Tuesday, April 28, 2009

சிவம் அவர்கள் மறைவு

நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட சிவம் அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக எழுந்தவர். தனது பாடசாலை நாட்களிலேயே ஏனைய முற்போக்கு மாணவர்களுடன் இணைந்து மாக்சிய மாணவர் மன்றத்தை நிறுவி சமூக மாற்றத்திற்காக போராடியவர். அவரின் பிரதிபலனற்ற செயற்பாடுகள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. பின்னர் சீனசார் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர தொண்டனாக செயலாற்றியவர். சாதிய பிசாசு கோலோச்சியிருந்;த நாட்களில் அதன் அனைத்து வடிவங்களையும் உடைத்தெறிவதில் இவர் முன்னின்று உழைத்த நாட்கள் வரலாற்றில் பலராலும் பதியப்பட்டுள்ளன.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த பிற்பாடு, மாற்றுக்கருத்துக்காகவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்காகவும் ஒரு தாபனத்தின் தேவையை வலியுறுத்தி தேடகத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று உழைத்து இறக்கும் இறுதித்தறுவாய் வரை அதன் நோக்கத்திற்காய் உழைத்தவர். புலம்பெயர்ந்த சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான ஒரு அடையாளமாக தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) திகழவேண்டும் என்ற நோக்கில் அதன் பன்முக செயற்பாடுகள் குறித்து வலியுறுத்தி வந்ததுடன் அவற்றை செயற்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர். அண்மைக்காலமாக நிலவி வந்த
அரசியல் மந்தநிலையை உடைத்து மீ;ண்டும் புத்தெழுச்சியுடன் தேடகம் செயற்பட எம்மையெல்லாம் உந்தியவர்.

இறுதியாக 26.04.2009 இரவு பத்திரிகையாளர் காமினி வியாங்கொடவுடனான சந்திப்பின் போது, இன்றைய போரை, முற்போக்கு என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆழமாக புரிந்துகொள்ளவில்லை என்ற விசனத்தை தெரிவித்ததுடன், இந்த போர் இலங்கை பேரினவாதத்தின் தமிழ் சிறுபான்மை இனம் மீதான ஒடுக்குமுறையே தவிர வேறெதும் இல்லை என்று குறிப்பிட்டார். சிறுபான்மை இனம் தனது உரிமைக்காய் போராடவேண்டிய தேவை இன்று மிகப்பலமாக உள்ளதாகவும் அதற்கான அரசியல்பலத்தை உலகளாவிய ரீதியில் வென்றெடுக்கக்கூடிய போராட்டங்கள் தொடரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் மீதான படுகொலை நடவடிக்கைகள் அவரை மிகவாக பாதித்துமிருந்தது. நீண்டகாலமாக சிறுநீராக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றிருந்தாலும் அவை எவைற்றையும் மற்றவருக்கு தெரிவிக்கவிரும்பால் தனது பணிகளை முன்னின்று செய்யதவர் திரு. சிவம். 27.04.2009 அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் எம்மைவிட்டு திரு. சிவம் பிரிந்துவிட்டார். தன் வாழ் முழுவதும் சமூக மேன்மைக்காக சிந்தித்த, உழைத்த தோழனை போராளியை நாம் இழந்துள்ளோம். தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) தனது உற்ற செயற்பாட்டாளரையும் முன்னோடியையும் இழந்துள்ளது. இவ் ஆழ்ந்த துயரை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

அன்னாரின் புகழுடல் Ogden Funeral Home (Midland/ Sheppard)ல்29-04-2009 புதன்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 30-04-2009 வியாழக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை St. James (Parliament/ Wellesley)மயானத்தில்
இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்படும்.

சாந்தி (மனைவி) 905-303-6675
தேடகம் தொடர்புகளுக்கு: பா.அ. ஜயகரன் 416 275 0070 கோணேஸ் 647 891 8597

நன்றி: தேடகம்

No comments: