Saturday, February 17, 2007

ஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள்

அண்மையில் பாலபாரதி ஒரு பின்-நவீனத்துவக் கட்டுரையை அம்மா இதழிலிருந்து எடுத்துப் பதிவு செய்திருந்தார். விமர்சனம் என்பது வேறு, ஆனால் அதில் பின் நவீனத்துவம் குறித்த அதீத காழ்ப்பு இருப்பது போலத் தோன்றியது. தத்துவங்களை மட்டும் எப்போதும் கட்டி அழுபவர்களுக்கு நேரும் அவலம் தான் இது. புது விதமான கட்டுடைப்புக்களையோ, புது வகையிலான தத்துவங்களையோ ஏற்றுக்கொள்வது என்பது -இது மட்டுந்ததான் நமக்கான தத்துவம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு- கொடூரமாய்த்தான் இருக்கும். இவ்வாறு சமகாலத்தையும், மக்களையும் விட்டுவிலகிப் போய்க்கொண்டிருக்கும் பலரது வீழ்ச்சிகளைய்ப் பார்த்துக்கொண்டுத்தானே இருக்கின்றோம்.

எம்.ஜி.சுரேஷின் நேர்காணலை தீராநதியிலிருந்து நன்றியுடன் கீழே தருகின்றேன். எம்.ஜி.சுரேஷின் எல்லாப்புள்ளிகளோடும் உடன்படுவது என்பதல்ல இதற்கு அர்த்தம். இன்னவின்ன எழுத்துமுறைகளுக்காய் நான் நவீனம் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்று எம்.ஜி.சுரேஷின் நாவல்களின் பின்னட்டைகளில் வரும் 'பயமுறுத்தல்கள்' எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வாசகர் ஒரு நாவலை வாசித்துவிட்டு இது இன்ன எழுத்து நடையில் எழுதியிருக்கலாம் என்று சிந்திக்கும் வெளியைக் கூட அவை மறுத்து நிற்கின்றன. அத்துடன், கிட்டத்தட்ட 'நாற்சார் மடம்' என்ற கதைக்கு நிகராய் ஜெயமோகனைக் கீழ்த்தரமாய்ச் சித்தரித்து எம்.ஜி.சுரேஷ் பன்முகத்தில் எழுதிய கதையிலும் எனக்கு எந்தப்புள்ளியிலும் உடன்பாடில்லை (அதற்கான எதிர்ப்பை எழுத்தில் வைத்தபோதும் -வழமைபோல ஜெயமோகன்- இப்படி தன்னைப் பற்றி எம்.ஜி.சுரேஷ் எழுதியதால் 'டிசே தமிழனுக்கு புளங்காகிதம்' என்று கூறியதை மறந்துவிடுவோம் :-) ).

-டிசே


போஸ்ட் மாடர்னிஸம் என்று அழைக்கப்படும் பின்நவீனத்துவத்திற்கு இப்போது வயது முப்பத்தெட்டு. 1966_ம் ஆண்டு ழாக் டெரிடா (Jacques derrida) என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் நிர் _ நிர்மாணம் (Deconstruction) என்ற சொற்பிர யோகத்தை முதன் முதலாக கையாண்டதில்தான் பின்நவீனம் பிறந்தது. அதற்கு, முன்னமே ஐம்பது வருஷங்களுக்கு முன் ஜான் வாட்கின்ஸ் சாப்மேன், ருடோல்ஃப் பான்விட்ஸ் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும் ‘போமோ’ அங்கீகரிக்கப்பட்ட பிறப்பென்பது 1966_ல்தான் தொடங்கியது. இதையட்டிய கோட்பாடுகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்களில் எம்.ஜி.சுரேஷ் முக்கியமானவர். பின்நவீனக் கோட்பாடுகளை முணுமுணுக்கும் நபர்கள் கூடவே தவிர்க்க முடியாமல் உச்சரிக்கும் பெயரல்ல; ஒரு சொல் எம்.ஜி.சுரேஷ். ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள். ‘இஸங்கள் ஆயிரம்’ ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ ஆகிய இரண்டு கோட்பாட்டு அறிமுக நூல்கள், என்று பல படைப்புகளை தமிழுக்குத் தந்திருப்பவர். zero degree writing வகைமையைக்கொண்டு இவர் எழுதிய சமீபத்திய நாவல் ‘37’. இவரை தசரதபுரத்திலுள்ள அவரது வீட்டில் தீராநதிக்காகச் சந்தித்தோம். அவரது எழுத்து நடையைப் போலவே பேச்சும் எளிமையாக அமைந்தது.

தீராநதி : கார்க்கி இதழில்தான் உங்களுடைய முதல் கதை பிரசுரம் கண்டிருக்கிறது. அது கம்யூனிஸ தத்துவத்தை மையமாக வைத்து இயங்கி வந்த ஒரு பத்திரிகை. அதன் ஆசிரியர் இளவேனில் கூட ஒரு கம்யூனிஸ்ட். ஆக, நீங்களும் அப்போது கம்யூனிஸ்ட்டாக இருந்தீர்களா?

எம்.ஜி.சுரேஷ்: இல்ல. நான் கம்யூனிஸ்ட்டா இல்ல. முதல்ல நான் ஒரு வாசகரா இருந்தேன். கையில கிடைக்குற எதுவானாலும் படிப்பேன். குமுதம், விகடன், இப்படி எது எது கிடைக்குதோ அதயெல்லாம் படிப்பேன். ஒரு வேர்க்கடலை பொட்டலம் வாங்கினா சாப்பிட்டு முடிஞ்ச பின்னால அந்த பேப்பரை படிப்பேன். அது நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த பேப்பர் எங்கிருந்து கிழிக்கப்பட்டதுன்னு தேடிப் போவேன். குமுதம், விகடன்னு தொடர்ந்து படிச்சிக்கிட்டு இருக்குறப்ப இவையெல்லாம் ஒரு கட்டத்துல போதாம போயிடுச்சு. ஏதோ நம்மள ஒரே மாதிரியே ஏமாத்துது இந்தக் கதைகள்லாம்னு தோண ஆரம்பிச்சது. இத கடந்து நாம போகணும்னு, நினைச்சேன். அன்றாட வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்தை நாம் எதிர்கொள்கிறோம். முதல்ல வெறுக்கிறோம். அப்புறம் விரும்புறோம். அடுத்ததா அதைக் கடந்து போறோம். அடுத்த கட்டமா கடந்து போகணும்_ அடுத்த அடுத்த லையனுக்கு கடந்து போகணும். இலக்கியத்துலயும் அதே மாதிரிதான். முதல்ல தேடித் தேடி படிக்க ஆரம்பிப்போம். அதுக்கப்புறம் நமக்குத் தெரிஞ்சு போகும், சுஜாதான்னா இந்த மாதிரி எழுதுவாரு. இந்த இந்த வார்த்தைகளை இங்க இங்க போடுவாரு. தி. ஜானகிராமன்னா இந்த மாதிரி எழுதுவாரு. ஜெயகாந்தன்னா இப்படித்தான் எழுதுவாரு. இப்படி எல்லாமே பேட்டன் ஆயிடுது இல்லையா? ‘பெரடைம்’ (Paradigm) மாதிரி. ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு சட்டகம் இருக்கு. இதைத்தாண்டி வேற ஏதாவது நமக்கான எழுத்து இருக்கான்னு தேட ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான் சோவியத் புத்தகங்கள் எனக்குக் கிடைச்சது. ரஷ்யன் ரைட்டர் தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், மார்க்ஸிம் கார்க்கி, துர்க்கனீவ், குப்ரின் இதுபோல படிக்க ஆரம்பிச்சப்போ சரி, இதுதான் நமக்கான எழுத்துன்னு நினைச்சு நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்லயும் நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்ல சுஜாதா மாதிரியான எழுத்துக்கள படிச்சிகிட்டு இருந்தப்ப, ஜெயகாந்தன் கதைகள் வித்தியாசமா இருந்தது. அவர் ரைட்டிங் ஸ்டைல் வேற மாதிரி இருந்தது. அப்போ ஜெயகாந்தன் எழுத்து நமக்கான எழுத்துன்னு நினைச்சு தொடர்ந்து படிக்கிறேன். அந்த காலிபர்ல கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, நகுலன், இந்த மாதிரி வாசிச்சேன். அதே போலதான் பத்திரிகைகள்லயும் கணையாழி, கசடதபற, தீபம்னு இப்படி இலக்கிய பத்திரிகையா வாசிச்சேன். அப்போதான் ‘கார்க்கி’ பத்திரிகையையும் வாசிச்சேன். இளவேனிலோட புரோஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பைபிள் மாதிரியான நடை. பைபிளையும் நான் படிச்சிருக்கேன். பைபிள் அற்றதைக் கூட பைபிள் நடையில எழுதலாம் போலிருக்கேன்னு தெரிய வருது. அதுக்கப்புறம்தான் இளவேனிலோட நட்பு எனக்குக் கிடைச்சது. அவரோடு நெருங்கிப் பழகினேன். மத்தபடி பொலிடிக்கல் லைன்ல கம்யூனிஸ்ட்டா என்னை நான் அடையாளப்படுத்திக்கல. ஆனா, கம்யூனிஸ்ட் புக்ஸ்செல்லாம் படிச்சிருக்கேன். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ராஸ்கி இதுமாதிரி கம்யூனிஸ்ட் லிட்ரேச்சர் நிறைய படிச்சிருக்கேன். ஆனாலும் அதுல எதனாலயோ என்னால ஒன்ற முடியல. ஏதோ ஷீtலீமீக்ஷீ ஒரு மற்றமையா உணர்ந்தேன். மனிதன் குறையுடையவன், பிரபஞ்சம் குறையுடையது. இப்படி எந்த ஒரு தியரியிலயும் ஒரு குறை இருக்குற மாதிரி ஓர் எண்ணம் எனக்கு. ஒரு விஷயத்துல குறையிருக்குறதாலதான் நாம் வேற ஒண்ணை தேடிப் போறோம். ஒரே விஷயத்துக்குள்ளேயே நாம இருக்குறதில்லையே? ஸயன்ஸ், ஃபிலாஸ`ஃபி, லிட்ரேச்சர், இப்படி நாம எதுலயும் பிடிக்கலையின்னா அடுத்த விஷயத்துக்குப் போயிடுறோம். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும்_ விஞ்ஞானத்துக்கும் பொருந்தும். ஜாமண்ட்ரி தியரி, யூக்ளிட் இப்படி... யூக்ளிட் சமதளத்துக்கான தியரி. பூமி வந்து உருண்டையானது. ஆனா, பூமிக்கும் யூக்ளிட்டை வெச்சித்தான் பார்த்துக்கிட்டு இருக்கோம். சின்ன அளவா இருந்தா யூக்ளிட் தியரி சரியா இருக்கும். பெரிய அளவா இருக்கும்போது அது தப்பாயிடும்னு தெரிய வருது இல்லையா? ஒரு தியரி, கொஞ்ச நாட்கள்லேயே செல்லாம போயிடுது. அதே மாதிரிதான் மார்க்ஸியத்துலயும் பிரச்னைகள் இருக்கு.

தீராநதி: இதெல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்டு வரும்போது பிடிபடுகிற விஷயங்கள். ஆனால் முதலில் இதை நீங்கள் உணர வாய்ப்புகள் கம்மி இல்லையா? அச்சூழலுக்குள்ளாகப் பொருந்தி இருந்தும் உங்களை கம்யூனிஸ்ட் ஆகவிடாமல் தடுத்தது எதுவாக இருக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: அப்போ அந்தச் சமயத்துல அந்தப் பிரச்னைகள் எனக்குத் தெரியாது. போஸ்ட் மாடர்னிஸம் புக்ஸ்செல்லாம் படிக்கும்போது, இந்த விஷயங்கள்லாம் பின்னாடி நமக்குத் தெரிய வந்தது. அப்புறம் தியரிட்டிக்கலா மார்க்ஸியம் என்பது சிறந்ததுன்னு வெச்சிக்கோங்க. அதுக்கான ஆல்டர்நேடிவ் கிடையாதுன்னே சொல்லலாம்.

ஒடுக்கப்படும் மக்கள் போர்க்குணம் பெறுவதற்கு, ஒன்றுகூடி போராடுறதுக்கு... இந்த மாதிரி விஷயங்களுக்கு மார்க்ஸியம் தேவையானதுதான். அப்புறம் அது முன் வைக்குற சோஷலிஸ விடுதலைக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சம்பந்தமா வர்றதுக்கெல்லாமே கரெக்ட்தான். ஆனா, அதுக்கப்புறம் இம்பிலிமெண்டேஷன்னு வர்றப்ப சார்த்தர் சொல்வாரு ‘‘எல்லா கோட்பாடுகளும் நடைமுறைப்படுத்தும் போது நிறுவனமயமாகி விடுகிறது. நிறுவனம் ஆகுறப்ப அதனுடைய அடிப்படை தப்பாயிடுது’’ன்னு சொல்வாரு.

தீராநதி: சார்த்தர் corrupt ஆகிவிடுகிறது என்றுதானே சொன்னார்?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். corrupt ஆகிடுதுன்னுதான் சொல்றார்.அஃப்கோர்ஸ் அதுமாதிரியேதானே ஆச்சு. சோவியத் யூனியன்ல மார்க்ஸியம் முதல்ல வந்தப்ப ரொம்ப எழுச்சியோடவே இருந்தாங்க. பின்னாடி அது நீஷீக்ஷீக்ஷீuஜீt ஆயிடுச்சு இல்லையா?. அவங்களும் பிரிவிலெட்ஜ்டு சொஸைட்டியாதானே இருந்தாங்க. பெரிய பெரிய கார்ல போனாங்க. வசதியும், ஆடம்பரமுமா வாழ ஆரம்பிச்சாங்க. இவங்க செஞ்ச மாதிரியேதான் வேற கோணத்துல முசோலினியும், ஹிட்லரும் செஞ்சாங்க. இவங்களும் தன்னை மக்களின் பிரதிநிதியா அறிவிச்சிகிட்டுதான் தீமைகள் செய்ய ஆரம்பிச்சாங்க. மக்களை சர்வாதிகாரம்ங்குற பேர்ல ஒடுக்குனாங்க. ஏதோ தனிப்பட்ட விரோதத்தால இது நடக்கல. மக்களின் நன்மைக்குன்னு சொல்லித்தான் நடத்துனாங்க.

சோவியத் யூனியன்லயும் ‘சோவியத் ஒர்க்கிங் கிளாஸ்’ங்குற பேர்ல சில தீமைகள் நடந்தது. மக்களின் மீதான ஒடுக்குமுறை நடந்தது. அங்க நாஜி வதை முகாம்ல செஞ்ச மாதிரி சைபீரிய வதைமுகாம்ல இவங்க செஞ்சாங்க. கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும் தீமைகள் ஒண்ணுபோலதான் இருந்தன. அதனாலதான் என்னை நான் பொலிட்டிக்கலா கம்யூனிஸ்டுன்னு அடையாளப்படுத்திக்கல.

தீராநதி : கேள்வி கம்யூனிஸ நண்பர்களுடன் பழக்கம் இருந்த காலத்திலும் நீங்கள் ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்பதுதான். பிற்காலத்தில்தான் ‘போமோ’ எழுத்துக்களைப் படித்துவிட்டு இவற்றையெல்லாம் நிராகரிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆனால் இளவேனிலுடன் தொடர்பு இருந்த நேரத்தில் உங்களிடம் மார்க்ஸியத்தை எதிர்ப்பதற்கும், இது சரியானதல்ல என்று புறம் தள்ளுவதற்கும் தர்க்க ரீதியாகவோ, அல்லது tமீஜ்tடாகவோ உங்களிடம் எந்த மெட்டீரியலும் இல்லை. இருந்தும் இடதுசாரியாக அடையாளப்படத் தயங்கி இருக்கிறீர்கள். அது ஏன்?

எம்.ஜி.சுரேஷ்: முதல்ல இடதுசாரிங்குறது வேற, கம்யூனிஸ்ட்டுங்குறது வேற. கம்யூனிஸ்ட் இல்லாதவர்களும் இடதுசாரியாக இருக்கலாம். கியூபாவுல முதல்ல அவங்க புரட்சி பண்ணப்போ அவங்கயெல்லாம் கம்யூனிஸ்ட்டே கிடையாது. சேகுவேரா, காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கிடையாது. ‘சே’வும் அவர் நண்பர்களும் மோட்டார் பைக்கை எடுத்துகிட்டு லத்தின் அமெரிக்கா முழுக்க ஒரு இடம் விடாம சுத்துனாங்க. ஊர் ஊரா, கிராமம் கிராமமா போய் மக்கள் படுகிற அந்த அவலங்களையெல்லாம் நேர்ல பார்த்தாங்க. அதனால கொதித்தெழுந்து புரட்சி செஞ்சாங்க. பின்னாடி அவங்க ஆட்சிக்கு வந்த பிறகுதான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எல்லாம் படிக்க ஆரம்பிச்சாங்க. அதுமாதிரி பார்த்தா நான் முதல்ல இடதுசாரி சிந்தனையாளனாத்தான் இருந்தேன். இப்பவும் இருக்கேன்.

தீராநதி: சரி, நீங்கள் சொல்வது மாதிரி இடது சாரித்தன்மை கம்யூனிஸ்ட் இரண்டும் வேறு வேறுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் நீங்க ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை?

எம்.ஜி.சுரேஷ்: நான் ஆர்கனைசேஷன் சார்ந்த இடதுசாரியா இல்லையான்னு வர்றப்போ நான் சுத்தமான மார்க்ஸிஸ்ட்டா இல்லை. அதுக்கும்மேல் போய் சொன்னா நான் நூறு சதவீதம் மார்க்ஸிஸ்ட்டா இருக்கல.

தீராநதி: சார்த்தர் சொல்லும் corrupted என்ற வார்த்தையை எந்த விஷயத்திலேயும் நம் சௌகர்யத்திற்கு ஏற்ப போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு தத்துவத்தின் மீதும் போட்டுப் பார்த்துக் கொண்டே போனால் ஒரு உயரிய லட்சியத்திற்காக இதைச் செய்கிறோம் என்பதை எப்படி நாம் அடைய முடியும்? லட்சியம் என்பதே தேவையில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: போஸ்ட் மாடர்னிஸம் என்ன சொல்லுதுன்னா ஒவ்வொன்னுக்கும் ஒரு சட்டகம் (Paradigm)இருக்குன்னு சொல்லுது. மார்க்ஸிஸம் தொழிலாளி, முதலாளின்னு ரெண்டா நம்மள பிரிக்குது. இரண்டாயிர வருஷ கலை, இலக்கிய வரலாற்றை அனலைஸ் செஞ்சிட்டு அதையே போஸ்ட் மாடர்னிஸம் மையம், விளிம்புன்னு ரெண்டாப் பிரிக்குது. மார்க்ஸிஸ்ட் சொல்ற தொழிலாளி வர்க்கத்தை எடுத்துக்கிட்டாகூட அதுலயும் மையம், விளிம்புன்னு இருக்கு. ஜாதின்னு எடுத்துக்கிட்டாலும் தலித்துக்குள்ளயே கூட மையம், விளிம்புன்னு இருக்கு. அதனால விஷயத்தை இப்படித் துல்லியமா பிரிச்சுக்கச் சொல்லுது போஸ்ட் மாடர்னிஸம். மையத்துக்கும் விளிம்புக்குமான ஒரு யுத்தம் உள்ளுக்குள்ளேயே நடந்துகிட்டே இருக்கு. அப்ப மையம், விளிம்புங்குற விஷயம் கலைக்கப்படணும்னு சொல்லுது. அப்பதான் இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும்னு சொல்லுது.

தீராநதி: மையத்தையும், விளிம்பையும் கலைப்பதால் மீண்டும் அது ஒரு மையமாகத்தானே ஆகும்?

எம்.ஜி.சுரேஷ்: அப்படி ஆகக்கூடாது. அது மாதிரியா கலைக்கப்படணும்.

தீராநதி : சபால்டன் என்ற ஒன்றிருக்கிறது. மையம் என்ற ஒன்றிருக்கிறது. சபால்டன், மையம் கலைக்கப்பட்டால் அது மறுபடியும் ஒரு மையமாக அல்லது சபால்டனாக ஏதோ ஒன்றாகத்தானே ஆக முடியும்?

எம்.ஜி.சுரேஷ்: கலைக்குறதுங்கறது ஒரு அஜெண்டா. ஸோ... உடனடியா கலைக்க முடியாது. முதல்ல வந்து அனைவரும் சமம்ங்குற மாதிரி ஒரு விஷயத்தை நம்மகிட்ட சொன்னாங்க. ஆனா, பிராக்டிக்கலா ஒரு பொதுமைப்படுத்துற முயற்சி இது. மார்க்ஸியமோ தொழிலாளி வர்க்கம்னு எல்லா உழைப்பாளர்களையும் ஒரு பொதுமைப்படுத்திடுது. நானும் தொழிலாளி, எனக்குக் கீழாக இருக்குற தலித்தும் ஒரு தொழிலாளின்னா சரியா வராது. ஆக பொதுமைப்படுத்துறங்கறது இங்க பொருந்தி வரல. போஸ்ட் மாடர்னிஸம்; பெண்ணியம், தலித்தியம்ங்கற மாதிரி ஒவ்வொரு விளிம்பு மக்களும் பாதுகாக்கப்படணும்னு சொல்லுது. இது வரைக்கும் நாம நாத்திகம் பேசினோம். இப்ப வந்து சிறு தெய்வ அடையாளங்களை மீட்டெடுக்கணும், நம்மோட தொன்மங்கள் மீட்கப்படணும்னு சொல்றோம். அப்பதான் நாம யாருங்கறது தனியாக காப்பாத்தப்படும். இந்தப் பொதுமை என்ன பண்றதுன்னா புல்டௌசரை போட்டு எல்லா அடையாளத்தையும் இடிச்சிடுது.

தீராநதி: கேள்வி corruptionன்னு சொல்லிக் கொண்டே போனால், உயரிய லட்சியங்களுக்காக செய்வது என்பது இனி சாத்தியமில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: அது வந்து அப்படி கிடையாது. சொல்லப்போனால் போஸ்ட் மாடர்னிஸமே ஒரு லட்சியத்தோடதான் இருக்கு. மையம், விளிம்பு கூடாதுன்னு சொல்றது கூட லட்சியம் தானே. எல்லோருக்கும் சுதந்திரம்னு நாம சொல்றோம். ஆனா, நமக்கு இங்க சுதந்திரம் இருக்கான்னு பார்த்தா உண்மையான சுதந்திரம் இல்ல. நாம சொல்லிக்கிட்டு இருக்குற சுதந்திரமும், நடப்புல இருக்குற சுதந்திரமும் ஆக்சுவலி ஒண்ணு இல்ல. நாம பிறந்து வளர்றப்பவே நம்மோட சுதந்திரம் தடுக்கப்படுகிறது. நான் ஒரு பொயட் ஆகணும்னு விரும்புறேன். ஆனா, சமூகத்துல என்னுடைய அடையாளம் கவிஞன் கிடையாது. கவர்மெண்ட் ஆபீஸ§ல ஒரு வேலையில இருக்கறது, அதான் என்னுடைய அடையாளம். நான் விரும்புற அடையாளம் அது கிடையாது. அப்படிங்கறப்போ சுதந்திரமே இங்க இல்லியே. நீங்க யார்? என்பதை உண்மையான அடையாளத்தோட பார்க்கப்படணும்னு போஸ்ட் மாடர்னிஸம் சொல்லுது. தனித் தனி அடையாளங்களும் காப்பாத்தப்படணும்னு சொல்றது எவ்வளவு பெரிய லட்சியம்.

தீராநதி : ஏறக்குறைய செக்குரலரிஸம் மாதிரியா இது?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். தனிப்பட்ட உரிமை, மொழி வேணும்னு சொல்லுது. இட்டிஷ் மொழிய எடுத்துக்கோங்க அது வெறும் நூறு இருநூறு பேர் பேசுற மொழிதான். ஆனா சைனீஸ்ஸை எடுத்துக்கிட்டா லட்சம், கோடிக்கணக்குல பேசப்படுற மொழி. அப்ப உலகம் பூராவும் மெஜாரிட்டியான மொழியா இருக்குறதால சீன மொழியே உலக மொழியா இருக்கணும், இன்ட்டிஷ் மொழியெல்லாம் தேவையில்லைன்னு சொல்ல முடியாது. அது இருநூறு பேர் பேசுற மொழியா இருந்தாலும் மரியாதைகள், கௌரவங்கள், அந்த மக்களுக்கு வழங்கப்படணும்னு கேட்குது. அப்படிங்குறப்ப இத வந்து தனித்தனியா பிரிச்சு பார்க்குறதல அர்த்தம் இல்ல. எல்லோருக்கும் இந்த உலகத்துல ஒரு வெளி இருக்கு. இந்த ஸ்பேஸ் காப்பாத்தப்படணும்னு சொல்லுது. இப்ப வெளியான ‘வெயில்’ படத்தை எடுத்துக்கோங்க. பெரும்பாலும் வெற்றி பெறுறவங்களைப் பத்திதான் நாம கவலைப்படுறோம். தோத்துப் போறவனைப் பத்தி நாம கவலைப்படுறதில்ல. தோத்துப் போறவன்தான் மெஜாரிட்டியா இருக்கான். அவனாலயும்தான் இந்த உலகம் இயங்குது. இந்த விஷயத்தை ‘வெயில்’ படம் சொல்லுது. தலித்தியம், பெண்ணியம்னு அவங்க அவங்களுக்கான ஸ்பேஸை உறுதிப்படுத்த வைக்குது. பிரான்ஸில பார்த்தீங்கன்னா, யூதர்களை மதிக்கமாட்டாங்க. ஆப்பிரிக்கர்களை கருப்பர்கள்னு அவமானப்படுத்துவாங்க. இன்னைக்கு அங்க கலவரம் நடக்குது. ஏன்னா அவங்களை மற்றமையா பார்த்தாங்க. டிசுயம், மற்றமைன்னு ரெண்டு விஷயம் இருக்கு. அடிப்படையிலேயே மனிதன் அதிகாரத்தை விரும்புறவனா இருக்கான். நீட்ஷே ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகாரத்திற்கான, ஆற்றலுக்கான விருப்பு இருக்கு’’ன்னு சொல்றார். இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும். விரும்புறதை நான் அடைஞ்சே ஆகணும்னு நினைக்கிறான். என்னுடைய விருப்பத்துக்கு உங்க விருப்பம் குறுக்கீடா இருக்கு. உங்க விருப்பம் என் விருப்பத்தைத் தடை செய்யுது. அப்ப நான் என்ன பண்ணணும்னா அதிகாரத்தை கைக் கொள்ளணும். அதிகாரம் என் கைக்கு வந்துடுச்சுன்னா நான் நினைச்சதை அடைஞ்சுடலாம். அதிகாரம்ங்குறது ரெண்டு நுனிகளைக் கொண்டது. ஒன்று செலுத்துபவனின் நுனி; இன்னொன்று பெறுபவனின் நுனி. செலுத்துற எடத்துக்கு நான் வந்துட்டேன்னா என்னுடைய விருப்பம் நிறைவேறும். நீங்க உங்க விருப்பத்தை தியாகம் பண்ணணும். என்கிட்ட அதிகாரம் வந்துடுச்சு, இப்ப நான் உங்களை கண்ட்ரோல் பண்றேன். என் விருப்பத்தை நிறைவேற்றிக்குறேன். நீங்க வந்து ரெகுலரா என்னை எதிர்த்துப் போராடுறீங்க, எதிர்ப்புத் தெரிவிக்கிறீங்க. அப்ப வந்து ரெவில்யூஷன், புரட்சிக்காரன், காந்தி, பகத்சிங் எல்லாமே நீங்கதான். இதுமாதிரி வரலாறு முழுக்க நடந்திருக்கு. அலெக்ஸாண்டர் காலத்துல கூட நடந்திருக்கு. அலெக்ஸாண்டர் ஒரு இனத்தையே அழிச்சான். இது மாதிரி ஏன் நடந்திருக்குன்னா அதிகாரம் ஒரு இடத்துல குவிஞ்சு இருந்ததால நடந்திருக்கு. அப்போ அதிகாரம் ஒரே இடத்துல இல்லாம பகிர்ந்தளிக்கப்பட்டா corruption வராதுன்னு போஸ்ட் மாடர்னிஸம் சொல்லுது.

தீராநதி : அப்போ பின்நவீனத்துவ அரசியலை நடைமுறைப்படுத்தினால் அதிகாரம் யார் கையில் இருக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: அதிகாரம் நிச்சயம் ஒருத்தர் கையில இருக்காது. அதிகாரம் ஒருத்தர் கையில இருந்தா மிருகம் மாதிரி ஆயிடும். அதிகாரம் வெச்சிருப்பவனும் மிருகம் போலவே ஆயிடுவான். பிரித்தளிக்கும்போது இது நடக்காது. இதைத்தான் சோவியத் யூனியன்ல செஞ்சாங்க. அதிகாரம் முழுக்க முதல்ல மாஸ்கோவுல இருந்தது. பின்னால அதிகாரத்தைப் பகிரணும்னு யூனியனில் கூட்டாக இருந்த நாடுகளை அவங்க பிரிச்சுவிட்டாங்க. ஒரு இடத்துல அதிகாரம் மொத்தமா இல்லாத மாதிரி பண்ணாங்க. அது போலதான்.

தீராநதி : இந்தியாவில் கூட மாநிலங்களுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தி.மு.க. முன் வைக்கின்ற மாநில சுயாட்சி மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?

எம்.ஜி.சுரேஷ்: தி.மு.க.வுல மாறன் போன்றவங்க கூடி மாநில சுயாட்சின்னு ஒரு கருத்தை முன் வைச்சாங்க. அது இதோட ஒத்துவரக்கூடிய ஒன்றுதான். மாநில சுயாட்சியின் மூலமா அதிகாரத்தை மத்தியில மையமா வைச்சி இருக்காம பிரிச்சளிக்க முடியும். அப்போ அதிகாரம் பரவலாயிடும். ஸோ... corruption க்கு வேல இல்லாம போயிடும்.

தீராநதி : உலக மயமாக்கலுக்குப் பின்பும், புதிய பொருளாதார கொள்கைக்குப் பின்பும் கம்யூனிஸம் தன் அடுத்த கட்ட நகர்வை செய்ய முடியாமல் திணறி, பின்னடைவு அடையவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சமீபத்தில் கூட, கொல்கத்தாவில் புத்ததேவ் அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தொடர் உண்ணாவிரதத்தை அறிவித்து 23 நாட்கள் தாண்டி பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னால் சமரசத்திற்கு வந்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாடா போன்ற நிறுவனங்கள் தேவையாக இருக்கிறதென்றும், அவற்றை தவிர்க்க முடியாதென்றும் கம்யூனிஸ்ட்டுகளே கொல்கத்தாவில் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். பின்நவீனம் குறித்து விவாதிக்கும் இக்காலத்திற்கு கம்யூனிஸத்தின் தேவை இருக்கிறதா?

எம்.ஜி.சுரேஷ்: இப்போ பின்நவீனத்துவவாதிகள்னு சிலரைச் சொல்றோம் இல்லையா, அவங்க எல்லாமே மார்க்ஸிஸ்ட்டா இருந்து வந்தவங்கதான். பின்நவீனவாதிகளில் சிலர் நேரடி கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்காங்க. அல்லது ஆதரவாளராக இருந்தாங்க. சார்த்தர் கூட ஒரு கம்யூனிஸ்ட்டா இருந்தவருதான். நேரு கூட ‘‘முப்பது வயசுக்குள்ள ஒருத்தன் கம்யூனிஸ்டா இல்லையின்னா அவன் முட்டாள். அதுக்கப்புறமும் கம்யூனிஸ்டா இருந்தா அவன் பைத்தியக்காரன்’’னு சொன்னார். அப்படிச் சொன்ன நேருவும் கம்யூனிஸ்டா இருந்தவர்தான். முதல்ல கம்யூனிஸ்டா இருந்தவங்க அதுக்கப்புறம் அதுமேல அதிருப்தி அடைஞ்சு இது சரியாயில்லைனு வெளியேறிடுவாங்க. இது தவறான போக்குன்னு எடுத்துக்கக்கூடாது. அதுக்குப் பேரு கடந்து செல்வதுன்னு சொல்லலாம். அடுத்த கட்ட நகர்வுன்னு எடுத்துக்கலாம். ஒரு விஷயம் தியரி, பிராக்டிக்கல்னு ரெண்டு விதமா இருக்கு. கொள்கை அமலாக்கம்னு வர்றப்ப, வெறும் கொள்கையா இருந்து வந்தது அமலாக்கப்படுத்தும் போது அப்படியே நிகழ்றதில்ல. அதுல சில பிரச்னைகள் வந்துடுறது. இந்த ஆட்டத்துக்கு நான் வர்லப்பான்னு சிலர் போயிடுவாங்க. சிலர் வேற வழி இல்லாம இத விட்டு வேற எங்கயும் போக முடியாம தங்கிடுவாங்க. இதுலயே இன்வால்வ் ஆயிட்டோம், இத்தனை வருஷங்களை ஓட்டிட்டோம்னு இருந்துடுவாங்க. 50 வருஷமா நடிகனா இருந்தவன் பொழைக்க வழி இல்லன்னா கேமிரா மேனாவோ, இல்ல மேக்கப் மேனாவோ எப்படி ஆக முடியாதோ அதே மாதிரி இதுலயும் பிரசினைகள் இருக்கு. இப்படித்தான் மார்க்ஸிஸ்டுகள் அடுத்த கட்டம் நோக்கிப்போக முடியாம வீழ்ச்சி அடைஞ்சுட்டாங்க. அப்புறம் பரிணாம வளர்ச்சின்னு ஒண்ணு இருக்கு. ஒரு பேப்பரை எடுத்துக்கிட்டா அது வெறும் தனிப் பொருள் இல்ல. இத மரத்தூள்ல இருந்து பண்ணாங்க. இந்த மரத்தூள் இதுக்கு முன்னால ஒரு நல்ல மரமா இருந்தது. இப்ப அதே பேப்பரை எரிச்சிட்டா கரியாகிடும். பவுத்தம் இப்படித்தான் ஒரு பொருளைப் பார்க்கச் சொல்லுது. மார்க்ஸியமும் அப்படித்தான் சொல்லுது. எல்லா பொருளும் இயங்கிக்கிட்டே இருக்கு. ஓடிக்கிட்டே இருக்கு. ‘உலகம் பற்றி எரியும் தீ’ன்னு புத்தர் சொன்னாரு. இந்தத் தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கு. புதிய புதிய தழல்கள் வந்துகிட்டே இருக்கு. முதல்ல எரிஞ்ச தீ இப்ப அணைஞ்சு போயிடுச்சு. அப்புறம் இன்னொரு தீ... இன்னொரு தீ... அதுமாதிரி எல்லாமே தொடர்ந்து ஒரு இயக்கத்துல இருக்கு. எல்லாமே மாறுது இல்லையா? தொழிலாளி, முதலாளி எல்லாமே மாறுறாங்க.

இன்னைக்கு மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் இல்ல. virtual முதலாளிகள் வந்துட்டாங்க. அவன நேரில பார்க்க முடியாது. BPO வுல வேல செய்யுறவங்க அவங்க முதலாளிய நேர்ல பார்த்திருக்கவே மாட்டாங்க. முதலாளியும் இவங்கள பார்த்திருக்க மாட்டான். எங்கிருந்தோ அவன் அனுப்புறத மெயில் வழியா இங்கிருந்து வேல செஞ்சு அவனுக்கு இவங்க பதில் அனுப்புவாங்க. USல ஒரு டாக்டர் இருக்காருன்னா, அவர் ஒரு நாளைக்கு பத்து பேஷண்ட் பார்க்குறார்ன்னா தன்னோட கேஸ் ஹிஸ்டரி, ரெக்கார்டு எல்லாத்தையும் இங்க அனுப்புவான். அத டோட்டல் ஃபைலா உருவாக்கி இவங்க இங்க பத்திரமா வைச்சிருப்பாங்க. இத வைச்சிதான் அந்த டாக்டரால அங்க பீஸ் வாங்க முடியும். அவன் அப்படி வாங்குற பீஸை வைச்சிதான் அவன் இவங்களுக்குச் சம்பளம் தரமுடியும். இதுபோல பல துறைகள் இன்னைக்கு இயங்கிட்டு இருக்கு. தொழிலாளர் நலன் பத்தி இங்க நாம பேச முடியாது. ஏன்னா இவங்க முதலாளிய பார்க்குறதே இல்ல. இத வெச்சு தொழிற்சங்கம் எல்லாம் கட்டமுடியாது. பொலாரிஸ் மாதிரியான சாஃப்ட்வேர்ல வேலை செய்யறவங்க அமெரிக்காவுல இருக்குற முதலாளிக்காக இங்க சின்ஸியரா உழைக்குறாங்க. இருபது, முப்பது ஆயிரம்னு சம்பளம் கூட அவன் இவங்களுக்கு அதிகமா தர்றான். இவ்வளோ சம்பளம் வாங்குறவன் முதலாளிக்கு எதிரா புரட்சி பண்ணணும்னு நினைக்கக் கூட மாட்டான். இவங்களுக்கே அவன் இவ்வளவு சம்பளம் தர்றான்னா அவன் எவ்வளவு சம்பாதிப்பான்! இது மாபெரும் சுரண்டல் இல்லையா? மார்க்ஸ் காலத்து சுரண்டல விட மிகப்பெரிய சுரண்டல். ஆனா, இவங்களை எல்லாம் திரட்டி போராடவே முடியாது. இது virtual முதலாளி, virtual தொழிலாளி. இதெல்லாம் மார்க்ஸ§க்கு தெரியாது. காரணம், அப்ப இந்த நிலவரம் இல்ல. இதுக்கு. மார்க்ஸியத்துலயும் தீர்வு கிடையாது. மார்க்ஸ் எல்லாத்தையும் பொருள் மதிப்பா பார்த்தாரு. கார்ன்னா யூடிலிட்டி வேல்யூ_ பயன் மதிப்போட பார்த்தாரு. But இன்னைக்கு வந்து என்னா ஆகிப்போச்சு. எல்லாத்தையும் அர்த்தமா பார்க்க வேண்டி இருக்கு. ஒரு பொருளுக்கு போஸ்ட் மாடர்னிஸம் பல மீனிங்ஸ் சொல்லுது. ‘படி’ன்னு சொன்னா ‘படி’க்குறது, அளக்குற‘படி’, ‘படி’க்கட்டு, ‘படிப்படி’யா முன்னேறுவது, தலையை ‘படி’ய வாரினான். இப்படி எவ்வளவோ மீனிங்ஸ் வருது. அதே மாதிரி காருக்கும் மீனிங் இருக்கு. நான் BMW கார் வாங்கி இருக்கேன்னா யாருமே வாங்காத BMW காரை நான் வாங்கி இருக்கேன்னு ஒரு அர்த்தம் வருது. BMWயும் கார்தான், மாருதியும் கார்தான். ஆனா, மாருதி கார் வாங்கினவன் BMW கார் வாங்கினவன பார்த்தா பயப்படுவான். ‘பரவா இல்லப்பா நீங்க கார் வாங்கிட்டீங்க’ன்னா ‘இதெல்லாம் ஒரு காரா சார்’ன்னு சொல்லுவான். ஆக, ஒரு பொருளை வாங்கும்போது அதோட அர்த்தத்தையும் நாம சேர்த்து வாங்குறோம்.

இந்த ஏரியா மார்க்ஸியத்துல இல்ல. இந்த ஏரியாவை மார்க்ஸ் கவனிக்கல. அல்லது அதற்கான தேவை அப்ப இல்ல. அப்ப மார்க்ஸியம் பரிணாம வளர்ச்சிக்கேற்ப மாற்றி அமைக்கப்படணும். ஒரு செடி எப்படி பேப்பரா மாறுச்சோ மாக்ஸியம்ங்கற செடியும் இந்த பேப்பரா மாறணும். அப்படி மாறுச்சா? மாறல. கம்யூனிஸ்ட் என்ன பண்றாங்கன்னா மறுக்குறாங்க. இல்ல, மறைக்குறாங்க. மார்க்ஸியத்தின் தடுமாற்றங்களை அமெரிக்காவோட பொய் பிரச்சாரம்னு பேசிக்கிட்டே இருக்காங்க. ஈ.எம்.எஸ்.கிட்ட, ‘‘கம்யூனிஸம் போய் மீண்டும் முதலாளித்துவம் வருமா’’ன்னு கேட்டப்போ ‘‘கருவாடு மீனாகாது’’ன்னு பதில் சொன்னார். ஆனா, கருவாடு மீனாயிடுச்சு. ரஷ்யாவில் செங்கொடி இறக்கப்பட்டு வேற கொடி பறந்தது. இத நம்பூதிரி நினைச்சுப் பார்க்கல. ஏன் இப்படி பிரச்னை வருதுன்னா பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்ஸியம் வளர்த்தெடுக்கப்படல. மார்க்ஸியம் தோத்துடுச்சு, மார்க்ஸியம் பொருந்தாது என்பதைவிட, அது வளர்த்தெடுக்கப்படணும். இந்தப் புதிய வாழ்நிலைக்கு ஏற்ப வளர்த்தெடுக்கப்படணும். ஆனா, இன்னைக்கும் இவங்க பழைய அறிக்கைதானே வாசிக்குறாங்க. கம்யூனிஸ அறிக்கையில இருக்குற பல விஷயங்களை முதலாளித்துவ அரசுகளே செஞ்சுடுச்சு. ரயில்துறை மாதிரியான பெரிய துறைகள் தேசியமயமாக்கப்படணும்னு அதுல இருக்கு. அத இந்திராகாந்தி அரசு; அப்புறம் வந்த பல அரசுகள் செஞ்சுடுச்சு. ஆனா இன்னைக்கும் அதே அறிக்கை வாசிக்குறாங்க.

சிலர் மார்க்ஸிஸம் காலாவதியாகிடுச்சுன்னு சொல்லுவாங்க. நான் அப்படிச் சொல்ல மாட்டேன். வளர்தெடுக்கப்படணும்னு சொல்றேன்.

தீராநதி: meta marxismமும் நீங்கள் சொல்லும் Hyper marxismமும் எந்த விதத்தில் வேறுபடுகிறது?

எம்.ஜி.சுரேஷ்: நிக்கோஸ் கஸான்ஸாகிஸ் ஒரு கம்யூனிஸ்ட்டா இருந்து அதன் செயல்பாடுகள் பிடிக்காம விலகிப்போனவர். அவர் meta marxism என்கிற கருத்தை முன் வைச்சார். இப்போ இம்பிலிமெண்ட்டேஷன்னு வரும்போது என்ன பிரச்னைகள் வருதோ அது வராமலிருக்க நாம் கம்யூனிஸத்தை கடந்து போகணும்னு சொன்னார். metaன்னா கடந்து போவதுன்னு அர்த்தம்.

Hyper-marxism என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தியது, நாளையதினம் ஒரு Hyper marxism வரலாம்னு சொன்னேன். இந்த உலகம் வந்து ‘ஹைப்பர் ரியல்’னா; அதீத உண்மை, நிஜமற்ற நிஜம், நகல் உண்மை, இப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கலாம். இன்னைக்கு நாம பிம்பங்களால் ஆன உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம். ரஜினிங்கற பிம்பம், இன்னும் ஏதேதோ பிம்பங்கள் நம்மை ஆட்சி செய்யுது. ரஜினிங்கற உண்மையை விட பிம்ப ரஜினிக்கு வால்யூ ஜாஸ்தி. நாளைக்கு ஒரு தேர்தல்னா பிம்ப ரஜினியை பார்த்துத்தான் மக்கள்ஓட்டுப் போடுவாங்க. அப்ப இந்தப் பிம்பம் என்பது நகல் உண்மை. இந்த நகல் உண்மை. அசல் உண்மையைவிட உண்மையாக இருக்கு. வீட்டுல இருக்குற டெலிவிஷனை எடுத்துக்கிட்டா இதே பிம்பங்கள்தான் ஆட்சி செலுத்துது.

மெகா சீரியல பார்த்து நம்ம ஜனங்க நம்பிகிட்டு உட்கார்ந்திருக்காங்க. நாம் வந்து பிம்பங்களின் அடிமை ஆகிறோம். உளவியல் ரீதியாவே மனிதன் பிம்பங்களின் அடிமைதான். மனுஷன் முதல்ல பிம்பத்தின் பின்னாடிதான் போவான். இத ஒரு விஞ்ஞானி பரிசோதனை பண்ணார். ஒரு கோழியை முட்டைகளை அடைகாக்க வச்சார், கோழி அடைகாத்து குஞ்சு வெளிய வந்த பின்னாடி கோழிய தூக்கிட்டு தாய்க் கோழிக்குப் பதிலா தன்னோட ஷ¨வை வைச்சிட்டார். இப்ப குஞ்சுகள் பார்க்குற முதல் பொருள் ஷ¨தான். அந்தப் பிம்பம் அதுங்களுக்கு முதல்ல பதியுது. அப்புறம் ஷ¨வை எடுத்து மாட்டிக்கிட்டு அவர் நடக்க ஆரம்பிச்சார். அந்தக் குஞ்சுகள்லாம் அவர் பின்னாடியே போகுது. பார்வை வந்த உடனே முதல்ல பிம்பம்தான் மனசுல படியுதுன்னு அவர் புரூஃப் பண்ணார். நமக்கு தாய்தான் முதல் பிம்பம். குழந்தை, தாயும் நாமளும் ஒண்ணுன்னே முதல்ல நம்புது. இதோட நீட்சியாதான் நாம நடிகர்கள் பின்னாடி போகுறது. இந்தப் பிம்பங்கள் ஷிஃப்ட்டாகிட்டே இருக்கு. முதல்ல அம்மாங்கற பிம்பம், அப்புறம் தலைவர்ங்கற பிம்பம், சேகுவேரா, காரல்மார்க்ஸ் எல்லாம் ஒரு பிம்பமா இருக்குறாங்க. அதுக்காக சேகுவேராவும் மார்க்ஸ§ம் நடிகனும் சமமானவங்கன்னு நான் சொல்லல. பல்வேறு ‘லெவல்’ல இந்தப் பிம்பங்கள் பின்னாடி நாம போறோம். நகல் உண்மையை நோக்கிப் போவது நல்லதில்லை. அப்ப என்ன செய்யணும். எந்த ஒரு விஷயத்தையும் விசாரணை பண்ணணும். பகுப்பாய்வு பண்ணணும். பின்நவீனத்துவம் அதுதான் பண்ணுது. ஏன் லிட்ரேச்சர்கூட அதைத்தான் செய்யுது. எல்லாக்காலத்திலும் இலக்கியம் தன்னுடைய காலத்துக்கு எதிரா இருந்திருக்கு. தன்னுடைய சமூக அமைப்புக்கு, அதிகாரத்துக்கு எதிரா நின்னு செயல்பட்டிருக்கு. Hyper marxismங்கறது இதுதான் செய்யச் சொல்லுது. Hyper marxismம்னா செழுமை செய்யப்பட்ட, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட marxismம்னு அர்த்தம். இப்போதைய அரசியல் அமைப்புகள் எல்லாமே படிநிலை (hierarchy) தன்மையா இருக்கு. இதுல அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் போகும். Hyper marxism சமூகத்தில் அதிகாரம் கீழிருந்து மேல்நோக்கிப் போகும். இன்னைய அமைப்பு செங்குத்தானது. (Vetical) மேல் கீழ் பாகுபாடுகள் கொண்டவை. நமக்குத் தேவை கிடைமட்டமான அமைப்பு (Horizonta) கிடைமத்தில் மேல் கீழ் இல்லை. இவையெல்லாம் Hyper marxismமட்டுமே சாத்தியம்.

தீராநதி: பிம்பங்கள் பற்றி பேசியதால் கேட்கிறேன். தங்களின் வசதிக்கேற்ப பிம்பங்களை அரசியல் சாயலோடு மறு வடிவமைப்பு செய்வதும் நடந்துவருகிறது. உதாரணமாக ஒளவையின் நிஜ பிம்பம் இன்று சொல்லப்படவில்லை. ஏதோ பொய்மையைக் கொண்டு நிரப்பி வேறுவிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பமே ருஸ§ வடிவமாக உள்ளது. இதைப்பற்றி உங்களின் கருத்து?

எம்.ஜி.சுரேஷ்: முன்னாடி நாம பேசினோம் இல்ல. அத மாதிரி பின்நவீனத்துவ அடிப்படையில இத கேள்விகேட்பதாலயும், விசாரணை செய்யறதாலயும் நிஜ பிம்பத்தை நாம அடைய முடியும். அப்ப இந்தப் பிரச்னை வராது.

தீராநதி: ஒரு கேள்வி மறுபடியும் ஒரு கேள்வியைத்தானே உண்டாக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: விசாரணையின் மூலமாதான் நாம உண்மைய அடைய முடியும். நாம சொல்ற உண்மைங்கறது ஒற்றை உண்மையல்ல; ஜெர்மன் விஞ்ஞானி எர்வின் ஷ்ரோடிங்கர் ‘கேட் தியரி’ன்னு ஒரு பரிசோதனை செஞ்சுகாட்டினார். உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும். ஒரு டப்பாவுக்குள்ள ரெண்டு தட்டு வெச்சு ஒரு தட்டுல விஷமும் இன்னொரு தட்டுல உணவும் தனித்தனியா வெச்சார். ஒரு பூனையை அதுக்குள்ள போட்டு மூடிட்டார். இப்ப அந்த உணவைச் சாப்பிட்டா பூனைக்கு ஒண்ணும் ஆகாது. விஷத்த சாப்பிட்டா பூனை செத்துடும். இப்ப நாம பொட்டிய திறக்குற வரைக்கும் ரெண்டு உண்மை இருக்கு. ஒண்ணு: பூனை உயிரோட இருக்கு இரண்டு: பூனை செத்துடுச்சு. இத வைச்சு ஒரு உண்மைங்கறது கிடையாதுன்னு நிரூபிச்சார். இப்ப நாம திறந்து பார்க்காத இடத்துல இருக்கோம். திறந்து பார்த்துட்டா ரெண்டு உண்மைக்கு எடம் இல்லியே. நாம மூடப்பட்ட பெட்டியின் முன்னால நிற்குறோம். நம் வாழ்க்கைச் சூழல் பொதுவாக அப்படி இருக்கு. பொதுவா நாம பல உண்மைகளோட இருக்கோம். அதுக்குதான் இந்தக் கேள்வியும், விசாரணையும்.

கேள்விக்கு உள்ளாக்குதல் என்பது ஒரு விஷயத்தை நிராகரிக்குறது அல்ல; அதாவது பின்நவீனத்துவவாதியென்பவன் தன் முன்னோர்களை நிராகரிக்க மாட்டான். அதேசமயத்துல அவர்களைப் பின்பற்ற மாட்டான்.

தீராநதி: நீங்கள் சொல்வது மாதிரி விசாரணைக்கு உட்படுத்துதல், கேள்வி எழுப்புதல் இப்படிச் சகல வசதிகள் இருந்தும் நம் வரலாற்றையே கொட்டிக் கவிழ்த்த மாதிரி தமிழில் ஒரு பிரதி கூட வெளிவரவில்லையே ஏன்?

எம்.ஜி.சுரேஷ்: நீங்க சொல்றது உண்மைதான். உம்பர்டோ ஈகோவின் ‘நேம் ஆப் எ ரோஸ்’ டான் பிரவுனின், ‘டாவின்ஸி கோடு’ மாதிரியான ஒரு படைப்பு தமிழ்ல இன்னும் வரல. இத்தனைக்கும் ‘டாவின்ஸி கோடு’ ஜனரஞ்சகமான ஒரு படைப்பு. அதுபோல கூட தமிழ்ல வரல!

இப்ப நான் அந்த முயற்சியிலதான் இருக்கேன். இத சொல்றதால என்னை நான் அவங்களோட அவங்க அளவுக்கு ஒப்பிட்டுக்குறதா நினைச்சுடக்கூடாது. உம்பர்டோ ஈகோ, இடாலோ கால்வினோ எல்லாம் பெரிய ஆளுமைகள்.

‘டாவின்ஸிகோடு’ல யேசு கிறிஸ்துவுக்கு ஒரு மனைவி இருந்தாள், ஒரு மகள் இருந்தாள்னு ஒரு விஷயத்தைச் சொல்றார். அப்ப ரெண்டாயிர வருஷத்து பைபில கொட்டிக் கவிழ்த்துட்டார். யேசுவுக்கு மனைவி இருந்தான்னு சொல்லி அவர கேவலப்படுத்தல. ஆனா, இப்படியும் ஒண்ணு இருந்தது, எல்லாம் சேர்ந்து மறைச்சுட்டாங்கன்னு சொல்றார்.

இதேபோல நம்முடைய களப்பிரர் காலத்தை எடுத்துக்கிட்டா கேள்விக்குரிய பிரசினைகள் எவ்வளவோ இருக்கு. பத்தாயிரம் சமணர்களை ஆசனவாயில் கழுவேத்திக் கொன்னாங்க. கழுவுல ஏத்துனா உடனே செத்துடமாட்டான். இதயம், மூளையில பாதிக்கப்பட்டாதான் உடனே ஒருத்தன் சாவான். ஆசனவாயில் ஏற்றப்பட்ட கழுமரம் அங்க குத்தாம வேற எங்காவது குத்துனா மணிக்கணக்கா சாகாம துடிதுடிச்சிகிட்டே கிடப்பான். இது எவ்வளவு பெரிய கொடுமை. இப்படி செத்த உடல்களை எரிச்சு அந்தச் சாம்பல்ல ஏறி குதிச்சு சந்தோஷமா ஆட்டம் போட்டாங்க. அவங்க உடல் எரிக்கப்பட்ட சாம்பல உடல் முழுக்க பூசிக்கிட்டாங்க. இன்னைக்கு விபூதி பூசுறாங்களே அதோட ஆதாரம் இதுதான். சைவர்கள் மையமாக இருந்தப்ப சமணர்கள் விளிம்பு நிலையாக்கப்பட்டாங்க. சமணர்களும் தமிழன்தான். இந்த வரலாற்றை யாராவது இதுவரைக்கும் எழுதுனாங்களா? இல்ல.

தீராநதி: தைரியம் கொடுக்கும் கோட்பாடு இருந்தும் தமிழில் ஏன் வரவில்லை? சல்மான் ருஷ்டி அளவுக்கு கூட வரவில்லையே? தைரியம் போதவில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். சல்மான் ருஷ்டி அளவுக்கு கூட தமிழில் வரல. நீங்க சொல்ற தைரியமின்மையை கூட மன்னிச்சுடலாம். ஆனா, இவங்க ஆதாயங்களுக்காக செயல்படுறாங்க. அதனால இவங்கள மன்னிக்கக்கூடாது. ஜெயகாந்தன் முதல்ல ‘ஹர ஹர சங்கரா’ எழுதுனார். ஞானபீடம் கிடைச்சதுக்கு அப்புறம் சங்கராச்சாரியார தூக்கி பிடிச்சு மறுபடியும் எழுதுறார். ஜெயமோகன் ‘விஷ்ணுபுரம்’னு ஒரு நாவல் எழுதுனாரு. விஷ்ணுபுரத்தோட முதல் பதிப்பு அட்டைப் படத்த பார்த்தீங்கன்னா தாமரை படம் போட்டுருக்கும். தாமரை பி.ஜே.பி.யோட சிம்பல். விஷ்ணுபுரத்தோட ‘மெயின் தீம்’ என்னான்னு பார்த்தா, ஆதியில் விஷ்ணுபுரம்னு ஒண்ணு இருந்தது. விஷ்ணு புரண்டுபடுத்தார் _ நம்ம ஐதீகத்துல வருது முதல் முறை விஷ்ணு புரண்டு படுத்தப்ப விஷ்ணுபுரம் இருந்துச்சு. மீண்டும் புரண்டு படுத்தப்ப முகலாயர்கள் வந்துட்டாங்க. அதனால அந்த விஷ்ணுபுரம் அழிந்தது. இப்ப திரும்ப புரண்டு படுத்திருக்காருன்னு வருது. அப்படீன்னா பி.ஜே.பி. ஆட்சி வந்துட்டதுன்னு மறைமுகமா எழுதுறார். அதன் விளைவு, பொள்ளாச்சி மகாலிங்கம் அத நூற்றுக் கணக்குல வாங்கி இலவசமா தர்றாரு. அதனால அது அதிகமாக விற்குது. நியாயமா இவரு என்ன செய்யணும்? உம்பர்டோ ஈகோ, டேன் பிரவுன் மாதிரி நமது இந்திய நாட்டுல என்ன கொடுமைகள் இருந்தது, ‘அன்பே சிவம்’னு சொல்லறாங்க, நிஜமா இருந்திருக்காங்களான்னு கேள்வி எழுப்பி இருக்கணும்.

அதச்சொன்னா அவருக்கு என்ன ஆதாயம். அவருக்கு என்ன பலன் கிடைக்கும். இந்துத்வா கொள்கைகளை எழுதினா நாளைக்கு அவர் ஒரு எம்.பி.யாகூட ஆகலாம். பி.ஜே.பி. கவர்மெண்ட் வர்றப்ப சாகித்ய அகாடமி விருதுகூட கிடைக்கும். இதனால அவர் எழுத்து பல மொழிகள்ல மொழி பெயர்க்கப்படும். பலவாரியான இந்து மக்களுக்கு ஆதர்ஸமா அவர் இருப்பார். அதனால இப்படி எழுதுறாரு. ஆக, தைரியமில்லாம இருப்பதைவிட ஆதாயவாதியாக இருப்பது கொடியது.

தீராநதி: அப்படி ஒரு படைப்பும் வராதபட்சத்தில் இந்தக் கோட்பாடுகள் வீணாக எதற்கு?

எம்.ஜி.சுரேஷ்: நம்மளோட கடமை ஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். யாராவது இத செய்வாங்கன்னு நம்பி செஞ்சிட்டு இருக்கோம். இப்ப ‘நாஸா’வுல இருக்குற விஞ்ஞானிகள்லாம் பிரபஞ்ச வெளியில சவுண்டை அனுப்புறாங்க. ... பீப்பீப்பீப்பீன்னு சவுண்டை அனுப்புறாங்க. பிரபஞ்ச வெளில வேற எங்காவது உயிரினம் இருக்கலாம் அந்த உயிரினம் பதிலுக்கு என்றைக்காவது எதிர்வினை செய்யாதான்னு நம்பி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. நாமலும் அதே மாதிரி செய்யுறோம் அவ்வளவுதான்.

தீராநதி: ஆரம்பகாலங்களில் நீங்கள் கவிதை எழுதி இருக்கிறீர்கள். அதில் கவிதைகளின் அம்சம் குறைவாக இருப்பதால் நிராகரித்துவிட்டதாக சொல்லியிருந்தீர்கள். இன்று கவிதைகளுக்கான அம்சத்தையெல்லாம் உரை நடை கொண்டு போய்விட்டது. அப்படி இருக்க நீங்கள் ஏன் மறுபடியும் அ_ கவிதை எழுதக்கூடாது?

எம்.ஜி.சுரேஷ்: பொயட்ரிங்கறது ஏற்கெனவே இருக்குற ஒரு விஷயத்தை மேலும் சிக்கலாக்குறதால பின்நவீனத்துவவாதிகள் பொயட்ரியை நிராகரிக்கிறாங்க. கவிதை வாசிக்குறவன்கிட்ட கவிதைய பத்திய பொதுபுத்தி ஒண்ணு இருக்கு. அவன் உரைநடையைப் படிக்கும்போது அத அப்படியே எடுத்துக்குறான். ஆனா, இதுவே கவிதையின்னு வரும்போது வேற அர்த்தம் தேடுறான். ‘கவிதை என்பது அர்த்தங்களின் சுமைகளாகத் தடுமாறுகிறது’ன்னு ரொலன்பார்த் சொல்றார். கவிதை வந்தது வேற எடத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கு. எப்படி கேமிரா வந்ததும் ஓவியம் தன் வெளிப்பாட்டை மாத்திக்கிடுச்சோ அது மாதிரி கவிதையும் வேற லெவலுக்குப் போய் ஆகணும்.

தீராநதி: அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது?

எம்.ஜி.சுரேஷ்: பண்ணணும்ங்கற எண்ணம் எனக்கிருக்கு. மீ கவிதை (Hyper poem) மாதிரி பண்ண ஒரு திட்டம் வைச்சிருக்கேன்.

தீராநதி: inter-text ஊடிழைப் பிரதி என்று சொல்லப்படுகிறதே அதை விளக்க முடியுமா?

எம்.ஜி.சுரேஷ்: ஒரு கதையைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே போனால் சில தவறுகள் நடந்துடும். அதையே பிரேக் பண்ணி பிரேக் பண்ணி சொன்னா தப்பு வராது. அதுக்குதான் ஊடிழைப் பிரதி தேவைப்படுது.

ஜெயகாந்தன் ‘அக்னி பிரவேசம்’னு ஒரு சிறுகதை எழுதுனார். அதயே பெருங்கதையாடலாக்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எழுதுனார். சிறுகதையில ‘கங்கா’ங்கற கேரக்டர் கெட்டுப்போயிடுவா. அப்ப அவள ‘நீ தல குளிச்சுடுடீ.. சீத வந்து அக்னி பிரவேசம் பண்ண பிறகு சுத்தமாயிடுவா. குளிச்சா நீ சுத்தமாயிடுவே’ன்னு சொல்லி இருப்பார். அதுல நம்ம பழைய ஒழுக்கக் கட்டமைப்புகளையெல்லாம் கொட்டிக் கவித்திருப்பார் அதுவே பெருங்கதையாடல்ல எப்படி வரும்னா இந்த ‘கங்கா’ங்கறவ ஏற்கனவே லவ் பண்ணவன பார்ப்பா. அவன் தண்ணி அடிச்சிக்கிட்டு கிடப்பான். முடிவுல அந்தக் கதையில ஒரு விபச்சாரிபோல நடந்து போவா கங்கா. கார் ஒண்ணு போகும். இவள பார்த்த ஒடனே நின்னு பின்னாடி வரும். அதுல இருந்து ஒருத்தன் சிகரெட் பத்த வைச்சிகிட்டு இவள பார்ப்பான். இவ உடனே ‘ஈ’ன்னு சிரிச்சிகிட்டு நிற்பா. இப்படி முடியும் கதை. அப்படின்னா அவள விபச்சாரியாக்கிட்டாரு. அக்னி பிரவேசத்துல சிறப்பா பண்ணவரு, அவள ஒரு விபச்சாரியாக்குறதுக்கு இவ்வளவு பெரிய கதைய எழுதணுமா? Inter text ன்னு எழுதும்போது இந்த விஷயங்களை ஷார்ப்பா கையாளலாம்.

தீராநதி: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை வைத்து ‘37’ என்ற நாவலை எழுதி இருக்கிறீர்கள். பிரைமேலெவி போல மாற்று அறிவியல் நாவலது. தத்துவம், அறிவியல் கோணங்களில் எழுதி வாசகனை பிரமிக்க வைப்பது என்பது அதன் சாராம்சம். எதிர் நபரை தன் அறிவைக்காட்டி பிரமிக்க வைப்பதென்பதும் Intellectual Terrorism மாகாதா?

எம்.ஜி. சுரேஷ்: அறிவைக்காட்டி பிரமிக்க வைக்குறது கூட இல்ல இது. சில நிகழ்வுகளைக் காட்டி பிரமிக்க வைக்கிறது. panaromic Spectacle மாதிரி, உடை, தோற்றம், ஜோடனைகளைக் காட்டி பிரமிக்க வைக்குறது. அவ்வளவுதான். நம்ம மனோகர் நாடகம் மாதிரி. அறிவு ரீதியா பிரமிப்பும் பண்ணலாம். டெரிடா, பூக்கோவோட அறிவாற்றல கண்டுதானே நாம பிரமிக்கிறோம். நான் நிறைய படிச்சிருக்கேன், எனக்கு நிறைய தெரியும்னு மத்தவங்களை அறிவைக்காட்டி பயமுறுத்துறதுதான் Intellectual Terrorism.

தீராநதி: அதுபோல வேலையும் இங்கு நடக்கிறது இல்லையா?

எம்.ஜி. சுரேஷ்: ஆமாம். நடக்குறதுதான். அந்த டெரரிஸத்தை நான் எதிர்க்குறேன்.

தீராநதி: தனக்குக் கிடைக்கும் ஓர் அழகான பேனாவை அல்லது தகவல்களை யாருக்கும் சொல்லாமல் நமக்கானதாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது மனிதனின் அடிப்படைக் குணங்களில் ஒன்று. ஆனால் நீங்களோ அதற்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். அறிவு பரவலாக்கல் செய்கிறீர்கள். இந்த அறிவுப் பரவல் மனப்பான்மையை எப்படிப் பெற்றீர்கள்?

எம்.ஜி. சுரேஷ்: நம்ம ராமானுஜர் தனக்குத் தெரிஞ்ச ‘ஓம் நமோ நாராயணா’ங்கற மந்திரத்தை மக்கள் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டாரு இல்ல... அததான் நான் செய்றேன். ஒரு அறிவுங்கறது பலருக்கும் பகிர்றதா இருக்கணுமே ஒழிய, மிரட்டறதா இருக்கக் கூடாது. அறிவுங்கறது மக்களுடையதுன்னு நான் நினைக்கிறேன். அதுக்காக என்னுடைய எல்லா புத்தகத்துலயும் ‘உரிமை மக்களுக்கு’ன்னு போட விரும்புறேன். மக்கள்தான் என்னை உருவாக்குனது. otherதான் என்னை உருவாக்குனது. அப்படின்னா பலரால் உருவானவன் நான். பலரால் உருவான நான் சமூகத்துக்கு பதிலுக்கு ஏதாவது செய்யணும்னு வரப்ப இத செய்யறேன். நான் எழுதின ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ புத்தகம் பல காலேஜ்ல பாடத் திட்டத்துல வைச்சிருக்காங்க. பேராசிரியர்கள்லாம் இந்தப் புத்தகத்த சிபாரிசு செய்யுறாங்க. அத பார்த்துட்டு ஓர் இலக்கிய நண்பர் ‘என்ன நீங்க இவ்வளவு சிம்பிளா பண்ணிட்டீங்க. நாளைக்கு நம்மளைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டாங்க. நீங்க தப்பு பண்ணிட்டீங்க’ன்னு சொன்னாரு. இப்படி நினைக்குறதே ஒரு டெரரிஸம் போலதான்.

தீராநதி: நோபல் பரிசு பெற்ற சால்பெல்லோ ஒரு மோசமான ப்ளே பாய் இதழில் எழுதியிருக்கிறார். மார்க்குவேஸ், ஜான்அப்டைக் போன்றவர்கள் கூட பெரும் பத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். மார்க்குவேஸை, ஜான் அப்டைக்கை கொண்டாடுகிற நம்மவர்கள் சிறுபத்திரிகை படைப்புகள் மட்டுமே உன்னதமானது என்பதுபோல ஒரு ஃபோபியாவில் மாட்டித் தவிக்கிறார்களே?

எம்.ஜி. சுரேஷ்: தாஸ்தாவெஸ்கியும் ஒரு வெகுஜன எழுத்தாளர்தான். வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவது கீழானது. சிறு பத்திரிகையில் எழுதுவது உன்னதமானது அப்படி நினைக்குறதும் ஒரு ஹிப்போகிரஸிதான்.

தீராநதி: இதையட்டியே ஒருகேள்வி. பெரும் பத்திரிகைதான் சிற்றிதழின் எழுத்து நடையையே தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். உதாரணமாக ஒரு காலத்தில் சிறு பத்திரிகையில இயங்கிய பாலகுமாரன் வெகுஜனத்திற்குப் போனார். அது வெகுஜன நடையானது. பிறகு ஜெயகாந்தன் போனார், அப்போதும் மாறியது. இன்று ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எல்லாம் வெகுஜனத்திற்கு போய்விட்டார்கள். இதுவரை சிறுபத்திரிகை நடையாக இருந்தது வெகுஜனமாக மாறி இருக்கிறது. இப்போது வேறு நடைகள் சிறு பத்திரிகைக்கு தேவையாகிறது. இந்த ‘வேக்கம்’தான் சிறுபத்திரிகையின் நடையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன், இது சரியா?

எம்.ஜி. சுரேஷ்: இது ரெண்டு விதமாகவும் Vice Versa இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க சொல்ற மாதிரி அப்படியும் இதைப் பார்க்கலாம்.

தீராநதி: பின்நவீன எழுத்தை அறிமுகம் செய்ய உங்களுக்கு என்று ஓர் இதழ் முன்னால் தேவைப்பட்டது. இன்றோ வெகுஜன இதழ்களே பின்நவீன எழுத்துகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. பிறகு உங்களுக்கென்று ஓர் இதழ் தேவையா?

எம்.ஜி. சுரேஷ்: பின்நவீன எழுத்தை வெளியிடறதுக்கும், அந்தக் கோட்பாடுகளை அறிமுகம் செய்யறதுக்கும், விவாதிக்குறதுக்கும் ஒரு இதழ் தேவைப்பட்டது. அதனால் பன்முகம் இதழைத் தொடங்கினோம். அதுக்கு முன்னாடி இயங்கிகிட்டு இருந்த நிறப்பிரிகை, கிரகணம் மாதிரியான இதழ்கள் நின்னுபோனதால இந்தத் தேவை உண்டாச்சு. இப்ப நீங்க சொல்ற மாதிரி பெரிய பத்திரிகைகளே போஸ்ட் மாடர்னிஸ எழுத்துக்களைப் பரவலா வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. அப்ப எனக்குன்னு ஒரு பத்திரிகை தேவை இல்ல. இன்னொன்று, ஒரு சிறு பத்திரிகை தொடர்ந்து வரக்கூடாது. வந்தா அது நீர்த்துப் போயிடும். கொஞ்ச நாள் நிறுத்திட்டு அப்புறம் கொண்டு வரலாம். இப்போ பன்முகத்தை போன டிசம்பரோட (2006) நிறுத்திட்டோம்.

தீராநதி: அண்மையில் உலகையே உலுக்கிய சதாம் தூக்கு பற்றி?

எம்.ஜி.சுரேஷ்: அடிப்படையில நான் மரண தண்டனையை எதிர்க்குறேன். சதாம் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அந்தப் பிரச்னையில அமெரிக்கா தலையிட முடியாது. சதாமை அந்த மக்கள்தான் தண்டிக்கணும். அதுகூட தூக்குப் போட்டு தண்டிக்குறது சரி இல்ல. சதாம் தப்பு பண்ணலையான்னு ஒரு கேள்வி வரும். யாருதான் தப்பு செய்யல. வரலாறு என்பதே வன்முறையின் வரலாறுதானே. பல வரலாறுகள் நம்மகிட்ட முன்னுதாரணமா இருக்கு. தமிழர்களுடைய ‘நாலடியார்’ங்குற எட்டாயிரம் பாடல்களை பாண்டிய மன்னன் ஆற்றுல தூக்கிப் போட்டான். அதுல மிஞ்சின நாலாயிரம் பாடல்கள் தானே நாலடியார்? அதுவும் ஒரு வரலாறு. வன்முறைங்கறது காலம் காலமா நிகழ்ந்துகிட்டே இருக்கு. இத சதாம் மட்டுமே செய்யலியே. ஆனாலும் வன்முறைக்குத் தீர்வு வன்முறை இல்ல.

சந்திப்பு : கடற்கரய்
படங்கள் : ஆர். சண்முகம்

3 comments:

இளங்கோ-டிசே said...

post-modernism: another point of view by Atputhan.
http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_20.html

செல்வநாயகி said...

thanks DJ for sharing this.

இளங்கோ-டிசே said...

பின் - நவீனத்துவம்: ஓர் அறிமுகம்
எழுதியது: பாம்பாட்டிச்சித்தன்
http://thaaragai.wordpress.com/2006/04/15/post_modernism/