக்க‌ 'ஞாப‌க‌ம்' என்றுதான் சொல்லித் த‌ந்திருந்தாங்க‌ள். அப்ப‌டி வார்த்தைச் சீர்திருத்த‌ம் க‌லைஞ‌ர் அர‌சு செய்தாங்க‌ன்னா, இந்த‌ச் 'சிகிழ்ச்சை'யையும் மாற்ற‌ச் சொல்ல‌வேணுங்க‌. என‌க்குத் தெரியும் நீங்க‌ எழுதுகிற‌ த‌மிழ்தான் ச‌ரின்னு. அத‌னால்தான் நான் எப்ப‌வோ 'சிகிச்சை' என‌ எழுதிற‌திலிருந்து 'சிகிழ்ச்சை'க்கு மாறிட்டேன். ஆனா பெரிய‌ எழுத்தாள‌ர்னு சொல்கிற‌ எஸ்.ராம‌கிருஸ்ண‌ன் சார் இன்னும் 'சிகிட்சை' ன்னு த‌வ‌றாக‌ எழுதுகிறார். அதாவ‌து ப‌ர‌வாயில்லை. இணைய‌த்துல‌ பெய‌ரிலியோ சுண்டெலியோன்னு எழுதுகிற‌ ஒருவ‌ர் 'சிகிச்சை'ன்னு தான் இன்னும் எழுதுகிறார். அது த‌வ‌று 'சிகிழ்ச்சை'ன்னு எழுதுங்க‌ என‌ச் சொல்ல‌வும் ப‌யமாயிருக்கு. இப்ப‌டி எதுவும் ந‌ல்ல‌து சொல்ல‌ப்போனால் காள‌மேக‌ப்புல‌வர் போல‌ க‌விபாடி அவ‌ர் என்னை வ‌றுத்தெடுத்து விடுவாருங்க‌. பின்னே தீக்கோழி க‌ண‌க்காய் ம‌ண‌லுக்குள்ள் த‌லையைப் புதைத்தால்தான் த‌ப்ப‌லாம். இங்கே ம‌ண‌லும் இல்லை, ப‌னிக்குள்ளைதான் த‌லையை வைக்க‌வேண்டி வ‌ரும்.

பாருங்க‌, த‌யிரைக் க‌டைகிற‌தைப் ப‌த்தி ஆர‌ம்பித்து, த‌மிழைக் க‌டைகிற‌திலை வ‌ந்து நிக்குது. நீங்க‌ விப‌ரிச்ச‌ மாதிரி த‌யிர‌க் க‌டைகிற‌து சும்மா லேசில்ல‌த்தான். அப்ப‌டிக் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு த‌யிர‌க் க‌டைந்துகொண்டிருக்கிற‌ பொண்ணுங்க‌ கிட்ட‌ ந‌ம்ம‌ க‌ண்ண‌ன் குழ‌ப்ப‌டி செய்திருக்கின்றான் என‌ அறியும்போது க‌ண்ண‌ன் மேல‌ கூட‌ கொஞ்சூண்டு வ‌ருத்த‌ம் வ‌ருதுங்க‌. என்றாலும் அவ‌ன் பார்த்த‌சார‌தி அல்ல‌வா? நாம‌ வித‌ந்தோத்துகிற‌ கீதையைத் த‌ந்த‌வ‌ன் தானே, அதாலே பெருசா கோப‌ம் அவ‌ன் மேல‌ வ‌ர‌ல்ல. ஆமா கீதைன்னு சொல்ற‌போதான் என‌க்கு நியாப‌கம் வ‌ருகிற‌து.  நான் 14 வ‌ய‌துல‌ காத‌லிச்ச‌ பொண்ணுன்ன பெய‌ரும் கீதா தாங்க‌. அத‌னால்தான் அந்த‌ப்பெண்ணை ம‌ற‌க்க‌முடியா வெப்பியார‌த்தில் நான் தின‌மும் கீதையை எடுத்து வாசிக்கிறேன்னு நீங்க‌ த‌ப்பா புரிஞ்சிட‌க்கூடாதுங்க‌

த‌யிரைக் க‌டைகிற‌ மாதிரித்தான் இந்த‌த் தொத‌ல் கிண்டுகிற‌தும் (த‌மிழ்நாட்ல‌ அத‌ எப்ப‌டி அழைப்பாங்க‌ன்னு தெரிய‌லைங்க‌). என‌க்குச் சின்ன‌ வ‌ய‌சுல‌ தொத‌ல் தின்கிற‌துன்னா ரொம்ப‌ப் பிடிக்கும். அடிக்க‌டி அம்மாவை ந‌ச்ச‌ரித்துக் கொண்டிருப்பேனுங்க‌. அவ‌ங்க‌ளும் அலுக்காம‌ என‌க்குக் கிண்டித்த‌ருவாங்க‌. இப்ப‌ நீங்க‌ள் அடிக்க‌டி டிரிப்பு, சினிமா, இல‌க்கிய‌ம்னு ஓடிக்கிட்டிருக்கும்போது, தானே ச‌மைத்து, பிள்ளைங்க‌ளையும் ப‌ராம‌ரித்துக்கிட்டிருக்கிற‌ உங்க‌ அருண்மொழி போல‌ என் அம்மான்னு வைச்சிக்கோங்க‌. ஒருநாள் அம்மா, சித்த‌ நேர‌ம் அடுப்பில‌ இருக்கிற‌ தொத‌லைக் கிண்ட‌டா என‌ க‌ர‌ண்டியைத் த‌ந்திட்டு ஏதோ வேற‌ வேலை பார்க்க‌ப் போனாங்க‌. நானும் இதென்ன‌ பூமாதிரி வேலைன்னு கிண்ட‌ப்போனா, ஒரு செக்க‌ன் சும்மா விட்டாலே தொத‌ல், உருக்கி வைச்ச‌ தார் மாதிரி ஒட்டிப்பிடிக்குது சார். ஒரு செக்க‌ன் இடைவெளி இல்லாம‌ கிண்ட‌னும். நானும் கிண்டுற‌ன் கிண்டுற‌ன்...அது அப்ப‌டியே செங்க‌ட்டிக் க‌ல்லுப் போல‌ வ‌ந்துருச்சுங்க‌. இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டா அம்மா என‌க்குத் தொத‌ல் கிண்டித்த‌ருகிறான்னு க‌வ‌லை வ‌ந்துருச்சுங்க‌. அன்னைக்கு எடுத்த‌ முடிவுதான்...இனிமேல‌ தொதல் வேண்டாம்னு...இன்னைவ‌ரைக்கும் தொத‌ல் ப‌க்க‌ம் போன‌தில்லை.. இப்ப‌ நீங்க‌ இந்த‌க்க‌தையிலை த‌யிரை இடையிலை க‌டைகிற‌மாதிரி ந‌ம்ம‌ துக்க‌முமன்னு சொல்றாப்போ, என்னாலை இனித் த‌யிரை சாப்பிட‌முடியுமான்னு தெரிய‌லை. ஏன்னா, த‌யிரைக் குடிக்கிற‌தும், துக்க‌த்தை எடுத்து எங‌க‌ளுக்குள் ஊத்திக்கிற‌தும் ஒன்னுன்னுதானே க‌ம‌ப‌ன் சொல்கிறான். க‌ம்ப‌ன் யாரு...அவ‌ன் ம‌காக‌வி. அவ‌ன் சொன்னாச் ச‌ரியாக‌த்தான் இருக்கும். க‌ம்ப‌ன் சொன்ன‌துக்காய் இனிமேல் நான் த‌யிரைச் சாப்பிடுவ‌தில்லைன்னு முடிவெடுத்திருக்கிறேன் சார். ந‌ம்ம‌ ம‌காக‌விக்கு இதைக்கூட‌ நான் செய்ய‌லேன்னா நான் த‌மிழ் ப‌டித்துத்தான் என்ன‌ பய‌ன்?

சார், இந்த‌க்க‌டித‌த்திலை இதையும் சொல்லிட‌னும். ம‌காபார‌த்திலை க‌ர்ண‌னுக்கும் துரியோத‌னுக்கும் இருந்த‌ ந‌ட்புக்கு அப்புற‌ம் நான் பாத்துக்கிற‌ தூய‌ந‌ட்பு உங்க‌ளுக்கும், அ.முத்துலிங்க‌ம் சாருக்கும் இடையிலான‌ ந‌ட்பைத்தான். ஒரு இக்க‌ட்டான‌ சூழ்நிலையில் க‌ர்ண‌ன் இருந்த‌ப்ப‌, துரியோத‌ன‌ன் 'கோர்க்க‌வா விட‌வா'ன்னு கேட்டுக்கிட்ட‌ மாதிரி, நீங்க‌ள் ஒவ்வொரு க‌தையாய் எழுதித்த‌ள்ளும்போது அ.மு சாரும், 'ஜெய‌மோக‌ன் நான் இந்த‌க் க‌தையைப் பாராட்டி எழுத‌வா? அல்ல‌து ஏற்க‌ன‌வே யாரும் போதும‌ள‌வுக்குப் பாராட்டிவிட்டாங்க‌ளா'ன்னு மெயில் அனுப்பிக் கேட்பார் போலத்தான் என‌க்குத் தோணுது. ஆனா சார், உங்க‌ளின் 'அற‌ம்' க‌தையை. அ.மு சார் அவ‌ர‌து க‌தைக‌ளை எழுதுவ‌தைப்போல‌, எளிமையாக‌ப் பாராட்டிவிட்டார்ன்னு கொஞ்சூண்டு வ‌ருத்த‌ம் என‌க்கு இருக்கு. ஏன்னா, 'அற‌ம்' க‌தை ப‌ற்றிக் கூறும்போது இனி சிறுக‌தை எழுத‌ விரும்புகின்ற‌வ‌ர்க‌ள் இந்த‌க் க‌தையை ம‌ட்டும் வாசித்தால் போதுமென‌ மிக‌ மெல்லிதாக‌ப் பாராட்டியிருக்கிறார். ஆனால் நீங்க‌ அதேபோல‌ மூன்று அற்புத‌மான‌ க‌தைக‌ளை எழுதியிருக்கீங்க‌. நான் என்ன‌ நெனைக்கிறேன் என்றால், 'இனி த‌மிழ் இல‌க்கிய‌ம் என்றாலே ஜெய‌மோக‌ன் தான். ஜெய‌மோக‌ன் என்றாலே இனித் த‌மிழ் இல‌க்கிய‌ம் தான்' என‌ அ.மு சார் சொல்ல‌வேண்டுமென‌ பிரிய‌ப்படுகிறேன்.

ஆனால் அ.மு சார் த‌மிழ்ந‌தி என்கிற‌வ‌ங்க‌கிட்ட‌ ஜெய‌மோக‌ன் நோப‌ல் ப‌ரிசுக்கு த‌குதியுடைய‌வ‌ர் என்று சொல்லிய‌தில் என‌க்கு முழு உட‌ன்பாடே. சார், உங்க‌ளுக்கு விரைவில் நோப‌ல் ப‌ரிசு கிடைக்கும் என்ப‌தில் என‌க்கு அசைக்க‌முடியா ந‌ம்பிக்கை இருக்கு. என்னுடைய‌ ஒரு சின்ன‌ வேண்டுகோள் சார். நீங்க‌ நோப‌ல் ப‌ரிசைப் பெறும்போது, எப்ப‌டி கொற்ற‌வைக்கு இய‌ல்விருதின் நாவ‌லுக்கான‌ ப‌ரிசு த‌ர‌ப்ப‌ட்ட‌போது, 'கொற்ற‌வை இந்த‌ப் ப‌ரிசுக்கு த‌குதியான‌தே. அது எப்போதோ என‌க்குத் தெரியும்' என‌ ஞான‌ச்செருக்கோடு செப்பிய‌மாதிரி, நீங்க‌ள் நோபல் ப‌ரிசு மேடையில், 'என‌க்கு எப்போதே தெரியும் என் நாவ‌ல்க‌ள் நோப‌ல் ப‌ரிசுக்குத் த‌குதியான‌து என்று, ஆனால் இதை இப்போது தாம‌தமாக‌த் த‌ருவ‌தால் நோபல் ப‌ரிசுக்கு அவ‌மான‌மே த‌விர‌ என் ப‌டைப்புக‌ளுக்கு அல்ல‌' என‌ உல‌கைப் பார்த்துச் சொல்ல‌வேண்டும். அப்ப‌டிச் சொன்னால்தான் இந்த‌ வெள்ளைக்கார‌ங்க‌ளுக்கும் உறைக்கும். இன்னொருபுற‌த்தில் அருந்த‌தி ராய்ங்கிற‌வுக்கும் ம‌ர‌ணஅடி கொடுத்த‌மாதிரி இருக்கும். சார் இன்னுமொரு ரிக்குவெஸ்டு. நீங்க‌ள் அந்த‌ மேடையிலை இனி இல‌க்கிய‌த்துக்கான‌ நோபல் ப‌ரிசுக்கான‌ பெய‌ரை 'அசோக‌வ‌ன‌ம்'னு மாற்றக் கோரிக்கை விடுங்க‌. ஏன் சொல்கிறேன் என்றால், நீங்க‌ள் வ‌ருட‌க்க‌ண‌க்காய் அசோக‌வ‌ன‌த்தை எழுதிக்கொண்டிருக்கிறீங்க‌. எப்ப‌டியோ அந்த‌ப் பெருங்காப்பிய‌ம் உங்க‌ளுக்கு நோப‌ல் ப‌ரிசு கிடைத்தாற்பிற‌குதான் புத்த‌க‌மாய் வெளிவ‌ரும் என்ப‌து என‌ க‌ணிப்பு. ஆக‌, நோப‌ல்காரங்க‌ 'அசோக‌வ‌ன‌ம்'னு இல‌க்கிய‌த்துக்கான‌ பெய‌ரை மாத்திட்டாங்க‌ண்ணா, உங்க‌ளுக்கு 2வ‌து முறையும் நோபல் ப‌ரிசு கிடைக்க‌ சான்ஸ் இருக்கு சார். எப்ப‌டின்னு கேட்கிறீங்க‌ளா? நோப‌ல் ப‌ரிசையே 'அசோக‌வ‌ன‌ம்'னு மாத்திக்கிட்ட‌வ‌ங்க‌, உங்க‌ளின் 'அசோக‌வ‌ன‌ம்' வெளிவ‌ரும்போது 2ந்த‌ட‌வை ப‌ரிசைக் கொடுக்காவிட்டால், அவ‌ங்க‌ளுக்கு அல்ல‌வா அவ‌மான‌ம்? ஒரு பேச்சுக்கு நாவ‌ல் மிக‌மோச‌மாக‌ இருக்கிற‌து என்று வைத்துக்கொண்டால் கூட‌ உங்க‌ளுக்கு நோப‌ல் ப‌ரிசு 2ந்த‌ட‌வை கிடைக்கிற‌தை எந்த‌க் கொம்ப‌னாலும் த‌டுக்க‌முடியாது சார். எப்ப‌டியெல்லாம் இப்ப‌டிச் சிந்திக்கிறேன்னுன்னு கேட்கிறீங்க‌ளா? எல்லாம் உங்க‌ எழுத்துக்க‌ளை வரிக்கு வ‌ரி வாசித்து வாசித்து ஊற‌ப்போட்டு என‌க்குள்ளும் ஒரு குட்டி ஜெய‌மோக‌ன் உருவாகிட்டு வாறான் என்ப‌த‌ற்கான‌ அடையாள‌ம் தான் இது.

சார், உங்க‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் பிடித்த‌ இல‌க்கிய‌வாதிக‌ள் ன்னு ஒரு லிஸ்டு த‌யாரித்துத் த‌ர‌முடியுமா? ஏன்னு கேட்கிறீங்க‌ளா. எல்லோரையும் போட்டுத்த‌ள்ள‌ப் போகிறேனுங்க‌. சார் இதைக் கொலை வெறின்னு ம‌ட்டும் த‌ய‌வுசெய்து பாக்காதீங்க‌, இது இல‌க்கிய‌ வெறி சார். நீங்க‌ தானே கால‌மான‌ இல‌க்கிய‌வாதிக‌ள், ம‌ற்றும் ம‌னித‌ர்க‌ளை வைத்து அவ‌ங்க‌ள் இற‌ந்திட்டாங்க‌ என்ற‌ தெகிரிய‌த்துல‌ அற்புத‌மான‌ இல‌க்கிய‌ங்க‌ளை எழுதிகிட்டிருக்கீங்க‌. அவையெல்லாம் த‌மிழ‌ன்னைக்கு இடையில் க‌ட்டிவிடுகின்ற‌ ஒட்டடியாண‌ம் போல‌ ஜெக‌ஜெக‌வென்று என்றைக்கும் ஜொலித்துக்கொண்டேயிருக்கும் சார். ஏன் லிஸ்டு கேட்கிறேன் என்றால், என‌க்கு உங்க‌ளிட‌ம் இன்னும் இதேபோன்ற‌ அற்புத‌மான‌ க‌தைக‌ள் வ‌ர‌னுஙகிற‌து பெருவிருப்ப‌ம். ஆனால் என்னாலை இவ‌ங்க‌ள் எல்லாம் கால‌மாகும் வ‌ரை -அதாங்க‌ மண்டையைப் போடும்வ‌ரை- பொறுமையாக‌ காத்துக்கிட்ட்டிருக்க‌ முடியாது. நீங்க‌ லிஸ்டைத் த‌ந்தீங்க‌ன்னா, நான் அவ‌ங்க‌ளை உட‌னேயே போட்டுத்த‌ள்ளிவிடுகின்றேன். பிற‌கு நீங்க‌ள் அவ‌ங்க‌ளை வைத்துச் சுட‌ச்சுட‌ இவ்வாறான‌ அழியாப்புக‌ழ் பெற்ற‌ க‌தைக‌ளை எழுதிட‌லாங்க. ஏனுங்க‌ நாஞ் சொல்ற‌து செரிங்க‌தானே?

நான் ப‌டிக்கிற‌ கால‌த்திலை எங்க‌டை வாத்தியார் என்னுடைய‌ நோட்டுப்புக்கைப் பாத்திட்டு 'என்ன‌டா கோழி கிள‌றின‌மாதிரி எழுதியிருக்காய்' என்று திட்டுவார். அன்னைக்கு வாத்தி சொன்ன‌து இன்னைக்கும் ப‌லித்துக்கொண்டிருக்கிது. என்னாலை ஒழுங்காய் த‌மிழில் எழுத‌முடியாத‌துமாதிரி, என்னாலை ஒழுங்காய் ஒரு மொழியில் நேர்த்தியாக‌ எழுத‌முடிவ‌தில்லை. உங்க‌ளின் க‌தைக‌ளில் வ‌ருகின்ற‌ மாந்த‌ர்கள் பேசுகின்ற‌ மொழி போல‌ என்று வைத்துக்கொள்ளுங்க‌ளேன். அத‌னால்தான் மேலே ப‌ல்வேறுப‌ட்ட‌வ‌ர்க‌ள் பேசுகின்ற‌ மொழியில் இந்த‌க் க‌டித‌த்தை எழுதிருக்கிறேன். அத‌னால் த‌வ‌றாக‌ நினைக்க‌வேண்டாம்.

சார், உங்க‌ விஷ்ணுபுர‌மும் என‌க்கொரு இன்னொரு கீதை மாதிரித்தான். என் வீட்டிலை, வ‌ர‌வேற்ப‌றையிலை, ச‌மையல‌றையிலை, குளிய‌லைறையிலை என‌ ஐந்தாறு பிர‌திக‌ள‌ எல்லா இட‌ங்க‌ளிலும் வைத்திருங்கிறேனுங்க‌. ம‌ன‌சுக்குப் பிடித்த‌ புத்த‌க‌ங்க‌ளை எப்ப‌வும் கைக்கெட்டிய‌தூர‌த்திலை வைத்திருக்க‌னும்னு நீங்க‌ளும் சொல்லியிருக்கீங்க‌. அதோடு இன்னொரு கார‌ண‌மும் இருக்கு சார். உங்க‌ளுக்கு க‌ன‌டாவிலிருந்து க‌டித‌ம் எழுதும் லிங்க‌ம் என்ப‌வ‌ரும் த‌ன் ப‌டுக்கைய‌றையில் விஷ்ணுபுர‌ம் வைத்திருக்கேன்னு எழுதுகிற‌வ‌ர். நான் அவ‌ரை விட‌ ஐந்து ம‌ட‌ங்கு மேலான‌ வாச‌க‌ரும், தீவிர‌ வாசக‌ரும்னு உறுதிசெய்ய‌த்தான் இதைச் சொல்கிறேனுங்க‌.

இறுதியாய் இவ்வ‌ள‌வு நேர‌மும் பொறுமையாய் வாசித்த‌தாய் நன்றிங்க‌.

அன்புட‌ன்,
குட்டி யாழ்ப்பாண‌த்த‌ன்
(புனைபெய‌ர்: விஷ்ணுபுர‌தாச‌ன்)

(டிசேயின் குறிப்பு: 'இது க‌டித‌ம் அல்ல‌, காப்பிய‌ம்' என்றே குட்டி யாழ்ப்பாண‌த்த‌ன் உப‌த‌லைப்பு வைக்க‌ச் சொல்லியிருந்தார். அதைத் த‌விர்த்திருப்ப‌தைப் போன்று, இக்க‌டித‌ம் மிக‌ நீண்ட‌தாகவும், சில‌ ச‌ர்ச்சைக்குரிய‌ விட‌ய‌ங்க‌ளையும் கொண்டிருந்த‌தால் ப‌ல‌ ப‌குதிக‌ளைத் த‌ணிக்கையும் செய்திருந்தேன். சில‌வேளை அவ‌ர் ஜெய‌மோக‌னுக்கு முழுக்க‌டித‌த்தையும் அனுப்பியிருக்க‌வும் கூடும். )

Saturday, December 11, 2010

நீதியின் பெண் குரல்: அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்ததி ராய்

-மாலதி மைத்ரி

1990இல் இந்தியன் பனோரமாவின் மூன்று நாள் திரைப்பட விழா செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்தது. அதில் ஒரு படம் ஆனியும் அவள் நண்பர்களும் (In which Annie gives it those ones) என்று என் நினைவில் பதிந்திருந்தது. தில்லியில் கட்டடக்கலை பயிலும் மாணவர்களைப் பற்றிய கதை. ஒரு பிரெஞ்ச் திரைப் படம் மாதிரியான கதை நிகழ்வும் சம்பவங்களுமாக, படம் இந்தியத் திரைப்படங்களிலிருந்து மிக வித்தியாசமாக இருந்தது. அதில் ஆனியாக நடித்த பெண்ணின் ஆளுமையிலிருந்து நான் விடுபடவே இல்லை. தலை நகரில் மாறிவரும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தனர். மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கார் ஷெட் ஒன்றில் தங்கி வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களின் கனவுகளும்தான் கதை. படம் முடிவில் இந்த நண்பர்கள் யார் யார் என்னவாக ஆகப்போகிறார்கள் என்ற பட்டியல் வரும். இளைஞன் ஒருவன் தான் இந்தியாவில் மிகப் பெரிய நடிகனாவேன் என்பான் (ஷாருக்கான்). ஆனியாக நடித்த பெண் தான் நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுவாள்.

ஏழாண்டுகள் கழித்து 1997இல் பல பத்திரிகைகளில் ஆனியின் புகைப்படத்தைப் புக்கர் விருது பெற்ற நாவலாசிரியர் அருந்ததிராயாகப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சில ஆண்டுகள் கழித்துக் கால்வாசி படத்திலிருந்து படத்தின் பெயர் தெரியாமலே தூர்தர்ஸனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் (மேசே சாகிப்) கேமிராவைப் பார்த்துக் கூச்சத்துடன் நடித்த ஆதிவாசிப் பெண்ணாக அருந்ததி இருந்தார். பிரிட்டிஷ் காலத்தில் மேற்கு வங்காளத்தில் மிகக் கடுமையான மலைப்பகுதியில் சாலை போடும் இந்தியப் பொறியாளரைப் பற்றிய படமது. கட்டடக்கலைஞர், பொறியாளர், நடிகை, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி எனத் தனது பன்முகத் திறன் படைத்த ஆளுமையால் மனித உரிமை ஆர்வலர்களின் நேசத்துக்கு உரியவரானார் அருந்ததி. தன் அறிவாலும் திறமையாலும் புகழாலும் சர்வதேச ஊடகவெளியை மக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சரியான திட்டமிடலால் அறிவுலகத்தினரைத் திகைப்பிலாழ்த்தினார். மக்கள் பிரச்சினைகள் குறித்துக் குரலெழுப்பித் தொல்லை தருபவரென அரசியல்வாதிகளைப் புலம்பவைத்தார்.

பிரேம் 2001இல் பிரான்ஸ் சென்றிருந்தபோது அங்கு பிரெஞ்ச், ஜெர்மன் புத்தகக் கடைகளில் அருந்ததி ராயின் பெரிய புகைப்படங்களின் கீழ் அவரது புத்தகங்கள் விற்கப்படுவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். தில்லியில் 2006 பிப்ரவரியில் ‘தெற்காசியாவில் சுதந்திரமான பேச்சு’க்கான கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது என் அமர்வின் தலைவராக அருந்ததி ராய் வந்தமர்ந்தார். அதுவரை மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் எனக்குத் தெரியாது. அப்போது அவர் ஆற்றிய நீண்ட உரையில் காஷ்மீர் பிரச்சினை முக்கியச் செய்தியாக இருந்தது. அதை முன்வைத்து அந்த வருடம் ஜனவரியில் தனக்களிக்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதை மறுத்ததற்கான விளக்கங்களையும் கொடுத்தார். அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்தும் பிரான்ஸின் அல்ஜீரியர்மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் தனக்களிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்திருந்த ழான் பால் சார்த்தர் என் நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் விருதுக்காகவும் சில அனுகூலங்களுக்காகவும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்யப் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையும் நினைவுக்கு வந்தது.

அருந்ததி தனது காஷ்மீர் கள ஆய்வுகள் குறித்தும் கேரள முத்தங்கா ஆதிவாசிகள் போராட்டம், சர்தார் சரோவர் அணைகட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அந்தக் கருத்தரங்கில் இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் பிரசன்ன வித்தனகே, ஜெயசூர்யாவின் திரைப்படங்களின் திரையிடல்களுக்குப் பிறகு இலங்கை இனப்போர் குறித்து விவாதிக்கப் பட்டாலும் அது அந்நிய நாட்டின் பிரச்சினை என்னும் தளத்திலேயே விவாதங்கள் முடிந்தன. கருத்தரங்கம் முடிந்த கடைசி நாளன்று ஆவணப்பட இயக்குநர் சபா திவான் தனது வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். நானும் பிரேமும் சென்றிருந்தோம். அருந்ததியும் வந்திருந்தார். நடு இரவு கடந்தும் நேரம்போவது தெரியாமல் அவரது நாவல், திரைப்படங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழில் அவரது நாவல் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஏன் வெளிவரவில்லையென விசாரித்தேன். ‘என் தமிழக நண்பர் அந்தப் பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொன்னார், அதனால் நிறுத்தி விட்டேன்’ என்றார். அருந்ததியின் The God of Small Things

நாவல் தமிழைத் தவிர இதுவரை 40க்கும் மேற் பட்ட மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து இந்திய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருந்தார். அவரது புத்தகங்களுக்குக் கிடைத்த ராயல்டியை நர்மதா பச்சா அந்தோலனுக்கு அளித்திருந்தார். இந்தச் சமயத்தில் அருந்ததிமீது குஜராத் அரசியல்வாதிகளும் மலையாள எழுத்தாளர்கள் சிலரும் வதந்தி ஒன்றைப் பரப்பிக்கொண்டிருந்தனர். அருந்ததியின் கணவருக்கு நர்மதா பள்ளத்தாக்கில் பண்ணை வீடு இருப்பதாகவும் அதைப் பாதுகாக்கத் தான் மக்களுக்கான மிகப் பெரிய இந்த வளர்ச்சித் திட்டத்தை எதிர்க்கிறார் என்பதுதான் அது. வதந்திகளுக்கு அவர் ஒருபோதும் பதிலளிப்பதில்லை. அவரின் தீவிரச் செயல்பாடுகளை அதற்கான பதிலாக விட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறார். தனக்குக் கிடைத்த உலகளாவிய அடையாளத்தைச் சரியான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி இந்திய அரசின் மக்கள் விரோத அரசியலை அச்சமில்லாமல் விமர்சித்துக்கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தை விமர்சித்ததற்காக 2002இல் சுப்ரீம் கோர்ட் அருந்ததிக்கு ஒரு நாள் அடையாளச் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது. சிறைக்குச் சென்று வந்த அருந்ததி ‘இந்தியாவில் வெளியில் வாழ்வதைவிடச் சிறை வாழ்க்கையே மேல்’ என்றார்.

இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் விரோத அரசாட்சி முறையையும் கொள்கைகளையும் வன்முறை அரசியல் கலாச்சாரத்தையும் அதன் எதேச்சதிகாரத்தையும் கண்மூடித்தனமான ஏகாதிபத்திய சார்பையும் விமர்சித்து சில இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள், குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்த நிலையில், அந்த மாற்று அரசியல் பேசும் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பும் தலைமையும் வெற்றிடமாக்கப்பட்டுச் சூன்யத்தை நோக்கி உரையாடிக்கொண்டிருந்த நிலையை நாம் அறிவோம். இந்தியாவில் அந்நியக் காலனிய ஆட்சிமாற்றத்திற்குப் பின் ஒரு தலைமுறை அரசியல் வரலாற்றுக் காலத்தில் பேச முடியாத நிலையிலிருந்த பெண்கள் - இந்திய அரசின் கண்மூடித்தனமான தேச வளர்ச்சி என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட பெரிய தொழிற்சாலைகளாலும் மகா திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட - இந்தியாவின் பின்தங்கிய வறுமையில் வாடும் மக்களுக்காக 80களில் தீவிர அரசியல் களத்துக்குள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு மக்கள் தலைமையில் போராட வந்தனர். இந்திய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் குடியுரிமையையும் பாதுகாக்க வேண்டிய இந்திய நாடாளுமன்றமும் மாநிலச் சட்ட மன்றங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முகவர் அலுவலகங்களாகச் செயல்படுவதையும் எழுத்தாளராக இருந்து சமூகப் போராளியாகக் களம் கண்ட மகாஸ்வேதா தேவி, கவிஞராக அறிமுகமாகிச் சமூகப் போராளியான மேதா பட்கர் முதலான இந்தியப் பெண் அரசியல் தலைமைக்கு முன் போராளிகளாகத் தனித்து மக்களுடன் களம் இறங்கினர்.

இவர்கள் அருந்ததிக்கு முன்னோடிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அருந்ததி மாதிரியான உலகளவிலான பொது ஊடகத் தளம் இல்லை. அருந்ததி தனக்குக் கிடைத்த புகழை மிகச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களையும் அவற்றின் அரசியலையும் பேசி அரக்கிடப்பட்ட ஊடகங்களின் மௌனத்தை உடைத்தார். உலகமயமான தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களின் காலனியப் படையெடுப்பு, வல்லரசுகளின் போர்வெறி, இயற்கைவளக் கொள்ளை, உள்நாட்டுப் போர், ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டங்கள். மனித உரிமைப் போராட்டங்கள். உள்நாட்டில் காவல் துறையினரும் ராணுவத் தினரும் சட்டம் ஒழுங்கு, தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நடத்தும் கண்மூடித்தன மான படுகொலைகள், வன்முறைகள் என மனித விரோத அரசியலின் அனைத்து வகையான கொள்கைகளையும் செயல்களையும் கண்டித்துப் பேசி உலக சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டும் மிகச் சாதுர்யமான அரசியல் யுத்தியைக் கையாள அவர் பயப்படவில்லை. தற்போது இந்திய மற்றும் உலக வல்லரசுகளின் போர் மேலாதிக்க மக்கள் விரோதச் செயலைத் துணிந்து விமர்சிக்கும் தீவிர அரசியல் போராளியாகவும் போராடும் மக்களுடன் கைகோக்கும் களப்போராளியாகவும் கடந்த பத்தாண்டுகளாக உலகளவில் அடையாளம் பெற்றுள்ளார்.

மாவோயிஸ்டுகளைச் சந்தித்து வந்தபின் அவரின் கருத்துகள் இந்திய அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கின. மாவோயிஸ்டுகளை ‘ஆயுதத்துடன் போராடும் காந்திகள்’ எனச் சொன்னார். ‘ஆதிவாசிகளின் தலைகளில் துப்பாக்கியை வைத்து இடத்தைக் காலி செய் என்று அரசு சொன்னால் அவர்களிடம் உள்ள வில் அம்புகளுடன் மக்கள் அரசை எதிர்த்துப் போரிடத்தான் செய்வார்கள்’ என்றார். தண்டேவாடா நிகழ்வுக்குப் பிறகு அரசு மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதற்கு மாவோயிஸ்டுகள் தரப்பிலிருந்து அருந்ததியைப் பேச அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அருந்ததியே உடன்படவில்லை. தான் பார்வையாளராக வேண்டுமானால் இருப்பதாகவும் மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாக வர விரும்பவில்லை என்றும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் ‘பொது மக்களைப் படுகொலை செய்யும் மாவோயிஸ்டுகளை எப்படி ஆதரிக்கிறீர்கள்?’ என்ற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் எழுப்பியபோது, ‘மாவோயிஸ்டுகளை முழுமையான ஜனநாயகவாதிகளாக நான் பார்க்கவில்லை. சொந்த நாட்டு மக்களையே கொல்லும் இந்தப் பாசிச அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகளுக்காகப் போராடுவதால் ஆதரிக்கிறேன். எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நானே இவர்களின் எதிரியாகக்கூட வாய்ப்புள்ளது’ என்றது இப்போது நினைவு கொள்ளத்தக்கது. இந்த அரசியல் தெளிவு அறிவுஜீவிகளுக்கு விடுதலைப் புலிகள் குறித்து அமையாதது வருத்தமே. தஸ்லீமா நஸ்ரீன் மீதான இஸ்லாமிய அமைப்புகள் விதித்த பாத்வாவையும் ஐதராபாத்தில் தஸ்லீமாமீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்தார். மதச் சிறுபான்மையினர் என்பதற்காக இஸ்லாமியர்களை அருந்ததி கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் என்னும் அரசியல் ஆதாயப் பேச்சுகள் அர்த்தமற்றவை.

மேதா பட்கரின் ‘நர்மதா பட்சா அந்தோலனுடன்’ சேர்ந்து சர்தார் சர்ரோவர் அணைக்கட்டு எதிர்ப்புப் போராட்டம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு, என்ரான் நீர்மின் திட்டம், மணிப்பூரில் சிறப்புப் பாதுகாப்புப் படையைத் திரும்பப்பெறக் கோரும் மணிப்பூர் மக்கள் போராட்டம், மாவோயிஸ்டுகளின் போராட்டம், ஒரிசா கந்தமால் நிகழ்வு, ஆதிவாதிகளின் நில மீட்புப் போராட்டம், கேரளா முத்தாங்காவிலும் செங்காராவிலும் ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டம், காஷ்மீர் மக்கள் போராட்டம், மேற்கு வங்கம் சிங்கூர், நந்திகிராம் படு கொலைகள், உள்நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள், ஈராக் போர், இஸ்ரேல் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, ஆப்கான் யுத்தம், இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்புப் போரென இன்று இந்தியாவில், உலகளவில் நடக்கும் போர்களையும் யுத்தங்களையும் எதிர்த்துக் கருத்துகளைப் பரப்புவது, அனைத்து மனித உரிமைப் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்பது, வேண்டிய இடங்களில் போராட்டங்களில் கலந்துகொள்வது, மேலாதிக்க அரசுகளை விமர் சிக்கத் தயங்காத துணிவுடன் தொடர்ந்து செயல்படுவது, குடிசைப் பகுதி அகற்றப்பட்டு மக்கள் அல்லல்படும்போது அங்கே சென்று நியாயம் கேட்பது, மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது இப்படியாகத் தொடர்பவர்தான் அருந்ததி. தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை ‘யுத்த ஆயுத தளவாடங்கள் விற்க வந்த வியாபாரி ஏன் காஷ்மீர் பற்றி வாய் திறக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்புகிறார். ஒபாமாவின் வருகையைக் கடுமையாக விமர்சிக்கும் அருந்ததி இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து விருந்துண்டு நன்கொடை பெற்றுப் போகும் போர்க் குற்றவாளி, தமிழக மீனவர்களைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமே.

‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருக்க முடியாது’ என்று தில்லி கருத்தரங்கில் பேசிய அருந்ததி, காஷ்மீருக்கு விடுதலை மட்டுமே ஒரே தீர்வெனப் பேசிய ஹுரியத் கட்சித் தலைவர் கிலானி மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோர்மீது தில்லி கோர்ட்டில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த அதித்தியா ராஜ் கவுல் என்பவர் தேச விரோதக் குற்றச்சாட் டின் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கு முதல்நாள் அக்டோபர் 31இல் ஆர். எஸ். எஸ் மகளிர் அமைப்புகளால் அவரது வீடு தாக்கப்பட்டது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் லக்ஷ்மணன் சிங் 124ஏ மேலும் மூன்று பிரிவின் கீழ் அருந்ததி மீது வழக்குத் தொடுக்க 12ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். பாலினச் சகிப்பு, சாதிச் சகிப்பு, மதச் சகிப்பு, கருத்துச் சகிப்பின் தடங்கள் தேய்ந்து அழிந்து காணாமல்போன இந்திய தேசத்தில் இது போன்ற தாக்குதல்களை அருந்ததி எதிர்பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். கருத்துக்கு உயிரை விலைகேட்கும் அரசுகளின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மணிப்பூரில் நிலைகொண்டுள்ள சிறப்புப் பாதுகாப்புப் படையை ஆளும் காந்திய காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இரோம் சர்மிளா காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். காஷ்மீர் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் அறவழியில் போராட அறிவுறுத்தும் மனிதாபிமானிகள் மணிப்பூருக்குப் போய் இரோம் சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு மணிப்பூர் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டு வந்து பிறகு தங்களது அறிவுரை மூட்டைகளை அவிழ்த்துக் கடைபரப்பினால் இடது கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுவங்கி அதிகரிக்கிறதா எனப் பார்க்கலாம்.

உண்மைகளை உரத்தும் தைரியமாகவும் பேசுவதால் வன்முறையைத் தூண்டும் பேச்சாளராகவும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தேச விரோதியாகவும் அரசியல்வாதிகளின் கண்டனத்துக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் அருந்ததி இதையெல்லாம் கண்டு அஞ்சுவதில்லை. தன் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் வன்முறையின் குரூரத்தை வியாபாரமாக்கப் பார்க்கும் ஊடகங்களின் அறம், வணிக நோக்கம், ஊடகங்களுக்கு வன்முறையாளர்களுடனான தொடர்பு ஆகியவற்றைக் கேள்வி கேட்கிறார். டிஆர்பி ரேடிங்கிற்காக வன்முறையின் சாட்சிகளாகவும் வன் முறையைத் தூண்டியும் ஊடகங்கள் செயல்படுவது மிகக் கொடியது. ஊடகங்கள் தங்கள் செய்திகளைப் பரபரப்பாக்கக் கூலிப்பட்டாளங்களை உருவாக்கி நாட்டில் வன்முறையைத் தூண்டுகின்றனவோ என்னும் அச்சமெழுகிறது. குறிப்பாகப் பெண்கள் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தித் தாக்குதல்கள் நடத்த ஊடகங்கள் ஊக்குவிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியப் பெருமை பேசும் பல மதவாத அமைப்புகள் கூலிப்படைகளாக நடந்துகொள்வது சமீபத்தில் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கும் அவமானங்களுக்கும் நடுவில்தான் அருந்ததி ராய் பெண்ணாகவும் எழுத்தாளராகவும் களப்பணியாளராகவும் மனித உரிமைகள், மக்கள் அரசியல் ஆகியவற்றுக்கான மாற்றுக் கருத்துகளைத் தயங்காமல் பரப்பி வருகிறார். அவரும் ஒரு ஊடகவியலாளராக இருந்தபடி, மாற்று ஊடகத்தின் குரலாக ஒலித்தபடி.

நானும் பிரேமும் அருந்ததியுடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘நீங்கள் இன்னொரு நாவல் எழுத வேண்டும், எப்போது’ என்றதற்குத் தலையைக் கலைத்தபடி ‘இனி நாவல் எல்லாம் இல்லை, எனது படைப்புச்செயல் இனி அரசியல் செயல்பாடுதான் (Activism is my creativity) என்றார். இந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நீங்கள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றதற்கு, பார்க்கலாம் என்றார். இனி அவர் நாவல்தான் எழுத வேண்டும் என்று இல்லை, தன் வாழ்க்கையை, நினைவுகளை எழுதினாலே போதும் அது உலக இலக்கியங்களில் ஒன்றாக ஆகிவிடும். ஆம் அருந்ததி, இதுபோல் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.

(நன்றி: காலச்சுவடு)