Monday, March 17, 2008

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

-சற்று தள்ளியிரும் பிள்ளாய்-

சரவணன் எழுதிய, நாலே வரியில் பின்நவீனத்துவத்துக்கு மிக எளிய அறிமுகம்! என்ற பதிவில்...
/முன்னர் ஒருமுறை டீ சே தமிழனும் பின்னவீனத்தைத்தான் புரிந்துகொண்ட விதம் என்று ஒரு பதிவை இவ்வாறு எழுதமுயன்று தோல்விகண்டிருந்தார்./
போகின்றபோக்கில் மு.மயூரன் எனது பெயரையும் இழுத்திருப்பதால் தன்னிலை சார்ந்து சில குறிப்புகளையாவது குறிக்கவேண்டியிருக்கிறது.
....
(1) முதலில், 'என்னுடைய பின் நவீனத்துவப் புரிதல்கள்' என்ற கட்டுரையில் எனது போதாமைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டே அதை எழுதியிருந்தேன். பின் நவீனத்துவத்தை வரையறுத்தோ அல்லது இதுதான் பின் நவீனத்துவமென அதட்டிய குரலிலோ எதுவுமே அங்கே எழுதப்படவில்லை.

(2) இரண்டாவது பின் நவீனத்துவ(ம்) காலம் வெற்றி X தோல்வியென்பதையே நிராகரிக்கின்றது. எதிரெதிரான துவித முனைகளில் எதையும் வைத்து உரையாடுவதை பின் நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் வெற்றி தோல்வியற்ற ஒரு சுவாரசியமான ஆட்டத்தை ஆடச்செய்வதற்கான ஒரு முன் நிபந்தனையாக பின் - நவீனத்துவம் இருக்கின்றது.

(3) எழுதப்பட்ட எனது கட்டுரையை -என்னைப் போன்ற ஆரம்ப வாசிப்பில்லாத - வேறு சில நண்பர்களும் வாசித்திருக்கின்றார்கள். முக்கியமாய் பின் -நவீனத்துவம் குறித்த நிறைந்த வாசிப்பும் மற்றும் விரிவாக எழுதவும் செய்கின்ற வளர்மதி போன்றவர்கள் வாசித்திருக்கின்றார்கள். எனது அந்தக் கட்டுரை ஒரு எளிய புரிதல் என்றளவில் அவர்கள் அதை ஏற்கவும் செய்திருக்கின்றார்கள் (கட்டுரையில் பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்டிருக்கின்றதென்று ரோலன் பார்த்தின் pleasure of the text, மற்றும் தெரிதாவின் deconstruction பற்றிக் குறிப்பிட்டு வளர்மதி அதன் தொடர்ச்சியாக கட்டுரையொன்றை பதிவுசெய்திருக்கின்றார்). அதன் பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பார்த்தின் முழுநூலையும், தெரிதாவின் deconstruction பற்றி எழுதப்பட்ட சில நூல்களையும் வாசித்து எனது புரிதல்களைச் செம்மைப்படுத்தியிருக்கின்றேன்.

(4) 'பூர்த்தியாவும் மார்க்சிசமும்' நூலில் எஸ்விஆர், பூர்தியாவை முன்வைத்து சில விடயங்களைக் கூறுவார். இன்றைய காலத்தில் நம் எல்லோருக்கும் எந்த விடயம் என்றாலும் ஆழமின்றி ஓடிவந்து 'கருத்து' என்று சொல்வதற்கு தொலைக்காட்சிகள் பழக்கிவிட்டன. சுடச்சுடக் கருத்துச் சொல்வது என்பது நம்மைத் தொடர்ந்து ஆழமாய் அறியவும் வாசிக்கவும் தடை செய்கின்றன என்று அந்நூலில் விரிவாக எழுதப்பட்டிருக்கும்.. உரியவர்கள் தொப்பியை எடுத்து மாட்டிக்கொள்ளலாம்/கொள்ளுவோம்.

(5) நானறிந்தவரை எனது பதிவில் அற்புதன் மட்டுமே தொடர்ச்சியான உரையாடலைச் செய்திருந்தார். நான் வாசித்தவற்றை/விளங்கிக் கொண்டவற்றைக்கொண்டு என்னாலியன்றளவு அற்புதனோடு உரையாடியிருக்கின்றேன். ஒன்றேயே திருப்பத் திருப்ப உரையாடுகின்றோம் என்ற அலுப்பில் அந்த உரையாடலிருந்து ஒருகட்டத்தின்பின் விலகியிருந்தேன். மற்றக் காரணம், எனக்கு தெளிவில்லாத சில விடயங்களுக்கு தெரியாது என்று சொல்வதே நேர்மையாக இருக்குமென்று அற்புதனிற்கு சொல்லியுமிருக்கின்றேன். அற்புதனோ அல்லது நானோ 'வெற்றி' X 'தோல்வி' கண்டுவிட்டோமென எவரும் பிரகடனப்படுத்தவும் இல்லை. அந்த ஆட்டம் ஒரு முடிவிறாத ஆட்டம். அவ்வளவே. எங்கேனும் ஒரு புள்ளியில் நாங்கள் மீண்டும் அந்த ஆட்டத்தை ஆடுவோம். எனெனில் இருவருமே உரையாடுவதற்கான வெளியையும் மேலும் அறிந்துகொள்வதற்கான ஆர்வத்தையும் கொண்டிருக்கின்றோமென நினைக்கிறேன்.

அங்கே எந்த உரையாடலையும் செய்யாத மு.மயூரன் இங்கே ஓடிவந்து எனது பதிவை இழுப்பதன் அரசியல் எதுவுமறியாத ஞானசூனயமாயினேன். ஆகக்குறைந்தது எந்த விடயங்களில் எனது பதிவு 'தோல்வியை'த் தழுவியதென்றாவது கூறி நிராகரிக்கும் குறைந்தபட்ச நேர்மையாவது ஒருவருக்கு அவசியமென்று நம்புகின்றேன்.

(6) ஏற்கனவே வெற்றி X தோல்வி என்ற துவித நிலைகளை நிராகரித்திருக்கின்றேன். நமது பெரியண்ணான் ஜோர்ஜ் டபிள்யு புஷ் கூட ஒன்று எங்களோடு இருங்கள் அல்லது ஒசாமாவோடு இருக்கின்றீர்கள்' என்றுதான் அடிக்கடி கூறுகின்றார் என்பதையும் கவனத்திற்கொள்ளவும். என்றபோதும் இன்னமும் பின் நவீனத்துவம் 'எல்லாவற்றையும் அழிக்க வந்ததாய்' அடிக்கடி கவலைப்படும் மு.மயூரனிற்காய் அந்தப் பதிவு 'தோல்வி' கண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன். எனெனில் வெற்றி கண்டிருந்தால் அதற்கு மேலே அறியத்தேவையில்லை என்ற உணர்வு வ்ந்துவிடும். ஆனால் தோல்வி மீண்டும் மீண்டும் அறியவும் வாசிக்கவும் புரிந்துகொள்கின்ற வெளியைத் தருவதால் வெற்றியை விட 'தோல்வியே' எனக்கு உவப்பானதென மு.மயூரனுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

(8) இறுதியில் மு.மயூரன் நிவேதாவின் பதிவொன்றில் இப்படியெழுதியிருக்கின்றார்.

/இணையத்தில் இப்போது அந்த"லேபிள்" உடன் இருப்பவர்களுள் நான் அதிகம் உடன்படக்கூடியதாயிருப்பது ஜமாலனுடன் மாத்திரம்தானே? :-)/

நானறிந்தவரை- நண்பர் ஜமாலன் தன்னை ஒரு மார்க்சியராகவே அடையாளங்காட்ட விரும்புகின்றவர் என வெளிப்படையாக -தனது பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ- அறிவித்துக்கொண்டவரென நினைக்கின்றேன். அவரையும் அந்த 'லேபிளுக்குள்' அடைக்க முன்னர், மு,.மயூரன் சற்று ஒவ்வொருவரின் பதிவுகளையும் அவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்பதை வாசித்தல் நலம். ஓடிவந்து சுடச்சுட கருத்து கந்தசாமிகளாய் மாறுவதைத் தவிர்த்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும். அல்லது நான் (4)ல் குறிப்பிட்டதை மு.மயூரனைத் திருப்ப வாசிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

(7) இந்த 'லேபிளில்' ஒன்றுமில்லை ஒன்றுமில்லையெனச் சொல்பவர்களுக்குத்தான் அந்த 'லேபிள்' பற்றி எது எழுதினாலும்/பேசினாலும் மிகவும் பதட்டமடையச் செய்கின்றது. அது ஏன் என்று யோசித்தால் இந்த லேபிளை ஏற்காதவர்கள் கூட மறைமுகமாய் அதன் இருப்பை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் என்ற அரசியல் புரியும். தமிழ்ச்சூழலில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாய் இதற்குள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்ற எத்தனையோ பனமைக் குரல்களைக் கேட்டும் இன்றும் அந்த 'லேபிள்' பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றதென்றால் அங்கே ஒன்றுமில்லாமல் சும்மா பேய்க்காட்டிக்கொண்டிருக்கமுடியாது என்ற எளிய புரிதலாவது நமக்கு வரும். அந்த 'லேபிள்' நாளை விரைவில் அழிந்துபோனாலும் அதற்குச் சார்பாய் பேசுபவர்கள் எவரும் ஒப்பாரி வைக்கப்போவதில்லை. அந்த லேபிள் தனக்கான சிதைவை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பபதை அறிந்தே அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் (எதை நாம் அதிகம் நம்புகின்றோமோ. நாம் அதற்கு அடிமைகளாய் விடுகின்றோம் அல்லது அதை வைத்து அதிகாரஞ்செய்பவர்களாய் மாறிவிடுகின்றோம்).

---இதை சரவணனின் பதிவில் பின்னூட்டமாய் எழுதத்தொடங்கி சற்று அதிக தன்னிலை விளக்கமாயிருப்பதால் -புதிதாய் வலைப்பதிய வந்திருக்கும் சரவணனைப் பயமுறுத்தாதிருக்கும் பொருட்டு- தனிப்பதிவாய் இடுகின்றேன். நன்றி.---

50 comments:

அற்புதன் said...

டிசே ,

கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் தான் அப்படியாயின் கடவுளை நம்புவர்களா?

உமது லொஜிக் உதைக்குது.

மயூரன் வெற்றி தோல்வி என்று எங்கும் சொன்னதாக நான் படித்த நாபகம் இல்லை.அவசரத்தில் பின்னூட்டம் இடும் போது சில வேளை பிழையான சொற்பிரயோகங்களால் அப்படியான ஒரு தோற்றம் ஏற்படிருக்கலாம்.இவற்றைச் சட்டை செய்யாது ஆரோக்கியமான உரையாடலைத் தொடர்வதே எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

மிகுதி பிறகு...

Sri Rangan said...

//'தோல்வி' கண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன். எனெனில் வெற்றி கண்டிருந்தால் அதற்கு மேலே அறியத்தேவையில்லை என்ற உணர்வு வ்ந்துவிடும். ஆனால் தோல்வி மீண்டும் மீண்டும் அறியவும் வாசிக்கவும் புரிந்துகொள்கின்ற வெளியைத் தருவதால் வெற்றியை விட 'தோல்வியே' எனக்கு உவப்பானதென சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.//


...இது! அப்படிச் சிந்திப்பவர்களே அடுத்த கட்டத்தைத் தேடிச் செல்வதென்பது உண்மைதாம்.தோல்வியே சிந்தனையைத் தூண்டிவிடுகிறது.புற நிலையின் தன்மையைத் தோல்வி வருடிச் செல்வதால் அத்தகைய நிகழ்வு சிந்தனையை-கேள்வியைத் தூண்டுகிறது.நீண்ட தேடுதலோடு அனைத்தையும் உடைத்துப்பார்க்கும் மனம் உருவாகிவிடும்போது நிறைந்த வாசகத் தாகம் மேலிடுகிறது.அங்கே, தன்னியல்பாகவே தேடுதல் ஆரம்பமாகிறது.ஒவ்வொரு வார்த்தைகளையும் நுணுக்கமாக உடைத்துப் பார்க்கும் மனம் உருகிறதா?-அங்கேதாம் பன்மைத்துவப் பார்வைகள் சிந்தைக்குள் துளையிடுகிறது.இதை மறுத்துவிட்டு எவருக்கும் நிரந்தரமானவொரு தீர்ப்பைச் செய்துவிட முடியாது.காலவோட்டத்தில் மாற்றம்தாம் நிரந்தரமாகிறது.அங்கே, கருத்துக்களைக் காவு கொடுத்துவிடுவது மாற்றமல்ல.கருத்துக்களைக் காலத்தில் புரிந்து வளர்த்தெடுப்பதும்;நிலவுகின்ற தளைகளை அகற்றுவதற்கான புறநிலைகளை அதனோடு பொருத்தி வளர்த்தெடுப்பதில் பொருள்சார்ந்தும்;புறிநிலையை நியாயத்தன்வகைக்குள் இட்டுக்கொள்வதும் புரிதல்களின் முதற்படி.உங்கள் கருத்துக்களோடு ஒன்றிப்போக முடிகிறது.


அது,சரி.என்ன ஒரே அடிபாடாகக்கிடக்கிறது இன்றைய காலம்.அங்கால செருப்பு-யோனி இன்னொரு புறம் மூலமொழிப் புரிதல்-பின் நவீனத்துவம்,ஒழுக்கசீலம்,இங்கும் பின் நவீனத்துவம்...ஒரே இரணமாக மாறிவிடுமா? :-)))

சயந்தன் said...

நானறிந்தவரை எனது பதிவில் அற்புதன் மட்டுமே தொடர்ச்சியான உரையாடலைச் செய்திருந்தார்.//

சீரியசா கதைக்கிறீங்க. சொன்னால் பேசுவீங்களோ தெரியாது.. என்னென்றால்...

நானும்... வசந்தனும்.. கூட அப்பிடியொரு ...உரையாடல செய்திருந்தனாங்கள்.

http://vasanthanin.blogspot.com/2007/02/blog-post_4611.html

ஏதாவது பிழையா சொல்லிப்போட்டேனோ :(

சரவணன் said...

டிசே தமிழன், 'என்னுடைய பின் நவீனத்துவப் புரிதல்கள்' என்ற உங்கள் கட்டுரையின் சுட்டியை நான் தேடத் தேவையில்லாமல் தயாராக அளித்துவிட்டீர்கள்! நன்றி. பார்த், தெரிதா போன்றவர்களின் நூல்களைக் கற்று இப்பயணத்தில் நீண்ட தூரம் சென்றவர் என அறிந்துகொண்டேன். எப்படியோ, நீங்கள், ஜமாலன், அற்புதன் எல்லாம் பின்நவீனத்துவம் பற்றி மீண்டும் உரையாட என் பதிவு காரணமாய் அமைந்ததில் என்க்கு மகிழ்ச்சி.

பின்நவீனத்துவத்தைப் புரிந்துகொள்வதில் நிறைய இடறு குழிகள் (pit falls) உண்டு, மிகவும் கவனத்துடன் செய்யவேண்டிய காரியம் எனக் கூறலாமா? ஆங்கிலத்தில் இதற்கு பலர் கோனார் நோட்ஸ் போட்டுள்ளனர். இவற்றில் எவற்றை ஓரளவாவது நம்பலாம் என்பது குழப்பமாகவே உள்ளது.

ஆனாலும் இதைச்சொல்லி பயம் காட்டாமல் பலரையும் இதுகுறித்து ஆர்வங்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதே என் கருத்து ஃபிரான்ஸ் நாட்டில் சில கஃபேக்களில் தத்துவம் பற்றி சாதாரண மக்கள் விவாதிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். Moderate செய்ய தத்துவத்தில் முறையாகப் பயிற்சி பெற்ற ஒருவர் இருக்கிறார். அந்த மாதிரி இங்கு வலையிலாவது நிகழ்ந்தால் நல்லது.

மு. மயூரன் said...

//ஆகக்குறைந்தது எந்த விடயங்களில் எனது பதிவு 'தோல்வியை'த் தழுவியதென்றாவது கூறி நிராகரிக்கும் குறைந்தபட்ச நேர்மையாவது ஒருவருக்கு அவசியமென்று நம்புகின்றேன்.//

அங்கே நான் சொல்ல வந்தது, தத்துவம், கோட்பாடு தொடர்பான விளக்கமொன்றை, 24 மணி நேரத்தில் php என்பது போன்று எளிமையாக விளக்க முயல்தல் தோல்வியைத்தழுவும் என்ற கருத்தையே.

தவிரம், நீங்கள் மேற்கண்ட பதிவில் கூறியிருக்கும் கருத்து, விளக்கம் பொன்றவை பற்றியதாக எதுவும் சொல்ல வில்லை.

மற்றது, பின்னவீனத்துவம் குறித்த எனது சந்தேகங்களை கருத்துக்களை எனது புரிதலின், அறிதலின் அளவுக்கேற்ப, அதன் வளர்ச்சிப்பாதைவழி சொல்வதற்கான ஜனநாயகத்தை நான் கொண்டிருப்பதாகவே நம்புகிறேன்.

பின்னவீனத்துவம் குறித்த உரையாடல்களில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்ளாததற்கான காரணம் அதனை நான் சரியாக புரிந்துகொள்ளாமலிருப்பதுதான்.

சரவணனின் பதிவில் இடம்பெறும் உரையாடலில் கூட நான் எனது புரிதல் மட்டம் தொடர்பான முழு பிரக்ஞையுடனேயே இருக்கிறேன்.

பூர்தியாவின் துரித சிந்தனையாளர்கள் தொடர்பான கருத்துக்களை நானும் அறிந்திருக்கிறேன்.

மவுனமாகிப்போதலே அறிவின் முழுமை என்று இருந்த சித்தர்களைத்தவிர, பேசிய/பேசும் எவரும் துரித சிந்தனையாளர்களே.

வலைபப்திவு என்பதே துரித சிந்தனைகளைப் பதிவு செய்யும் ஊடகமாகத்தான் பிரபலம்.

தற்போது twiter பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அத்தகைய சிந்தனைப்பதிவுகள் நவீன வெளிப்பாட்டு வடிவங்களாக கருதப்படத்தொடங்குகிறது.

துரித சிந்தனைகளை மறுதலித்து, ஆழ அகல அறிந்தபின் நீ கருத்துக்கூறு என்று அதிகாரக்குரலில் அதட்டும் காலத்தை நாம் கடந்து வந்திருக்க வேண்டும் என்ன?

ஜமாலன் லேபிளை தனக்கு ஒட்டிக்கொள்ளவில்லை. ஜமாலனின் எல்லா எழுத்துக்களையும் நான் விரும்பி வாசிக்கிறேன்.

ஆனால் அவர் அந்த லேபிளுடனேயே வாசிக்கப்படுவதையும் அறிந்திருக்கிறேன்.

பின்னவீனத்துவத்துடனான என்னுடைய பிரச்சினை இரண்டு விடயங்களில் தான்.

1. பின்னவினத்துவர்களக தங்களைக் காட்டிக்கொள்ள முற்படும் எழுத்தாளர்களினது போலித்தனம், பிராமணீயம், நேர்மையீனம்.

2. அரசியல் ரீதியாக கட்டமைக்கப்படும் பின்னவீனத்துவம் எதிர் தமிழ்த்தேசியம், பின்னவீனத்துவம் எதிர் மார்க்சீயம் எனும் போக்கு. மற்றது இத்தத்துவம் நான் அறிந்த ளவுக்கு எனது "சொந்த சிந்தனையின் அடிப்படையில்" (கவனிக்க) உலகமயமாதலுக்கு சார்பாக இருப்பதாக நான் கருதுவது.

"பிரபல" தத்துவவாதிகளின் மேற்கோள்களுக்குள், நூற் பொழிப்புக்களாய் எழுதப்படும் எழுத்துக்களுக்குள் என் சுய சிந்தனையை ஒளித்து மறைத்து என்னைப்பாதுகாத்துக்கொள்ளும் வேலையை நான் எப்போதும் செய்ய விரும்புவதில்லை.



குறிப்பு:

அரசியல் சமூகப்போராட்ட விடயங்களில் மட்டுமே மேற்கண்ட எனது பார்வை செல்லுபடியாகும். தொழிநுட்ப ரீதியில் நான் பின்னவீனத்துவப்பார்வையை பெரிதும் பெரிதும் ஏற்றுக்கொள்ளும் ஒருவன்.

மு. மயூரன் said...

தோல்வி கண்டது என்ற சொல்லை எப்படி விளங்கிக்கொண்டு நீங்கள் இவ்வாவு தூரம் என்னோடு மோதவேண்டி ஏற்பட்டது என்று யோசித்துப்பார்த்து வியக்கிறேன் டி சே தமிழன்.

எனக்கு இன்னும் புரியவில்லை.

மு. மயூரன் said...

//இன்னமும் பின் நவீனத்துவம் 'எல்லாவற்றையும் அழிக்க வந்ததாய்' அடிக்கடி கவலைப்படும் மு.மயூரனிற்காய் //

எப்போது இப்படிச்சொன்னேன்?

//மார்க்சீயம் போன்ற மக்கள்சார்பான, உலகை மாற்றமுடியும் என்று நம்பிக்கை அளித்து அதற்கான சமன்பாடுகளை உருவாக்கிக்கொடுக்கும் , வளரும் தன்மையுள்ள கோட்பாடுகள் விட்டுப்போன, பார்க்கத்தவறிய இடைவெளிகளை, சிறு சிறு நிழல்களை, புரிந்துகொள்ளவும், தவறுகளை debug பண்ணிக்கொள்ளவும் உதவும் ஒரு மேலதிக வெளிச்சமாகவே பின்னவீனத்துவத்தை என்னால் அணுக முடிகிறது.//

கடைசியாக சரவணனுக்கு நான் போட்ட பின்னூட்டம் கூட இவ்வாறுதானே இருந்தது?

எதற்கும் அந்த நாலாவது குறிப்பை நீங்களும் படித்துவிடுவது நன்மை பயக்குமோ என்னவோ...

ஜமாலன் said...

நண்பர் டிசேவிற்கு...

உங்களது பழைய பின்நவீனப் பதிவை இப்பொழுதுதான் படித்தேன். காரணம் நான் பதிவுலகிற்கு வருவதற்கு முன்பு எழுதப்பட்டது அது. நான் பதிவுலகம் அறிமுகம் ஆன மறுநாளே பதிவும் துவங்கியதால் வாசிப்பும் பதிவெழுத்தும் ஒரே காலத்தில் துவங்கியவைதான். அப்பதிவில் நீங்கள் சரியான ஒரு பார்வையை தொகுத்துள்ளீர்கள். நண்பர் அற்புதனுடன் ஆன உரையாடலிலும் உங்கள் இருவரது பங்கும் சிறப்பான பல கருத்தக்களை சொல்கின்றன. நிற்க.

பின்நவீனத்துவம் குறித்த உரையாடல்கள் என்பது ஒரு அலுப்பூட்டும் நிகழ்வாக மாறிக்கொண்டுதான் உள்ளது. தற்சமயம் மீண்டும் தொடர்கிறது. வலைப்பதிவில் நடைபெறும் சோர்வூட்டும் அடிபிடிகளுக்க மத்தியில் இந்த உரையாடல்கூட ஒரு மாற்றுதான்.

//நானறிந்தவரை- நண்பர் ஜமாலன் தன்னை ஒரு மார்க்சியராகவே அடையாளங்காட்ட விரும்புகின்றவர் என வெளிப்படையாக -தனது பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ- அறிவித்துக்கொண்டவரென நினைக்கின்றேன். //

என்னைப்பற்றிய உங்கள் புரிதல் சரியானதே. நான் மார்க்சிய நோக்கில் சிந்திப்பது என்பதையே எனக்கான முறையியலாக நம்பிக் கொண்டுள்ளேன். அப்படி சிந்திக்கிறேனா? என்பது வேறு. அதேவேளையில் 'பின்நவீனத்துவ நிலமை' என்பதை மார்க்சியத்தை கொண்டு புரிந்துகொள்ள முனைகிறேன். இது பகிர்தலான வாசிப்புதான். இரண்டுக்குமிடையிலான ஒரு கொடுக்கல் வாங்கள்தான். நாமும் வாசிப்பில்தான் இருக்கிறோம். நம்மை ஒரு முற்றுணர்ந்தவராக எண்ணி கேட்கப்படும் கேள்விகள் வழியாகத்தான் நாமும் இதனை நமக்குள் தெளிவுப்படுத்திக் கொள்ள முனைகிறோம். நண்பர்கள் மயூரன் மற்றும் அற்புதன் சில புள்ளிகளை முன்வைத்துள்ளனர் உரையாடலாக நண்பர் சரவனண் பதிவில்.அதற்கு நான் தனிப்பதிவாகத்தான் எழுதலாம் என்று உள்ளேன். காரணம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட பணிகளுக்கிடையில்தான் இதனை செய்ய வேண்டியிருக்கிறது.

நன்பர்கள் பொறுமை காப்பார்கள் என எண்ணுகிறேன். லேபிள்கள் என்பத மதலாளித்தவ சரக்கு உற்பத்தியன் எச்சமாக உள்ள சிந்தனை. அதனால் 'லெபிள்' 'முத்திரைக் குத்துதல்' ஆகியவற்றை நண்பர்கள் தவிர்ப்பது நல்லது.

நன்றி.
அன்புடன்
ஜமாலன்.

Anonymous said...

பின்னவீனத்துவம் பற்றிய மு.மயூரனின் பிரச்சனைகளாக இரண்டைக் கூறுகிறார் மயூரன். அவை இரண்டும் பிரச்சனைகளாகக் காணப்படாதவிடத்து சில வேளை மு.மயூரன் பின்னவீனத்துவத்தை ஏற்றுக் கொள்ள(!?)க் கூடும்.

பின்னவீனத்துவம்(!) தொடர்பாக மயூரனின் பிரச்சனைகளைப் பார்ப்போம்.

1. //1. பின்னவினத்துவர்களக தங்களைக் காட்டிக்கொள்ள முற்படும் எழுத்தாளர்களினது போலித்தனம், பிராமணீயம், நேர்மையீனம்.//

பின்னவீனத்துவர்களாகத் தம்மைக்காட்டிக் கொள்பவர்களுக்காக பின்னவீனத்துவத்தை நோகலாமா மயூரன்? சின்னப் புள்ளைத் தனமா இருக்கு. அப்போ, மார்க்சீயர்களின் போலித்தனம் உங்களுக்கு தெரிந்தவுடன் மார்க்சீயத்துடன் பிரச்சனைப்பட ஆரம்பித்துவிடுவீர்களா என்ன?

சரி. உங்களுக்கு போலித்தனமாக தெரியும் விடயம் சிலவேளை அவர்களுக்கு 'போலியற்று' இருக்க கூடும் இல்லையா? நீங்கள் போலியென அவர்கள் நினைக்கக் கூடும் இல்லையா? எலோரும் உங்கள் சட்டகத்தில் இயங்க வேண்டும் என நினைப்பது பிழையான விடயம் இல்லையா? நீங்கள் நேர்மையீனமானவர் என நிறுவிவிட்டால், நாம் மார்க்சீயத்துடன் பிரச்சனைப்பட முடியுமா என்ன?

நீங்கள் பிராமணியம் என கருதும் இடங்கள் எவை? அவை தொடர்பாக சற்று விரிவாகச் சொன்னால் நல்லாயிருக்கும்.

2. //2. அரசியல் ரீதியாக கட்டமைக்கப்படும் பின்னவீனத்துவம் எதிர் தமிழ்த்தேசியம், பின்னவீனத்துவம் எதிர் மார்க்சீயம் எனும் போக்கு. //

இவ்வாறு கட்டமைப்பதையே பின்னவீனத்துவம் எதிர்க்கிறது. நீங்கள் தான் கட்டமைக்கிறீர்கள். நீங்களே கட்டமைத்துவிட்டு அதனால் எதிர்க்கிறோம் என சொல்வது வேடிக்கையானது. பீன்னவீனத்துவ எழுத்தாளர்களாக உள்ள பலரும் எதோ ஒரு கட்டத்தில் மார்க்க்சீயம் மீதான சாதகப்பார்வையை முன்வைத்தே வந்திருக்கிறார்கள். மார்க்சீயத்தின் பெருங்கதையாடல் தன்மை நிராகரிக்கப்பட்டதே தவிர பல பின்னவீனத்துவர்களால் ஒடுக்கப்படும் சமூகம் சார்ந்த பார்வை மறுதலிக்கப்படவும் இல்லை. இன்னும் மேலாக ஒடுக்கப்படும் சமூகம் எனும் பார்வை வித்தியாச அங்கீகரிப்புகளுடன் விளிம்பு சமூகமாக விரிவு பெற்றது என என்னால் கூற முடியும். அதிலும் விசேடமாக நிலைப்படுத்தப்படாத சமூககமாக நிலையான வரைமுறைகளைத் தாண்டியதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

பின்னவீனத்துவத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இடைநிலைத் தேசியவாத்தை ஆதரிக்கும் பார்வையும் உள்ளது. மார்க்சீயத்தை அடைவதற்கான சமூகத்தயாரிப்பை வழ்ங்கும் பார்வையும் உள்ளது. அதில் தாராளவாத்தை ஆதரிக்கும் கூட்டமும் உள்ளது. அந்த ஒன்றை வைத்துக் கொண்டு உலகமயமாதலை பின்னவீனத்துவம் ஆதரிக்கிறது என்று சொல்கின்றீர்கள்.

அதுக்குள்ள /"சொந்த சிந்தனையின் அடிப்படையில்"/ என்று சொல்கிறீர்கள். உங்களது சுய சிந்தனை என்ன? மு.மயூரன் சிலவேளை பிராமணியத்தை ஆதரிக்கும் பலரும் இவ்வாறு சொல்லித் தப்பித்துவிட முடியும். மார்க்சீயத்தை அவ்வாறு அவர்கள் நிராகரிக்க கூடும். அதற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது மயூரன்?

எங்கேயோ டோண்டு சொன்னதாக ஞாபகம் தனது மகள் ராம மந்திரத்தை உசரிப்பதன் காரணமாக அவருக்கு ஒன்றுமே நடந்து விடாது என்பதாக. சில வேளை அவர் நினைக்ககூடும் /"சொந்த சிந்தனையின் அடிப்படையில்"/ தான் வாழ்வதாக...... சொந்த சிந்தனை என்றால் என்ன? அல்லது டி.ஜே சொந்த சிந்தனை அற்றவர் பீன்னவீன நூல்களுக்குள் வைத்துத் தன்னைக் காப்பாற்றுகிறார் என நினைக்கிறீர்களோ என்னவோ நான் அவ்வறு நினைக்கவில்லை.

உதாரணமாக பூமி தட்டையாகத் தெரிகிறது. சூரியன் பூமியைச்சுத்துவது போல் தெரிகிறது. இல்லை பூமி உருண்டை அல்லது பூமிதான் சூரியனைச் சுத்துகிறது என்பதை கூறும் போது 'சொந்த சிந்தனையின்' அடிப்படையில் பலர் அக்கருத்தை நிராகரித்திருக்கக்கூடும். பல விடயங்களை வாசித்தறிதல் என்பது அதிகாரம் என்று கூறி நிராகரித்துவிட முடியாது மயூரன். பூமி தட்டைதான் எனக்கூறும் போது இல்லை அது தட்டையல்ல. உருண்டை எனக்கூறுபவர் அதற்கான சான்றுகளை முன்வைக்க வேண்டும் அதேவேளை அது தட்டைதான் எனக் கூறுபவர் எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான் உன்னுடைய உதாரணங்களைக் கொண்டுபோய் உன்னுடன் வைத்துக் கொள் என்று கூறிவிட முடியாது. அது தொடர்பான உரையாடலுக்கு தன்னைத்வ் தயார்படுhதல் வேண்டும் என நினைக்கின்றேன். இல்லையா?

ஒருவேளை அப்படி இருந்தாலும் 'சொந்த சிந்தனை'க்கு கற்பூரம் காட்டிப் பூசை செய்வதைவிட புதிய கருத்துக்கள் ஊடாக தேக்கமற்று தேடுவது சிறந்தது என்பேன்.

#[புகை]

மு. மயூரன் said...

புகை,

நீங்கள் தந்திருக்கும் பதில் மு.மயூரன் என்ற பெயருக்கானதாகத் தோன்றுகிறதே தவிர, நான் சொன்ன கருத்துக்களுக்கானதாகத் தெரியவில்லை.

அறிவின் அதிகாரம் பற்றி நான் சொல்லும் போதெல்லாம் (என் கண்டுபிடிப்புச் சரியாகவிருந்தால், இரண்டு தடவை) நீங்கள் வந்து நான் கற்றறிதலுக்கு எதிரானவன், கற்றலை மறுத்து தேங்கிப்போனவன் என்றமாதிரி பிம்பத்தை உருவாக்கி வைத்துக்கொள்கிறீர்கள்.

ஜமாலனின் எழுத்து எனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருப்பதன் பல காரணங்களுள் முக்கியமானது அந்த எழுத்தில் அதிகாரத்தொனி இல்லை என்பதே.

மற்றது சுயசிந்தனை என்று சொல்வது, கற்றதை "process" பண்ணுகிற உழைப்பையும், அதிலிருந்து வரும் எமது புரிதலையும். இது தொடர்ச்சியாக மூளைக்குள் நிகழும் உழைப்பு. இந்த உழைப்பின் விளைபொருள் கருத்துக்களாக் அவரும்போது அதில் "இடர்" அதிகம்.
அக்கருத்துக்களுக்கு நம முழுப்பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் எம்மைக் காப்பற்ற எந்த மேற்கோள்களும் துணைவராது.

எனது கருத்துக்கள் குறைபாடானவையாக, போதாதவையாக இருக்கலாம். அதனாற்றானே உரையாட வருகிறேன்?

அதுசரி, இதில் டி சே எங்கே வந்தார்?
சும்மாவே நான் தோல்வி என்று எதையோ சொல்லப்போக அதை அவர் இவ்வளவு தூரம், தனிப்பதிவு போடுமளவுக்கு எதிர்கொள்ள வேண்டிஉ வந்தது. இப்போ புதிதாக ஒரு முடிச்சு விழுகிறது.

நாம் எந்தக்கோட்பாட்டையும் சிக்கெனப்பிடித்துக்கொள்ள முடியாது. எமது உலகப்பார்வையோடு ஒத்துவரக்கூடிய கோட்பாடுகளை , எமதந்தப்பார்வையை விருத்தி செய்யவும் முன்கொண்டு செல்லவும் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் அவ்வளவே.

எனது கருத்துக்களை விமர்சிப்பது உங்களுக்கு முக்கியமான ஒரு வேலையாக இருக்குமானால் தயவு செய்து நான் சரவணனின் பதிவிலும் இங்கேயும் போட்ட பின்னூட்டங்களை ஒருமுறை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள். இல்லை எனில் அத விட முக்கியமான வேலைகளில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.

தத்துவ விசாரங்களில் எழுத்தெண்ணி விமர்சித்து விவாதிக்க நான் அவ்வளவு தேர்ந்த தத்துவவியல் மாணவன் அல்ல. அன்றாடம் பார்க்கும் உலகில், நடைமுறைகளில் "பின்னவீனத்துவம்" எனும் லேபிளொட்டிக்கொண்டு வரும் கருத்துக்களும் எழுத்துக்களும் என்னுள் எழுப்பும் சந்தேகங்களை , அதன் வழி நான் கருதுபவற்றை இத்தகைய உரையாடல் நிகழக்கூடிய வெளிகளில் வெளியிடுகிறேன்.

மு. மயூரன் said...

//பெருங்கதையாடல் தன்மை நிராகரிக்கப்பட்டதே தவிர//

பெருங்கதையாடல் என்பது தவறானதா? நிராகரிக்கப்பட வேண்டியதா?


blogging-twitter-துரித சிந்தனையாளர்கள், x-group எழுதிய பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்த திரைப்படம் மீதான விமர்சனம், பின்னவீனத்துவம் மக்கள் சார்பாக இயங்கி வெற்றிபெற்ற நடைமுறை உதாரணங்கள், பிள்ளையான் குழு இவை குறித்த பார்வையினை "புகை" யிடமிருந்து அறிய ஆவலாயுள்ளேன்.

இளங்கோ-டிசே said...

மு.மயூரன், உங்களைப் போன்றவர்களின் முக்கிய பிரச்சினை என்ன என்றால்...
ஒன்று பின் நவீனத்துவத்தை அதற்குரிய 'மொழியில்' எழுதும்போது, 'எங்களுக்கு விளங்காததை எழுதுகின்றார்களென' குற்றவோலைகளை வாசித்தபடி வருவீர்கள். சரி எளிமையான மொழியில் சாத்தியமாகக்கூடிய சாதாரண உதாரணஙகளுடன் எழுதலாம் என்று தொடங்கினால், இதில் ஒன்றுமேயில்லை இதையா வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் (அல்லது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது) என்று எளிமைப்படுத்திவிட்டு போய்விடுபவர்களாய் இருக்கின்றீர்கள்.

நான் எழுதிய அக்கட்டுரை மிக எளிதான புரிதல்களைக் கொண்டது. எவரது கட்டுரைகளையோ (அ.மார்க்ஸ் தவிர,) இன்னபிற உசாத்துணைகளையோ துணைக்கழைக்காது என்னுடைய புரிதல்களை என்னுடைய மொழியில் -விளங்கக்கூடியவளவில் உதாரணங்களை வைத்து- எழுதியிருந்தேன்.

உடனே...நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்
/அங்கே நான் சொல்ல வந்தது, தத்துவம், கோட்பாடு தொடர்பான விளக்கமொன்றை, 24 மணி நேரத்தில் php என்பது போன்று எளிமையாக விளக்க முயல்தல் தோல்வியைத்தழுவும் என்ற கருத்தையே.../

என்று 'தோல்வி'யென உடனேயே முடிவு செய்துவிடுகின்றீர்கள்.

சரி, எளிமையாக விளக்க முயன்றதால்தானே 'தோல்வி'யைத் தழுவுகின்றதென ஓரளவு இந்த இந்த எழுத்தாளர்களை வாசித்துத்தான் எனது புரிதல்களை வளப்படுத்திவருகின்றேன் என்றால்.....

உடனேயே...
/"பிரபல" தத்துவவாதிகளின் மேற்கோள்களுக்குள், நூற் பொழிப்புக்களாய் எழுதப்படும் எழுத்துக்களுக்குள் என் சுய சிந்தனையை ஒளித்து மறைத்து என்னைப்பாதுகாத்துக்கொள்ளும் வேலையை நான் எப்போதும் செய்ய விரும்புவதில்லை./
என்கின்றீர்கள்.

நீங்களே ஒன்றுக்கு பின்னுக்கு முரணாக பேசிக்கொண்டிருப்பது தெரியவில்லையா? உங்களுக்கு எளிய புரிதலாய் இருப்பதும் கசக்கிறது, பிறகு மூல நூலாசிரியர்களை முன்வைத்துப் பேசினாலும் அலுப்பாயிருக்கின்றது. என்ன கொடுமை இது?

ஒரு சிறிய பின்னூட்டத்திலேயே என்ன பேசுகின்றோமென எனத் தெளிவாக உங்களால் பேசமுடியாதிருக்கும்போது, எப்படி உங்களால் பின் நவீனத்துவ புரிதல்கள் உங்களுக்கேற்ற perfect ஆன மொழியில் எழுதப்படவேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள்? அப்படி எழுதுபவரிடமிருந்து ஒன்றை எதிர்பார்ப்பது வன்முறையல்லவா?
----------------------------------------------

1. எனது பின் நவீனப்புரிதல்கள் கட்டுரை 'தோல்வியைக் கண்டதற்கு காரணங்களை உங்களை முன்வைக்கப்படும்படி நான் கேட்கும்போது...
/.... எளிமையாக விளக்க முயல்தல் தோல்வியைத்தழுவும் என்ற கருத்தையே./
என்கின்றீர்கள். நன்று. மீண்டும் எனது அந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். முதலிரு பந்திகளில் இந்தத் 'தோல்வி' குறித்து தெளிவாகவே பேசியிருக்கின்றேன். அதாவது எப்படி எனது பி.ந புரிதல் ஆரம்பித்தது என்றும், எனது தவறான புரிதல்களை எப்படிக் கட்ந்துவந்தேனெனவும், மேலும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாய் இவை குறித்து வாசித்ததை வைத்துக்கூட என்னுடைய புரிதல்கள் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கின்றதெனச் சொல்லியிருக்கின்றேன்.

மேலும், நான் எப்படி பி.ந விளங்கிக்கொள்ளமுயன்றேன் என்ற அறிமுகத்தைக் கொடுத்ததுகூட, ஒருவர் வாசித்த உடனேயே பின் நவீனத்துவம் விளங்கவில்லை என்று எண்ணிச் சலிப்படையவோ/பயந்தோடவோ தேவையில்லையென்ற காரணத்துக்காகவே கொடுத்திருந்தேன். எனது பிரதியே அந்தத் 'தோல்வி' குறித்து விரிவாகப் பேசியபின்னும், இப்போது 'இதுதான்' அந்தக்கட்டுரை தோற்றதிற்கான காரணமென ஒரு சப்பைக் காரணத்தை -அதுவும் ஒராண்டாண்டுக்குப் பிறகு- நீங்கள் சொல்வது குறித்துத்தான் நான் அதிகம் யோசிக்கின்றேன்.

மேலும் தத்துவம், கோட்பாடு என்பதெல்லாம் பின் நவீனத்துவத்தில் இல்லை.. (அற்புதனுடனான -பழைய- உரையாடலைக் கவனியுங்கள்...இன்னும் சொல்லபோனால் ஏகாதிபத்தியம்/உலகமயமாக்கல் போன்றவற்றை ஒரு முறையான அமைப்போடு எதிர்க்க நமது இறுதி நம்பிக்கை மார்க்சிசம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்).

தத்துவங்கள் என்பதே பெருங்கதையாடல் என நிராகரித்துதான் பி.ந எழுப்பப்பட்டிருக்கின்றது. இவ்வாறான புரிதல்களோடுதான் அந்தப்பிரதி எழுதப்பட்டிருக்கும்போது 24 மணித்தியாலத்தில் அல்ல, ஒரு வருடம் ஆனால் கூட புரிந்துகொள்ள நிறைய வாசிப்பும், உரையாடலும் இல்லாதபோது அதனுள் நுழைதல் கடினமென வாசிப்பவர்கள் அறியமாட்டார்களா என்ன?

3. கவனிக்க, எனது அந்தக்கட்டுரை மூல நூலாசிரியர்களின் நூற்கள் எதையும் வாசிக்காமலேயே எழுதப்பட்டது என ஆரம்பத்திலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன். அத்துடன் நான் வாசித்துப் புரிந்துகொண்டவற்றை நடைமுறையில் உள்ள விளங்கக்கூடிய உதாரணங்களுடன்தான் விளங்கப்படுத்த முயன்றிருந்தேன்.

ஆக உங்களின் முரண்பாட்டு சிந்தனையில் சொல்வதனால்...
/"பிரபல" தத்துவவாதிகளின் மேற்கோள்களுக்குள், நூற் பொழிப்புக்களாய் எழுதப்படும் எழுத்துக்களுக்குள் என் சுய சிந்தனையை ஒளித்து மறைத்து என்னைப்பாதுகாத்துக்கொள்ளும் வேலையை நான் எப்போதும் செய்ய விரும்புவதில்லை./
என்ற உங்களின் விருப்புக்கேற்பவே நானும் எழுதியுமிருக்கின்றேன் என்பது நிரூபணமாகின்றது. ஆக நான் புரிந்துகொண்டவற்றை எனது 'சுயசிந்தனையின்' அடிப்படையில் நடைமுறை உதாரணங்களுடன் எழுதினாலும் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கின்றது. ஜயகோ பிறகு நாம் எங்கேதான் போவது?

3. துரித சிந்தனையாளர்க்ள் என்பதில் நான் சொல்ல்வந்தது வேறுவிடயம். சித்தர்களையெல்லாம் உதாரணத்திற்கு எடுக்கின்றீர்கள். அவ்வளவு தூரம் போகவெல்லாம் வேண்டாம். நான் சொல்லவந்தது, ஒரு விடயத்தைப் பற்றி எழுதவோ/கேள்வி எழுப்பும்போதோ, அது குறித்து கொஞ்சமாவது வீட்டுப்பாடம் (homework) செய்வது குறைந்தபட்ச வாசிப்புப்பண்பு என நினைக்கிறேன். நம் எல்லோருக்கும் அந்த தார்மீகப் பண்பு (homework செய்வது) இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்.

துரித சிந்தனைகள் என்று, வலைப்பதிவுகள் உட்பட என்ற x-group உதாரணங்களுடன் வருகின்றீர்கள். சிந்தனைகளையும் எதிர்வினைகளையும் ஒன்றாய்ப் போட்டு சாம்பாராக்கவேண்டாம். இங்கே x-group மட்டுமில்லை, மேர்வின் சில்வாவுக்கு(?) சாயமடித்ததுகூட உடனடி எதிர்வினையேதானே தவிர சிந்தனையின் பாற்பட்டதல்ல. சற்று விரிவாகப் பார்ப்போமா....எங்கள் வளாகத்தில் அரசியல் வேட்பாளர்களுக்கான விவாதம் நடந்தபோது ஒரு கட்சியின் அரசியல்வாதி gay நண்பர்களைப் பற்றித் தவறான கருத்தொன்றை வெளியிட்டார். அவர் மன்னிப்புக்கோரும்வரை அவரை அந்த அரங்கிலிருந்து வெளியே விடுவதில்லையென அறையப்பூட்டி மாணவர்கள் சுற்றிவளைத்துவிட்டார்கள். பல மணித்தியாலங்களாய் மாணவர்களின் இந்த மனிதச்சங்கிலி இயக்கம் நடந்தது. இறுதியில் எந்த அதிகாரத்தைப் பாவித்தும் தப்பித்துப்போகமுடியாது என்று உணர்ந்த அந்த அரசியல்வாதி மன்னிப்புக்கேட்டே அங்கிருந்து நகரமுடிநத்து.

சரி இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் நாளை gay rights பற்றிக் கலந்துரையாடவே அது குறித்து அறிதல்களை வளர்த்துக்கொள்ளவோ வாருங்களென அழைத்தால் கூடுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? அந்தப்பொழுதில் எங்களுக்கு ஆதரவாய்க் கூடிய மாணவர்கள் உடனேயே 'எதிர்வினை செய்யவேண்டும்' என்ற உந்தலில்தான் கூடியிருக்கின்றார்கள்.

ஆனால் எதிர்வினைகள் சிந்தனைகளாவதில்லை. அது தொடர்ச்சியாக வளர்க்கப்படவேண்டியவை. சிந்தனைகளே உரையாடல்களுக்கான வெளியைத் திறந்து வைக்கின்றனவே தவிர எதிர்வினைகளிலிருந்து உரையாடல்களை ஆரம்பிக்கமுடியாது. இங்கே x-group செய்வது உடனடி எதிர்வினை. தொடர்ச்சியான இவ்வாறான விடயங்களுக்கு எதிர்ப்புக் காட்டவேண்டும் என்றால் இது குறித்த சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படவேண்டும். இந்த சிந்தனைகளே பிறகு எதிர்வினைகளை உருவாக்கும் (இன்று வளாகத்திலிருக்கும் அந்நண்பர்கள் வளாகத்தைவிட்டுப்போனாலும்,புதியவர்கள் இவ்வாறான விடயங்களுக்கு எதிர்வினை செய்வார்கள்....). இன்னும் எதிர்வினை, சிந்தனைகள் வேறுபாட்டுக்கு எளிய உதாரணமாய் ஒருவருக்கு மீனைப் பிடித்துக்கொடுப்பதைவிட மீன் எப்படிப் பிடிப்பது என்று சொல்லிக்கொடுப்பதுமாதிரியான உதாரணம் (இது எனது 'சுயசிந்தனைதான்)


3. /மற்றது, பின்னவீனத்துவம் குறித்த எனது சந்தேகங்களை கருத்துக்களை எனது புரிதலின், அறிதலின் அளவுக்கேற்ப, அதன் வளர்ச்சிப்பாதைவழி சொல்வதற்கான ஜனநாயகத்தை நான் கொண்டிருப்பதாகவே நம்புகிறேன்/

நிச்சயமாக. அது எல்லோருக்கும் உளது. உங்களுக்குரிய வெளியை நான் மதிக்கின்றேன். எனது அறிதலை முன் வைத்துத்தான் வளர்மதியோடு, ரோலன் பார்த்தின் pleasure of the text ஐ எழுத்துப்பிரதிகளுக்கு மட்டுமா முன்வைத்துப் பார்க்கவேண்டும் என்றும் உரையாடியிருக்கின்றேன். எதுவென்றாலும் பரிசோதனைக்குட்படுத்தாவிட்டால் அதனால் எந்தப்பயனுமில்லை என்பதோடு எமக்கான காலத்தோடு/புரிதலோடு மாற்றிக்கொள்ளாதவிடத்து அவை நின்று நிலைக்கப்போவதுமில்லை என்பதை நம்புபவன் நான். அவ்வாறே உங்களுக்கான அறிதலின் வழி எதுவாயினும் அதை நிராகரிக்கப்போவதுமில்லை.

5./துரித சிந்தனைகளை மறுதலித்து, ஆழ அகல அறிந்தபின் நீ கருத்துக்கூறு என்று அதிகாரக்குரலில் அதட்டும் காலத்தை நாம் கடந்து வந்திருக்க வேண்டும் என்ன?/
எல்லாவற்றையும் ஆழ அறிந்தபிந்தான் கேள்வி எழுப்பமுடியுமெனில் நாம் எதை நோக்கியும் கேள்விகள் எழுப்பமுடியாது. எப்போதும் கேள்விகளை எழுப்பலாம். ஆனால் அவை அக்கறையோடு எழுப்பப்படுவதற்கும், எங்கே உன் காலை வாருகின்றேன் பாரென்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும் வித்தியாசமுண்டு. ஏற்கனவே கூறியதுமாதிரி எதுவென்றாலும் தம்மை நோக்கி எழுப்ப்படும் கேள்விகளுக்கு எதிர்வினை செய்வதை/பொறுப்பாய் பதிலளிக்கவேண்டியதை பின் நவீனத்துவம் ஒருமுக்கிய பண்பாய் வளாத்தெடுத்திருக்கின்றது.

இங்கே சொல்வதற்கு சற்றுத் தயக்கமாயிருந்தாலும், உங்களது பதிவுகள்/ பின்னூட்டங்கள் என்பவற்றை தொடர்ந்து அவதானித்தவகையில் உங்களுக்கு பின் நவீனத்துவ fever இருப்பதான எண்ண்ம எனக்குண்டு. விரலைச் சூப்புகின்ற குழந்தை மாதிரி இருந்துகொண்டு அப்படியா எப்படி? என்று திருப்பிக்கேட்கமாட்டீர்களென நம்புகின்றேன் (எடுத்துக்காட்ட் உங்கள் பதிவுகளுக்கு இப்போது உள்நுழைய அனுமதியில்லை. ஏனப்படி இருக்கின்றது என்ற காரணமும் நானறிவேன். எனவே அதொரு பிரச்சினையுமில்லை. மேலும் எனக்கும் அதற்குள் நுழைந்து அகழ்வராய நேரமுமில்லை).

6. /ஜமாலன் லேபிளை தனக்கு ஒட்டிக்கொள்ளவில்லை. ஜமாலனின் எல்லா எழுத்துக்களையும் நான் விரும்பி வாசிக்கிறேன்.

ஆனால் அவர் அந்த லேபிளுடனேயே வாசிக்கப்படுவதையும் அறிந்திருக்கிறேன்./


விழுந்தாலும் மீசை மண் ஒட்டவில்லையென்ற கதை....உங்களுக்கே நீங்கள்- at the first place-ல் என்ன சொல்லவந்தீர்களெனறு புரியும் என நினைக்கின்றேன். தவறைத் தவறென்று ஒப்புக்கொள்வதில் நாம் இழக்கப்போவது எதுவுமேயில்லை என்பதை மட்டும் சொல்லிவைத்துவிடுக்கிறேன்.

ஜமாலனின் எழுத்துக்களை நீங்கள் எப்படி வாசிக்கின்றீர்களெனச் சொல்லுங்கள்..ok. ஆனால் மற்றவர்கள் அப்படி வாசிக்கின்றார்கள் இப்படி வாசிக்கின்றார்கள் ஏன் அவர்களின் குரலில் நீங்கள் பேச முனைகின்றீர்கள்.

இங்கே கூட நீங்கள் 'அரசியல்' செய்கின்றீர்கள். சரவணனின் பதிவில் பின்னூட்டம் இடும்போது, இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய டிசே தமிழனின் (கவனிக்க பெயர்/பெயரின் அரசியல்) பதிவு தோல்வி கண்டதை நினைவுகொள்ளமுடிகின்ற உங்களுக்கு, நான் உங்கள் அரைகுறையான புரிதலகளைச் சுட்டிக்காட்டி நீங்கள் கருத்து கந்தசாமியாக செயற்படுவதை வெளிப்படுத்தியபின் நிவேதாவின் பதிவில் மீண்டும் இப்படி பின்னூட்டமிடுகின்றீர்கள்...
/எனது முன்னைய பின்னூட்டத்தினை, வேறொருவர் தனது தனிப்பட்ட பதிவில் கண்டித்திருக்கின்றார்/
அங்கே எனக்கென்றிருக்கும் 'பெயர்' மறைந்து 'வேறொருவர்' என்பதுகூட ஒருவகை நுண்ணரசியல்தான் (அல்லாதுவிடின் உங்களுக்கு short term memory loss இருக்கக்கூடும்).

இன்னும் கூட ஜமாலனுக்கு பின் நவீனத்துவ லேபிள் ஒட்டியது தவறென்று -நான் நிரூபித்துவிட்டபின்னும் கூட - ஒப்புக்கொள்ளமாடேன் என்கின்றீர்களே...நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று காலாக்கும். இதைக்கூட உங்களுக்கிருக்கும் பின் நவீனத்துவ fever ஜ வெளிப்படுத்தவே தவிர வேறு எதற்கும் அல்ல என்பதை ஒரு குறிப்பாய் பதிந்துவிடுகின்றேன்.
(தனிப்பட்டு ஜமாலனிடம் மன்னிப்புக் கோருகின்றேன். தேவையில்லாது அவரைப் பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு).


இனி உங்களின் பின் நவீனத்துவ புரிதல்கள் எப்படித்தவறாக விளங்கப்பட்டிருக்கின்றதெனப் பார்ப்போம்.

/பின்னவீனத்துவத்துடனான என்னுடைய பிரச்சினை இரண்டு விடயங்களில் தான்.

1. பின்னவினத்துவர்களக தங்களைக் காட்டிக்கொள்ள முற்படும் எழுத்தாளர்களினது போலித்தனம், பிராமணீயம், நேர்மையீனம்.


பின் நவீனத்துவம் பகிடியை/எள்ளலை எல்லாம் வரவேற்கின்றது என்பதற்காய் இப்படியா நகைச்சுவை செய்வது. அட இதற்காக மட்டுந்தானா, இவ்வளவு காலமும் பின் நவீனத்துவம் என்றால் நாயைக் கண்டால் கல்லையெடுவென அங்குமிங்குமாய் பேசிக்கொண்டிருந்தீர்கள்?

பின் நவீனத்துவர்களாய்ச் சொல்பவர்களில் மட்டுமா இந்தப் போலித்தன்மை இருக்கின்றது? குறைகளும் கறைகளுமற்ற ஒரு சமுதாயத்தை நோக்கிக் கனவு கண்ட நவீனத்துவத்திலேயே மு.மயூரன் நீங்கள் தேங்கி நிற்பது உங்களுக்கு புரியவில்லையா? அப்படியான குறையும் கறையுமற்ற சமுதாயம் ஒரு கனவே என்ற பெருங்கதையாடலை உடைத்துத்தானே பின்னவீனத்துவம் நகர்ந்தது அறியவில்லையா? போலி மார்க்சியர்கள்/ போலி தேசியர்கள் என்ற மற்ற வகைகளுக்குள் அப்படி ஒருத்தரும் இல்லையா, பின் நவீனத்துவத்தில் மட்டுமா போலிகள் இருக்கின்றார்கள்? ஹிப்பிகளை/ ஹோமோசெக்சுவல் நபர்களை அழித்துவிட்டால் உலகம் அழகாகிவிடும் என்ற நமது சர்வாதிகாரிகள் கடந்தகாலத்தில் நினைத்துபோல, பின் நவீனத்துவர்களை அழித்தொழித்தால் உலகம் அழ்காகித்தான் விடும் போலும்.

2. அரசியல் ரீதியாக கட்டமைக்கப்படும் பின்னவீனத்துவம் எதிர் தமிழ்த்தேசியம், பின்னவீனத்துவம் எதிர் மார்க்சீயம் எனும் போக்கு. மற்றது இத்தத்துவம் நான் அறிந்த ளவுக்கு எனது "சொந்த சிந்தனையின் அடிப்படையில்" (கவனிக்க) உலகமயமாதலுக்கு சார்பாக இருப்பதாக நான் கருதுவது./

ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி எதிரெதிர் துவித நிலைகளில் வைத்து உரையாடுவதை பின் நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லையெனச் சொல்லியிருக்கின்றேன். உலக மயமாக்கலுக்கு சார்பாக பின் நவீனத்துவமா இருக்கின்றதா? என்னவொரு புரிதல்? நந்திக்கிராமத்தில் நடப்பதென்ன தோழரே? அல்லது தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் வந்திறங்க முயற்சிப்பதென்னவாம் ? இல்லை லத்தீன் அமெரிக்காவில் உலகமயமாக்கலின் சீரழிவுக்கும் பின்நவீனத்துவமா காரணம்?(உங்களுக்கு மூலநூல்களை வாசிக்கப்பிடிக்காது என்ற பயமாயிருந்தாலும்,இயலுமாயின் நேரங்கிடைக்கும்போது, நோம் சாம்ஸ்கியின் Latin America: From Colonization to Globalization வாசித்துப் பாருங்கள்)

இதற்கெல்லாம் பின் நவீனத்துவர்கள்தான் காரணம் என்றா சொல்வீர்கள்?

ஆக நானும், (எனக்கு முன், புகை என்ற நண்பரும் -என்னைப்போலவன்றி தெளிவாக) விளக்கந்தந்துவிட்டோமென நம்புகின்றோம். இனி உங்கள் பின் நவீனத்துவம் குறித்து முக்கிய பிரச்சினைகள் தீர்ந்துவிட்டிருக்குமென நம்புகின்றேன்.


----------------------------------------------

மற்றபடி நண்பர் புகைக்கென சில கேள்விகளை கேட்டிருக்கின்றீர்கள். அந்த நண்பர் பதிலளிக்ககூடுமென நம்புகின்றேன். அதில் ஒன்றேயொன்று... பெருங்கதையாடல் பற்றி நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதாய் தெரிகின்றது என்பதை மட்டும் சொல்லிவிடுகின்றேன்.
-------------------------------

மற்றது, இந்த விடயங்களில் இதற்கு மேலும் இப்போது உரையாட நேரம் கிடைக்குமோ தெரியாது. அது பிரச்சினையுமில்லை. பதிவுலகின் பல்வேறு அரசியலை நான்காண்டுகளாய்ப் பார்த்துக்கொண்டிருப்பவன் என்பதில் நீங்களும் நாம் எழுப்பும் அவசியமான கேள்விகளைத் தவிர்த்து சுத்தி சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள் என்று அலையக்கூடுமென நம்புகின்றேன் (உதாரணம் 'லேபிள்').

பரவாயில்லை.விளையாட்டை ஆரம்பித்தாயிற்று.... முடிவுகளில்லாது ஆடத்தானே வேண்டும். அவ்வப்போது வந்து நேரங்கிடைக்கும்போது பாதுகாப்பு ஆட்டத்தை ஆடவாவது முயற்சிக்கின்றேன். அப்படி வராது -எதிர்வினை செய்யாதவரை- தோற்றனாகவே இருந்துவிட்டுப்போகின்றேன்.(ஏற்கனவே கூறியதுமாதிரி தோற்பது உவப்பானதொன்றே)
........
இறுதியாக,
இப்படியெல்லாம் கதைப்பதால் உடனே எனக்கும் பின் நவீனத்துவக்காரன் என லேபிள் ஒட்டிவிடாதீர்கள். நான் நெருங்க விரும்பும் பெரியாரையும், மார்க்சையும், அம்பேத்காரையும் புரிய எனக்கு இந்த பின் நவீனத்துவ புரிதல்கள் தேவையாயிருக்கின்றன. ஒரு காலத்தில், ஒவ்வொருவரையும் எதிரெதிர்முனையில் வைத்து உரையாடிக்கொண்டிருந்ததைக் கூட நிராகரித்து, பெரியாரையும் அம்பேத்காரையும் மார்க்ஸையும் இணக்கமான புள்ளிகளில் வைத்து பார்க்கும் விசாலமான பார்வையைத் தந்துகொண்டிருப்பதும் இந்த பின் நவீனத்துவக் காலம் என்பதுதான் எவ்வளவு அருமையானது.

இளங்கோ-டிசே said...

---//இன்னமும் பின் நவீனத்துவம் 'எல்லாவற்றையும் அழிக்க வந்ததாய்' அடிக்கடி கவலைப்படும் மு.மயூரனிற்காய் //

எப்போது இப்படிச்சொன்னேன்?----

இப்படியோ அல்லது இதுமாதிரி எண்ணம்வருவது மாதிரியே நீங்கள் எழுதியதை எங்கையோ வாசித்தது நினைவு. அகழ்ந்தெடுத்து சான்று பகிர இப்போது நேரமில்லை. உரிய ஆதாரமின்றி மேலே பாவித்த சொற்களுக்காய் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.
....
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு கட்டுரையை எழுதுவதை விட அதிக நேரம் போய்விட்டது பின்னூட்டம் எழுதி :-(.

பிறகு உங்களோடு ஆறுதலாய் :-).

மு. மயூரன் said...

//நீங்களே ஒன்றுக்கு பின்னுக்கு முரணாக பேசிக்கொண்டிருப்பது தெரியவில்லையா? உங்களுக்கு எளிய புரிதலாய் இருப்பதும் கசக்கிறது, பிறகு மூல நூலாசிரியர்களை முன்வைத்துப் பேசினாலும் அலுப்பாயிருக்கின்றது. என்ன கொடுமை இது?//

அழகாக php உதாரணம் எல்லாம் சொன்னேனே?

எளிய மொழியில் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன்.
ஆனால், பின்னவீனத்துவம் -in-nutshell என்றவாறான கையேடுகள் பற்றி அது பின்னவீனத்துவத்துகு மட்டுமல்ல, அதிக விளக்கம் கோரும் எல்லா விடயங்களுக்கும்தான் இருப்பது எனக்கு சிலவேளை உவப்பானதாக இல்லை. அங்கே விடுபட்டுப்போபவை அதிகமாக உள்ளது.

இந்தப்புள்ளிதான் இந்தப்பிரச்சினையின் ஆரம்பப்புள்ளி என்ன?

உங்க்ளது அந்தப்பதிவை நான் அதன் எளிய மொழிநடை காரணமாகவோ அல்லது கடுமையான விஷயமொன்றை எளிமைப்படுத்தியிருப்பதாலோ காயவில்லை. அது நல்ல பதிவு. அங்கே "எதிர்வினையாற்ற" அப்போது எனக்கு எதுவும் இருக்கவில்லை அல்லவா?

ஆனால் விடுபட்டுப்போனவை குறித்த சிக்கல் எனக்கிருந்தது.

சரவணனின் பதிவில் நான் உங்கள் பெயர் சொல்லிச் சொன்னவிதம் அது சற்றே மிகையானதாகக்கூட இருக்கலாம் போலிருக்கு.

//மு.மயூரன், உங்களைப் போன்றவர்களின் முக்கிய பிரச்சினை என்ன என்றால்... //

நான் யாரைப்போன்றவன்?

//ஒன்று பின் நவீனத்துவத்தை அதற்குரிய 'மொழியில்' எழுதும்போது, 'எங்களுக்கு விளங்காததை எழுதுகின்றார்களென' குற்றவோலைகளை வாசித்தபடி வருவீர்கள்.//

அதற்குரிய மொழி என்று ஒன்று இருக்கிறதா? விளங்கவில்லை என்று சொல்லி குற்றவோலை வாசித்தேனா? நினைவில்லை.

சாதாரண மக்களுக்கும் எழுத்துக்கும் உள்ள பழைய இ டைவெளியை நிரப்புவதாகச் சொல்லிக்கொள்ளும் போலித்தனத்துக்காக, சில எழுத்தாளர்களை விமர்சித்திருக்கிறேன்.


//ஏகாதிபத்தியம்/உலகமயமாக்கல் போன்றவற்றை ஒரு முறையான அமைப்போடு எதிர்க்க நமது இறுதி நம்பிக்கை மார்க்சிசம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்//

அப்படியானால் மகிழ்ச்சி. உங்கள் இந்தக்கண்ணோட்டத்தோடு முரண்பட எனக்கு எதுவுமில்லை. "முறையான அமைப்பை" கேள்விக்குள்ளாக்குவது என்னுடைய உடன்பாடமைகளின் அடிப்படைகளில் ஒன்று.


//சிந்தனைகளையும் எதிர்வினைகளையும் ஒன்றாய்ப் போட்டு சாம்பாராக்கவேண்டாம்//

எனது எந்த வெளிப்பாட்டை நீங்கள் துரித சிந்தனை என்றீர்கள்?

//மேர்வின் சில்வாவுக்கு(?) சாயமடித்ததுகூட//

புரியவில்லை.

//பின் நவீனத்துவ fever இருப்பதான எண்ண்ம எனக்குண்டு//

அப்படி எல்லாம் இல்லை என்றுதான் நம்புகிறேன். :-)

இங்கே போட்ட பின்னூட்டங்களிலேயே என்னுடைய பார்வை புரிந்துகொள்ளக்கூடியதாகத்தானே இருக்கு?

//'பெயர்' மறைந்து 'வேறொருவர்' என்பதுகூட ஒருவகை நுண்ணரசியல்தான்//

ஏற்கனவே பேர் சொல்லி வந்ததே குழப்பம். எதற்கும் இருக்கட்டுமே என்று பெயர் சொல்லாமல் விட்டேன்.

//குறைகளும் கறைகளுமற்ற ஒரு சமுதாயத்தை நோக்கிக் கனவு கண்ட நவீனத்துவத்திலேயே மு.மயூரன் நீங்கள் தேங்கி நிற்பது உங்களுக்கு புரியவில்லையா?//

மறுபடி மறுபடி நீங்கள் என்னைபப்ற்றிய முடிந்த முடிபுகளை எடுப்பது உங்களோடு அதிக நெருக்கமில்லாத எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.

குறைகறை அற்ற சமுதாயத்தை நோக்கிய "உல்கத் தொழிலாளிகள்" ஒன்றுபட்டு புரட்சி செய்து "பொன்னுலகம்" மீட்டுத்தரும் கனவோடா நான் இருக்கிறேன். அதிசயம் தான் :-)

//உங்களுக்கு மூலநூல்களை வாசிக்கப்பிடிக்காது என்ற பயமாயிருந்தாலும்//

ஏன் அப்படி ஒரு பயம். மறுபடியும் என்னைப்பற்றிய முடிவுகள்.

//இப்படியெல்லாம் கதைப்பதால் உடனே எனக்கும் பின் நவீனத்துவக்காரன் என லேபிள் ஒட்டிவிடாதீர்கள்//

சே.. சே... அப்படி எல்லாம் செய்ய மாட்டென். :-O

குறிப்பு:
ஒரு விஷயத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.அது தவறு. "இவை மட்டும்தான்" என்னுடைய பிரச்சினைகள் என்று ஒரு சொல்லை பயன்படுதி விட்டேன். அதற்காக வருந்துகிறேன்.

மு. மயூரன் said...

ஆறுதலான மனநிலையில் இருந்து யோசிக்கும்போது இந்த விவாதம் தொடரப்படுவதில் விருப்பமில்லாதிருக்கிறது.

என்னுடைய வேண்டாத வேலையால்தான் டீ சே தனிப்பதிவிடவேண்டி வந்ததென்பதால் இதற்கு நானே பொறுப்பாளியாகிறேன்.

பின்னவீனத்துவம் எப்படியோ, மார்க்சியம் என்பது, பெரியாரியம் என்பது மக்கள் அரசியல் நடைமுறையோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

அரசியல் வேலைத்திட்டம் ஒன்றினை, மக்கள் சார்பு வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கும்போது அவ்வேலைத்திட்டத்தின் நன்மை தீமைகளை அலசவும், முரண்பாடுகளைக் களையவும் அதிகம் உதவக்கூடியதென்ற வகையில் புத்திசார் விவாதங்களில் ஒரு அர்த்தம் உண்டு.

என்னால் இப்போது மக்கள் அரசியல் வேலைத்திட்டங்களில் பங்குபற்ற க்கூடிய வாய்ப்புக்களைத் தேடிக்கொள்ள முடியாதுள்ளது.

அதனால் இந்த விவாதம் தேவையற்று சக்தியை, நேரத்தை வீணடிக்கும் ஒன்றாகவே படுகிறது.

அநேகமாக டீ சே ஏதாவது செயற்றிட்டங்களில் நானோ நீங்களோ நாமோ இணைந்து பணியாற்றும்போது, அச்செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் மார்க்கங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நீள விவாதிப்போம்.

அப்படி ஒரு முரண்பாடு எனக்கும் உங்களுக்கும் ஏற்படாது என்றே நம்புகிறேன்.

படைப்பிலக்கியத்தில் நான் வாசகன் மட்டுமே. எனவே அங்கே நிகழும் கோட்பாட்டு உரையாடல்களில் எனக்கு சம்பந்தம் குறைவு.

தகவற் தொழிநுட்பத்துறையில், கட்டட உள்ளக அலங்காரம், மென்பொருள் இடைமுகப்பு வடிவமைப்பு, மென்பொருள் கட்டுமானப் பொறியியல், வர்த்தக மாதிரிகள் போன்ற பல பரப்புக்களில் என்னால் அங்கே நிலவும் பின்னவீனப்பார்வையினை ஒத்து செயற்பட முடிகிறது.

மக்களோடு சம்பந்தப்படும் அரசியல், கலைத்துறைகளில் பின்னவீனத்துவ மனநிலையோடு என்னால் பெரிய அளவில் உடன்பட முடியாமலிருக்கிறது.

இந்த உடன்பாடின்மையும், அதனால் உங்களைப்போன்றவர்களோடு நிகழும் முரண்பாடுகளையும், நான் கற்றுத்தெளிவதற்கான வெளியாக மாற்றிக்கொள்ளவே பெரிதும் விரும்புகிறேன்.

என்னிடம் கேள்விகளும் கருத்துக்களும் நிறைய உண்டு.

அதனை வேறொரு பொழுதில் பகிர்ந்துகொள்கிறேன்.

சும்மாவே வாழ்வின் பாதையும் மனநிலையும் எனது அறையைப்போல ஒழுங்கு குலைந்திருக்கிறது. இதில் "நனைத்து" வேறு சுமக்க வேண்டுமா?


பல்வேறு தளங்களில் என்னை சுய விமர்சனத்துக்கு தூண்டிய டீ சே க்கும், மற்றவர்களுக்கும் நன்றி.

நாம் செயற்பாட்டை நோக்கி நகரும்போது மறுபடி விவாதிக்கலாம்.

வருகிறேன்.

Anonymous said...

அன்பே மயூரா,
சின்ன வயதில் இருந்தே விண்வெளி பற்றிய அதீத விருப்போடும் வானியல் கனவுகளோடும் வாழ்ந்து, ஆதர் சி கிளார்க் காக ஏற்றிய போதை தணியும் முன் உனக்கு எழுதும் கடிதம்.

அறிவின் அதிகாரம் பற்றி நீ சொன்னதற்கல்ல எனது எதிர்வினை. உன்னைத் தேங்கிப் போனவன் என்ற மாதிரியான பிம்பத்தை உனக்கு வழங்குவதும் எனது நோக்கமல்ல. அப்படி சொன்னால் கூட யாரும் அதை ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. ஏனெனில் கணனி தொடர்பான உனது இன்னொரு வலைப்பதிவை பெரும்பாலானோர் ஒருதடவையாவது பாத்திருக்கக்கூடும். அதில் நீ தேங்கிப் போவது மாதிரியான பிம்பத்தை உடைத்தே வந்திருக்கிறாய். ஆக, அது எனது நோக்கமல்ல.

ஆயினும் டி.ஜே சொல்வது போல பின்னவீனத்துவம் தொடர்பாக உனது காழ்ப்புணர்வை நான் அவதானித்திருக்கிறன் கண்ணு. அதை அறிந்து கொள்வதற்கன மனத்தடையை நீ பெற்றிருந்தாய் என்பதை என்னால் நிச்சயமகக் கூற முடியும். பின்னவீனத்துவமும் உருத்திராட்சக் கொட்டையும் என்று நீ எழுதிய பதிவைப் பலர் படித்திருக்க கூடும். அதில் உன்னால் எள்ளலுடனும் சொல்லப்பட்ட விடயத்தை விட வேறொரு 'அறிவின் அதிகாரம்' இருக்க முடியாது நண்ப.

கண்ணே மயூரா,
பொப் மார்லி யைப் பற்றி எதுவுமே தெரியாமல் பொப் மார்லியை திருவுருவாக 'வழிபடுபவர்களைப்' பற்றியதாக உனது பதிவை இட்டிருந்தாய். அவர்களுடன் பின்னவீனத்துவர்களை ஒப்பிட்டு இருந்தாய். பின்னவீனத்துவத்தை பற்றிய சாதகமான பார்வைகளைக் கொண்டிருப்பவர்களை விமர்சித்திருந்தாய். அதாவது ஒன்றையும் 'ஆழமாக' தெரியாமல் அது தொடர்பாகக் கதைத்தலைப் பற்றியதாக உனது பதிவு அமைந்திருந்தது. உனது கோபம் எதன் மீதென்று தெரியாமல் நான் கலங்கி நின்றேன் கண்ணு.

மயூ கண்ணா,
அதில் பின்னவீனத்துவம் பற்றிய உனது காழ்ப்புணர்வும் அறிவின் அதிகாரமும் துருத்திக் கொண்டு நின்றதை என்னால் பார்க்க முடிந்தது மயூ. ஆயினும் நீ தற்போது அறிவின் அதிகாரம் பற்றிப் பேசுவது எனக்கு வியப்பைத் தரவில்லை. ஏனெனில் இப்படியான சம்பவங்களுக்கு நம்ம மயூ கண்ணன் தான் முதலாவது ஆளுமல்ல. இல்லையா?

அன்பே மயூ,
நீ மறந்திருக்க கூடும் அந்த இரவை. அந்த ரகசிய குளிர் இரவில் நீ எழுதியதை. நான் மறக்கவில்லை அன்பே அந்த இரவையும் அதன் வெம்மையையும். நீ புரட்சி பற்றிய கனவில் இருந்த அந்த இரவில் எழுதியதை நான் மறக்கவே இல்லை. பெயரிலியின் பதிவொன்றில் நீ முதலாளித்துவத்தை சிவப்புத் துணியில் கட்டி எரித்ததை நான் மறக்கவில்லை. அத்துடன் கூட பின்னவீனத்துவமும் சேர்ந்து எரிந்ததையும் நான் மறகவே இல்லை.

உனக்கது வழமையான நாட்களைப் போல புரட்சி செய்யும் இரவாக இருந்திருக்கலாம். ஆயினும் என்னக்து முதல் இரவு நண்ப. எழுத்தை நம்பாமல் இருந்த என்னை எழுத வைத்தாய். எனது விரல்களைப் பிடித்து நீயே எழுதியும் விட்டதாய் என நினைத்துக் கொண்டேன் மயூரா... பின்னூட்டமேனியா விற்கு பலியாக அந்த இரவில் இருந்து இன்று வரை பின்னூட்டம் போட்டுக் கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயராக... இன்றுவரை அந்நோய் என்னை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

பெயரிலியே கலங்கி நின்ற பொழுதொன்றில் உனது புரட்சி அரங்கேறியது. நீ முதலாளித்துவத்திற்கும் அமெரிக்காவும் எதிராக பகிரங்க அறைகூவல் விடுத்தாய். போர் முரசறைந்தாய். கலங்கி நின்றது அமெரிகாவும் பின்னவீனத்துவமும் முதலாளியமும் மட்டுமல்ல நானும் தான் அன்பே..

உனது போர் முரச வாசகங்கள் இன்றும் என் காதில் ஒலிக்கின்றன.
/ கோட்டுக்கருத்தியல், கோடில்லாக்கருத்தியல், கருப்புவெள்ளைத்தத்துவம், சாம்பல் தத்துவம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கும் உங்க்ளுக்கும் உங்கள் குஞ்சுகளுக்கும்
தெரிந்ததெல்லாம் மார்க்சீயத்தை கருவறுப்பது எப்படி என்று இரவுபகலாக சிந்திப்பதும் பண்பாட்டின் உதிரிகளாய் அலைவதும்தான்./

/அதற்காகத்தானே உங்களை திட்டமிட்டு உருவாக்கிவிட்டிருக்கிறார்கள் உங்கள் "முன்னோர்கள்"/

/ஆட்சியில் அமெரிக்கா உங்கள் கைகளில் நாசிசத்தின் மூலவர்களின் கோட்பாட்டுப்புத்தகங்கள். மார்க்சீய மைப்புக்களின் தவறுகளையும், மர்க்சீயர்களின் போதாமைகளையும் எடுத்துக்காட்டுகளாகத்தூக்கிக்கொண்டு ஒரு புரட்சிகரத் தத்துவத்தையே பிழையென்று நிறுவி நிற்கும் நீங்கள் தான் உண்மையான "துவித எதிர்நிலைச்" சிந்தனையாளர்கள்./

நீ பின்னவீனத்துவத்திற்கு எதிராகவே போர் முரசறைந்ததாகப் பலரும் பேசிக் கொண்டார்கள். ஆயினும் எனக்கது மிகவும் பயங்கரத்தை ஊட்டியது. ஏன் உனக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்பதை நினைக்க வருத்தமாகம் இருந்தது. ஆயினும் உனக்கு இப்போது கோபம் போய்விட்டதை நினைக்க சந்தோசமாகவும் உள்ளது.

ஏனெனில்,
/மார்க்சீயம் போன்ற மக்கள்சார்பான, உலகை மாற்றமுடியும் என்று நம்பிக்கை அளித்து அதற்கான சமன்பாடுகளை உருவாக்கிக்கொடுக்கும் , வளரும் தன்மையுள்ள கோட்பாடுகள் விட்டுப்போன, பார்க்கத்தவறிய இடைவெளிகளை, சிறு சிறு நிழல்களை, புரிந்துகொள்ளவும், தவறுகளை debug பண்ணிக்கொள்ளவும் உதவும் ஒரு மேலதிக வெளிச்சமாகவே பின்னவீனத்துவத்தை என்னால் அணுக முடிகிறது./

எண்ட நெஞ்சில பால் வாத்தியேடா எண்ட படவா..

மயூ செல்லமே,
டி.ஜே யிடம் விளங்கவில்லை என்று சொல்லி குற்றவோலை வாசித்தேனா என்று வேறு கேட்டிருந்தாய்.. நீ கிட்டத்தட்ட அப்படி சொன்னதாக ஞாபகம் குஞ்சு..

/... ஆங்கிலத்திலிருந்தான நேரடி மொழிபெயர்ப்புச் சொற்களைப்போட்டுக் குழப்பி புரியவிடாமற்செய்யும் தத்துவத்தின் குஞ்சான நீங்கள்.../

பின்னவீனத்துவத்தை புரியவிடாமல் செய்யும் தத்துவம் எனக்கூறியதை நீ மறந்திருக்க கூடும். ஆனால் நான் மறக்கவில்லை கண்ணே.. மறக்கவேயில்லை கண்ணே... நீ விரல்பிடிக்க நான் காற்றில் எழுதிய வரிகள் கணனியில் வந்ததை மறக்கமுடியாதடா.. இவ்வளவும் நடந்த் பின்னும் நீ மறதி மிகுந்தவன் என நினைத்து ஆறுதல் கொள்கின்றேன். நீ எழுதாத இரவுகள் எனக்கு நரகம் போல இருக்கிறது மயூரா.. அதனால் உனது எழுத்துக்களை திரும்ப திரும்ப வாசித்து மனப்பாடம் பண்ணுகின்றேன்.. தூக்கத்தில் உனக்கான சொற்களுடன் சிவப்புக் கொடி பறக்க நீ புரட்சிக்கு செல்வது போன்ற கனவுகள் என்னைத் தொந்தரவு பண்ணுகின்றன. அதிகாலை வரை தூக்கமற்று கட்டிலில் புரள்கின்றேன்..

இன்னும்,
பெருங்கதையாடல் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றா? என்று வேறு கேட்டு மடல் எழுதியுள்ளாய்.

பெருங்கதையாடல் என்பது நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றா என்பதற்கு முதல் நிராகரிக்கப்பட வேண்டிய பெருங்கதையாடல் தொடர்பாக பின்னவீனத்துவர்கள் கருதுவது என்ன? ஏன் அவ்வாறு கருதப்பட வேண்டி வந்தது என்பன பற்றியதே நம்முன் உள்ள கேள்வி.
வரலாறு மற்றும் பெருங்கதையாடல்கள் கொண்டிருக்கும் விடுபடல்கள் என்பது இங்கு முக்கியமானது.

வரலாறு என்பது பெரும்பாலும் ஒற்றைப் பார்வையை தன்னகத்தே கொண்டு நகர்வது. அது தனக்கு உவப்பில்லாத வெளிகளை மறைத்தவாறும் அதட்டியவாறும் நகர்ந்து கொண்டேயிருக்கும். அதன் விடுபடல்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். அது கொண்டு வரும் விளைவுகள் அதை மோசமான நிலைமையை ஏற்படுத்தவும் கூடும்.

உதாரணமாக, பைபிள் கி.பி 275 ஆம் ஆண்டளவிலேயே எழுதப்பட்டது. அதைப் பலரது குரல்களைக் கொண்ட ஒரு கூட்டுத்தொகுப்பாகக் கருதலாம். ஆயினும் பைபிள் அக்காலத்திய அதிகாரவர்க்கத்தின் அனுசரணையுடனும் பார்வையுடனும் எழுதப்பட்டது என சொல்லப்படுகின்றது. அதில் யேசுநாதரை புனிதராகக் காட்டும் பொருட்டு பலரது குரல்கள் இல்லாமல் ஆக்கப்பட்டும் இன்னும் சிறிதளவான மாற்றத்திற்கு உட்பட்டும் தொகுப்பட்டதாக தற்போது கூறப்படுகிறது. (தற்போது ஒரு பிரதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காபன் பரிசோதனையில் அது 2000 வருடங்கள் பழமையானது எனவும் கூறப்படுகிறது. அது மீதான வாசிப்பு சாத்தியப்படுமிடத்து தற்போதைய பைபிளுடனான பல முரண்களை அடையாளம் காணமுடியும் எனவும் நம்பப்படுகிறது.)

Last temptation of christ என்ற 60 களில் வந்த புத்தகம் பைபிளை (குறிப்பாக யேசுநாதருடைய வாழ்க்கையை) தன்னுடைய பார்வையில் வாசிப்புச் செய்தது. ஆயினும் வத்திக்கான சார்ந்தோரால் அது பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. இதில் உள்ள விடயம் என்னவென்றால் கட்டமைக்கப்பட்ட அதிகாரம் சில விடுபடல்களை விரும்புவதையும் அதனூடாக தனது அதிகாரத்தை வலிதாக நிறுவதலும் என்பது. பின்னவீனத்துவம் வரலாறு பற்றிய கேள்வியை எழுப்பியதன் பின்னர் மீள்வாசிப்புக்கள் என்பது முக்கியமான ஒன்றாகக் போய்விட்டது.

இவ்வாறே, வரலாற்றை ஆக்கிரமித்தவையும் அதிகாரத்தினூடாக அதனை நகர்த்திச் சென்றவையும் பெரும்பாலும் பெருங்கதையாடல்களாக அடையாளப்படுத்தப்பட்டன. அதாவது குரலற்ற வெளிகளை அல்லது குரல் மறுக்கப்பட்ட வெளிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள கதையாடல் வெளி பெருங்கதையாடலாக பின்னவீனத்துவத்தால் அடையாளப்படுத்தப்பட்டது. இப்பெருங்கதையாடல் என்பது தனது கதையாடலைத் தொடர்வதற்காகவும் புனிதப்படுத்தலை கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அது 'வரலாறு' நெடுகிலும் ரத்த நெடி வீசுவதான சூழ்நிலையை எமக்கு உருவாக்கித் தந்தது.

இங்கே தான் முரண் எழுகின்றது. ஆகா பின்னவீனத்துவம் போராட்டத்தை எதிர்க்கிறது என்பதாக.. அதிகாரம் பெற்றிருக்கும் பெருங்கதையாடலை வன்முறையற்று எதிர்க்க முடியாமல் போகும் தருணங்களில் பெருங்கதையாடலின் தகர்விற்கு வன்முறை தேவைப்படலாம். பெருங்கதையாடலைத் தகர்ப்பதற்கு எதிர் மனநிலையைக் கட்டி எழுப்பி அதனைப் புனிதப்படுத்துவதன் ஊடாக இன்னுமொரு ஒடுக்கப்படும் குரல்களை தன்னகத்தே கொண்டியங்கக் கூடிய பெருங்கதையாடலைக் கட்டமைக்க கூடாது என்பதே இங்கே முக்கியமான விடயம்.

அத்துடன் எதிர் மனநிலை என்பது தற்காலிகமானது.. தேவையுடன் வலிதாக்கம் பெறுவது. அதனைப் புனிதப்படுத்துவது என்பது எதிர் மனநிலை இறுக்கமாக வழிவகுக்கும். அதன் இறுக்கம் என்பது அதிகாரம் கோலோச்சும் பெருங்கதையாடலாக உருப்பெறும். இங்கே அது அடிப்படைவாதமாக தன்னை கொண்டியங்க முற்படும். அது மீண்ண்டும் வன்முறையை தனது நிரந்தர நண்பனாக்கிக் கொள்ளும்.

இங்கே வலிதாக்கம் என்பது நிரந்தரமகும் போது அங்கே நிரந்தரமான அதிகார வர்க்கமும் தோன்றத் தொடங்குகின்றது. வலிதாக்கம் என்பது எப்போது நிரந்தரமானதல்ல. தனது நோக்கத்தினூடு அது தற்காலிகமாக வலிமை பெற்று பின் தளரத்தொடங்கும். அங்கே இன்னொமொரு இடத்தில் வலிதாக்கம் என்பது தன்னை தகவமைக்கத் தொடங்கியிருக்கும் தனது தேவையினூடே.. இங்கே இனவலிதாக்கம் என்பது பாட்டாளிகளை பிரித்து வைத்திருத்தல் என்பது நிரந்தர இன வலிதாக்கத்தினூடு தனது அதிகாரத்தைச் செலுத்த நினைக்கும் வர்க்கத்திற்கு சார்பானதே. ஆயினும் இனவலிதாக்கம் நிரந்தரமாக இல்லாதவிடத்து மீண்டும் பாட்டளிகளின் ஒட்டுமொத்தக் குரல் வலிமை பெறும். எல்லாமே மாறியபடி இருக்கும்.

துவித எதிர் நிலைமைகள் தோன்றுவதை நாம் தடுக்கவும் முடியாது. இயன்றவரை அதனை விலக்கி சிக்கற்தன்மையுள்ள சமூக அமைப்பை நாம் அதற்கும் மேலாக பார்ப்பது என்பது முக்கியமானது. ஆயினும் துவித எதிர்மைகள் என்பது தோன்றியவாறே இருக்கும். இங்கே அவை நிரந்தரமாக வலிமை பெறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அது தனக்குள் பெருங்கதையாடலையும் புனிதப்படுத்தலையும் நிகழ்த்தத் தொடங்கும். தனது நோக்கை மறந்து வலிதக்கம் உருவாக்கிய வெளியில் தனது இருப்பைத் தக்கவைக்க முயலும். இங்கே நாம் அது தொடர்பாக முரண்பட வேண்டி வருகிறது. துவித எதிர்மைகள் இருமை இயல்புகளை தமக்குள் நிராகரிக்கும் தன்மை வாய்ந்தவை. இருமை இயல்புச் சமூகவெளிகள் மேலும்.. பிளவுறும் சமூக வெளிகளை அங்கீகரித்தல் மட்டுமே துவித எதிர்நிலையை தற்காலிகமாகவேனும் தக்கவைக்க உதவும். ஆயின் தற்போது 'பிளவுறும் தன்னிலை' வரைக்கும் வந்தாயிற்று. அங்கீகரிப்புகள், வித்தியாசங்கள் இன்ன பிற...

அன்பே மயூரா,
எனக்குத் தூக்கம் வருகிறது. உனது கடுமையான வார்த்தைகளால் என்னைத் திட்டாதே. நீ விடிய எழும்பி அவற்றை மறந்துவிடுவாய் என்று எனக்குத் தெரியும். ஆயினும் அக்கணமேனும் அதை தாங்கும் சக்தி எனக்கில்லையடா.. அவை நீ எழுதாத கணங்களில் எனது காதுகளில் ஒலிப்பதை அதை நினைத்து நான் நடுங்குவதை நீ எப்போது அறியப்போவதில்லை.. சில்லிடும் கணங்களுடன் கூடிய என பயங்களை நீ உணரபோவதுமில்லை. புரட்சிக்கு போவதாக எனக்கு கானாக்களை வரைந்து வைத்து விட்டு நீ தூங்குவாய். நான் இரவுகளில் தூக்கமிழந்து உனது வருகைக்காகக் காத்திருப்பேன். செங்கம்பளங்களுடன் நீ தூங்குவது தெரியாமல்..........

கொஞ்சம் அமீபா கொஞ்சம் #[புகை]

Anonymous said...

மயூரா,
உனது அடுத்த கடிதம் பார்த்து மிகவும் கவலை அடைந்தேன்..

முன்னொரு இரவிலும் இப்படித்தான் நீ இடைவெளியே என்னைத் தவிக்கவிட்டுப் போனாய்..

/...அந்தக் கோட்பாடோடு பாரிய முரண்பாட்டையும் காண்கிறேன்.
இதுபற்றி பிறிதோரிடத்தில் நாம் சந்திக்கலாம், விவாதிக்கலாம்.../

என்றவாறு......

ஆயினும் இவ்விரவும் எனக்கு அவ்வாறே போயிற்று..

நீ வரவே போவதில்லை என உள்மனம் சொல்கின்றது..
ஆயினும் உனது வரவை எதிர்பார்த்து,

இரவுகளில் பல பெயர்களில் உலவுபவன்/ள்/து...

இப்போ அமீபா..

Shaseevan said...

டிசே,
இங்கே என்ன நடக்கிறது எனக் கூற முடியுமா?
ஒரே குழப்பமாக இருக்கிறது

கொண்டோடி said...

பின் - நவீனத்துவம் எண்டா என்ன?

(இப்ப சுகுணா திவாகரும் சோமிதரனும் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்லன்.)

இளங்கோ-டிசே said...

நண்பர்களுக்கு,
இங்கே நடப்பது எனக்கும் சற்றுக் குழப்பமாய் இருக்கிறது. அப்படி எதுவும் தவறு/இன்னபிற நிகழ்ந்திருந்தால் தயவு செய்து மின்னஞ்சல் செய்துவிடவும் (dj_tamilan25@yahoo.ca). இனி இரவே பார்ப்பேன். நன்றி

Anonymous said...

பெருங்கதையாடல் தொடர்பான கருத்துக்களில் நான் ஒன்றுக்கு பின் முரணான கருத்துக்களைச் சொல்லியிருப்பதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். அது தொடர்பாக சில மேலதிக விளக்கங்கள்.

அதிகாரத்துடன் பிணைந்ததான பெருங்கதையாடலை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான பகுதியில், இங்கே வன்முறை என்பதல்ல பிரச்சனை. வன்முறையைக் கையாள்வதே பிறிதொரு பெருங்கதையாடல் நிகழ்வுதான் என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகாரத்தால் கட்டிக்காக்கப்படும் பெருங்கதையாடலை எதிர்க்க வன்முறையை ஏற்றுக்கொள்ளவேண்டி வரலாம். ஆயினும், எதிர்ப்பு என்னும் மனநிலை காரணத்தை விட்டு பிறிதொரு அரூப புனிதவெளி நோக்கி நகரும் போது அங்கே வன்முறை என்பது நிரந்தரமாகின்றது. பின் புனிதவெளிக் குறியீட்டுடன் நடைபெறும் வன்முறை பிறிதொரு பெருங்கதையாடலின் பொறிமுறையாக உருக்கொள்கிறது. அங்கே உருக்கொள்ளும் புனிதவெளி-பெருங்கதையாடல் தனக்குள் ஒடுக்கப்படும் குரல்களை அனுமதிக்கத் தொடங்குகின்றது. புதிய பெருங்கதையாடல் அதன் அமைப்போடு நிரந்தரமாகத் தன்னைப்பேண எத்தனிக்கும். இங்கே நாம் மீண்டும் முரண்கொள்ள ஆரம்பிக்கிறோம்.

இங்கே எதிர்மனநிலையின் அமைப்பு தனக்குள் வித்தியாச அங்கீகரிப்புகள் நிகழ அனுமதிக்கும் அமைப்பாக தன்னை நிறுவிக்கொள்ளும் போது நாம் பிரச்சனைப்பட ஒன்றும் இல்லை. அத்துடன் எதிர்காலத்தில் தனது தகர்வையும் அது அறிவித்துக்கொள்ள வேண்டும். அங்கே நிகழும் அமைப்பை/சூழலை/செயற்பாட்டை நாம் பெருங்கதையாடலாக கொள்ளவேண்டியதில்லை என்பது முக்கியமானது. எதிர்மனநிலையைப் பற்றிக் கூறியிருக்கிறேன். அதன் நெகிழ்ச்சித் தன்மையை நாம் எப்போதும் அனுமதிக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

துவித எதிர் மனநிலை என்பது பொதுப் பார்வைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படும் போதிலும், அது நிரந்தரமானதல்ல என்பதுவே இங்கே முக்கியமானது. நிரந்தரமாகக் கட்டமைக்க முற்படுதல் என்பது பல வெளி மறைப்புகளைச் சாத்தியமாக்கிவிடும். சமூகம் மற்றும் முரண்பாடுகள் தொடர்பாக நாம் அதனை மேவிச் சிந்தித்தலை பழக்கப்படுத்த வேண்டும். ஆயினும் நடைமுறையில் போலியாக அதனைக் கட்டமைக்க அதிகாரம் விரும்பும். அதனை நிராகரித்தலையே எமக்கு முன்னுள்ள தெரிவாகக் கொள்ள வேண்டும். வித்தியாச அங்கீகரிப்புகள் அதிகாரவர்க்கத்தை எதிர்கொள்வதை இலகுவாக்கும் என்பது எனது நிலைப்பாடு. ஆக இக்கருத்தியல், போராட்டங்களை இலகுபடுத்தும் மற்றும் அதிகாரவர்க்கம் என்பதை எப்போதும் கேள்விக்கு உள்ளாக்கும்.

ஆயினும், இன்றும் மார்க்சீயத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பல தத்துவவியலாளகள் பின்னவீனத்துவத்தை ஒருவித 'கருத்துமுதல்வாதமாக'ப் பார்க்கும் பார்வையும் உள்ளது. இங்கே பின்னவீனத்துவத்தில் பூக்கோ மரபைப் பின்பற்றுபவர்களையே அதுசார்பாகப் பார்க்கும் பார்வை உள்ளது. இவர்கள் இடைநிலைச்சாத்தியங்களை 'பெருங்கதையாடல்' என்ற கருத்தினூடே நிராகரித்துவிடுகிறார்கள். இம்மரபில் நடைமுறை 'வெற்றி' களை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் பெரும்பாலும் தாராளாவாத சமூக அமைப்பை நோக்கியதாக தமது கருத்தியலைக் கட்டமைப்பர். ஆயினும் முதலாளித்துவ சமூகமாக தன்னைக் கொண்டியங்கும் மனிதகுல வரலாற்றுக்கு இது பொருத்தமற்ற ஒன்று என்ற கருத்த் உள்ளது. தாராளவாத சமூக அமைப்பினால், முதலாளித்துவ அதிகார அமைப்பால் எப்போதும் வஞ்சிக்கபடும் சமூகத்திற்கு தீர்வு எதனையும் வழங்கிவிட முடியாது. அது தொடர்பாக 'இடைநிலைச்சாத்தியங்கள்' என்னும் கட்டமைப்புடன் இயங்குவது என்பது முக்கியமானது. தேசியவாதம் வன்முறை ஊக்க்குவிப்புச் சிந்தனை முறை என்ற போதும், தேசியவாத்தை த்ற்காலிகமாக ஏற்றுக் கொண்டு (அதன் தகர்வை முதலே எற்றுக்கொண்டவாறு) தம்மை வழிப்படுத்தும் சிந்தனை முறையும் உண்டு.

இங்கே தமிழ்ச்சூழலில் 'மார்க்சீயம் அலுத்த' பின்னவீனத்துவர்கள் ஓடிப்போய் விழும் இடம் தாராளவாத சமூகம் சார் பின்னவீனத்துவமே. தமிழ்த்தேசியம் என்பது கற்பிதம் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். அதன் வழி இலங்கைத் தேசியம் என்பதை ஆதரிக்கும் கூட்டத்திற்கு நாம் என்னத்தைச் சொல்லிக்கொள்ள முடியும். வித்தியாச அங்கீகரிப்புகளுடன் கூடிய தமிழ்த்தேசியத்தின் தேவை வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை. சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை இருக்கும் வரை தமிழ்த்தேசியத்தின் தேவை என்பது இருக்கும். அதைக் கற்பிதம் எனகூறியவாறு 'அழிறப்பர்' கொண்டு அழித்துவிட முடியாது. அவ்வாறே, தமக்கான உரிமைகள் மறுக்கப்படுமிடத்து முஸ்லிம் தேசியம் உருக்கொள்வதையும் மறுக்க முடியாது.

அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ன்ற உறுப்பினர் சிறீகாந்தா கூறிய செய்தி ஒன்று தினசரி நாளிதழ் ஒன்றில் 6 ஆம் பக்கத்தில் சிறிய செய்தியாக வந்திருந்தது. அவர் கூறிய செய்தியின் சாராம்சம் ''தேசியவாதம் என்பதை நாம் தற்காலிகமாகத் தான் கையில் எடுத்திருக்கிறோம். அதன் தேவை முடிந்ததன் பிற்பாடு அது எமக்குத் தேவை இல்லை'' என்பதாக... இக்கருத்துடன் என்னால் உடன்பட முடிகின்றது. இங்கே நாம் பார்க்கவேண்டியது தமிழ்த்தேசியம் என்பது பெருங்கதையாடலா இல்லையா என்பதைத்தான். உண்மையில் தேசியம் என்பது பெருங்கதையாடலுக்கான பண்புகளைக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தினாலேயே அது நிராகரிக்கப்பட்டதே தவிர 'தேசியம்' என்பதற்காகவல்ல. தமிழ்த்தேசியத்திற்கான தேவை இருக்கின்றது ஆயினும் அது தன்னைப் பெருங்கதையாடலாகக் கட்டமைக்க்கின்றது. இங்கே எம்முன் உள்ள தெரிவு என்னவென்றால் அதன் பெருங்கதையாடலுக்கான கூறுகளுடனும் பண்புகளுடனும் எமக்குள்ள உடன்பாடின்மைகளை கூறுவதே தவிர 'தேசியத்திற்கான தேவை முடிந்துவிட்டது. அதெல்லாம் தேவை இல்லையெண்டு எல்லாரும் சொல்லிட்டாங்கள்' என்பதல்ல. (அற்புதன் அண்ணை இது தொடர்பாக கவனிக்க வேண்டும். )

இது தொடர்பாக மேலதிகமாக உரையாட விருப்பமும் இல்லை. எம்முன் உள்ள 'அறிவிஜீவி' கள் எல்லாம் 'பாடமாக்கி பாடமாகி சோதனை எழுதியோரே' இன்னும் சொல்லப் போனால், திருஞானசம்பந்தரின் தேவாரத்தைப் பாடமாக்கி அதைச் சோதனை பேப்பரில எழுதி பாஸ் பண்ணியவர்களே. இவர்களுடன் புதிதாக என்னத்தைச் செய்து கிழித்துவிட முடியும் எனக்குத் தோன்றவில்லை.

கொஞ்சம் சுதா கொஞ்சம் அமீபா

பேய்ச்சி said...

அன்பின் அமீபா + சுதா + புகை,
உங்களது கடைசி வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன... இருந்தாலும் உரையாடத் தோன்றுகிறது... வெளிமறுக்கப் பட்ட குரல்களையும், பெருங்கதையாடல்களின் வன்முறையையும் அழுத்தமாகச் சுட்டிப் பேசும் நீங்கள், தமிழ்த்தேசிய நிலைப்பட்டுப் பேசும்போது மென்போக்கைக் கைக்கொள்வதாகத் தோன்றுகிறது...

//வித்தியாச அங்கீகரிப்புகளுடன் கூடிய தமிழ்த்தேசியத்தின் தேவை வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை//

//சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை இருக்கும் வரை தமிழ்த்தேசியத்தின் தேவை என்பது இருக்கும்.//


மார்க்ஸியம் தனது 'இடைநிலைச் சாத்திய'மாக பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை முன்வைத்தது, அல்லவா? ஏன் "தனக்குள் வித்தியாச அங்கீகரிப்புகள் நிகழ அனுமதிக்கும் எதிர்மனநிலையுடனான‌" "எதிர்காலத்தில் தனது தகர்வையும் அறிவித்துக்கொள்கின்ற" பாட்டாளி வர்க்கச் ச‌ர்வாதிகார‌ம் ப‌ற்றி யோசிக்க‌க் கூடாது?
(நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்விகளுக்கு அப்பால், கோட்பாட்டளவில் மார்க்ஸியம் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் தகர்வை அறிவிப்பதோடல்லாது, 'அரசு' என்ற அமைப்பதிகாரம் மடிந்தொழிந்துபோம் பொதுவுடமைச் சமுதாயத்தையும் கனாக் காண்கிறது இல்லையா?)

"ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, முதலாளித்துவச் சுரண்டல் என்பன இருக்கும்வரை ஒன்றிணைந்த இலங்கைத் தேசியத்தின் தேவை என்பது இருக்கும். வித்தியாச அங்கீகரிப்புடன் கூடிய இலங்கைத் தேசியத்தின் தேவை வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை"

என்பதான கருத்துக்கள் குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன?


தமிழ்த்தேசியம் வன்முறை வழியைத் தேர்வதற்கு முந்திய காலத்திலிருந்து இற்றை வரை வித்தியாசங்களை அங்கீகரிக்கத் தவறியிருப்பதை வலியோடு உணர முடிகிறது... தொடக்க காலத்தில் சாதியொடுக்கலோடு தமிழடையாளத்தைச் சுமக்க விதிக்கப்பட்டவர்கள் (தலித்துக்கள்?), பின்னர் முஸ்லீம்கள், மாற்று அரசியற் கருத்துள்ளவர்கள், மாற்றாயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அதன் வெளியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள்.


//இங்கே எம்முன் உள்ள தெரிவு என்னவென்றால் அதன் பெருங்கதையாடலுக்கான கூறுகளுடனும் பண்புகளுடனும் எமக்குள்ள உடன்பாடின்மைகளை கூறுவதே தவிர 'தேசியத்திற்கான தேவை முடிந்துவிட்டது என்பதல்ல.//


உண்மையிலேயே இது வன்முறையின் சர்வ வியாபிப்புக்குள் வாழும் ந‌ம்முன் இருக்கும் சாத்தியமான‌ தெரிவு என்று ந‌ம்புகிறீர்களா?


//அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ன்ற உறுப்பினர் சிறீகாந்தா கூறிய செய்தி ஒன்று தினசரி நாளிதழ் ஒன்றில் 6 ஆம் பக்கத்தில் சிறிய செய்தியாக வந்திருந்தது. அவர் கூறிய செய்தியின் சாராம்சம் ''தேசியவாதம் என்பதை நாம் தற்காலிகமாகத் தான் கையில் எடுத்திருக்கிறோம். அதன் தேவை முடிந்ததன் பிற்பாடு அது எமக்குத் தேவை இல்லை'' //


தேசிய‌வாத‌த்துக்குப் பிற்ப‌ட்ட‌ நிலையாக‌ அவ‌ர் க‌ருதுவ‌து எதை என்பது குறித்து ஏதும் தெரிவித்திருந்தாரா என்ப‌தை அறிய‌ ஆவ‌லாயிருக்கிறேன்.

"எதிர்ப்பு என்னும் மனநிலை காரணத்தை விட்டு பிறிதொரு அரூப புனிதவெளி நோக்கி நகரும்" (தமிழ்தேசியம் ஏலவே அப் புனிதவெளி நோக்கி வெகுகாத தூரம் போகவில்லை என்று அவர் நம்பும் பட்சத்தில்) அபாய‌ நிலையைத் தான் குறிக்கிறாரோ என்ற‌ நியாய‌மான‌ அச்ச‌ம் எழுகிற‌து...


//"எதிர்ப்பு என்னும் மனநிலை காரணத்தை விட்டு பிறிதொரு அரூப புனிதவெளி நோக்கி நகரும்//
பாசிச‌ம் என்ப‌தை இவ்வ‌ள‌வு க‌வித்துவ‌மாக‌ வேறு எவ‌ரும் சொல்லியிருக்க‌ முடியாது என்று தோன்றுகிறது...


உற்ப‌த்தி உற‌வுக‌ள் எவ்வாறு ச‌மூக‌ உற‌வுக‌ளைத் தீர்மானிக்கின்ற‌ன‌ என்ப‌வை பற்றிய மார்க்ஸிய‌த் தெளிவுறுத்த‌ல்க‌ளைத் த‌ன்னிலை அனுப‌வ‌ம் சார்ந்து உள்வாங்கிக் கொள்கிற‌ போது, நான் ஒரு த‌மிழ(ச்சி/ன்) என்பதான தேசியத்தின் புனைவடையாளத்தை விடவும், தனிச்சொத்துரிமை கொண்ட பெருமுதலாளியால், அவ் வர்க்கத்தால் சுரண்டப் படுகிற பாட்டாளி வர்க்கத்தினள் என்ற அடையாளம் அதிக மெய்த்தன்மை உடையதாகத் தெரிகிறது. சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் மீதான ஒடுக்கல் என்ற நிதர்சனத்தின் வர்க்க உள்ளடக்கம் பற்றியும் புரிந்து கொள்ள முடிகிறது.


இவை நிச்ச‌ய‌மாக‌ என‌க்குள் "நிரந்தரமாக வலிமை" பெற்று விட்ட‌ க‌ருத்திய‌ல்க‌ள் அல்ல‌ என்றே ந‌ம்ப‌ விரும்புகிறேன். அவ்விதமே த‌மிழ்த்தேசிய‌ம் குறித்த‌ உங்க‌ள் நிலைப்பாடுக‌ளையும்.

நேசத்துடன்,
பேய்ச்சி

பேய்ச்சி said...

//வித்தியாச அங்கீகரிப்புகளுடன் கூடிய தமிழ்த்தேசியத்தின் தேவை வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை//

//சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை இருக்கும் வரை தமிழ்த்தேசியத்தின் தேவை என்பது இருக்கும்.//
ஏகாதிபத்திய ஒடுக்குமுறை,

//முதலாளித்துவச் சுரண்டல் என்பன இருக்கும்வரை ஒன்றிணைந்த இலங்கைத் தேசியத்தின் தேவை என்பது இருக்கும். வித்தியாச அங்கீகரிப்புடன் கூடிய இலங்கைத் தேசியத்தின் தேவை வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை"//

பிரபாகரன் பின்நவீனத்துவத்தையும் மகிந்த மார்க்ஸியத்தையும் ஒருவேளை வரித்துக்கொள்ளக் கூடுமானால் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்களோ?

Anonymous said...

பேய்ச்சிக்கு,
அமீபா, சுதா, புகை சார்பாக சேகர் எழுதுவது...
தமிழ்த்தேசிய நிலைபட்டுப்பேசும் போது மென்போக்கைக் கையாள்வதாகக் குறைபட்டு இருந்தீர்கள். உண்மைதான் பேய்ச்சி, நடைமுறை வாழ்வு திணிக்கும் அதிர்ச்சிகள், சம்பவங்கள் என்னை அவ்வாறு கூற வைத்ததோ தெரியவில்லை. ஆயினும் அது தொடர்பாகப் பதில் கூறவேண்டியுள்ளது.

உங்களுடைய கருத்துக்களைப் பார்ப்போம்..
/"ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, முதலாளித்துவச் சுரண்டல் என்பன இருக்கும்வரை ஒன்றிணைந்த இலங்கைத் தேசியத்தின் தேவை என்பது இருக்கும். வித்தியாச அங்கீகரிப்புடன் கூடிய இலங்கைத் தேசியத்தின் தேவை வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை"/
உங்கள் கருத்து மிகவும் சரியானது. நாம் சற்று வித்தியாசமாக இங்கே சிந்தித்துப் பார்ப்போம். இலங்கைத் தேசியம் என்ற ஒட்டுமொத்தக் கருத்தியலுடன் ஏகாதிபத்தியச் சுரண்டல் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலை எதிர்ப்பதை விட இந்தியாவுடன் இணைந்து நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை எதிர்க்க முடியும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? நான் கூற வருவது என்னவென்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன். இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றும் கருத்தியலை வளர்த்தெடுப்பதன் மூலம் உங்களது தேவையை இலகுபடுத்த முடியும் என நினைக்கின்றேன். ஏனெனில் இந்தியா என்ற பிராந்திய வல்லரசுடன் இணைந்து நீங்கள் கூறும் விடயத்தை முன்னெடுத்தல் இலகுவான விடயம் என நினைக்கின்றேன். நீங்கள் அதுபற்றி யோசிக்க வேண்டும்.

ஆக, இங்கே தான் ஒன்றைச் சொல்ல வேண்டும். வித்தியாசங்கள் என்பது எதுவரை? அவை எங்கே தமக்கான கோடுகளை வலுப்படுத்துகின்றன?

வித்தியசங்கள் என்பது பௌதீக உலகால உருவகப்படுத்தப்பட்ட தன்னிலை என்பதை மீறி அவை வெவ்வேறு சந்தர்ப்பங்களில், -பௌதீக தன்னிலைகள்- ஊடாடும் கருத்தியலூடாக தம்மை தகவகைக்கின்றன. அதையே பிளவுறும் தன்னிலைகள் என்பர். பிளவுறும் தன்னிலைகள் தொடர்பாகவும் எம்முன் பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஆயினும் பெரும்பாலானோர் கருதுவது போல மாறும் கணங்களுடன் கூடிய தன்னிச்சையான கருத்தியல் மாற்றமல்ல. பல்வேறுபட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பிரச்சனைப்பாடுகளின் தனித்துவம் கருதி எடுக்கப்படும் அல்லது சாரப்படும் முடிவுகள் என்பதே. இங்கே பிரச்சனையின் சட்டகம் புறநிலைப்படுத்தப்பட்டு நிலைப்புள்ளிகளால அளவிடப்படும் கருத்தியலானது ஒரே புள்ளியில் இருந்து அதைப்பார்க்க முற்படும் வேளை 'பிளவுறும் தன்னிலைகள்' தொடர்பாக சாதகமற்ற கருதுகோள் ஒன்றுக்கு வரக்கூடும். இங்கே 'சார்புப் புள்ளி' என்பதே பிரச்சனை என கருத முடியும். அதாவது நோக்கும் புள்ளி மாறாதவிடத்து, தன்னை மையமாக்கி சூழ் உள்ள அனைத்துப் புள்ளிகளையும் சார்பாகப் பார்க்கப்படும் பார்வை என்பதை இங்கே சொல்கின்றேன். இதை பூச்சியம், மறை முடிவிலி மற்றும் நேர் முடிவிலை என்பதற்கூடாக விளங்கிக் கொள்ள முடியும். அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்பானவை மாறாத ஒரு நிலைப்பார்வையில்..

ஒட்டு மொத்த உலகப் பாட்டாளி வர்க்கத்தில் இருந்து சில எண்ணிகையினரை மட்டும் கொண்டுள்ள (கொண்டுள்ள மட்டுமல்ல அதைப் பிரதிபலிக்கும்) குழுக்கள் வரை வித்தியாசங்களின் தொகுப்புத் தான். ஆயினும் தொகுப்புக்கள் எங்கே இறுகுகின்றன என்பது ஆளுக்காள் மாறுபடும். தொகுப்புகளுக்கிடையே மாறுபடும். இங்கே நான் கூறுவது என்னவென்றால் உங்களுக்கு மிகவும் தேவையான -ஒன்று மட்டுமல்ல- தொகுப்புக்களுடன் உங்களைக் கைகோர்த்தல் என்பது. அடக்குமுறை என்பது பல்பரிமாணம் சார்ந்தது. அதன் வழி எதிர்ப்பு என்பதும் அவ்வாறே... சில சந்தர்ப்பங்களில் பலவிதமான அடக்குமுறைகளுக்கெதிராக அதன் தொகுப்புக்களுடன் அடையாளப்படுத்துதல் அல்லது வலிதாக்கம் பெறுதல் என்பது தவிர்க்க முடியாதது. உதாரணம் 'ஏழைத் தமிழ்ப் பெண்'.. ஆக நான் கூறுவது ஒரே நேரத்தில் ஒன்றாக இருப்பதற்குப் பதில் பலவாக இருத்தல் என்பது. நீங்கள் கூறுவது ஒன்றாக ஒரு என்பது. அதன் வன்முறை நீங்கள் அறியாததுமல்ல. இல்லையா பேய்ச்சி?
/உற்ப‌த்தி உற‌வுக‌ள் எவ்வாறு ச‌மூக‌ உற‌வுக‌ளைத் தீர்மானிக்கின்ற‌ன‌ என்ப‌வை பற்றிய மார்க்ஸிய‌த் தெளிவுறுத்த‌ல்க‌ளைத் த‌ன்னிலை அனுப‌வ‌ம் சார்ந்து உள்வாங்கிக் கொள்கிற‌ போது, நான் ஒரு த‌மிழ(ச்சி/ன்) என்பதான தேசியத்தின் புனைவடையாளத்தை விடவும், தனிச்சொத்துரிமை கொண்ட பெருமுதலாளியால், அவ் வர்க்கத்தால் சுரண்டப் படுகிற பாட்டாளி வர்க்கத்தினள் என்ற அடையாளம் அதிக மெய்த்தன்மை உடையதாகத் தெரிகிறது. சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் மீதான ஒடுக்கல் என்ற நிதர்சனத்தின் வர்க்க உள்ளடக்கம் பற்றியும் புரிந்து கொள்ள முடிகிறது./
உங்களுக்கு அப்படி தோன்றுகிற மாதிரி எனக்கு ,
/இங்கே எம்முன் உள்ள தெரிவு என்னவென்றால் அதன் பெருங்கதையாடலுக்கான கூறுகளுடனும் பண்புகளுடனும் எமக்குள்ள உடன்பாடின்மைகளை கூறுவதே தவிர 'தேசியத்திற்கான தேவை முடிந்துவிட்டது என்பதல்ல./
இப்பிடித் தோன்றுகின்றது. எனக்கு அவ்விடயம் வலிதாக்கம் பெறும் இடம் வேறு உங்களுக்கு அவ்விடம் வலிதாக்கம் பெறும் இடம் வேறு. இங்கே எனது கருத்து என்னவென்றால், தமக்கான -தாம் உணரத் தலைப்படும்- அடக்குமுறைகளுக்கு எதிராக தமக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்பதே.. நான் இரண்டுவிதமன விடயங்களுடன் வலிதாக்கம் பெறுவதாகக் கருதுமிடத்து இரண்டையும் ஆதரித்தல் என்பது உவப்பானது. ஆயினும் முரண்சார்ந்த இயக்கம் நிகழும் எனக்கருதுமிடத்து இடைவெட்டும் வெளிகளை ஆதரித்தல் என்பதே எனது நிலைப்பாடாக இருக்க முடியும்.

இங்கே நீங்கள் மார்க்சீயம்(எ) பின்னவீனத்துவம் எனக்கருதுமிடத்து, மேற்கொண்டு உரையாடுதல் சற்றுக்கடினமானதே. அதன் இறுக்கத்தில் இருந்து வெளியே வரும் போது தான் உரையாடல் ஆரோக்கியமாக அமையும் என்பதும் எனது நிலைப்பாடு. இன்னும், இடைநிலைச்சாத்தியம் என்னும் எனது கருத்தை நீங்கள் மீண்டும் நிலைப்படுத்தப்பட்ட ஒன்றாக 'அதே' பாணியில் விளங்குதலுடனும் உடன்படமுடியாது. நிங்கள் சொல்லும் அதே விடயத்தைத் தான் நான் கருத்துமுதல் வாதம் எனச் சொல்கின்றேன். நீங்கள் வேலைத்திட்டங்களுடன் உங்களை இணைக்காத வரைக்கும் அது தொடர்பாக உங்களால் உணரமுடியாது. இடைநிலைச் சாத்தியங்கள் (பன்மை) கருத்துமுதல்வாதத் தன்மைக்குள் நாம் ஆட்படுவதில் இருந்து எம்மைக் காக்கும் என்பதற்கானதே எனது அந்நிலைபாடு. மேலும் சுதா அடையாளங்கள் தொடர்பில் இடைநிலைச் சாத்தியங்கள் என்பதனூடாகவே அதிகார அடையாளங்கள் சுமத்தப்படுதலை தடுக்க முடியும் எனக் கூறி இருந்தார்.

/"எதிர்ப்பு என்னும் மனநிலை காரணத்தை விட்டு பிறிதொரு அரூப புனிதவெளி நோக்கி நகரும்" (தமிழ்தேசியம் ஏலவே அப் புனிதவெளி நோக்கி வெகுகாத தூரம் போகவில்லை என்று அவர் நம்பும் பட்சத்தில்) அபாய‌ நிலையைத் தான் குறிக்கிறாரோ என்ற‌ நியாய‌மான‌ அச்ச‌ம் எழுகிற‌து.../ இங்கே, அதைத் தவிர்க்கும் பொழுது எம்மீது அடையாளப்படுத்தப்படும் இலங்கைத்தேசியம் அதீதபாசிசமாக இருக்கிறது. நடைமுறையில் அதை மீறுவதற்கான வழியாகவே அதைப் பார்க்கிறேன்.

பி.கு-
எழுத்தையும் எழுத்தாளர்களையும் போல காமடியானவர்கள் இந்த உலகத்தில் வேறுயாரும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு புளொக் வச்சிருக்க வேண்டும் எண்டு கூட ஒரு எண்ணம் இல்லை. எனக்கே என்னைப் பார்க்க கேவலமாக இருக்கும் சந்தர்ப்பத்தை வழங்க விருப்பம் இல்லாமல் இருக்கிறது. ஆயினும் அவ்வப்போது கேலிக்கூத்தில் பங்குபற்றுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகப் போய்விட்டது.

-சேகர்-

Anonymous said...

பேய்ச்சிக் கண்ணுக்கு,
பேயன் எழுதுவது..........

/தமிழ்த்தேசிய நிலைப்பட்டுப் பேசும்போது மென்போக்கைக் கைக்கொள்வதாகத் தோன்றுகிறது.../
தோனுடுச்சா...
அப்போ வன்போக்கை கைக்கொண்டாப் போச்சு. நானும் நீயும் கதைச்சுத்தான் எல்லம் நடக்கப்போகுது. சேவல் நினக்குமாம் தான் கூவித்தான் உலகம் விடியுதெண்டு.

/"எதிர்காலத்தில் தனது தகர்வையும் அறிவித்துக்கொள்கின்ற" பாட்டாளி வர்க்கச் ச‌ர்வாதிகார‌ம் ப‌ற்றி யோசிக்க‌க் கூடாது? /
அய்... யோசிச்சு.. அப்புறம் நித்தா கொள்றதா?
பேய்ச்சிக் கண்ணு பாட்டாளி எண்டா யார் எண்டு சொல்லு பாப்பம்?
நீ நினைக்கிறாய் பாட்டெழுதிறவன் எண்டு..
சும்மா எப்ப பாத்தாலும் பாட்டாளி பூட்டாளி எண்டுகிட்டு

/என்பதான கருத்துக்கள் குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன? /
நம்ம கருத்தை அறிஞ்சு என்ன செய்யிறதா உத்தேசம்? ராஜபக்ச உங்கட சொந்தக்காரரோ? அப்பிடியே ஓடிப் போய் சொல்லித் தீர்வு காணப்போறா!! எவ இவ?

/தமிழ்த்தேசியம் வன்முறை வழியைத் தேர்வதற்கு முந்திய காலத்திலிருந்து இற்றை வரை வித்தியாசங்களை அங்கீகரிக்கத் தவறியிருப்பதை வலியோடு உணர முடிகிறது... /
அச்சச்சோ... ரொம்ப வலிக்குதோ? மருந்து போட்டீங்களா?
அப்போ என்ன சொல்ல வாறீங்க?

/உண்மையிலேயே இது வன்முறையின் சர்வ வியாபிப்புக்குள் வாழும் ந‌ம்முன் இருக்கும் சாத்தியமான‌ தெரிவு என்று ந‌ம்புகிறீர்களா? /
பேய்ச்சி நீ ஆரெண்டு சொல்லு.. நான் சொல்லுறன்..
உன்னை நம்ப ஏலாது.. எனகென்னவோ நீ ராஜபக்சவின்ட சொந்தககாரி போல கிடக்கு. அவர் தான் உன்னை அனுப்பி இருக்கிறார்.. இவனிட்டைக் கேட்டுக் கொண்டு வா.. அதன்படி செய்வம் எண்டு.. அப்பிடிதானே!

/தேசிய‌வாத‌த்துக்குப் பிற்ப‌ட்ட‌ நிலையாக‌ அவ‌ர் க‌ருதுவ‌து எதை என்பது குறித்து ஏதும் தெரிவித்திருந்தாரா என்ப‌தை அறிய‌ ஆவ‌லாயிருக்கிறேன்./
அறிஞ்சு.. என்ன செய்யப் போறீங்க எண்டு சொல்லுங்கப்பா.. மண்டை வெடிக்குது.

/அபாய‌ நிலையைத் தான் குறிக்கிறாரோ என்ற‌ நியாய‌மான‌ அச்ச‌ம் எழுகிற‌து.../
அய்யோ.. பயப்படாதீங்கவா..
தெனாலி எண்டு நினச்சுக்க போறாங்க..

/தனிச்சொத்துரிமை கொண்ட பெருமுதலாளியால், அவ் வர்க்கத்தால் சுரண்டப் படுகிற பாட்டாளி வர்க்கத்தினள் என்ற அடையாளம் அதிக மெய்த்தன்மை உடையதாகத் தெரிகிறது./
எவ்வளவு காலமாய் தெரியுது?
தெரிஞ்சு என்ன செய்யிறதா உத்தேசம்?

/சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் மீதான ஒடுக்கல் என்ற நிதர்சனத்தின் வர்க்க உள்ளடக்கம் பற்றியும் புரிந்து கொள்ள முடிகிறது./
இதை நீங்கள் இருக்கிற சந்திக்கு கிட்ட நிண்டு உரக்கச் சொன்னா தெரியும். எது பெருசு எது சின்ன எண்டு.. ஆமா எப்பிடி அளவெடுத்தீங்க? பெரிய நாடா வச்சிருக்கீங்களோ?

/பிரபாகரன் பின்நவீனத்துவத்தையும் மகிந்த மார்க்ஸியத்தையும் ஒருவேளை வரித்துக்கொள்ளக் கூடுமானால் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்களோ?/
இப்பிடித்தான்.. இப்பிடியே தான்..
வேலைவெட்டி இல்லாட்டி இப்பிடித்தான் நடக்கும் இல்லியா பேய்ச்சி?

Anonymous said...

பேய்ச்சிக்கு மேலதிகமாகச் சில குறிப்புக்கள்.

/உண்மையிலேயே இது வன்முறையின் சர்வ வியாபிப்புக்குள் வாழும் ந‌ம்முன் இருக்கும் சாத்தியமான‌ தெரிவு என்று ந‌ம்புகிறீர்களா?/
உங்கள் தெரிவை அறிய ஆவல்.

கருத்தியல் என்பதைத் தாண்டிய நிலையில் அரசு, தேசியம் மற்றும் சம்ஸ்டி அமைப்பு என்பதைப் பற்றிய விடயங்கள் பலவும் உரையாட விருப்பம். பல்கலாச்சாரங்கள் தொடர்பாகவும் அதனூடான அதிகாரப்பரவலாக்கல் என்பது தொடர்பாகவும் மேலும் பல விடயங்களை பேசலாம்.

இன்னும், தமிழ்த்தேசியம் பெருங்கதையாடல் மனநிலைக்கு தன்னைக் கொண்டு வந்துவிட்டது. அதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆயினும் அதன் அழிவின் மூலம் ஒட்டுமொத்ததமிழ்மக்களீன் உரிமைகள் இழக்கப்படால்ம் என்ற அச்சநிலையை நடைமுறைவாழ்வு எமக்கு அளித்துள்ளது. ஆகையால் தான் அதன் பெருங்கதையாடல்தன்மை அழிக்கப்படவேண்டும் என நினைக்கின்றேன். உங்களுக்கு அது தொடர்பாகப் பிரச்சனை இருக்காது என்று நினைக்கின்றேன்.

மற்றும், சில வெளியொதுக்கலூடாக நீங்கள் எனது கருத்துக்களை குறிப்பிட்ட வகைமாதிரிக்குள் இட்டுச் சென்று சில முத்திரை குத்தலைச் செய்கிறீர்கள். அந்த வன்முறை அழகாகவும் கேவலமாகவும் இருக்கிறது. :-)

அத்துடன் தனியே எதிர்நிலையில் கருத்துக்களை முவைத்து இங்கும் துவித எதிர்நிலையூடாக விவாதத்தை(கவனிக்கஉரையாடல் அல்ல) நிகழ்த்த எத்தனிக்கிறீர்கள். நான் கம்பன் கழக் விழாக்களுக்குப் போவதில்லை. ஆகையால் அது தொடர்பாக எனக்கு அறிவும் குறைவு.

சேகர்

பேய்ச்சி said...

அன்பின் சேகர்,
"ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, முதலாளித்துவச் சுரண்டல் என்பன இருக்கும்வரை ஒன்றிணைந்த இலங்கைத் தேசியத்தின் தேவை என்பது இருக்கும். வித்தியாச அங்கீகரிப்புடன் கூடிய இலங்கைத் தேசியத்தின் தேவை வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை"

என்பதை எனது கருத்தாகவோ அரசியல்நிலைப்பாடாகவோ முன்வைக்கவில்லை. அப்படியான ஒன்றை வரித்துக் கொள்ள வேண்டின் என்னளவில் நான் என்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிற பாசிச மனோநிலை குறித்து பிரக்ஞையுடன் இருக்க முயன்று கொண்டிருக்கிறேன்.குறித்த வாக்கியங்கள் மேற்கோளிடப்பட்டே எழுதப்பட்டிருந்தன... நான் சுட்ட விழைந்ததெல்லாம், நமக்கான நியாயத்தின் அடிப்படையில் பிரச்சனைகளை அணுக முற்படும்போது நம்து புலனுணர்வுக்குத் தட்டுப்படாத, நமது நியாயத்துக்கு மாறான‌, நாம் ஏறி நசுக்கிக் கொண்டிருக்கிற சிறுகுரல்கள்; அவற்றின் நியாயங்கள் கேட்காமலேயே போய்விடும் - அவற்றின் மீதான நம் வன்முறை தொடரும் என்பதைத்தான்.

உலகத்தில் பெருங்கொடூரத்துக்கு ஆட்பட்டவர்கள் நாம் என்ற தன்னிரக்கமே பிற்பாடு பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலியர்களின் பெருவன்முறையாக மாறியது என்று எனது நண்பரொருவர் சுட்டிக்காட்டுவார்... ஆக, நமது வலிகளை நாம் பிறருக்கு இழைக்கும் துன்பம் பற்றிய பிரக்ஞையோடு - குற்றவுணர்வோடு தான் பேசியாக வேண்டியிருக்கிறது - நமக்குள் படிவுறும் அதிகாரத்தைக் கணத்துக்குக் கணம் சிதைத்துக்கொண்டிருக்கும் பொருட்டு...

தமிழ்த்தேசிய அடையாளத்தின் புனைவுத்தன்மை அடர்த்தியை விடவும் 'பாட்டாளி' என்பதன் புனைவுத்தன்மை குறைவாயுள்ளதென்ற அறிதலுணர்வை 'பேயன்' ஆக வந்து எள்ளியிருக்கிறீர்கள். எனது எல்லைகளுக்குட்பட்ட புரிதல் அது என்பதை மட்டுமே சொல்ல முடியும்.

//எம்மீது அடையாளப்படுத்தப்படும் இலங்கைத்தேசியம் அதீதபாசிசமாக இருக்கிறது// என்பது அப்பட்டமான யதார்த்தம். 'தமிழர்' என்ற அளவில் தமிழ்த்தேசியம் என்பது 'மிதபாசிச'மாக உள்ளது என்றாவது ஏற்றுக் கொள்கிறீர்களா? அது ஒரு முஸ்லீம் பார்வையில், அவர் உட்படும் ஒடுக்கல் உக்கிரத்தில், அதீத பாசிசமாக இருக்கும் என்பதை ஏன் யோசிக்கத் தோன்றுவதில்லை? (தோன்றாதவரை, நீங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடுகளை, உங்கள் உணர்புலத்துக்குத் தட்டுப்படாத, ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சனையுள்ளவர்களை அடித்து, துவைத்து நொருக்கத் தோன்றிக்கொண்டே தான் இருக்கும், இல்லையா சேகர்?)

இத‌ற்குத் தீர்வு முஸ்லீம் தேசிய‌ம், ஆயுத‌ப்போராட்ட‌ம், ம‌னித‌ப்பேர‌ழிவு, தமக்கிடையே இருக்கும் விலகல்களை நசுக்கும் பாசிச‌ம் என்ப‌தாக‌ விருத்தியுறுவ‌து, அற‌நிலைப்ப‌ட்டு எத்துணை ஏற்பான‌து?

//தொடக்க காலத்தில் சாதியொடுக்கலோடு தமிழடையாளத்தைச் சுமக்க விதிக்கப்பட்டவர்கள் (தலித்துக்கள்?), பின்னர் முஸ்லீம்கள், மாற்று அரசியற் கருத்துள்ளவர்கள், மாற்றாயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அதன் வெளியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள்//

என்ற‌ வ‌ரிக‌ள் உங்க‌ள் ப‌திலில் அல‌ட்சிய‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருப்ப‌து, அல்ல‌து உங்க‌ள‌து பிர‌க்ஞையிலிருந்து ந‌ழுவி அக‌ன்றிருப்ப‌து ஏன்? நான் என்னைப் பெரிய‌ வேலைத்திட்டங்களுடன் இணைக்கவில்லைதான். ஆனால் என‌து வாழ்வ‌னுப‌வ‌த்துக்கென்று இழிந்த‌ப‌ட்ச‌ப் பெறுமான‌ம் என்று ஏதாவ‌து இருக்க‌லாம் இல்லையா?

//எழுத்தையும் எழுத்தாளர்களையும் போல காமடியானவர்கள் இந்த உலகத்தில் வேறுயாரும் இருப்பதாகத் தோன்றவில்லை.//
காமடியன்களைச் சகித்துக்கொள்வது நீங்கள் உங்களைக் கடவுளாகக் கட்டமைக்காதவரை சாத்தியப்படும் என்றே நம்புகிறேன். ஆனால் தொடரும் உங்களது வரிகள் அந்த நம்பிக்கையை இற்றுப்போகச் செய்கின்றன:
//ஒரு புளொக் வச்சிருக்க வேண்டும் எண்டு கூட ஒரு எண்ணம் இல்லை. எனக்கே என்னைப் பார்க்க கேவலமாக இருக்கும் சந்தர்ப்பத்தை வழங்க விருப்பம் இல்லாமல் இருக்கிறது.//
எல்லோரினும் மாட்சிமை மிக்க தேவன் கூறினான்: ஓ மனிதர்களே, புனிதம் தவறிக் கேவலத்தைத் தேர்ந்து கொள்ளும் மாபாவிகளே! நானிருக்கும் அதிமோட்சகதியைப் பாருங்கள்....

பேய்ச்சி said...

//எனக்கே என்னைப் பார்க்க கேவலமாக இருக்கும் சந்தர்ப்பத்தை வழங்க விருப்பம் இல்லாமல் இருக்கிறது.//

தவிரவும் சேகர், நீங்கள் அப்படி விருப்பப்பட்டு அதை நிறைவேற்ற இயலுபவராயும் இருப்பதில் எவ்வளவு பாக்கியவானாக இருக்கிறீர்கள்! ஒவ்வொரு தடவை சுயபுணர்வில் ஈடுபட முன்னமும் நானும் இப்படித்தான் நினைத்துக்கொள்வேன்... என்றாலும் முடிவதில்லை... பக்கத்து அய்யர் வீட்டில் பூசை நடக்கேக்குள்ள பயங்கரக் குற்ற உணர்வா இருக்கும் தெரியுமா? அவர் எவ்வளவு புனிதமா வாழுறார்... என்னால முடியலியே எண்டு...

பேய்ச்சி said...

//தனியே எதிர்நிலையில் கருத்துக்களை முவைத்து இங்கும் துவித எதிர்நிலையூடாக விவாதத்தை(கவனிக்கஉரையாடல் அல்ல) நிகழ்த்த எத்தனிக்கிறீர்கள். நான் கம்பன் கழக் விழாக்களுக்குப் போவதில்லை.//

கம்பன் கழக விழாக்களுக்குப் போகாததன் மூலம் நீங்கள் இழக்க நேர்ந்திருக்கும் சமூகவியற் புரிதல்களுக்காக வருந்துகிறேன் சேகர். போகாமல் வெளியொதுக்கும் வன்முறையில் எவ்வித அறத்தையும் உணர முடியவில்லை. போய்விட்டு கம்பன் கழக விழாக்களுக்கு ஏன் கல் எறிய வேண்டும் என்று எழுதும் மு.மயூரனின் வன்முறைப் பரிந்துரைக்குப் பின்னாலிருக்கும் அறவுணர்வை ஏற்றுக்கொள்வது உவப்பானது. ராமன் விக்கிரகத்துக்கு மேல் ஏன் மலம்கழிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது... உங்கள் பிரயோகத்தின் படியே எனது "விவாதம்" துவித எதிர்வுநிலையில் இயங்குவது உண்மையாயிருக்கலாம். ஆனால் தமிழ்த்தேசியம் என்று வருகிற போது நீங்கள் ஒற்றைக்குரலில் மொனோலிதிக் ஆகப் பேசுவதைக் கவனிக்கக்கூடாதா? உடன்பாடின்மையைப் பேச வேண்டும் என்று சொல்கிறீர்களே தவிர அதன் வன்முறையைப் பேசுவதில் நீங்கள் காட்டும் தயக்கம் அயர்வைத் தருகிறது.....

அற்புதன் said...

//இங்கே எம்முன் உள்ள தெரிவு என்னவென்றால் அதன் பெருங்கதையாடலுக்கான கூறுகளுடனும் பண்புகளுடனும் எமக்குள்ள உடன்பாடின்மைகளை கூறுவதே தவிர 'தேசியத்திற்கான தேவை முடிந்துவிட்டது. அதெல்லாம் தேவை இல்லையெண்டு எல்லாரும் சொல்லிட்டாங்கள்' என்பதல்ல. (அற்புதன் அண்ணை இது தொடர்பாக கவனிக்க வேண்டும். )//

பேயன் பேச்சி அமிபாக் குஞ்சு புகை பகை சேகர் சுதா என்னும் முகமூடிகளில் வந்தவருக்கு,இல்லை வந்தவளுக்கு
டிசேன்ர ப்லொகில அவர் பயமுறுதிறார் எண்டு போட்டு நீங்களும் வந்து பயமுறுத்தாதீங்கோ.

நீங்களே ஒரு ப்லொக் தொடங்கினியள் எண்டா இந்த ஆரூப தூவித வெளிகள் எங்க இருக்கு எண்டு நங்களும் கொன்சம் தெரின்ச்சு கொள்ளு(ல்லு)வம்.எனக்குத் தெரின்ச்சு வெளிக்குப் போறது எண்டா மலம் கழிக்கப் போறது தான் தெரியும்.

மேலும் உந்தப் பெரும் கதையாடால் எண்டால் என்ன? அதை ஒருக்கா விளகுங்கோ. நான் இப்ப ஒரு புத்தகம் வாசிச்சுக் கொண்டிருக்கன்.Fashionable Nonsense -Post modern intellectuals abuse of secience எண்டு.அதில சொல்லுறாங்கள் இலகுவாச்சொல்லக் கூடிய விடய்ங்களை எல்லோருக்கும் விளங்கிற மாதிரிச் சொன்ன அதில் இருக்கிற குறைபாடுகளை கண்டு பிடிச்சுப் போடுவினம் எண்டு, தமக்கு விளங்காமையே பல சொற்களையும் கருதுக்களையும் மற்றவ்ர்களை குழப்ப வேணும்ம் அல்லது பிரமிப்பில் ஆழ்த்த வேணும் எண்டதுக்காகவே ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக இப்படியான உரையாடல்களை பீனா நானாக்காரர் செய்கினம் எண்டு.அனா நீங்கள் அப்படி எண்டு நான் நினைக்கேல்ல.எதுக்கும் ஒரு ப்லொக்கைத் தொடங்கி உங்கட பயமுறுதல்களைத் தொடரலாமே நாங்களும் டிசேயின்ர ப்லொக்கில கண்ட கண்ட வெளிக்குப் போகாம?

மேலும் தமிழ்த் தேசியம் என்னும் அடையாளம் சாதிய சமய அடையாளங்களைத் துறந்ததாக இருக்க வேணும் எண்டறதில புலிகள் இப்போது கண்ணாகவே இருகிறார்கள்.இதைத் தான் நீங்கள் எனக்குச்
சொல்ல வருகிறீர்கள் என்று கருதுகிறேன்.எனக்கும் இதனோடு பூரண உடன் பாடு உண்டு.அதற்காகவும் நான் பல தளங்களில் என்னால் ஆனதைச் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

சும்ம இருந்தா ஒண்டும் நடவாது முடிந்தவரை இயங்க வேண்டும் அது இந்த இணைய வெளியில், கருத்து உருவாக்கம் அல்லது சிறுகதையாடலுக்கும்(உங்கள் மொழியில்)பொருந்தும்.

Anonymous said...

டிசே, மிகவும் அபாயகரமான நிலைக்கு உங்கடை வலைப்பதிவு போய்க் கொண்டிருக்கிறது. ஏன் இவர்களின் கொமன்ட்ஸ்களையெல்லாம் போடுறியள். உங்கடை பதிவொன்றிலைதான் நல்ல விசயங்களைப் படிக்கலாம் என்று வந்தால் இதென்ன குழப்பங்கள். இது உங்களுக்குத் தேவைதானா?

இளங்கோ-டிசே said...

சங்கவி,
அக்கறைக்கு நன்றி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் இருக்குந்தானே, அதைத்தான் இங்கே பகிர்கின்றார்கள்.
.....
'பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ' என்று தீவு இந்தப்பதிவுக்கு ஒரு எதிர்ப்பதிவு எழுதினால்.., ஏற்கின்றோமோ இல்லையோ என்பது வேறுவிடயம், ஆனால் அப்படி எழுதக்கூடாது என்று சொல்லமுடியாதுதானே. அதுபோலத்தான் இதுவும்.

Anonymous said...

பெரீய்ய்ய்ய கட்டுரைகளை வாசிப்பதே பயமாயிருக்குது. இப்ப பெரிசெல்லாம் பின்னவீனத்துவமாம் எண்டு செயமோகன் சொல்லியும் போட்டார். ஆனா இந்தப் பெரீய்ய கட்டுரையை டீசே மட்டும் எழுதேல்ல. அந்நியன் ரேஞ்சில் (கடைசிக் கட்டம் மாதிரி) இன்னொராளும் சேர்ந்தே எழுதியிருக்கு. கட்டுடைக்கிற ஆக்கள் எல்லாம் சேந்து இப்பிடிக் கட்டுரை ஆக்குவதைப் பாக்கவே பயமாக் கிடக்கு

ஆனாப் பாருங்கோ, எழுதுற எல்லாம் விண்ணர்கள். எண்டதால் தயங்கித் தயங்கித்தான் உங்க கருத்துச் சொல்லுறன். விளக்கங் குறைஞ்சது எண்டு முதலே சொல்லியும் போட்டன். விளக்கங் குறைஞ்சது கருத்துச்சொல்ல வந்திட்டுதே எண்டு பார்க்காதயுங்கோ. எல்லாம் நீங்கள் மற்றமைகளையும் ஏற்றுக் கொள்ளுற ஆக்களெண்ட நம்பிக்கையெண்டாப் பாருங்கோவன்.

என்ர சந்தேகம் வலு சின்னது. //முன்னர் ஒருமுறை டீ சே தமிழனும் பின்னவீனத்தைத்தான் புரிந்துகொண்ட விதம் என்று ஒரு பதிவை இவ்வாறு எழுதமுயன்று தோல்விகண்டிருந்தார்.// எண்டு மயூரன் எழுதினா டீசேக்கு என்ன பிரச்சினை?

அந்தப் பிரதி தோற்றுப் போச்சுது எண்டு மயூரன் நினைக்கிறார். அப்பிடி அவர் நினைக்கக் கூடாதோ? அப்பிடி நினைச்சா அதைச் சொல்லக் கூடாதோ?

டீசேயுக்கு இந்தப் பதிவெழுத வேண்டி வந்தது ஏன்? அவரது ஒரு பிரதி தோற்றுவிட்டதை (மயூரன் பார்வையில்) ஏற்றுக் கொள்ள முடியேல்லையோ? அல்லது அவரது பிரதியொன்று தோற்றுவிட்டா அவரே தோற்றது போலாகிவிட்டுதோ? அல்லது பிள்ளையைச் சற்றுத் தள்ளியிருக்கச் சொல்ல மயூரனுக்கு ஒரு 'சொட்' குடுக்க வேண்டிய கட்டாயமோ?

ஒரு பிரதியை இன்னொருத்தர் தோற்றுதெண்டு சொல்லீட்டா இவ்வளவு தன்னிலை விளக்கங் கொடுக்கணுமா எண்டதைப் பாக்கவே பயமா இருக்குது. ஒரு பிரதி பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டுமானால் அப்பிரதியாளனுடன் உரையாடவும் வேண்டுமென எதிர்பார்ப்பதைப் பார்க்க நடுங்குது. வெற்றி தோல்வியென்ற இரட்டை நிலையைத் தாண்டி விட்ட ஒருவர் எவனோ ஒருத்தன் தோல்வியெண்டு சொன்னதும் எதுக்காகத் துள்ளிக் குதிக்கோணும்?

பிறகு டீசே மயூரளை "அந்த" லேபிளை மறுப்பவர் என்றும், "மயூரன், உங்களைப் போன்றவர்கள்" என்றும் "லேபிள்கள்" குத்த, நம அந்நியன் வந்து விளக்கம் விளக்கமா விளக்கி மயூரனுக்குப் புரிய வைக்கப்போய்.... கும்சலக்கடி கும்மா.

ஒரு சிறிய பின்னூட்டத்தில் மயூரனுக்கு என்ன பேசுகிறதென்று மயூரனுக்குத் தெளிவாகப் பேசத்தெரியவில்லை என்றதும் ஒரு கருத்துத்தானே டீசே?

மயூரன் உங்கள் பின்னத்துவப் புரிதற் கட்டுரை தோல்வி கண்டதென்று கருத்துச் சொன்னது போல நீங்கள் மயூரனுக்குச் சொல்ல வந்தது என்னவென்றே விளங்கவில்லையென்று கருத்துச் சொல்கிறீர்கள். இந்த விளக்கங் குறைஞ்சதுக்கே (அது நாந்தேனுங்கோ) பின்னவீனத்துவத்தை இப்பிடி எளிதாக விளக்கிப் பயனில்லை என்றதாக மயூரன் கருத்துச் சொன்னதாகவே படும்போது (அவ்வகையில் மயூரன் டீசேயின் பிரதியைத் தோற்றதாகச் சொல்லவேயில்லை, இத்தகைய முயற்சிகள் வெற்றியடையாதெனச் சொல்வதற்கா உதாரணமாகவே டிசேயின் பதிவைக் குறிப்பிட்டாரென்ற அளவில் தான் இந்த எல்லாப் பிரதிகளையும் வாசிச்சு விளக்கங் குறைஞ்சது விளங்கி வைச்சிருக்கு) நாலாண்டுகளுக்கு மேலாக வாசிச்சவர் எதிர்நிலை நின்றே பார்க்கும் சூழ்நிலைதான் எம்மிடம் இருக்கிறதா? இந்தச் சிந்தனைகளைக் கொண்டு எங்க நாம எல்லாரும் போறம்?

மயூரன்ட பொப் மார்லிக் கதையும் 3 டி க் கதையும் என்ன அரசியலுடன் எழுதினவரெண்டு விளக்கங் குறைஞ்சவருக்கும் விளங்குது. ஆனால் மயூரன் போன்ற மற்றமைகளை நிராகரிச்சு, நீங்கள் சொல்லுவது போலத்தான் சிந்திக்க வேண்டும் எண்டு கூட்டஞ் சேர்ந்து நாண்டுக்கிட்டு நிற்பது தான் பயப்பிடுத்துது.

//சிந்தனையையும் எதிர்வினையையும்//
அடேயப்பா, அதுகளிலயும் வித்தியாசமிருக்கா? அப்ப நம்ம "அந்நியன்" சிந்திக்கிறதேயில்லை எண்டுறீங்களா டீசே? எது கருத்து, எது சிந்தனை எண்டு தீர்மானிப்பதுங்கூட அவரவ்ர் வாசிப்புத்தானே டீசே?

நாலு ஆண்டு எண்டில்லாவிட்டாலும் நானுங் கொஞ்சம் வாசிக்கிறன் எண்ட அளவில் டீசேயின் இந்தப் பிரதி தோற்று விட்டதென இத்தால் கருத்துச் சொல்கிறேன். இதை டீசேயின் பதிவிலேயே உரையாடலாகச் சொல்வது டீசே பதில் சொல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலில்லை. இந்தக் கருத்துச் சொன்ன பிரதி தோற்றதாக நீங்கள் அறிவித்தால் அது உங்கள் வாசிப்பு. விளக்கங் கோரிப் பதிவெல்லாம் போட மாட்டேன்.

பிரதியாளர்களுக்காகப் பிரதிகள் சாகத்தொடங்குவது அல்லது பிரதிகளைக் காப்பாற்ற பிரதியாளர்கள் நோகத் தொடங்குவது எங்கயோ இடிக்குதே !!

Anonymous said...

பேய்ச்சிக்கு,
நீங்கள் சொல்லும் விடயத்தில் உடன்படமுடிகின்றது.

தமிழ்த்தேசியம் பற்றிய உரையாடல்களின் போது நான் விடுபடும் குரல்களூடாகச் செல்கின்றேன் என்கின்ற கூற்றில் உண்மையிருக்கலாம். அது பற்றி எழுதும் போது என்து விரல்கள் தாமாகவே நடுக்கம் கொள்கின்றன. மிகவும் அடர்த்தியான தயக்கம் என்னைக் கவிந்து கொள்கின்றது. சிறிய வயதில் பார்த்த இறப்புக்கள் பிரிவுகள் பல. சிறுவனாக இருக்கும் போது துவக்கும் சாரமுமக இருந்த 'மாமா'க்கள் போயேவிட்டார்கள். காற்சட்டையைப் பிடித்தபடி எனது மாமாக்களை 90 களின் பின்னாலும் தேடிக்கொண்டிருந்தேன். போராடி முடித்துப் போய்விட்டார்கள். ஆயினும் 90 களின் பின் 'அண்ணா'களின் உலகம் எனது மனத்தின் சில பகுதிகளை நிரப்பியது. அவர்களின் கனவுகளை அறிவேன்.

சிறுயதில் மீள்நிரப்பட்ட கனவுக்கு உருவம் கொடுத்தவர்களின் இறப்புக்கள் என்னை இன்றுவரைக்கும் தொடர்கின்றன. இவை பற்றி எழுதும் போது கவியும் தயக்கத்திற்கு அது காரணமாக இருக்கலாம். ஆயினும் இனம்சார்ந்த காரணங்களால் ஒடுக்கப்படும் சமூகத்திற்கு தேசியப்போராட்டம் என்பது முக்கியமானது எனத் தோன்றுகின்றது. அதன் தேவை முடிந்து விடவில்லை எனக்கருதுகின்றேன்.

உங்களது கருத்துக்கள் 'கட்டமைத்தவை' தொடர்பான சில விடயங்களும் எனது கருத்துக்களும்.
எனது மனம் பாசிச மனநிலையில் தேங்காமல் இருக்கவேண்டும் என்கின்ற உங்களது கருத்துடன் உடன்படுகின்றேன். ஆயினும் இனம் என்ற கோட்டில் அது சற்று இறுக்கமுறும் காரணம் பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். எனது ஞாபக அடுக்குகளில் தேங்கியிருக்கும் படிமங்கள் என்னை அம்முடிவு நோக்கிச் செலுத்தியிருக்கலாம். ஆயினும் உங்களது 'மனம்' கொண்டியங்கும் சில விடயங்களுடன் நான் உடன்பட முடியாதுள்ளது. 'இனக்' கோட்டின் இறுக்கத்தை நீங்கள் பாசிசமாகவும் பிற்போக்கானதகவும் கட்டமைத்து வைத்திருக்கிறீர்கள். பாட்டாளி இறுக்கத்தை சற்று சாதகமாக அணுகும் நீங்கள் இதனை அவ்வாறு கருதுவதில்லை. தேசியக்கருத்தியலை எதிர்க்கும் மார்க்சியர்களின் கருத்தில் சரணடையும் தருணங்களில் இவ்வாறான கருத்துக்கள் எம்மை ஆக்கிரமிக்கும் என நினைக்கின்றேன். சென்ற நூற்றாண்டின் பின் அரைப்பகுதி முழுமைக்கும் தேசியங்களுக்கு ஆதரவான கருத்துக்கள் பெரும்பாலும் பிற்போக்காகவே கருதப்பட்டு வந்துள்ளன. நவீனத்துவத்தின் முடிவிற்கு முன்பான பின்னவீனத்துவத்தின் ஆரம்பம் என்ற ஹேபர்மாசின் கருத்துக்கள் முக்கியமானவை. அவ்வாறே தான் மார்க்சியத்தின் தேவையும் இன்றுவரைக்கும் முக்கிய்மானது.

தமிழ்த்தேசியம் தன்னுள் ஒடுக்கிய குரல்கள் என்ற வகை மாதிரியை நான் திட்டமிட்டுத் தவிர்ப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். தமிழ்த்தேசியம் என்ற வகை மாதிரிக்குள் முஸ்லிம் மக்களுக்களின் குரல்கள் ஒடுக்கப்படுவதாக அவர்கள் கருதுமிடத்து முஸ்லிம் தேசியம் என்ற கருத்தியல் கோட்டை அவர்கள் இறுக்குவதை விரும்புகின்றேன். இங்கே தேசியம் தொடர்பான விடயங்களில் நான் கூறும் விடயங்கள் தற்காலிக நிலை சார்ந்தவையே. அவை அடிப்படைவாத மனநிலைக்கு தம்மை இட்டுச் செல்லாத இனம் தொடர்பான குரோத மனப்பான்மையை வளர்க்காத வரைக்குமே நான் சொல்லும் புள்ளிகளுடன் இயங்கள் முடியும். அது தவிர்த்து இனக்குரோதமாக வளருமிடத்து அது தன்னை தகர்க்க வேண்டியுள்ளது. தமிழ்த்தேசியம் நான் கூறும் எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமான கருத்த்யலுடன் தன்னை கட்டமைக்கிறது என்பது எனது புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல என்பதையும் சொல்லிக் கொள்கின்றேன்.

தலித்துகள் மற்றும் மாற்றாயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய விடயம் என்னால் தவறவிடப்பட்டமைக்கு வருந்துகின்றேன். தலித் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் எப்போதும் உடன்படுகின்றேன். இங்கே தலித்தியம் தேசியப் பெருங்கதையாடலை நிராகரிக்கிறது என்ற புருடா வை ஏற்றுக்கொள்ளமுடியது நண்ப. இந்தியாவில் பிராமணியத்தின் சமூகக் கட்டமைப்பே இந்திய தேசிய ஒட்டுமொத்தக்கருத்தியலுடன் தன்னைப் பிணைத்து நிற்பது. அங்கே தலித்திய கருத்தியல் இயல்பாகவே தேசியக்கருத்தியலை நிராகரிக்கும் நிலையை எய்தும். ஆயினும் ஏகாதிபத்தியச் சுரண்டல் போன்வற்றை எதிர்க்க தேசியகருத்தியல் தேவைப்படுகின்றது அவர்களுக்கு. ஆயினும் எமது சூழலில் தமிழ்த்தேசியம் என்பது ஆதிக்க சாதியினருடன் மட்டுமே பிணைக்கப்படிருப்பதென்பதில் கேள்வியிருக்கிறது. புலிகள் தவிர்ந்த மற்றைய போராட்டக்குழுக்களிடம் இடதுசாரிய போக்கு இருந்தது. அது தமிழ்மக்கள் கடந்து வந்த 'தேசியப்பாதை' யுடன் பூரணமாக ஒன்றுபடவில்லை. (இடதுசாரிய குழுக்களின் தேவைதான் முக்கியமானது.) இங்கே தமிழரசுக்கட்சியினது கருத்தியல் பாத்திரம் புலிகளால் ஆயுதப்போராட்டம் என்ற விருவுடன் மீள்நிரப்புகைக்கு உள்ளானது. ஆக புலிகள் தமிழரசுக்கட்சிகளின் நீட்சியாக தம்மை தேசிய கருத்தியல் சார்ந்து வெளிப்படுத்தினார்கள். இங்கே நாம் பார்கவேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் புலிகள் தமிழரசுக்கட்சியின் ஒட்டுமொத்தக் கருத்தியல் நீட்சியா என்பதைத் தான். இடதுசாரிகள் அவ்வாறுதான் கருதினார்கள. இந்த இடத்தில் தான் நாம் தேசிய நிராகரிப்புக்கு உட்பட்டதாகவே தலித்தியப் போராட்டம் இருக்கவேண்டுமா என்ற கேள்வியை முன்வைக்கமுடியும். தமிழரசுக்கட்சியின் ஒட்டுமொத்த நீட்சியாகப் புலிகளைப் பார்க்குமிடத்து- இன்றைய தமிழ்தேசியவாதக் கருத்தியகைப் பார்க்குமிடத்து- அதனை நிச்சயமாக நாம் மறுக்க வேண்டும்.
இங்கே மார்க்சிய விமர்சகர் சிவசேகரத்தின் கருத்து முக்கியமானது. அவரது பார்வை புலிகளை தமிழரசுக்கட்சியின் நீட்சியகச் சில இடங்களிலும் வேறு சில இடங்களில் அக்க்ருத்தியலை நிராகரிக்கும் பார்வையையும் அவரது எழுத்தில் காணமுடியும். ஆயினும் மார்கிசிய கருத்தியல் நிலைப்பட்டு அவர் அதிகமான இடங்களில் தமிழரசுக்கட்சியின் நீட்சியாகப் பார்க்கின்றார். அவரது கருத்த்யுக்கள் உண்மையாக இருக்கின்ற போதிலும் என்னால் பூரண உடன்பாட்டை எட்ட முடியாது. இங்கே பல இடங்களில் தமிழரசுக்கட்சியின் தேசியப்பாதை புலிகளால் மீறப்பட்டது என்பதாக என்னால் கருத முடிகின்றது.

இங்கே தான் தேசியம்-தலித்தியம் என்ற விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. தமிழ்த்தேசியப் பெருங்கதையாடலை மறுக்கும் தலித்தியம் தொடர்பான விடயத்திற்கு முதல் நான் மேலே கூறிய விடயங்கள் முக்கியமானவை. இங்கே, தமிழரசுக்கட்சியின் நீட்சியாகப் புலிகளையும் 'புலிகளால் கருதப்படும் தேசியத்தையும்' கருமிடத்து தலித்திய போராட்டங்கள் தேசியத்தை நிராகரித்தவாறே தம்மை வெளிப்படுத்த முடியும் என்ற உண்மை உண்டு. அயினும் புலிகளைத் தமிழரசுக்கட்சியின் நீட்சியாகப் பார்க்காத பார்வையில் அவ்வாறு கருத முடியாது. அவ்விடத்தில் தேசியப்போராட்டத்தை ஆதரித்தவாறே தலித்திய போராட்டம் முன்னெடுக்கப்பட முடியும். புலிகளை ஆதிக்க சக்தியினர் கேவலமாகப் பார்க்கும் பார்வை யாழ்ப்பாணத்தில் உண்டு. தமிழரசுக்கட்சியினரிடமிரிந்த சாதியப் பெருமிதம் புலிகளிடமும் அறவே இல்லை. தமிழரசுக்கட்சியின் அதே நீட்சியாக இன்றும் எஞ்சி நிற்கும் ஆனந்தசங்கரி தலித்திய மாநாட்டை ஆதரிப்பது என்பது எவ்வளவு முரண்நகை. (ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி மக்களுக்கு உரிமை பெற்றுக்கொடுக்கும் செயலை இன்றுவரைக்கும் த்மிழரசுக்கட்சி செய்துகொண்டே இருக்கிறது. நேற்றும் ஆனந்தசங்கரி மகிந்த ராஜபக்சே விற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.) ஆக தலித்தியப் போராட்டம் தேசியப் போராடத்தை நிராகரிக்க வேண்டும் எனக் கூறுபவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. புலிகளை எதிர்த்தவாறே தலித்திய போராட்டத்தை நடத்த முடியும் எனகூறுபவர்கள், இன்றைய நிலையில் இயல்பாகவே இலங்கை அரசாங்கத்தின் பக்கம் சாயவேண்டிய நிலைமை உண்டு. அங்கே இருக்கும் தமிழர்கள் சாதியதிம்ர் பிடித்தோரே. சாதியத்திமிர் எப்போது அதிகாரவர்க்கம் சார்ந்து இயங்கும. இவ்விடத்தில் மீண்டும் நாம் தலித்தியப் போராட்டம் தொடர்பாகப் பேசத்தொடங்குவோம்.

இன்னும் மாற்றுக்கருத்துள்ளோர் என்கின்ற கருத்தாடலகள் தொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும். நானிருக்கும் சூழலில் நான் மாற்றுக்கருத்தாளன் தான். 'பினவீனத்துவப் புலி' என்று உங்களால் இலகுவாக முத்திரை குத்த முடிகின்றது. இங்கே நான் மாற்றுக்கருத்தாளன் என்ற வகைமாதிரிக்குள் இருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதா? மற்றும், எனது மனநிலைக்குக் காரணங்கள் என்னவென்பதை மேலே சொல்லிவிட்டேன். இங்கே உங்களது முத்திரை குத்தலின் வலியை உங்களால் உணரமுடியாது நண்பரே. அதனை நீங்கள் வேண்டுமென்றே செய்ததாகச் சொல்லமுடியவில்லை. ஆயினும் உங்களது கருத்தியல் மற்றும் மனநிலை அவ்வாறு செய்துவிட்டதாக நினக்கின்றேன்.
இன்னும், ஒரு அரசாங்கத்தின் அனைத்து வசதிகளையும் பெற்றவாறு கப்பம் பெறுதலில் ஈடுபடுவோரை நீங்கள் மாற்றுக்கருத்துள்ளோர் என்று சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவ்விடயத்தில் தெளிவு இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

/எல்லோரினும் மாட்சிமை மிக்க தேவன் கூறினான்: ஓ மனிதர்களே, புனிதம் தவறிக் கேவலத்தைத் தேர்ந்து கொள்ளும் மாபாவிகளே! நானிருக்கும் அதிமோட்சகதியைப் பாருங்கள்..../
நண்ப, என்னைப் போல எல்லோரும் இருக்கவேண்டும் எனக்கருதிக்கூறவில்லை. எனது நிலைப்பாட்டைக் கூறினேன். ஆயினும் மற்றவர்கள் தமக்கான நிலைப்பாட்டுடன் இருப்பதை தடுக்க முற்படவில்லை. ஆயினும், நீங்கள் நான் கூறிய விடயத்தை அவ்வாறு விளங்கிக் கொண்டு கருத்துக்கூறி இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் அவ்வாறு கருதித்தான் உங்களது கருத்தை முன்வைக்கிறீர்களோ தெரியவில்லை. வித்தியாசங்கள் மற்றும் அடையாளங்கள் தொடர்பாக மிகவும் முற்போக்காகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும் புத்தமதம் தொடர்பான ஆவலுடன் நீங்கள் இவ்வாறான ம்னநிலையை கொண்டுள்ளமை வியப்பளிக்கிறது பேய்ச்சி.

அமீபா அல்லது கோமாளி ரங்கன்

Anonymous said...

விளக்கம் குறஞ்சதுக்கு விளக்கம் கூடிப்போச்சு எண்டு நினைக்கிறன்..

(அதோட ஒரு சந்தோசம் என்னென்டா இப்பதான் உண்மையிலேயே ஒரு பெண் பின்னூட்டம் இட்டிருக்கிறார் போலக் கிடக்குது. ஆண்களது வன்முறையான மொழி விளக்கம் குறஞ்சதிடம் இல்லைப் போலக் கிடக்குது.)

விளக்கம் குறஞ்சது மயூரன் ரசிகர் மன்றத்தின் தலைவராக/தலைவியாக இருக்கவாய்ப்புண்டு.
இல்லையா விளக்கம் குறஞ்சது?

///சிந்தனையையும் எதிர்வினையையும்//
அடேயப்பா, அதுகளிலயும் வித்தியாசமிருக்கா? அப்ப நம்ம "அந்நியன்" சிந்திக்கிறதேயில்லை எண்டுறீங்களா டீசே? எது கருத்து, எது சிந்தனை எண்டு தீர்மானிப்பதுங்கூட அவரவ்ர் வாசிப்புத்தானே டீசே?/

சிந்தனையின் முழுப்பரிமாணமும் மொழியில் வெளிப்பட முடியாது. எதிர்வினை என்பது சிந்தனையின் ஒரு பகுதியே தவிர வேறில்லை. மொழியின் போதாமையுடன் தொடர்புள்ளது.

Anonymous said...

/பிரதியாளர்களுக்காகப் பிரதிகள் சாகத்தொடங்குவது அல்லது பிரதிகளைக் காப்பாற்ற பிரதியாளர்கள் நோகத் தொடங்குவது எங்கயோ இடிக்குதே !!/
ஊ ஆ வலிக்குதா?

Anonymous said...

தேசம் நெட் இல் யமுனா ராஜேந்திரனை படங்காட்ட வேண்டாம் எண்டு ராஜகீரி எச்சரிக்கை விட்டிருக்கு. அத்துடன் டீ.ஜே தமிழனின் பதிவில் படம்காட்டும் அமீபா போன்றவர்களுக்காகவும் தனது புரட்சியை ஆரம்பிக்கப் போவதாக எச்சரிக்கை விட்டிருக்கு ராஜகீரி. அத்துடன் ராஜகீரி சுகன்-சோபா சக்தியையும் விடுவதாக இல்லையாம். அற்புதனும் இனி அவுட்டாம்.
ஆமா.. இவங்க என்ன சாரைப்பாம்பா?

/நாம் முதலில் யமுனாவின் சுய தெரிவிலிருந்து ஆரம்பிப்பதற்கானவொரு இடைவெளியை அவருக்கு வழங்கியுள்ளோம்./
வழமையைப் போல 'வழங்கியுள்ளோம்' எனப்பன்மையில் கூறி மாட்டுப்பட்டுவிட்டது ராஜகீரி.
ஊரில சொல்லுவாங்க "கொட்டை பெருசு கோவணம் சின்னன்" எண்டு. அதே தான்.
பெருசா பீலா விடுறார்..

ராஜகீரி கண்ணு, உங்களைப் போல எழுத்தில் புரட்சி செய்ய முடியும் என மற்றவர்கள் நம்பமாட்டார்கள். எழுதுவதற்கும் மலங்கழிப்பதற்கும் வித்தியாசம் இருக்க முடியாது. மலம் கழித்தலையே வாழ்வு முழுமைக்கும் செய்து தொலைத்துக் கொண்டிருக்க முடியாது ராஜகீரி.

தேசம் நெட் இல் சந்திப்போம் நண்பர்களே..

இப்படிக்கு,
கோமாளி ரங்கன்

Anonymous said...

அந்நியனுக்குக் கோவம் வந்திட்டுப் போல

புதிசா ரெண்டு பேர்சனாலிட்டியுடன் வந்திட்டார். ஒரு பிரதிய ஒருவர் எப்பிடி வாசிக்கிறார் எண்டது பிரதியாளருக்கு ஒரு பிரச்சினையா இருக்குதா எண்டு கேட்டன். அதுக்கு எந்தக் கதையுமில்லை. மயூரனுடன் தொடர்புபடுத்தி ஒரு கிசுகிசுவை உருவாக்குவதுடன் திருப்திப்படுறார்.

இங்க பிரச்சினை மொழியின் போதாமையல்ல அந்நியன். உங்கட தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவதற்குப் பல்வேறு வழிகளை கையிலெடுக்கிறீர்கள். டீசேயும் அந்நியனும் ரொம்பச் சந்தோசமா இருப்பீங்க. ஏனண்டா மயூரன்ட பல பொட்டுக்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டீட்டீங்கயெல்லோ. ஆனா உங்க பொட்டுக்கேடுகளும் கொஞ்சம் தெரியுது பாருங்கோ.

மொழியின்ட போதாமை எண்டது அந்தந்த மொழியைப் பயன்படுத்துபவர்களின், அப்பயன்பாட்டை வாசிப்பவர்களின் போதமையோட தொடர்புபட்டிருப்பதாகவே படுகிது. உங்க மொழியின் போதாமையும் என்மொழியின் போதாமையும் ஒண்டில்லைத்தானே. மொழியால் எழுதப்படும் பிரதி பிரதியாளரின் சிந்தனையையும் தாண்டி வாசகரின் வாசிப்பாலும் புது அர்த்தம் பெறுகுதுதானே. ஆனா நீங்க அதையே மறுக்கிறீங்க. அதுதான் விளங்காமக் கேட்டன் சிந்தனையும் எதிர்வினையும் வேறவேறயோ எண்டு. ஆனாச் சிந்தனை எது எதிர்வினை எது எண்டு அதிகாரம் பண்ணுவது சரியில்லைத்தானே...

வளர்மதி போன்றவர்கள் ஏற்கவுஞ் செய்தார்கள் எண்டா மயூரன் ஏற்கத்தான் வேணும் எண்டு சொல்லுறீங்களா? ஒரு குழுவாகச் சேர்ந்து peer review செஞ்சிட்டா மிச்செல்லோரும் ஏற்கோணும். போப் சொன்னதைக் கேள்வி கேக்கக்கூடாது எண்ட மாதிரி...

பிரதிகளை வாசிப்பும் மறு வாசிப்புஞ் செய்து வருபவர்களுக்கு, மற்றமைகளை ஏற்கணும் எண்டதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மயூரன் ஒரு பிரதி தோற்றதாச் சொன்னது ஏன் உறுத்துது எண்ட சின்னக் கேள்வியைத் தானே கேட்டன்.....

Anonymous said...

டி.ஜே, பின்னூட்டங்களைப் படித்தீர்களா. படித்தபின் உங்களுக்கு
ஒன்றும் ஆகவில்லையா :).
அமீபாவின் சுயபெருக்கத்தை விட அதிகமான பின்னூட்டங்கள் :)

Anonymous said...

விளக்கங் குறைஞ்ச அண்ணை/அக்கை முதலிலை நான் அந்நியன்ரை மல்ரிப்பிள் பேர்சனலிட்டியள்ளை ஒண்டில்லை எண்டதை சொல்லிவிடுறன்.

ஆதியோடந்தம் பிரதி அது தந்த பிரீதி எண்டு எல்லாத்தையும் வாசிச்சு அப்பாடா ஒரு மாதிரி விளங்கீட்டுதெண்டு ஒரு முடிவுக்கு வர்ற நேரத்திலை டபக்கெண்டு வந்து நிண்டு ஆரம்பமே பிழையெண்டுறியள்.எனக்கே விளக்கங் குறைவு எனக்கே விளங்கினது என்னெண்டா பின்னவீனத்துவம் எண்டு டீசே எழுதின கட்டுரை தோற்றுவிட்டதாக மயூரன் சொல்லியிருக்கிறார் அது எப்பிடி நான் எழுதினதை இவன் தோற்றதாகச் சொல்லமுடியும் எண்டு டீசே கேட்கேல்லை அவர் கேட்கிறது அது தோற்றது எண்டு சொல்வதற்கு மயூரனுக்கு என்ன காரணம் இருக்கக் கூடும் எண்டதுதான் இது பிரதி,அது எழுதின மொழி அதை எழுதின பிரதியாளன் எல்லாரையும் தாண்டி பிரதியை வாசிச்சு வியாக்கியானம் சொன்னவனை நீ சொன்ன வியாக்கியானத்துக்கு வியாக்கியானம் சொல்லு எண்டு கேட்கிறது.

இப்ப பிரதி எழுதினவனையும் சாக்கொண்டு தானும் செத்து வாசிச்சவன் வடிவிலை உருக்கொண்டிருக்கிருக்கு இனி வாசிச்சவன் எப்படி அதை வாசிச்சான் எண்டு அறியிறதன் மூலம் பிரதி பயணம் செய்யும்.இது பின் நவீனத்தின்ரை அடுத்த படிநிலை

இதிலை உங்களுக்குப் பிரச்சனை பிரதியா மயூரன்ரை பெயர் இழுபடுறதா?

Anonymous said...

அன்புள்ளோருக்கு,
அமீபா+புகை+சுதா+சேகர்+கோமாளி ரங்கன் எழுதிக்கொள்வது.

சில விடயங்களைச்சொல்லிவிட்டு விடைபெறுகின்றேன்..

டி.ஜே தமிழனின் பதிவில் மயூரனைத் தாக்கும் நோக்கில் என்னால் பின்னூட்டங்கள் எழுதப்படவில்லை என்பதைத் தெரிவிக்கின்றேன். நான் நண்பர்களுடன் உரையாடும் அணுகுமுறையில் தவறிருக்கலாம். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.
எனது உரையாடல் மற்றயவர்களின் மீது மதிப்பளிக்காதவிதமாக இருப்பதை நினைத்து என்னால் வேதனைப்படவே முடியும். அது பலரை கருத்துக் கூறுவதில் இருந்து பின்னிற்கச் செய்வது என்பது மனவருத்தம் தரக்கூடியது.

முக்கியமாக பேய்ச்சியிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். எனது மொழி உங்களைக் கஸ்டப்படுத்திவிட்டது. இனிமேல் அப்படி ஒரு சந்தர்ப்பம் வராது என நினைக்கின்றேன். உங்களது பின்னூட்டம் நியாயம் பொருந்தியவை.

விளக்கம் குறஞ்சதுவிற்கு பல பதில்கள் இருக்கின்றன. இல்லை பேசப்போவதில்லை. இனிமேல் அது பற்றிப் பேசப்போவதே இல்லை. ஆயினும் விளக்கம் குறஞ்சது நீங்கள் ஒருபக்கச் சார்பானவர் என்பது அப்படியே தெளிவாக எல்லோருக்கும் தெரிகிறது. இங்கே நடக்கும் உரையாடல்களுக்குப் பின்னாலான உளவியல் எனக்கு நன்கு புரியும். ஆதலால் இதை விட்டுச் செல்கின்றேன்.

கோமாளி ரங்கன் என்ற பெயரை தேசம்நெட் இல் பாவிக்க இருந்தேன். ஆயினும் அம்முடிவை மாற்றிக்கொண்டுள்ளேன். அப்பா வயசு ஆக்களைப் புண்படுத்துவது கஸ்டமாகவும் இருக்கிறது.

பெயரிலியின் பதிவில் சுஜாதா பற்றிய பின்னூட்டம் ஒன்றில் விடிய விடிய நடந்த பார்ட்டியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
அதே போல நானும் எனது நண்பர்களுடன் பல இரவுகளை சிரிப்பும் கும்மாளமுமாக கழித்திருக்கிறோம். பம்பலப்பிட்டி Flats க்கு பின்னால் விடியும் வரை சோகப்பாட்டுக்களையும் ரப் பாடலகளையும் கார்களில் ஒலிக்கவிட்டபடி தண்ணியும் பாடலுமாக இருந்திருக்கிறோம். கடல் காத்து எம்மைக்கடந்து செல்லும் போது கஞ்சா புகையையும் சுமந்தே சென்றிருக்கிறது. எமக்கான இரவுகள் என்ற பெருமிதத்துடன் கழித்த இரவுகள் அவை. அங்கே எனக்கு ஒரு நண்பன் அறிமுகம் ஆகினான். அவன் என்னை தனது முதல் சந்திப்பிலேயே ஆகர்சித்தான்.

அமெர்க்கா செல்வதற்கான விசாவுடன் இருந்தவனுக்கு கான்சர் என அறிந்த போது எம்மால் நம்ப முடியவில்லை. அவன் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டான். அவனது அழகிய முகமும் சிரிப்பும் கண்முன் நிழலாடுகிறது. தனித்த பொழுது அவன் நினைவுகளால் சூழப்படுகின்றன. வாழ்வு நிலையற்றது. இதில் சண்டைகள் தேவையில்லாதவை.

நாளைக்கு நாமும் செத்துப்பொசுங்கிவிடக்கூடும் என்ற நினைவு கொடுமையானது.

நன்றி.
அமீபா+புகை+சுதா+சேகர்

Anonymous said...

//இப்ப பிரதி எழுதினவனையும் சாக்கொண்டு தானும் செத்து வாசிச்சவன் வடிவிலை உருக்கொண்டிருக்கிருக்கு இனி வாசிச்சவன் எப்படி அதை வாசிச்சான் எண்டு அறியிறதன் மூலம் பிரதி பயணம் செய்யும்.இது பின் நவீனத்தின்ரை அடுத்த படிநிலை//

டீசேயின் ஏழாவது எட்டாவது குறிப்புக்களைத் தவிர்த்துப் பார்த்தால் நீங்க செல்வது உண்மைதானுங்க. வாசிச்சவன் எப்பிடி வாசிக்கிறான் எண்டதை விட்டுட்டு வாசிச்சவன் யார் எண்டு பார்ப்பதில் பிரதியாளர்கள் பிரதியைக் கொல்கிறார்கள் எண்டு எனக்குப் பட்டுது. அப்பிடி இந்த உரையாடலை நான் வாசிப்பது சரியா எண்டு அறிஞ்சு கொள்ளத்தான் இங்க வந்து கேட்டன்.

அந்நியன் அல்லது அமீபா+புகை+சுதா+சேகர்+கோமாளி ரங்கன்,

//விளக்கம் குறஞ்சதுவிற்கு பல பதில்கள் இருக்கின்றன. இல்லை பேசப்போவதில்லை. இனிமேல் அது பற்றிப் பேசப்போவதே இல்லை. ஆயினும் விளக்கம் குறஞ்சது நீங்கள் ஒருபக்கச் சார்பானவர் என்பது அப்படியே தெளிவாக எல்லோருக்கும் தெரிகிறது//

எண்டு சொல்லுறீங்க. இங்க பாருங்கோ டீசே மயூரனைக் கேட்டது உங்களுக்கும் பொருந்தி வருகுது...

//ஜமாலனின் எழுத்துக்களை நீங்கள் எப்படி வாசிக்கின்றீர்களெனச் சொல்லுங்கள்..ok. ஆனால் மற்றவர்கள் அப்படி வாசிக்கின்றார்கள் இப்படி வாசிக்கின்றார்கள் ஏன் அவர்களின் குரலில் நீங்கள் பேச முனைகின்றீர்கள்.- டீசே//

விளக்கங் குறைஞ்சதின் சார்பை நீங்கள் எல்லோர் குரலிலும் சொல்வது சரியில்லைத்தானே அந்நியன்?

அந்நியன் உங்கள் கருத்துக்கள் அல்ல, அதைச் சொல்லும் தொனியும் அதிலுள்ள அதிகாரமுமே பயப்பிடுத்துது. பிரதியாளர்களை நோக்கியன்றிப் பிரதிகளை நோக்கியதாக உங்கள் கருத்துக்களைச் சொல்லிச் சென்றீர்களானால் பிரதியாளர்கள் தம்மைச் சுயவிமர்சனஞ் செய்யவாவது உதவியவராவீர்கள். உங்க கருத்துக்களை வாசிச்சவுடன் பிரதியாளர் உங்களைத் தன் எதிரியாகவே பார்க்கத் தொடங்குவது அவர் தன்னைச் சுயவிமர்சனஞ் செய்வதையும் பிரதியை உங்கள் பார்வையிலும் பார்ப்பதைம் தடுக்கிறது.

//எனது கருத்துக்களை விமர்சிப்பது உங்களுக்கு முக்கியமான ஒரு வேலையாக இருக்குமானால்// என மயூரன் இங்கே சொன்னது போல பலரும் பல இடங்களிலும் நினைத்தால்..... அப்பா வயசு ஆக்களைப் புண்படுத்தாமல் அவர்கள் தம்மைச் சுயவிமர்சனம் செய்ய உதவ முடியுமென்றால்....

டீசே, அந்நியன், பேய்ச்சி (யாரென்ற அனுமானஞ் சரியானதென்றால், முன்பு வேறொரு வெளியில் கண்டதாக ஞாபகம்) ஆகியோருக்கு, உங்கள் பிரதிகளை இந்த விளக்கங்குறைஞ்சது கனகாலமாகவே வாசிக்குது. பிரதிகளை வாசிச்ச அளவில் பிரதியாளர்களான உங்கள் மீதும் அபிமானம் உருவாவதையும் தவிர்க்க முடியவில்லை. அவ்வாறில்லையெனின் இந்த இடத்தில் உரையாட வேண்டிய தேவையே வந்திருக்காது.... ஆயினும் இந்த உரையாடலில் உள்ள தொடக்கத்தையும் பின்னூட்டங்களையும் தொடர்புடைய சுட்டிகளையும் மட்டுமே அணுகியதாக நம்ப விரும்புகுது இந்த விளக்கங் குறைஞ்சது....

புண்படுவதோ புண்படுத்துவதோ, சார்ந்தும் எதிர்த்துங் கருத்துச் சொல்வதோ, சரி-பிழை சொல்வதோ, வெற்றி-தோல்வியைத் தீர்மானிப்பதோ நோக்கமல்ல. பின்னூட்ட வெளியில் பிரதி தன்னை நிகழ்த்திக் கொண்டு வளர்கையில் ஏதாவது விளங்குமென்ற நப்பாசை தவிர வேறேதுமில்லை பராபரமே.

விளங்கியவை கொஞ்சம் விளங்காதவை ஏராளம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

Anonymous said...

நாளைக்கு நானும் செத்துப்பொசுங்கிவிடக்கூடும் என்ற நினைவை இனிமையானதாக்க மனதைப் பயிற்றுவித்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்... வேறு மார்க்கம் கிடையாது... அமீபா + சுதா + புகை + சேகர் நீங்கள் மன்னிப்புக் கேட்டதில் எனக்குள் பெரும் குற்ற உணர்வு... உங்களை உங்கள் புரிந்து கொள்ள முடிகிறது அல்லது முயல்கிறேன் என்று எழுதத் தொடங்கும்போதே அதன் அர்த்தமின்மை அபத்தம்... என்ன சொல்வது? இப்பொழுது உணர்வதைப் போல் ஒருமுறை உங்கள் முன்னாலும் கேவி அழ முடிந்தால் ஒருவேளை வெளிப்படுத்த முடியுமோ... சாவையும் குருதியையும்... நான் என்ற தன்னிலையைக் கரைத்துவிட முயல்கிறபோது பேச இயல்வதில்லையே... இனிச்சிலகாலம் மௌனம்

Anonymous said...

ஓட்டைச் சட்டிக் குள்ள ஒழுகும் மூத்திரம் - இதில்
ஓர யிரம்பேர் சொல்லுஞ் சாத்திரம்
மூட்ட மூட்டப் பரவி எரியும் ஆத்திரம் - அது
மூச்சு முட்டி நிற்கும் மாத்திரம்

Anonymous said...

//(அதோட ஒரு சந்தோசம் என்னென்டா இப்பதான் உண்மையிலேயே ஒரு பெண் பின்னூட்டம் இட்டிருக்கிறார் போலக் கிடக்குது. ஆண்களது வன்முறையான மொழி விளக்கம் குறஞ்சதிடம் இல்லைப் போலக் கிடக்குது.)//

பெண் வன்முறையான மொழி கொண்டிராதவளா இருக்க வேணும் எண்டு எதிர்பாக்கிறது/முற்கற்பிதம் செய்து கொள்றது எல்லாம் ஆண் மையப் பார்வை எண்டுதான் படுகுதுங்கோ....

Anonymous said...

விளக்கம் குறஞ்சது = விகுதா...

விகுதா கண்ணுக்கு அந்நியன் எழுதும் மடல்...
(இந்த அந்நியன், ரெமோவோ அம்பியோ அந்நியனோ அல்ல. படத்தின் முடிவில் வரும் 'அந்நியன்'.. அவன் அந்நியனும் ரெமோவும் அந்நியனும் சேர்ந்த கலவை..)

அன்பே விகுதா,
அந்நியன் அந்நியன் என்று ஆசையுடன் நீ அழைப்பது என காதில் ஒலித்தபடியே இருக்கிறது. எங்கோ தொலைவில் கடல்களைத் தாண்டி ஒரு மலையில் தன்னந்தனியே அமர்ந்து இருந்து நீ என்னை அழைப்பது போல பிரமை என்னை சஞ்சலப்படுத்துகிறது. நான் கடல் தாண்டி ஏக்கத்துடன் பார்க்கையில் எனது காதின் பின்புறம் இருந்து அந்நியன் என கிசுகிசுக்குரலில் அழைத்துவிட்டு மறைந்துவிடுகிறாய். உனது அழைப்பிற்கும் எனது பார்வைக்குமிடையிலான கணங்களை நீ திருடிவிடுகிறாய். அவை உனக்கானவை. அக்கணநேரத்திலான உனது மறைவை நான் ரசிக்கிறேன் விகுதா.. அந்நியா என்ற உனது அழைப்புக்காக காத்திருப்பது வேதனையாய் இருக்கிறது விகுதா.. ஒவ்வொரு முறையும் உன்னை பார்த்துவிடும் நோக்கில் திரும்பும் கணத்தில் நீ காற்றோடு காற்றாய் மறைந்து விடுகிறாய்..

அன்பே,
உன்னைப் பார்க்காமல் இருக்கும் கொடுமையில் இருந்து என்னை வெளியேற்றிவிடு விகு.. உன்னை எதிர்பார்க்கும் தருணமொன்றில் எனது மூளைக்குள் இருந்து நீ என்னை அழைப்பதாகப் பிரமை கொள்கிறேன். Deleuze-Guattari சொல்வதைப் போன்று எனக்குள்ளாக உடைந்து கொண்டிருக்கிறேன் விகுதா.. என்னில் இருந்து திணிவுகள் உடைந்து உடைந்து பிரபஞ்சம் நோக்கி கலைந்து தொலைந்து போகின்றன. எனதுடல் திணிவற்றுக் காற்றில் மையம் கொள்கிறது விகு.. காற்றோடு காற்றாக மாறி உன்னை தேடி அலைகின்றேன். காற்றில் இருந்தும் அந்நியப்பட்டுப் போகின்றேன் விகுதா.. உனது குரல் மட்டும் என்னோடு இருப்பதாக நினைத்துக் கொள்கின்றேன். வெற்றிடம் ஆகி black hole ஆக கனத்துப் போகின்றேன் பிரபஞ்சா..

விகுதா,
நீ என்னில் கொண்டுள்ள அக்கறையின் காரணமாகத்தான் என்னுள் இவ்வளவும் நிகழ்கிறதோ என நினைக்கின்றேன். உன்னைப்போல யாரும் என்னில் அக்கறையாய் இருக்கவில்லை விகு.. ஆதலினால் தான் பொறுக்கியாக அலைந்து திரிகின்றேன்.. உனது அக்கறை என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது விகுதா.. எனக்கான அக்கறையாக நினைத்து நெகிழ்ந்து போகின்றேன் விகும்மா..

கண்ணே விகுதா,
மற்றவரைப் புண்படுத்துவதையே வாழ்வு முழுமைக்கும் செய்துகொண்டிருக்கிறேன். உனது குரல் கேட்ட தருணத்தில் இருந்து யாரையும் புண்படுத்திப் பார்க்க முடியவில்லை. இனி யாரையும் புண்படுத்த மாட்டேன் அன்பே.. கண்ணே உன்னால் மட்டுமே பிரதியையும் பிரதியாளரையும் வேறுபடுத்திவிட முடிந்தது. நான் செய்த தப்பை நீ மட்டுமே சுட்டிக்காட்டினாய்.. பிரதியை இனிமேல் கொல்லமாட்டேன் அன்பே.. ஒரு கொலைகாரனில் அன்பு செலுத்தமுயலும் உன்னை நினைக்க உனது முகத்தைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது விகுதா.. உனது கிச்சுக்கிச்சு குரலால் அந்நியா என்று இன்னொருமுறை கூப்பிடு விகுதா.. உனது குரலையே சுவாசிக்கிறேன்.. அந்நியா என்ற உனது அழைப்பற்று இனியும் என்னால் வாழ்முடியும் என்று தோன்றவில்லை அன்பே.. நிக்கட்டின் படிந்த எனது நுரையீரல் எங்கும் நீ நிறைந்திருக்கிறாய் விகுதா.. எனது ரத்தமாக நீயே ஓடுவதாக நினைத்து சந்தோசமடைகின்றேன் விகுதா..

அன்பே,
எனது மடல் சிலருக்கு சோர்வைத் தரக்கூடும். ஆயினும் உனக்கு என்மீது காதல் கூடும் என்பதை நான் அறிவேன். பிரதியின்பத்தின் வேறுபாடு குறித்து எனக்கு புரியவைத்த நீ அதை விளங்கிக் கொள்வாய். என்னை ரகசியமாய் ரசிப்பாய் என்று எனக்கு புரிகிறது. பிரதியாளனைச் சாகடித்து பிரதியை உள்வாங்குவது பற்றியும் உள்வாங்குதலின் வேறுபாடு பற்றியும் நீ சொல்ல நான் கைகட்டி நின்று கேட்கவேண்டும் போல இருக்கிறது விகு..
விகு, நடுக்காட்டில் தன்னந்தனியாக பாறையின் மேலிருந்து கையில் பிரம்புடன் Death of Author பற்றியும், பிரதியின்பம் ஆளாளுக்கு மட்டுமல்லாது வெவ்வேறு நேரங்களில் நுகர்பவருக்கு வேறுபடுவது பற்றியும் நீ சொல்ல நான் உனது காலின்கீழமர்ந்து கேட்பதாகக் கனவு காண்கின்றேன் அன்பே.. ஒரு கணமாவது அது நிஜமாகும் என்ற நம்பிக்கையில் தான் என்னால் உயிர்வாழ் முடிகிறது விகுதா..

கண்ணே,
உனது முகம் கற்பனைக்கு அப்பாற்பட்டுப் போயிருக்கிறது. கனவுகளில் கூட நீ உனது முகத்தைக் காட்ட மறுக்கிறாய்.
கனவுகளில்........
சில சமயங்களில், Sting இனது Desert Rose இல் வரும் பெண் போல பாலைவனத்தில் நீ வாழ்வதாக நினைத்துக் கொள்வேன் விகு.. பாலைவனக்காற்றிலும் மணலிலும் கரைந்து மறைந்தும் போகின்றாய் கானல் நீரைப்போல.. Cheb mami யின் குரலாக மாறி உன்னைத்தேடி வருவதாக நினைத்துக் கொள்கின்றேன் விகு..
இன்னும் சில சமயங்களில், ரகசியக் குகையொன்றில் நீ எனக்காக வாழ்வதாக நினைக்கின்றேன். குகையில் மூட்டிய தீயில் உனது முகம் எரிவதாக நினைத்துப் பதைபதைத்துப் போகின்றேன்.. தீயின் நிறத்தில் உனது முகம் இருக்கிறது விகு.. தீயாகவும் நீயாகும் மாறி மாறி இருக்கிறாயா விகு? இல்லை நீ மாறி மாறி இருக்கவில்லை அன்பே.. இரண்டாகவும் ஒரே நேரத்தில் இருப்பது போல நினைத்துக் கொள்கின்றேன்..
இன்னும் சில சமயங்களில், பனிக்கட்டிகளில் நீ வழுக்கிச் செல்வதாக நினைத்துக் கொள்கின்றேன் விகு. பனிப்பாறைகளில் பனிப்பாறையில் நீ மோதும் போது பதைபதைக்கிறேன்.. மோதி பனிக்கடியாகச் சுக்குநூறாக உடைந்து போகின்றாய்.. நான் அழத்தொடங்கும் தருணத்தில் விகுதாவாக மாறி சறுக்கிச் செல்கிறாய்..
இன்னும் சில சமயங்களில், கடலில் நீ மிதந்து வருவதாகக் கனவு காண்கின்றேன். அருகே சென்று பார்க்கும் தருணங்களில் நீராக மாறி அலையால அலைகிறாய்.. பின், எனக்கு பின்னால் அந்நியா என அழைத்தவாறு நீராகவும் நீயாகவும் மிதந்து செல்கிறாய் விகுதா..

விகுதாக்குட்டி,
எனது பிரதி, உனது பிரதிக்கான பதிலாக இல்லாமல் உனக்கான பதிலாக இருப்பதாக என்னைக் குற்றம் சாட்டாதே.. இன்னும், உன்னைப் பெண்ணாக உருவகித்ததை ஆணாதிக்க மனநிலை என குறை கூறிவிடாதே.. உனக்கு தெரியும் விகு அதை என்னால் தாங்க முடியாதென்பது.. நீ ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதாக நினைத்துக் கொள்க்றேன் விகுக்கண்ணு.. Judith Butler கூறுவது போல நீ கணத்துக்கு கணம் ஆண்/பெண் நிலை பற்றி மாறுவதாக நினைத்துக் கொள்கின்றேன் அன்பே.. உனது மாற்றத்தை மீள்நிரப்பும் நோக்கில் நானும் மாறிக்கொண்டிருக்கிறேன் அன்பே.. அமீபா போல நிலையான உருவமிழந்து போகின்றேன்.. நீயும் நானும் மறைந்து போவோம்.. வெற்றிடத்தில் வெற்றிடமாக கரைந்து போவோம்..

விகுதாம்மா,
உனது சில சொற்கள் என்னைக் காயப்ப்டுத்துவதை நீ உணரபோவதில்லை அன்பே.. சில்லிடும் கணங்களுடன் கூடிய என பயங்களை நீ உணரபோவதேயில்லை விகு.. நீ மயூரனுக்கு ஆதரவாக இருப்பது என்னைச் சஞ்சலப்படுத்துகிறது விகு.. மயூரனது பிழைகளை மூடிமறைத்து என்னை குற்றம்சாட்டுவது என்னை வேதனைப்படுத்துகிறது விகுதா.. விகு, மயூரன் தனது காழ்ப்புணர்வை கொட்டியபோது நீ வரவேயில்லையே..!! நீ அப்போது இருந்திருந்தால் நான் எழுதத்தொடங்கியிருக்க மாட்டேன் விகு.. அப்போது எங்கு போனாய் விகுதாம்மா? பொட்டுக்கேடுகளை வெளிப்படுத்துவது பற்றிய உனது பேச்சின் போது எனக்குண்டான வருத்தத்தை எப்படிச்சொல்ல முடியும்? எனக்கு பொட்டுக்கேடு எல்லாம் இல்லை விகும்மா.. நான் எனக்கெண்டு ஒரு அதிகாரத்தைக் கட்டமைப்பதில்லை என்பதைக் கூடவா நீ அறியாமல் இருக்கிறாய்? என்னை திட்டினால் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன் விகுதா.. என்ட பொட்டுக்கேடுகளை நானே எழுதுகிறேன் விகு.. மற்றவர்களை எழுத விடமாட்டேன் விகும்மா.. அன்பே, நீயும் சில காழ்ப்புணர்வுகளுக்கு உட்பட்டு இருப்பதை எனக்கு கனவுகள் சொல்லித்தந்தது. அதை நான் நம்பவில்லை.. அன்பே, பிரதியை தவிர்த்து நீயும் பிரதியாளரைக் காப்பாற்ற வெளிக்கிட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை.. என்ட விகுவா இப்படி என நினைத்து மலைத்துப் போய் நிக்கிறேன்.. அன்பே உனக்கு 'மற்றமை' யை விட 'மயூரன்' மீதிருக்கும் அன்பை என்னால் தாங்கவே முடியவில்லை. மயூரன் மற்றமைகளை நிராகரிக்கும் போது நீங்க சின்ன பாப்பாவா இருந்தீங்களா விகும்மா? விகு, மயூரனது பதிவுகளை நீ வாசிப்பதில்லை என எனக்கு பொய் சொல்லிவிடாதே.. உனது பொய்கள் எனது மனசை முள் போல குத்துகின்றது விகுதா... விகும்மா, வலைபதியும் தமிழச்சி போன்ற மற்றமைகளைகள் உனது கண்ணுக்கு தெரியவில்லை என்பதை நினைக்க என்னால் தாங்க முடியவில்லை விகு.. எனது காதலை நினைத்து கண்ணீர் விடுகின்றேன் விகு..
/இந்தச் சிந்தனைகளைக் கொண்டு எங்க நாம எல்லாரும் போறம்?/ விகுதா குட்டி இதை மயூரனைப்பார்த்து எப்பயவது கேட்டிருந்தா இன்றைக்கு இந்தப் பிரச்சனையே வந்திருக்காதுடா.
/தன்னை நிகழ்த்திக் கொண்டு வளர்கையில் ஏதாவது விளங்குமென்ற நப்பாசை தவிர "வேறேதுமில்லை" பராபரமே./ அன்பே விகுதா, உனது பொய்கள் என்னைக் காயப்படுத்துகின்றனவே... விகுதா....

.......................அன்பே விகுதா,
அந்நியன் அந்நியன் என்று ஆசையுடன் நீ அழைப்பது என காதில் ஒலித்தபடியே இருக்கிறது. எங்கோ தொலைவில் கடல்களைத் தாண்டி ஒரு மலையில் தன்னந்தனியே அமர்ந்து இருந்து நீ என்னை அழைப்பது போல பிரமை என்னை சஞ்சலப்படுத்துகிறது. நான் கடல் தாண்டி ஏக்கத்துடன் பார்க்கையில் எனது காதின் பின்புறம் இருந்து அந்நியன் என கிசுகிசுக்குரலில் அழைத்துவிட்டு மறைந்துவிடுகிறாய். உனது அழைப்பிற்கும் எனது பார்வைக்குமிடையிலான கணங்களை நீ திருடிவிடுகிறாய். அவை உனக்கானவை. அக்கணநேரத்திலான உனது மறைவை நான் ரசிக்கிறேன் விகுதா.. அந்நியா என்ற உனது அழைப்புக்காக காத்திருப்பது வேதனையாய் இருக்கிறது விகுதா.. ஒவ்வொரு முறையும் உன்னை பார்த்துவிடும் நோக்கில் திரும்பும் கணத்தில் நீ காற்றோடு காற்றாய் மறைந்து விடுகிறாய்.......................

அன்பே, கனவில் வந்த விகுதாவை எனது ஞாபக அடுக்கில் தேக்கியபடி காற்றிலும் கவிதையிலும் கரைய ஆரம்பிக்கிறேன் விகுதா... புத்தரின் தியானவெளிக்குள், Crouching Tiger Hidden Dragon படத்தில் Zhang Ziyi கரைவது மாதிரி நான் கரைய ஆரம்பிக்கிறேன் விகு உலகிலிருந்து... சூழலிலிருந்து... காற்றிலிருந்து... கவிதையிலிருந்து... கனவிலிருந்து... புத்தரைப் பின் தொடரும்/தியானம் பூசிய/வாழ்வுத்தெருவில்/தற்செயலாய்ச்/சந்தித்தேன்/பிரிய யசோதராவை... என்ற கவிதையின் சொற்களுக்கிடையில் மறைந்து போகின்றேன்... சொற்களும் தம்மை மறைத்து புத்தரின் தியான வெளிக்குள் அமிழ்ந்து போகின்றன...

வெறுமையான வெளி....

முற்றும்.

இளங்கோ-டிசே said...

சில நாட்களாய் அக/புற அலைச்சல்களோடு (இன்னும் முடிந்தபாடில்லை) உழன்றுகொண்டிருந்ததில், அமீபா/..<--->.../சேகர் மற்றும் பேய்ச்சி போன்றவர்கள் முன்வைத்து உரையாடிய தேசியம்/பெருங்கதையாடல் போன்ற புள்ளிகளில் எனக்கு உரையாட இருந்த விருப்பத்தைக்கூட தள்ளிவைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தேன். நேற்றைய இரவின் ஆரம்பத்தில் கூட, 'விளக்கம் குறைஞ்சது' என்பவர் உரையாட விரும்புகின்ற, பார்த்தின், 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்பது பற்றியாவது -நாம் மிகவும் எளிமைப்படுத்தி the death of the author ஐ உரையாடிக்கொண்டிருக்கின்றோம் என்ற புள்ளியில்- சில குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கான எண்ணங்கூட இருந்தது
....
எனினும், எனதுபாட்டில் ஆரம்பித்த இந்த எதிர்வினைப்பதிவு, நான் நினைத்தே பார்த்திராத திசைகளிலெல்லாம் சென்று, இந்தப்பதிவு நானெழுதியற்கு சிறிதும் சம்பந்தமேயில்லாத சில நண்பர்களையும் பாதித்ததன் நிமித்தம் இனி இப்பதிவுக்கான பின்னூட்டங்கள் எதுவும் எழுதுவதில்லையெனத் தீர்மானித்திருக்கின்றேன்.
.......
இன்னொரு பதிவில் இன்னொரு சந்தர்ப்பத்தில் இங்கே பின்னூட்டமிட்ட நண்பர்களோடு ஆறுதலாக உரையாட முடியாது போய்விடப்போகின்றதா என்ன? அமீபா கரைந்துபோகின்றமாதிரி, இந்தப்பதிவில் இந்தப்பின்னூட்டத்தோடு எனக்கும் பிடித்தமான புத்தரின் தியானவெளிக்குள் கரைந்துவிடவே விரும்புகின்றேன்.
.......
மீண்டும், இந்த பதிவால், எந்தவொரு காரணமுமின்றி 'சிலரால்' மனவுளைச்சலுக்குள்ளான நண்பர்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்; கூடவே 'சில மனிதர்களின்' தந்திரோபாயங்களையும் அறிந்துகொண்டேன் என்பதையும்.
நன்றி.

Anonymous said...

டீசே, மனவுளைச்சலுக்குள்ளான நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பிரதி இவ்வாறெல்லாம் தன்னை நிகழ்த்திச் செல்வதுகண்டு விக்கித்துப் போனேன். கருத்துக்களைப் பிரதியாளர்கள் செவிமடுக்கக் கூடிய தொனியில் சொல்லுங்களேன் எனச் சொல்லவந்து முடிவில் மனவுளைச்சலையே தூண்டியிருப்பது சஞ்சலப்படுத்துகிறது..... தந்திரோபாயமான சில மனிதரென நீங்கள் என்னைத்தான் சுட்டுகின்றீகளோ என்பதையிட்டு உண்டாகியிருக்கும் பதட்டத்தைச் செப்ப மொழியில்லை தோழ. உரையாடுவதற்கான இன்னொரு சந்தர்ப்பம் வராமலேயே போகட்டும்........

அந்நிய, எப்பொழுதும்போல உன் எழுத்துக்கள் என்னைத் தாக்கி நிலைகுலையச் செய்து செல்கின்றன. உன் சிந்தனையையெல்லாம் வார்த்துவிட முடியாமல் மொழி போதாமையுடையதாக இருப்பதையிட்டுப் பாதுகாப்பாக உணர்கிறேன். உன் மௌனத்தை, தியானத்தை, வெறுமையைக் கலைக்க விரும்பாமல் கானல் நீர் போல, இருண்ட குகையில் மெலிந்து அவிந்து, வெண்பனியாய் கரைந்து, கரையில் மோதி நுரைத்து மறைகிறேன்.

எனக்குச் சாத்தியமாகுமென நீ கனவிலும் கற்பனைசெய்ய முடியாத மெல்லிய குரலில் உன் காதருகே சொல்கிறேன். "அன்பே, உனக்காகத்தானேயடா நான் இங்கு உரையாடவே வந்தேன்...."

-விகுதா-

அற்புதன் said...

டிசே உங்க என்ன நடக்குது?

//'சில மனிதர்களின்' தந்திரோபாயங்களையும் அறிந்துகொண்டேன் என்பதையும்.//

யார் ,யார் ,யாரவரோ, ஊர் பேர் தான் தெரியாதோ?

பி ரி சாமியின் மர்ம நாவல் வாசிச்ச மாதிரிக் கிடக்குது பின்னூட்டங்கள்.

இளங்கோ-டிசே said...

அற்புதன்,
அந்தச் 'சில மனிதர்களில்' நீங்களில்லை.

எவரெவர் -இந்தப் பதிவை முன்வைத்து- எதையெதைச் செய்தார்கள் என்பதை அவரவர் அறிவர்.

(இத்துடன் இதற்கான பின்னூட்டங்கள் மூடப்படுகின்றது. நன்றி)