Friday, October 26, 2007

எமினெம் - da best

நேற்று எமினெமைத் திருப்பவும் -அமைதியான இரவில்- கேட்க முடிந்திருந்தது (நன்றி: YouTube). ராப் பாடல்களை (அல்லது hip-hop) அவ்வப்போது முன்பு கேட்டுக்கொண்டிருந்தாலும், மிகவும் நெருக்கமாய் உள்வாங்கத்தொடங்கியது எமினெமின் பாடல்களினூடாகத்தான். (இப்போதும், என்னிடமிருக்கும் ஏதாவது ராப் பாடலகளின் இறுவட்டை எடுத்துக்கொண்டுபோய் காரில் கேட்டுவிட்டு, ஒரேமாதிரியாக இருக்கும் இதையெல்லாம் எப்படி சுவாரசியமாய்க் கேட்கின்றாய் எனும் அண்ணாவின் விமர்சனத்தை சற்று ஒதுக்கிவைப்போம் :-)).

எமினெமின் பாடல்கள் ஒரு நவீன மனிதனுக்குப் பொருந்தக்கூடியவை. தன்னளவில் சிதைந்துகொண்டிருப்பவனாய், அன்புக்காய் ஏங்கிக்கொண்டிருப்பவனாய், வக்கிரமான/வன்முறையான செயற்பாடுகளில் மனதின ஆழங்களில் இச்சைகளைப் பதுக்கி வைத்திருப்பவனாய், அவ்வப்போது மனப்பிறழ்வுக்கு ஆளாபவனாய், உலகின் இன்றையபோக்குக்கண்டு மூர்க்கப்படுபவனாய் என் எல்லாவிதமாய்...ஒரு ஆணை எமினெமின் பாடல்களில் கண்டுகொள்ளலாம். இவற்றையெல்லாம் பாடல்களில் வெகு தீவிரத்தன்மையில் அல்ல, மிகவும் எள்ளல் தொனியுடன் தந்துகொண்டிருப்பதால்தான் எமினெம் எனக்கு அதிகம் நெருக்கமாயிற்றார் போலத் தோன்றுகின்றது. பொதுவான ராப் வீடியோப் பாடல்களில் பெண் உடல்கள் அதிகளவு சேர்க்கபட்டு வெகுசனங்களின் பாலியலுக்கு அவை தீனியாக்கப்படுகையில், வெகு குறைவாகவே எமினெமின் பாடல்களில் பெண் உடல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது (Shake that A** என்ற பாலியல் இச்சையைப் பாடுகின்ற பாடல் கார்ட்டூனாய் எடுக்கப்பட்டிருக்கும். எப்படி தனது (முன்னாள்) மனைவி, தாயார், Mariah Carey போன்ற பெண்களின் மீதான வெறுப்பை வெளிப்படையாக எமினெம் பாடியிருக்கின்றாரோ, அதுபோல அவரது குழந்தைகள் மீதான நேசிப்பையும் நேர்மையாகப் பாடியிருக்கின்றார். எமினெமைப் போல, தனது துறையிலிருக்கும் சக கலைஞர்களையோ, பிற அரசியல்வாதிகளையோ நக்கலடித்த பாடகர்களை ராப்பில் காண்பது மிக அரிது என்றுதான் கூறவேண்டும். எமினெம், பிறர் மீது வைக்கும் விமர்சனங்கள், வெள்ளைத்தோலர் போன்ற காரணங்களால் சில ராப் விமர்சகர்கள்/சஞ்சிகைகள் எமினெமை இருட்டடிப்புச் செய்தாலும், ராப்பின் முக்கிய MCக்களில் ஒருவர் அவர் என்பதை மறுக்காமல் ஒப்புக்கொள்ளுமளவிற்கு எமினெமின் இருப்பு ராப்பில் இருக்கின்றது என்பதே உண்மையாகும்.



Lose Yourselvsஎன்ற இப்பாடல், வருகின்ற சந்தர்ப்பத்தைத் தவறவிடாது பாவிக்கவேண்டும் என்று சொல்கின்ற.... கேட்கும்போதே உற்சாகம் வரச்செய்கின்ற பாடல். 8 Mile என்ற எமினெமின் கடந்தகாலக் கதையைக்கூறும் திரைப்படத்திலும் வந்திருந்தது. ஒரு விளிம்புநிலை மனிதனாய் வாழ்க்கையை ஆரம்பத்தில் எமினெம் வாழ்ந்திருந்தாலும், அதிகம் கறுப்பின் மக்கள் புழங்கும் ராப் சூழலில் எமினெமை எவரும் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை (White America என்ற இன்னொருபாடலில் இது பற்றி எமினெம் பாடியிருப்பார்). எனவே கிளப் ஒன்றில் நடக்கும் Best Mcற்கான போட்டியில் வெல்வதற்கும் அதற்கும் முன்பான நிலையையும் வைத்து இதை எமினெம் பாடியிருப்பார். எனினும் எல்லாச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியதே.

Like Toy soliders


இப்பாடல், ராப் சூழலில் பாடகர்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளைச் சொல்கின்றது இம்முரண்பாடுகள்தான் ரூபாக் (Tupac), பிக்கி(Notorious B.I.G) போன்ற பாடகர்களை பலியாக்கியது. இப்பாடலைக் கேட்டால் யார் யாருக்கு எல்லாம் யாரோடு சண்டை என்ற 'வரலாறு' வெளிப்படும். தான் விரும்பித் தேர்ந்தெடுத்த துறையை தான் எப்படி அழிக்க விரும்புவேன், இனியிந்த சண்டைகள் வேண்டாம் என்றரீதியில் எமினெம் பாடியிருப்பார். முரண்நகையாக இப்பாடல் காட்சியில் சுடுபட்டிறப்பவராய் நடித்த எமினெமிம் நண்பரும் எமினெமோடு (D-12) குழுவில் இருந்தவருமான Proof அண்மையில்தான் டிட்ரோயிட் கிளப்பொன்றில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டிருக்கின்றார்..

MOSH


இப்பாடல் அமெரிக்கா பிற நாடுகளில் நடத்தும் போர்களை கடுமையாகக் கண்டனம் செய்கின்றது. அமெரிக்காவிற்கு, வேறு நாடுகளில் நடத்தும் போர்களல்ல,அமெரிக்காவின் உள்ளேயேயுள்ள வறுமையான மக்களை எப்படி வறுமையிலிருந்து இல்லாமற்செய்யும் போர்களே முக்கியமென எமினெம் கூறுகின்றார். ஜோர்ஜ் புஷ்ஷை, இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காய் நடந்த தேர்தல் சமயம் வந்த இப்பாடல் ஜோர்ஜ் புஷ்ஷைக் கடுமையாக விமர்சிக்கினறது. போர் புஷ்சிற்கும் அவரது தந்தைக்கும் போர் வேண்டுமென்றால், ஏகே-47 எடுத்துக்கொண்டு அவர்களிருவரையும் போர்முனைக்குச் செல்லச்சொல்லும் வசனங்களும் இதிலுள்ளது.

When I'm gone


குழந்தைகளின் மீதான நெகிழ்ச்சியான எமினெம் பாடல்கள் அற்புதமானவை. ஏற்கனவே வந்த Mocking bird, Haillie's Song போன்ற பாடல்கள் போல இதுவும் மிகவும் நெகிழ்ச்சியானது. பாடலின் நெருக்கத்தில் இதை தமிழில் மொழிபெயர்த்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கூட எனக்கு சென்ற வருடம் வந்திருந்தது :-). Just Lose It என்ற பாடலில் மைக்கல் ஜக்சனின் சிறுவர்கள் மீதான் பலாத்காரத்தைக்கூட எமினெம் கேள்விக்குட்படுத்தியிருப்பார். அதனால் எமினெம் மீது பலத்த விமர்சனங்கள் கறுப்பின மக்களிடையே இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.



இதொரு வித்தியாசமான பாடல். தனது சொந்த அம்மாவைத் திட்டித் தீர்க்கின்ற பாடல் (இன்னும் ஒன்றிரண்டு பாடல்கள் இவ்வாறு இருக்கின்றது). தன்னைச் சிறுவயதில் எப்படி ஒரு நோயாளியாக்கினார் தாய் என்பதைப்பற்றி பேசுகின்றது. எமினெம், தான் தன்னை பிரபலப்படுத்துவதற்காய் சொல்லவில்லை, தனக்கு என்ன நடந்தது என்று கேளுங்கள் என்று பாடலைக் கேட்பவர்களிடம் கேட்கின்றார். தனது தாயைக் காயப்படுத்த் இதைச் சொல்லவில்லை என்று ஆரம்பத்தில் எமினெம் கூறினாலும், மிகக் கடுமையான வார்த்தைகளால் தனது தாயைத் திட்டுகின்றார். அவரது சகோதரன்(?) ரோனி இளம்வயதில் இறந்தபோது, தாயார் எமினெமிடம், ரோனிக்குப் பதிலாக நீ இறந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார் என்பதினூடாக எமினெமிற்கு அவரது தாயாரின் மீதான வெறுப்பும் புரிந்துகொள்ளப்படக்கூடியதே. வன்முறைக்கும், போதைமருந்துக்கும் அடிமையான தாயிடமிருந்து எமினெம் வளர்ந்திருக்கின்றார் என்பதும், அவரது தகப்பனார் யாரென்பதே எமினெமிற்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


(அஸினுக்கு, அவரது பிறந்தநாளுக்கு...)

Tuesday, October 16, 2007

ஈழத்துக்கவிஞர்கள் ---> கவிதைகள்

ஈழத்துப்பெண் கவிஞர்கள் மூவரின் கவிதைத்தொகுப்புகள் விரைவில் வரப்போகின்றது என்று காலச்சுவடின் அறிவிப்பு -அதன் மீதான விமர்சன்ங்களைத் தாண்டி- மகிழ்ச்சியைத் தருகின்றது. அனாரின், 'எனக்கு கவிதை முகம்' (அனாரின் இரண்டாவது தொகுப்பு என நினைக்கின்றேன்), ஆகர்ஷியாவின், 'நம்மைப் பற்றிய கவிதை', வினோதின்யின், 'முகமூடி செய்பவள்' ஆகிய தொகுப்புக்களே அவையாகும். ஏற்கனவே இரண்டொரு இடங்களில் குறிப்பிட்டமாதிரி, தேக்கம்டைந்த ஈழ/புலம்பெயர் கவிதையுலகை முன்னகர்த்தும் நம்பிக்கையைப் பெண் படைப்பாளிகளே இன்றைய பொழுதில் தருகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றவிதமாய் இவர்களது கவிதைத் தொகுப்புககளும் துலங்கட்டுமாக..
(~டிசே)


------------------
வெறித்தபடி இருக்கும் கனவு
-அனார்

வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு
தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது
காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது
அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவைத்
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன
ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்
இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்
கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு

அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்) கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இவரது 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.
--------------

நம்மைப் பற்றிய கவிதை
-ஆகர்ஷியா


ஆளாளுக்கு ஒப்பனையேற்றி
மேடையேறுகிறோம்.
இயங்கியல்
நம்மைத் தத்தமது வட்டத்துள்
வரையறுத்துள்ளது.
உன் ஒப்பனை கலையாது நானும்
என்னைக் குலைக்க மனமின்றி நீயும்
சம பருமன்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
வேடிக்கையதுவல்ல
ஒப்பனையற்றிருத்தல்கூட ஒருவித
பாத்திரமேற்பிற்கான
ஒத்திகையென்பதை
ஆளாளுக்கு மறந்து
விடாதிருக்கிறோம்.
இதனால்தான் போலும்
நம்முடைய வட்டங்கள்
ஒன்றையொன்று இடை
வெட்டிக்கொண்டதேயில்லை.
வெளியே பலரும் மெச்சுகிறார்களாம்
நம் இயங்கியலுக்குள்ளோடும்
ஒத்திசைவை
எத்தனையோ வருடத் திரைநீக்கத்தில்
ஒருவித கலையலங்காரத்துடன்
சலிப்பேதுமின்றிய பாவனையில்
ஆனாலும் என்னவோ
வட்டங்கள் மையொழுகக் கரைந்து
வெண்தாளில் பீச்சியடிப்பதாய்
ஏக்கம் மிகுந்த கனவுகள் மட்டும்
இப்பவும் என் இரவுகளில்!

ஆகர்ஷியா (பவானி அருளையா) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தவர். இவரது 'நம்மைப் பற்றிய கவிதை' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது.
-----------------

முகமூடி செய்பவள்
-வினோதினி

அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன்
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

வினோதினி (வினோதினி சச்சிதானந்தன்) யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். இவரது 'முகமூடி செய்பவள்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.

நன்றி: காலச்சுவடு( கவிதைகளுக்கும், எழுதியவர்கள் பற்றிய குறிப்புகளுக்கும்)

Sunday, October 07, 2007

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

இசைக்குயில் 2007 (ரொரண்டோ)


(கிருஷ்ணமூர்த்தி, கெளசிக்..., சின்மயி, விஜய லக்ஷ்மி n others)

விஜய் தொலைக்காட்சியில் நடந்தேறிய Super Singer(?) என்ற சிறுவர்களின் நிகழ்ச்சியில் பங்குபற்றிய/வென்ற சிறுவர்களோடு கனடிய சிறுவர்களும் பாடும் இசைக்குயில்-2007யிலிருந்து சில (அரைகுறைப்)பதிவுகள்.














இங்கே என்னிடம் தமிழ் தொலைக்காட்சி/வானொலி எதுவும் இல்லையென்பதால், super singer என்ற நிகழ்ச்சி பற்றிய மேலதிக எந்தச்செய்தியும் எனக்குத் தெரியாது. வீட்டிலிருப்பவர்கள் இறுவட்டு மூலம் விஜய் ரீவியில் நடந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தார்கள். எங்கள் குடும்பத்திலிருக்கும் சிறுவர்களை அழைத்துச்செல்ல நிகழ்வுக்கு நானும் ஒரு உதிரியாகச் சென்றிந்தேன். குழந்தைகளோடு குழந்தைகளாக இருப்பதைப்போல வேறு எது அதிக சுகந்தரப்போகின்றது?

பாடிய சிறுவர்கள் பழைய பாடல்களோடு மட்டும் நின்றது ஒரு பலவீனந்தான். போட்டி இன்னபிறவற்றிற்கு தேர்ச்சியான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப்பாடலாம்; தவறில்லை. ஆனால் ஒரு மேடை நிகழ்வுக்கு, அதுவும் குழந்தைகள் நிறைய வரும் நிகழ்வுக்கு குழந்தைகளுக்குப் பரிட்சயமான அதிகதியிலுள்ள பாடல்களைப்பாடியிருக்கலாம்.

சிவாஜி பாடலின் பல்லேலக்காவைத் தவிர, மனதை அதிரச்செய்த எந்தப்பாடலையும் காணவில்லை. இது போதாது என்று அவ்வபோது பாடிய சின்மயியும் தனது கர்நாடக சங்கீத சாமர்த்தியத்தைக் காண்பிக்க என்று அந்தக்காலத்து தில்லானா மோகனாம்பாள் பாடல்களோடு மட்டும் நின்றது இன்னொரு சோகம். சிவாஜி படத்தின், 'சஹானா தூறல் வீசும்' பாடலுக்கு கிருஸ்ணமூர்த்தியோடு (super singersல் முதற்பரிசு வென்றவர்) கூட சின்மயியால் இசைந்து பாடமுடியவில்லை. குரல்களின் இடைவெளியில் மடுவுக்கும் மலைக்குமான இடைவெளி தெரிந்திருந்தது. சின்மயிக்கு அல்ல, அநேக பெண்பாடகர்களுக்கு ஆண்களோடு பாடும்போது, ஆண்களின் குரல் பெண்களின் குரலை விழுங்கிவிடுவது நடந்துகொண்டுதானிருக்கின்றது. அப்படி ஆண்கள் உச்சஸ்தாயியில் பாடும்போது அதற்குச் சவால் விட்டுப்பாடக்கூடிய ஒருவர் என்றால் ஜானகியைத்தான் முன்னுதாரணமாய்க் கொள்ளவேண்டியிருக்கின்றது. உதாரணத்திற்கு முதல்வன் படத்தில் வரும் முதல்வனே பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

எனினும் வந்திருந்த சிறுவர்கள் நன்றாகவே பாடினார்கள், அவ்வாறே இங்கு கனடாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாடிய ஆறு சிறுவர்களும்.

சில ஒளித்துண்டுகள் (முழுமையாக அல்ல)


பெயரிலி, சிறிரங்கன் போன்ற அந்தக்காலத்தைய நண்பர்களுக்கு (இந்தப்பாடல் பி.யு.சின்னப்பா காலந்தானே :-))


எனக்கும் அசினுக்கும்


இது இப்பதிவு பார்க வந்த உங்கள் அனைவருக்கும்; பாடலிற்கு முன்பான தீம் உரையாடலைத் தயவுசெய்து புறக்கணிக்குக..