Sunday, February 18, 2007

வசீகரிக்கும் படைப்பாளி -ச.இராகவன்

அண்மையில் வாசித்த நேர்காணல்களில் வசிகரீத்த நேர்காணலில் இதுவும் ஒன்று. போர்ச்சூழலுக்குள்ளிலிருந்து இவ்வளவு தீவிர வாசிப்பும், தீர்க்கமான எழுத்துச் சிந்தனையும் உள்ள ஒருவரை கண்டு கொண்ட மகிழ்ச்சிதான் வந்தது. இராகவனுடனான நேர்காணலை பா.துவாரகன் செய்திருந்ததார். வைகறை பத்திரிகையிலிருந்து நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றேன். (~டிசே)

“இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதெனப் பாவனை செய்யப்படுகின்றது.”

-ச.இராகவன்-

இலக்கிய, சினிமா விமர்சகராகவும் கவிஞராகவும் தீவிர வாசகனாகவும் இயங்குகின்ற ச.இராகவன் தன்னை ஒரு கதைசொல்லியாக அடையாளம் காண்பதன் ஊடாகப் படைப்புலகில் தடம் பதித்து வருவதுடன் ஈழத்தின் புனைகதையாளர்களில் தற்புதுமையானதும், வடிவம் அழிந்ததும், வரையறைக்குள் அமையாததுமான சிறுகதைகளை - அதிகதைகளை இந்தியச் சிற்றிதழ்களில் அறிமுகம் செய்து வருகின்றார். மு.த. கனவு கண்ட மெய்யுளை (இது ஒரு கோட்பாடல்ல) நோக்கி, கடந்து செல்லும் நதியாக இவரது எழுத்துக்கள் நகர்ந்து செல்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஈழத்து இலக்கிய உலகிலும் (புலத்திலிருந்து செயற்படும் ஈழத்து இலக்கியச் செயற்பாட்டாளர்களிலும்) அதிகதைகள் பற்றிய பரிச்சயமின்மையை அவதானிக்க முடிகின்றது. இராகவனது
அண்மைக்காலச் சிறுகதைகள் இவ்வகை அதிகதைகளாக, வாசகன் தானே கதையை உருவாக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான பன்முகத்தில் இவரது கதைகள் அதிகம் பிரசுரமாகியுள்ளன.

“பன்முகம்”-கலை இலக்கிய கோட்பாட்டு இதழ் - ஈழத் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் அறியப்படாத ஒரு சிற்றிதளாக இருந்து வருவதும், இராகவனின்சிறுகதைகளை உள்ளூர் , வெளியூர் சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் பிரசுரிக்க மறுத்து வருவதும் ஆச்சரியமான ஒன்றல்ல. பன்முகத்தில் பிரசுரமான இராகவனின் 'சதுரம்” , “எதிர்நோக்கு”, “கதை எழுதுவோருக்கு ஒரு நற்செய்தி” ஆகிய மூன்று சிறுகதைகளும்; பாலியலை பற்றியனவாக இருந்த போதும் அவை வாசகனிடம் விட்டுச் செல்லும் , உருவாக்கும் கதைகளும் ஈழத்து இலக்கியச் சூழலிற்கு அந்நியமானவையே.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'தெரிதல்” சிறு சஞ்சிகையில் 'ஜனரஞ்சகப் போலிகள்” என்ற தொடரை எழுதி ஜனரஞ்சக எழுத்தாளர்களின் போதைêட்டும் எழுத்துக்களை அம்பலப்படுத்தி சர்ச்சைக்குள்ளானவரான இராகவன் கடந்த இரு தசாப்தத்திற்கும் மேலாக ஈழத்திலும், புலத்திலும் நிலவி வரும் இலக்கியச் சூழலையும், படைப்பாளிகள் , படைப்புக்கள் குறித்த தனது அவதானத்தையும், A-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள யாழ் நகரில் இருந்து வைகறை வாசகர்களுடன்; பகிர்ந்து கொள்கின்றார்.

• சிறுகதை, பத்தி எழுத்து, விமர்சனம் என்று பல்வேறு துறைகளிலும் ஆழமாகத்தடம் பதித்துவரும் நீங்கள்கலை-இலக்கிய உலகிற்குள் நுழைய நேர்ந்த பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

உங்களுக்கு 'இராகவன்” என அறிமுகமாகும் நான் 11-08-1976 காலப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டேன்.(சத்திரசிகிச்சையொன்றின் மூலமாக). பிறப்பிடம் வெள்ளாளர் மிகுந்து வாழும் கரவெட்டி. முதலாம் தரத்திலிருந்து ஏழாந்தரம்வரை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்திலும் எட்டாந்தரத்திலிருந்து பன்னிரண்டாந் தரம் வரை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்று பின்னர் உயர்தரப்பரீட்சையில் தேர்ச்சியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் நான்கு வருடங்கள் பயின்று 2002 காலப்பகுதியில் ஒரு முகாமைத்துவப்பட்டதாரியாக வெளியேறி இப்போது யாழ். பிரதேசசெயலகத்தின் கீழ் இயங்கும் சமுர்த்தி மகாசங்கத்தில் பதில் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிவருகின்றேன்.

சிறுவயதில் நான் மற்றவர்களால் கீலா இராகவனாக அடையாளங்காணப் பட்டிருந்தேன். அப்போதே அதிகமாகக் கதைக்கத்தொடங்கியிருந்தேன். நான் கதைப்பதைக்கேட்க எதிரே யாராவது இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னுடன் நானே கதைத்துக்கொண்டிருப்பேன். அப்போது உயர்திணை அஃறிணை எனப் பல்வேறு பாத்திரங்களை நான் வகிக்கவேண்டியிருக்கும். அர்த்தம் அர்த்தமின்மை குறித்த கவனம் எனக்கிருந்ததில்லை அப்போது எனக்குப் பரவசந்தந்த நிகழச்சியென்றால் இவ்வாறாகத் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருப்பதுதான். இந்த எல்லையற்ற கதையாடல் மூலமாக நான் சந்திக்கநேரும் மனிதர்களுக்கெல்லாம் ஒவ்வொரு படிமத்தை வழங்கி மகிழக்கூடிய நிலையில் இருந்தேன். அப்போதுதான் ஓர் உண்மை புலனாகியது. ஒவ்வொரு மனிதரையும் கூர்ந்து அவதானித்தால் அவர்களில் பறவைகள், மிருகங்களின் சாயலைக்காணலாம் என்பதுதான்.

அந்தப்பேருண்மை. இதே போன்று எனது இடைவிடாத அவதானங்களிலிருந்து சேகரித்த தரவுகளைப் பொதுமைப்படுத்தும் போது புதிய தத்துவங்களை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. புதிய தத்துவம் வெளிப்படுத்தப்படும் வரை பொறுத்திரடா ராசா என்பது என்னிடம் இருந்த தத்துவ வாக்கியங்களில் ஒன்று இவ்வாறாக நாளும்பொழுதும் கதையளந்து கொண்டு திரிந்த எனக்கு அளக்கின்ற கதை எதுவானாலும் எழுத்தில் கொணருவதற்கான எண்ணம் ஒரு புள்ளியாக உருவாகி விரிவாகி மிகத் தொடங்கியது. அதற்கான எத்தனிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதன் விளைவே நான் கலை இலக்கிய உலகிற்குள் நுழைய நேர்ந்த பின்னணி என்பேன்.

• விமர்சனத் துறையா அல்லது படைப்புத் துறையா உங்களை முதலில் ஈர்த்தது?
புனை கதைதான் எனது இலக்கிய எத்னிப்பின் அடித்தளம். இதனால் நான் அதன் வழியாகத்தானே நுழைந்திருப்பேன்.

• உங்களது முதல் சிறுகதை அல்லது படைப்பு, அது பிரசுரமான ஊடகம்:
சிறுகதை என்று நான் கருதிய வெறுங்கதை “சந்தேகக் கோடு” பிரயோகித்த புனைபெயர் இராகினி ரங்கராஜன் பிரசுரமான ஊடகம் மித்திரன் வாரமலர் அனேகரால் சிறுகதை என அங்கீகரிக்கக் கூடிய படைப்பெனப் பார்த்தால் 'நாய்கள் குரைக்கின்றன” பிரயோகித்த புனைப் பெயர் சுதா
ரஞ்சன் பிரசுரமான ஊடகம் - சரிநிகர் இதழ் 221.

சிறுகதையின் உருவமைப்பில், கதை சொல்லும் முறையில் புதிய உத் திகளைக் கையாண்டு வருகின்றீர்கள், இந்தப் புதிய கட்டமைப்பு முறையைப் பிரயோகிப்பதற்கான தூண்டுதலை எவ்வாறு பெற்றீர்கள்?
தூண்டுதல் எனப் பார்த்தால் இரு முக்கிய விடயங்களைச் சொல்வேன்.
1. நாளொன்றுக்கு திருவிவிலியத்திலிருந்து நான்கு பக்கங்கள் வீதம் வாசித்துவருகிறேன். அத்தருணங்களில் அற்புதமான உத்திகளை அடையாளம் காணக் கூடியதாக இருக்கும்.
2. தமிழ் நாட்டின் அதிமுக்கிய இலக்கிய கோட்பாட்டாளரான எம்.ஜி.சுரேஷ் காலாண்டுக்கு ஒருமுறை வெளிக்கொணரும் பன்முகம் நவீன இலக்கிய கோட்பாட்டு இதழைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக இதழின் முகம் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அதில் யுவன் சந்திரசேகர் எழுதியிருந்த '1999இன் சிறந்த கதை” எனும் தலைப்பில் அமைந்த சிறுகதை என்னுள் ஏற்படுத்திய அதிர்வு என்பது அளப்பரியது.(குறிப்பு: 8வது வினாவுக்கும் 4வது வினாவுக்கான விடை முழுமையாகப் பொருந்தும். 8 வது வினா-'எதிர்நோக்கு”- சிறுகதை , அதிகதைகளுக்கான இதழில் வெளிவந்த சிறுகதைகளிற்கு வாசகர்கள் எழுதிய விமர்சனங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழிற்கு இது புதுமையான முயற்சி இக்கதை உருவான பின்னணிச் சூழல்:)

குறியீடுகள், தொன்மங்கள், பகுப்பு என்பவற்றுடன் புதிய வடிவில்; சில ஆண்டுகளிற்கு முன் கணையாழியில் வெளிவந்த 'சதுரம்” சிறுகதையின் தலைப்பும் கட்டமைப்பும்பற்றி, விக்கிரமாதித்தன் கதையுடன் ஆரம்பமாகும் கதை சொல்லும் முறை:அது சதுரத்திற்கு வெளியே நிலவும் அரசியல் சூழலை பிரதிபலிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தொன்மம் வெளிச் சூழல் எவ்வளவுதான் நெருக்கடி மிகுந்ததாக இருப்பினும்அந்த நெருக்கடியை சற்றேனும் உணராதவர்கள் சதுரத்தினுள் இயங்குகிறார்கள்.
இதை நடைமுறையில் சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கிறது.

சதுரம் - பாலியல் உணர்வு, உறவு,பாலுறுப்புக்கள் பற்றிப் பேசுவதாகவும் இக் கதை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
எவரும் எழுதத் துணியாத விடயங்களை நீங்கள் எழுதியுள்ளதாகக் கருதலாமா?

இந்தக் கதையை வெளியிட்டதால் கணையாளியின்
ஆசிரியர் பீடத்திலுள்ளவர்கள் மாற்றப்பட்டதாக செவிவழிக் கதையொன்று நிலவுகிறது. இது திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கும் அபத்தமான கதை என்றே கருதலாம். இந்தக் கதையினால் வெகுவாகப் பாதிப்புக்குள்ளான ஒருவர் அல்லதுஒரு குழுவே இச் செவிவழிக் கதையை புனைந்திருக்கலாம் என நம்புகிறேன். எவரும் எழுதத் துணியாத விடயங்களை நான் எழுதிவிடவில்லை. எஸ்.பொ.இதைவிட பெரும் எடுப்பில் தீயைப் புனைந்திருக்கிறார்.

• இலங்கைத் தமிழச்; சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதாகக் கருதப்படுகின்றது. உங்களது கதையில் ஆண்பாலுறுப்பில் இருந்து வெளி வரும் நாற்றம் பற்றிய பகுதியில் மன்மதக்குமிழை பெற்றோல் ஊற்றிக்
கழுவவேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனை:

“இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல்பற்றி எழுதுவது தவறாக கருதப்படுகின்றது", என்ற கூற்றில் ஒரு சிறு திருத்தம் இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதெனப் பாவனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் அநேகர் தங்களை உத்தமர்களாகக் காட்ட எத்தனிக்கின்றார்கள். நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து அவதானித்தால் பாலியல் வேட்கைமிகுந்தவர்களாக அவ்வுத்தமர்களை இனங்காணக் கூடியதாகவும் இருக்கும். சதுரம் வெளிப்படுத்த முனைவது சில சமூகப்பிராணிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தான். தவிரவும் இது ஒரு புனைவு. மதன்மதக் குமிழைப் பெற்றோல் ஊற்றிக்கழுவவேண்டும் என்ற மருத்துவரின் கூற்று சரியா? தவறா? என்பது அல்ல முக்கியம் சதுரத்தினுள் இயங்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கிடையிலான அற்பத்தனமான முரண்பாடுகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளனவா? என்பது தான் முக்கியம்.

பன்முகம் கலாண்டு இதழில் (ஜனவரி-மார்ச்2006)வெளிவந்த 'எதிர்நோக்கு” சிறுகதையில் செண்பகப் பெருமாள் எழுதிய சம்பவங்கள் என்ற குறுங்கதையில் - தமிழ்மக்களின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் பகுதியைக் கண்டித்து வாசகர் சுட்டி காட்டி எழுதிய பகுதியை வாசித்தபோது அசோஹா ஹந்தகமவின் திரைப்பட This is my moon நினைவிற்கு வந்தது. நான் இதுவரை This is my moon என்ற திரைப்படத்தைப் பார்க்கவில்லை. போர்ச் சூழலுக்கு இசைவாக்கம் அடைந்து வரும் நிலையில் அநேகரது சிந்தனைகள், படைப்பாக்க முயற்சிகள் ஒரே தளத்தில் வெளிப்பாடடையலாம். செண்பகக் பெருமாளின் சம்பவங்கள் வாசித்த பிறகு நீங்கள் This is my moon ஐ பார்த்திருந்தால் சம்பவங்கள் உடனடியாக நினைவில் மேலோங்குவதை தவிர்க்க முடியாமலிருக்கும்.அதேவேளை இச்சிறுகதையில் சொல்லப்படும் குறுங்கதையான 'வதைப்பாடு” இல் இலங்கையில் சிறையில் கொடூரமான சித்திரவதைக்குள்ளாகும் தமிழ் இளைஞர்,யுவதிகள் மீது மேற்கொள்ளப்படும் வதைகளை வாசித்தபோது சில காலத்திற்கு முன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கோயில் அட்சகர் ஒருவர் நீதிமன்றில் அளித்த சாட்சியம் எதிர் ஒலித்தது.
இதில் விசேடமாக குறிப்பிடக் கூடியஅம்சங்களாக,
1. “எதிர்நோக்கு" என்ற புனைக் கதையால் நீங்கள் அதிர்வுக்குள்ளாகி இருககின்றீர்கள்.
2. “வதைப்பாடு" என்பதன் மெய்மை மீள நிறுவப்படுகிறது என்பவற்றைக் கருலாம்.
இந்த வகையில் 'எதிர்நோக்கு” தோல்வியைத் தழுவவில்லை.

• உங்களது இக்கதையின் முதற்பகுதியில் வெளிவரும் மழைப் பிரம்மனின் முப்பத்தேழாம் பாதம் என்ற அதிகதை பற்றி வாசகர் எழுப்பும் சந்தேகம் - நான் 37 தடவை வாசித்தும்விளங்கவில்லை என்று குறிப்பிட்டு
இதுபோன்ற அதிகதைகளுக்கு அடிகுறிப்பிட்டதை: (இப்பகுதியை 3 தடவைகள் படித்த பின்பே சொல்லவந்ததைப் புரிந்து கொண்டேன்).

அதிகதைகள் தொடர்பாக ஒரு சாதாரண வாசகன் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கருத்தின் வெளிப்பாடுதான் அந்தக் குறிப்பிடல். அதிகதைகளில் ஒருதேர்ந்த வாசகன் கதையை எதிர்பார்க்கக்கூடாது.அவனாகவே தனது சிந்தனை ஆற்றலால் கதையை உருவாக்க வேண்டும். கதையை நிகழ்த்துபவர் வெளிப்படையாக ஒரு கதையைச் சொல்வதன் மூலம் வாசகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார். இந்நிலையில் வாசகனின் சிந்தனைச் செயற்பாடு குறுகிப்போகிறது. வாசகன் தானாகவே ஒரு கதையை உருவாக்கிக் கொள்ள நேரும் போது அவன்சிந்தனை எல்லை கடக்கிறது. அவனே ஒரு கதையை நிகழ்த்தி பரவசமடைகிறான். இதிலும் எல்லா வாசகர்களும் ஒரு பொதுவான கதையை உருவாக்குவதில்லை.

வேறு கதைகளை உருவாக்கி பரவசமடைகள் உருவாக அனுமதிக்கின்றது. இந்நிலைப்பாட்டின் ஒரு கூறாகவே மழைப்பிரம்பனின் இயக்கம் குறித்து நீங்கள் ஒரு கதையைஉருவாக்கி இருக்கின்றீர்கள். இன்னொருவர்
வேறொரு கதையை உருவாக்குவார். இதுதவிர்க்க முடியாததாகும். 'ங” இதழில் வெளிவந்த எட்டு அதி-கதைகளைப் பற்றிய வாசகர்களது கடிதங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இச் சிறுகதையில் மூன்று சிறுகதைகளைப் பற்றியே அறியமுடிகின்றது ஏனயை சிறுகதைகளான வெயில்திரவம், தாவர இளவரசன் மகாசேனன், உத்தரவும் 108 பல்லிகளும், திருவுரு, யாழி, ஆகிய கதைத் தலைப்புக்கள் வாசகனிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தவல்லன.

இதுவும் ஒரு தேர்ந்த வாசகனை அவனது இயலுமைக் கேற்ப கதைகளை உருவாக்க அனுமதிக்கும் எத்தனிப்பே இங்கே கதைகள் மர்மப் பகுதிகளைக் கொண்டிருப்பதால் வாசகன் அந்த மர்மப் பகுதிகள் மீது நாட்டம் கொள்வான். அதன் விளை உருவாக்கப்பட மர்மப் பகுதிகள் அகலும். இது அவனுக்கு அளப்பெரும் பரவசத்தை நல்கும் என நம்பலாம்.

• உங்களது ஆரம்பகாலக் கதைகளிற்கும் இன்றைய கதை சொல்லும் முறைக்கும் இடையில் காணப்படும்
மாறுதலை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ஆரம்பக் காலங்களில் வாசகன் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் விதத்தில் வெளிப்படையாகக் கதை சொல்லும் உத்தியை அல்லது முறையைப் பிரயோகித்து வந்தேன். தற்போது வாசகனே கதைகளை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கும் விதத்தில் வெளிப்படையாகக் கதை சொல்வதென் பதை முற்றிலுமாகத் தவிர்த்து விடுகிறேன்.

• நீங்கள் நாவல் எழுத முயற்சிக்கவில்லையா? (நாவல் எழுதியிருந்தால் அதுபற்றிச் சொல்லவும்)

இதுவரை எத்தனிக்கவில்லை. எழுதும் நோக்கம் இருக்கிறது. எழுத நேர்ந்தால்அத்தருணத்திலும் வாசகனைத்தான் புதினத்தை உருவாக்கிச் செல்லத் தூண்டுவேன்.

• உங்களது கவிதை முயற்சிகள்,எழுதிய கவிதைகள் குறித்து:
அவ்வப்போது நெருக்கடி மிகுந்தபோர்ச் சூழலில் வசித்துவரும் நிலை குறித்த என் அகவெளிப்பாடுகளை கவிதைகளாக எழுதியிருக்கிறேன். அவை நிகரி,கவிப்பிரவாகம், காலச்சுவடு, மன்னுயிர்,தெரிதல், போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இது வரை கவிதைக்கான முழுமையான எத்தனிப்பில் ஈடுபடவில்லை.

• விமர்சகர் என்ற வகையில் 'ஜனரஞ்சகப் போலிகள்” என்ற பத்தியை தெரிதல் சஞ்சிகையில் தொடராக எழுதி வந்தீர்கள் அதற்கான எதிர் வினை எப்படியிருந்தது?
தெரிதல் இதழுக்காக அதனது ஆசிரியர் அ.யேசுராசாவின் அயராத, இடைவிடாததூண்டுதலினாலேயே இத் தொடரை எழுதினேன். 'ரமணிச்சந்திரன்” பற்றி முதலாவது இதழில் எழுதிய கட்டுரையை சிலபத்திரிகைகள் மீள் பிரசுரம் செய்துள்ளன. பத்மநாப ஐயரின் முயற்சியால் 'அப்பால்தமிழ்” என்ற இணையத்தளத்திலும் இக்கட்டுரைத் தொடர் வெளியானது. இத்தொடர் குறித்த எதிர் வினைகளை அவ்வப்போது செவிவழியாகக் கேட்டுவருகிறேன். சுஜாதாவை ஜனரஞ்சகப் போலி எழுத்தாளனாகக் கருதுவதில் சில தீவிர இலக்கிய வாதிககளுக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. இதுவும் ஒரு நகைப்பிற்குரிய யதார்த்தமே.

• ஜனரஞ்சகப் போலிகள் வகையில் என்டமூரி வீரேந்திரநாத்ஐயும் இணைத்திருந்திர்கள். அவரது 'கண்சிமிட்டும் விண்மீன்கள்” என்ற விஞ்ஞானப் புனைகதையை (நாவல்) 10 ஆண்டுகளுக்கு முன் படித்திருந்தேன். இது உலகநாடுகள் தமக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை ஐ.நா.வில்
முறையிட்டு தீர்ப்பது போல (?) கிரகவாசிகள் தமக்கிடையிலான பிரச்சினைகளிற்கு universal committee ஒன்றில் முறையிடச் செல்லல் பற்றியது. சென்றவர்கள்; பூமியில் இருந்து சென்று 100 வருடங்களுக்கு பின்னர் திரும்ப நேரிடுகிறது. வேறு கிரகவாசிகள் உதவியால் பழையகாலத்திற்கு திரும்புகின்றனர். காலத்தைப் பினநோக்கி நகர்த்துகின்றனர். அதாவது இறந்து போனவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திற்கு திரும்புகின்ற அடங்குமா? இத்தகைய எழுத்துக்கள் வாசகனை அவனது உணர்வுகளை பொய்மைக்குள் தள்ளும் என்று கருதுகின்றீர்களா?

வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பு, இருப்பின்மை குறித்து அறிவியல் ரீதியாக எத்தகைய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டிராத காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மெய்ப்பிக்க முடியாத முற்கற்பிதங்களே வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுவருவதை அவதானிக்கலாம். அவ்வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். அவ்வாறான முற்கற்பிதங்களை வைத்தே ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள் வேற்றுக்கிரக வாசிகளைக் கொண்ட புனைகதைகளைத் தயாரிக்கின்றனர்;. இது வாசகனை செயற்கையாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் எத்தனம். இத்தகைய தருணங்களில் வாசகனுக்கு ஒருவிதப் பிரமிப்பு ஏற்படுவது மெய்தான். அவனது இரசனை மோசமாகச் சுரண்டப்படுகிறது. அவன் சிந்தனை ஆற்றல் விரிவடைவதில்லை விஞ்ஞான புனைகதை எனும் வகை முக்கியமாக வாசகனின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைய எதிர்;பார்க்கப்படுகிறது. மேலும் விஞ்ஞானப் புனைகதையின் நகர்வு தர்க்கரீதியாக இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடும் 'கண்சிமிட்டும் விண்மீன்கள்” என்பதே நவீனப்புனைகதை என்ற வகையில் பார்த்தால் பலவீனமான தலைப்பு. மற்றது வேற்றுக் கிரகவாசிகள் பற்றியதாக புனைவு அமைவதால் இதன் நகர்வு தர்க்கரீதியாக இருக்காது என்பதால் இது போலியான எழுத்துவகை என்பதில் சந்தேகமில்லை. எனவே இது வாசகனுக்குத்தரும் அதிர்வும், பிரமிப்பும் தற்காலிகமானது. அவனது இரசனையை மிகமோசமாகச் சுரண்டுவதன் மூலம் அவனை வாசிப்பில் பின் தள்ளுகிறது.

• போலி எழுத்துக்களை அடையாளம் நுட்பமாக வசப்படுத்தி வியபாரமாக்கும் தந்திரங்கள் கலையுலகில் நடந்து வரும் சூழலினை உங்களது எழுத்துக்களில் அம்பலப்படுத் தியும் வாசகனைப் போதை ஊட்டிவைத்திருக்கும் மலினமான மர்ம நாவல்களையும் அதை எழுதியோரையும்
உங்களது எழுத்துக்களில் சாடியுமிருந்தீர்கள். ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் தமிழ் சினிமாவை பார்த்து மகிழ்ச்சியடைந்தாலோ அல்லது தனது பொழுதினை வீணே கழித்தாலோ அவரது ரசனனயை பொய்யானது என்று சொல்லி பிரச்சாரப்படுத்துவதும் உயர்வான கலைகளையே
அவன் ரசிக்கவேண்டும் என்று எழுதுவதும் ரசனை குறைந்த சாதாரண வாசகனின் சுதந்திரத்தை மீறுவதாகக் கருதப்பட வாய்புள்ளதல்லவா?

சாதாரண வாசகனின் சுதந்திரத்தை மீறுவதாகக்கருதும் நிலை எப்போது ஏற்படுமென்றால் என்னால் அதிகாரத்தைப் பிரயோகித்து எழுதும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான். அவ்வரிய சந்தர்ப்பம் துரதிஷ்ட வசமாக எனக்கு வாய்க்கவில்லை. 'இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள்” பற்றி நான் எழுதியிருப்பது எனது கருத்தைத்தான். அதை எவரும் சிரமேற் கொண்டு செயற்பட வேண்டுமென நான் கட்டளையிடவில்லை. மாற்றுக்கருத்தைக்கொண்டிருப்பவர்கள் அதைத் தெரிவிக்க உரிமையுடையவர்கள். நான் எழுதியவற்றை வாசி த்தவர்கள் அதன் பிறகு ரமணிச்சந்திரனை,ராஜேஷ்குமாரை, சுஜாதாவை வாசிக்க ஆவலாக உள்ளோம். ஆனால் வாசிக்க முடியவில்லையே என மனம் மிக வெதும்பினால் அவர்களின் சுதந்திரத்தை நான் மீறுவதாக நீங்கள் கருதலாம். ஆனால் அந்த மாதிரியாக நிகழவில்லையே. அண்மையில் யாழ் பொது நூலகம் ஒழுங்கு செய்திருந்த நூலகக் கண்காட்சிக்கு போனேன். அங்கே ரமணிச்சந்திரன் நாவல்ககளுக்கு தனிப்பிரிவு என்ற முறையில் காட்சிப்படுத்தியிருக்க கண்டேன். விசாரித்தபோது இந்தத் தனிப்பிரிவுகளிலுள்ள புத்தகங்களை வாசிப்பதற்காகவே பலர் அங்கத்தவர்களாக சேர்வார்கள் எனக் கூறப்பட்டது.

இப்போது சொல்லுங்கள் சாதாராண வாசகனின் சுதந்திரத்தை இந்த 'ஜனரஞ்சகப்போலி எழுத்தாளர்கள்” மூலமாக நான் மீறி
யதாகக் கருதும் வாய்ப்புள்ளதா?

(இன்னும் தொடரும்)

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

பதிவுக்கு நன்றி.
மிகுதியையும் எதிர்பார்க்கிறேன்.

//நாளொன்றுக்கு திருவிவிலியத்திலிருந்து நான்கு பக்கங்கள் வீதம் வாசித்துவருகிறேன். அத்தருணங்களில் அற்புதமான உத்திகளை அடையாளம் காணக் கூடியதாக இருக்கும்.//

நான் சிறுவயதில் விவிலியத்தை நிறைய வாசித்திருக்கிறேன். அதுவும் ஒருபக்கம்கூட விட்டுவைக்காமல். (சாலமோன் எழுதியதாகச் சொல்லப்படும் உன்னத சங்கீதத்தின் பலபாடல்கள் பாடமாக்கியே வைத்திருந்தேன்.) இதுவரை அதுபோன்று சுவாரசியமான படைப்பொன்றை நான் கண்டதில்லை.

இளங்கோ-டிசே said...

வசந்தன், உங்களைப்போல பலரும் விவிலியத்தை விதந்து கூறும்போது, வாசித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வருகின்றது. சிறுவயதில் படித்த மனம் திருந்தி வந்த மகனின் கதையைத் தவிர வேறு எதுவும் நினைவினில்லை:-(.