Friday, May 18, 2007

விவாதங்களைக் கோரும் இரு கட்டுரைகள்

(1) தலித் இலக்கியமும் இன்றைய சூழலும - இமையம்
(2) நம் தந்தையரைக் கொல்வது எப்படி? -
மாலதி மைத்ரி


தலித் இலக்கியமும் இன்றைய சூழலும
இமையம்


சமூகச் சூழலும் வாழ்க்கைமுறையும்தாம் ஓர் இலக்கியப் படைப்பின் அடிப்படை ஆதாரங்கள். வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டதல்ல இலக்கியம். ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட காலகட்ட இயக்கத்தையும் வாழ்க்கை முறையையும் இலக்கியப் படைப்பாக மாற்றுவது என்பது சமூகச் செயல்பாடு. பல்வேறு சமூகங்களின் பல்வேறு காலகட்ட நடப்பியல்களையும் வாழ்க்கை முறைகளையும் இலக்கியங்கள்தாம் பதிவுசெய்கின்றன. பிறகு அவை வரலாறுகளாக மாற்றம் பெறுகின்றன. அப்படி உருவாக்கப்படும் இலக்கிய வரலாறுகளின் நம்பகத்தன்மையைக் குறிப்பிட்ட படைப்பாளிகளின் சமூக அக்கறை, சமூக ஈடுபாடு, வாழ்வனுபவம், சமூகத்தைப் பார்த்த விதம், பதிவுசெய்த விதம் ஆகியவற்றோடு படைப்பாளியின் படிப்பு, மொழி குறித்த அறிவு, எழுத்துப் பயிற்சி என்று பலவும் சேர்ந்து உருவாக்குகின்றன. இவைகளே ஒரு படைப்பு, காலம் கடந்து வாழ்வதற்கும் உருவான வேகத்திலேயே உயிரை விடுவதற்குமான காரணங்களாகவும் இருக்கின்றன.

தமிழ் மொழியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான, ஒவ்வொரு விதமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. நடைமுறைக் காலத்தில் தலித் இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன. மார்க்சியம், பெண்ணியம், இருத்தலியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல், கட்டுடைத்தல் என்று இயங்கிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியச் சூழலில், நிறப்பிரிகை பத்திரிகையைச் சேர்ந்த ரவிக்குமார், அ. மார்க்ஸ் போன்றவர்கள்தாம் முதன்முதலில் தலித் இலக்கியம் குறித்துப் பேசியவர்கள், எழுதியவர்கள். மார்க்சியவாதிகள், மார்க்சிய இயக்கங்கள் பொதுவாகத் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்; ஆனால் சாதிய உள் முரண்பாடுகள் குறித்துப் பேசுவதில்லை; சாதிய உள் முரண்பாடுகள் ஒழியாமல் சாதியம் ஒழியாது என்ற வாதத்தை அவர்கள் நிறப்பிரிகையில் தொடங்கிய அதே காலத்தில்தான் அரசே அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அதே காலத்தில் தலித் இலக்கியம் கர்நாடகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. பணியின் காரணமாகக் கர்நாடகத்தில் வாழ்ந்த தமிழக எழுத்தாளர்கள் கர்நாடக இலக்கியப் போக்குகள் குறித்துத் தமிழகத்தில் பேசினர். அதே காலகட்டத்தில்தான் வட தமிழகத்தில் திருமாவளவனும் தென் தமிழகத்தில் கிருஷ்ணசாமியும் அரசியல் சக்திகளாக உருவெடுத்தனர். இப்படிப் பல காரணிகள் பல முனைகளிலிருந்து உருவாகித் தமிழ் மொழியில் தலித் இலக்கியத்தை உருவாக்கின. இந்தப் போக்கு உருவாவதற்கு முன்னமே தலித் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளைப் பூமணி, சிவகாமி போன்றவர்கள் உருவாக்கியிருந்தனர்.

தமிழில் தலித் இலக்கியம் உருவாக ஆரம்பித்த 1985-1992 காலகட்டத்தில், தலித் இலக்கியம் என்று ஒன்று உண்டா, தனியாக தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா, தலித் இலக்கியத்தின் வரையறைகள் என்ன, தலித் இலக்கியத்தின் அடிப்படையான கருதுகோள்கள் எவையெவை, தலித் இலக்கியத்தை யாரெல்லாம் எழுதுவது, பிறப்பால் தலித்தாக இல்லாதவர்கள் தலித் வாழ்வை இலக்கியப் படைப்பாக எழுதினால் அந்தப் படைப்புக்குப் பெயர் என்ன, அரசியல் களத்தில் சாதிரீதியாகத் தமிழ்ச் சமூகம் சிதறுண்டு கிடக்கும் நிலையில் இலக்கியத்திலும் அந்நிலை வேண்டுமா என்று கேட்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேள்விகள் இன்றைக்குச் சாரமிழந்து போய்விட்டன. அதற்குக் காரணம் இன்றைய சமூகச் சூழல்தான்.

இன்றைய சூழலில் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் மட்டுமல்ல, உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியமாக்கப்படுகின்றன. இவ்வகை இலக்கியங்களுக்குப் போதிய கவனமும் வரவேற்பும் கிடைக்கவே செய்கின்றன. அதே நேரத்தில் உலகெங்கும் ஒரே பண்பாடு, பொருளாதாரம், சந்தை, வாழ்க்கைமுறை என்ற வன்முறைக் கலாச்சாரத்தால் உலகெங்குமுள்ள சிறுசிறு இனக் குழுக்கள் தங்கள் பண்பாடு, அடையாளம், பூர்வ கலாச்சாரங்கள் ஆகியவை அழிக்கப்படுவதற்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியப் படைப்புகளாக மாறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

தலித் வாழ்க்கை என்பதும் தலித் இலக்கியம் என்பதும் நவீனத்துவம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடோ தத்துவமோ அல்ல; தலித் இலக்கியம் என்பது ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை அல்ல, கதை அல்ல; பெரும் திரளான ஓர் இனத்தின் பண்பாடு, ஒழுக்க நெறிகள், வரலாறு, மொழி, குறியீடு, அடையாளம் எனலாம். அதன் அடிப்படைக் கலாச்சார மீறல், கலக வெளிப்பாடு, சமூக, புராணிக மதிப்பீடுகளின் மீதான, சமூகக் கட்டுமானங்களின் மீதான எதிர்ப்பு எனலாம். தலித் இலக்கியம் என்பது அடிப் படையில் ஒரு வாழ்க்கை - வாழ்க்கை முறை.

தலித்துகளின் வாழ்க்கை, நிலம் சார்ந்தது; உழைப்புச் சார்ந்தது; கலைகள் சார்ந்தது. இன்றைக்கு உயிரோட்டமான மொழியைக் கொண்டிருப்பவர்கள் தலித்துகளே. நிகழ்த்துகலைகளின் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் தலித்துகளே. தலித்துகளின் மொழி கலைக் குரிய மொழி. தங்களுடைய பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் நிலம் சார்ந்தும் நிலத்தோடு சேர்ந்த சூழல் சார்ந்தும் உருவாக்கியவர்கள். நிலத்தோடு வாழ்ந்து, அறிவும் நாகரிகமும் சாகசமும்செய்து வாழும் இனம் தலித் இனம். இந்த வாழ்க்கைமுறையிலிருந்துதான் தலித் இலக்கியம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்ந்தது வேறு.

எழுத்தாளனின், குறிப்பாக தலித் எழுத்தாளனின் கம்பீரம் எது, பலம் எது, பலவீனம் எது, கற்றுக்கொள்ள வேண்டியது எது, நிராகரிக்க வேண்டியது எது என்று அறிவித்துச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய சூழல் உருவாக்கியுள்ளது. இது எழுத்தாளனுக்குச் சூழல் தந்திருக்கும் சவால். இந்தச் சவாலைக் குறிப்பாக தலித் எழுத்தாளர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், எதிர்கொள்வார்கள்? இதுவரை தமிழில் வந்துள்ள படைப்புகளைப் பார்க்கும்போது எந்தச் சவாலையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் படைப்பு ரீதியான சவாலைக்கூட அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகும். இருபது, இருபத்தி ஐந்து ஆண்டுக் காலம் கடந்துவிட்ட நிலையில் சிறந்த தலித் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என்று பெரிய எண்ணிக்கையில் வராததே இதற்குச் சான்றாகும். தலித் வாழ்க்கையை ஆவணப்படுத்துவது மட்டுமே இலக்கியப் படைப்பாகாது. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு பல கோட்பாடுகளை உருவாக்கலாம். ஆனால், எந்த ஒரு கோட்பாடும் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்க முடியாது. சூழலுக்கேற்ப, சூழலைப் பயன்படுத்திக்கொள்ள எழுதப் படும் படைப்புகள், படைப்பாளிக்கு முன்னரே உயிரை விட்டுவிடும். இதுதான் தமிழில் நடந்துகொண்டிருக்கிறது. தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் மட்டுமே அது தலித் படைப்பாகிவிடுமா? தலித்துகள் பயன்படுத்தக்கூடிய வழக்குகளை ஒரு படைப்பில் ஆங்காங்கே பயன்படுத்தினால் அது தலித் படைப்பாகி விடுமா? தலித்தின் ஊளையும் முரட்டுத்தனமான கோபமும் மட்டுமே தலித் படைப்பா?

பொதுவாக மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொடுப்பவன் வியாபாரி; எழுத்தாளன் அல்ல - முக்கியமாக தலித் எழுத்தாளன் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் மட்டுமின்றி இந்திய, உலகச் சூழலில் இலக்கியச் சந்தையில் விலைபோகக்கூடியதாக இருப்பது ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களே. நவீன இயந்திரத்தின் தேவைகளும் வியாபார நோக்கத்தின் தந்திரங்களும் இலக்கியப் புத்தக வெளியீட்டைப் பரவலாக்கியிருக்கின்றன. உலகச் சந்தையும் வியாபாரப் போட்டியும்தாம் இதற்கு முக்கியக் காரணங்கள். தலித் எழுத்தாளருக்கு வாய்ப்புகள் தேடிவருகின்றன. தலித் படைப்புகளை வெளியிடுவதில் போட்டியும் இருக்கிறது - தற்குறித்தனமாக, படைப்புக்குரிய ஒழுங்கோ அழகியலோ இல்லாமல் எழுதினால்கூட. இதற்குக் காரணம் தலித் இலக்கியத்தை வியாபாரப் பொருளாக மாற்றும் நுண் அரசியல்தான். இந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல், எழுதப்பட்ட வேகத்திலேயே நூலாக்கம் பெறுவது தவறா, வாய்ப்புகளை தலித் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு என்று கேட்பது சரியல்ல. தலித் எழுத்தாளர்கள் நிறைய எழுதலாம், அவை உடனுக்குடன் புத்தகமாகவும் வரலாம், விற்கவும் செய்யலாம். ஆனால், அதற்கு மேல் என்ன? தலித்துகளின் எழுத்துக்கள்மீது அறிவுபூர்வமான விவாதங்கள், செயல்பாடுகள், பயிற்சிகள் இதுவரை தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா? தலித் படைப்புகள் உணர்ந்து படிக்கப்பட்டிருக்கின்றனவா? அவ்வாறு இல்லையெனில், தலித்துகளின் புத்தகங்கள் விற்பதால் என்ன பயன்? யாருக்கு லாபம்?

தலித்துகளின் வாழ்க்கை வெளிப்பாடு என்பது வலியும் ரணமும் கண்ணீரும் நிறைந்தது. இதைத்தான் இன்றைய சந்தைச் சூழல் கோருகிறது. தலித்துகளின் ஏக்கங்களை, இழிவுகளை, சில்லறைத்தனங்களை, காயத்தை, அசிங்கமான பகுதிகளை மட்டுமே இன்றைய சந்தை கோருவதேன்? தலித்துகளின் இப்படியான பகுதிகளை மட்டுமே தலித் எழுத்தாளர்கள் ஏன் உற்பத்திசெய்கிறார்கள்? இதுதான் அரிய வாய்ப்பு என்கிறார்களா? இதைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் தலித் எழுத்தாளர்கள் துடிக்கிறார்களா? வாழ்வின் சகல விஷயங்களையும் தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது என்பது நோய்க்கூறு கொண்ட மனத்தின் செயல்பாடன்றி வேறென்ன? தேய்ந்துபோன பொது மொழியை, படிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற சாரமற்ற மொழியை, ஊடகங்களின் செத்துப்போன மொழியை தலித்துகளின் மொழியாகக் கட்டமைப்பதும் மேட்டிமையோடும் மறுபுறம் இறைஞ்சும் தோரணையிலும் எழுதுவதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமா?

தலித்துகளின் படைப்புகளை வெளியிடுவதும் அதற்காகப் போட்டியிடுவதும் வெறும் வியாபாரத் தந்திரம் மட்டுமல்ல; நவீன இயந்திரத்தின் தேவை மட்டுமல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், சிக்கலான முடிச்சுகளைக் கொண்ட உழைப்புச் சுரண்டலை, பொருளாதாரச் சுரண்டலைச் செய்கிற சமூகத்தின், தொழிலால் வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால் ஒதுக்கிவைத்த, ஒதுக்கிவைக்கும் நம் சமூகத்தின் இன்னொரு முகம் இது. இதற்குப் போட்டி போட்டுக்கொண்டு போவது என்பது தலித் எழுத்தாளர்கள் செய்யும் வரலாற்றுக் குற்றமாகும்.

தலித்துகளின் வாழ்க்கை என்பது கையேந்துதல், கூப்பாடு, ஒப்பாரி, அழுகை, அசிங்கம் மட்டும்தானா? தலித்துகளின் வாழ்க்கையில் சிரிப்பு, சந்தோஷம், விளையாட்டு, கலைகள் இல்லையா? தலித்துகளுக்கென்று பண்பாடு, வரலாறு, மொழி, ஒழுக்க நெறிகள், கூட்டு வாழ்வு எனச் செழுமையான பகுதிகளே இல்லையா? இப்பகுதிகளைத் தலித் எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதில்லை? இவற்றை ஏன் இன்றைய சந்தை கோருவதில்லை?

ஓர் இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் கலாச்சாரம்தான் என்றால், தலித் எழுத்தாளர்களின் நோக்கம் தலித் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் அதன் செறிவான பகுதிகளை, கூறுகளைப் பூரணமாக உள்வாங்கி, அவற்றை இலக்கியப் படைப்பின் மூலம் அடுத்தடுத்த காலகட்டத்துக்குக் கடத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் உலகத் தரத்துக்கு மட்டுமல்ல, இந்திய, தமிழ்த் தரத்துக்குக்கூடத் தலித் இலக்கியம் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதும் ஊளையையும் கோஷத்தையும் கோபத்தையும் பதிவுசெய்வதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவாது.

கேரளாவில் 29.12.2006 அன்று Integrating Dalit Culture and Politics of South India என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் படிக்கப்பட்ட கட்டுரை.

(நன்றி: காலச்சுவடு)

------------------- -------------------------------------------------------------
நம் தந்தையரைக் கொல்வது எப்படி

மாலதி மைத்ரி



தந்தைவழி ஆட்சியின் கொடூரத்துக்குள் காலம் காலமாய் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம். நம் நலனுக்காக என்று கூறி அடிமைத்தனத்தின் நஞ்சை பாலாடையில் புகட்டுபவர்கள் நம் தந்தையர். ஆதிக்கத்துக்கு அடிபணியும் வித்தையை கற்பிக்கும் பயிற்சியாளரும் இவர்தான். இதுதான் வாழ்வின் பேறு என போதிக்கும் மதகுருவும் இவ்வாழ்வொழுங்கு முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கும் காவல்காரரும் இவரே. இந்தக் காவல்துறையின் துணை ஊழியராக இருக்க தாய் நிர்பந்திக்கப்படுகிறாள். தாய்க்கு பெண் என்ற அடையாளம்கூட தற்காலிகமாக மறுக்கப்படுகிறது. தாய் மகளை கண்காணிக்க வேண்டும், மகள் தாயை கண்காணிக்க வேண்டும், உளவுபார்க்க வேண்டும். இருவரும் ஒரே வலியையுடையவர்கள் என்றாலும் எதிரெதிராக வலியை செலுத்திக் கொள்ளும்படி ஒரேக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டவர்கள். ஒரு ஆண் தந்தை, கணவன் என்ற இரட்டை உரிமைகொண்டு மகள், தாய் என்ற இரண்டு அடிமைகளுக்கு எஜமானனாக இருக்கிறான். சமூக ஒழுக்க வரையறைகளும் விதிகளும் மீறப்பட்டால் தண்டனை விதிக்கும் நீதிபதியாகவும் அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறான். குடும்பம் என்பது ஒரு சிறுசிறையாகவும் அதில் தந்தை என்பவன் சிறை அதிகாரியாகவும் இருக்கிறான்.

ஒரு தந்தைக்கு தன் மகளுடன் ரத்தம் சம்மந்தப்பட்ட உறவு மட்டும் போதுவதில்லை. அவளை சமூகத்துக்கு நல்ல அடிமையாக உருமாற்றித் தரும் நல்ல மேய்ப்பன் என்ற அங்கீகாரமும் தேவைப்படுகிறது. பலியாடுகள் தாங்களே பலிபீடங்களை தேர்ந்தெடுப்பதற்குக் காதல் என்ற பெயரும், குடும்பம் பலிபீடத்துக்குக் கொண்டு நிறுத்துவதை திருமணம் என்ற பெயரும் அளிக்கப்படுகிறது. இக்குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்துக்குப் போகும் பெண் அவள் ஏற்றுக்கொண்ட அல்லது அவள் மீது திணிக்கப்பட்ட ஆணுக்கு அவள் உடல் வெளியையும் புழங்குவெளியையும் உடமையாகக் கொடுக்கிறாள். இந்த உடமைப்பொருள் இனி இன்னொருவனின் ஆயுள் காவலில் நீடிக்கும். இந்த ஆயுள் தண்டனையை ஏற்றுக்கொண்டு தொண்டூழியம் செய்வதற்கு ஏற்ப ஒரு பெண்ணைப் பழக்கவே இவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறான் ஒரு தந்தை.

குடும்பம் என்பது என்ன? இனத்தொடர்ச்சி அறுபடாமல் தொடருவதற்கான ஒரு அமைப்பு தானே என்று மிக எளிமையாகத் தோன்றலாம். அது மட்டுமே அதன் கடமை இல்லை என்பதுதான் யதார்த்தம். தன் ரத்தம், தன் சாதி, தன் மதம், தன் இனம் என்பவற்றுக்குள் வேறு மற்றும் பிற என்பவை நுழையாமல் காவல் புரியும் ஒரு சுயநல அமைப்பு. இந்தியச் சமூகத்தில் தீண்டாமையை பயிற்றுவிக்கும் குருகுலமாக குடும்பதைப் பாதுகாப்பது சமூக ஆணின் கடமையாகிறது. இந்தப் பயிற்சியை அறிந்தும் அறியாமலும் பெற்றுக்கொண்ட பெண்களும் குழந்தைகளும் இதே வன்முறையை செலுத்துகிறவர்களாக செயல்படுவதுதான் இந்திய சமூகத்தின் அச்சமூட்டும் ஒரு அவலம்.

பாமாவின் “எளக்காரம்” மற்றும் “தீர்ப்பு” என்ற இரு கதைகளிலும் இந்த அவலம் அச்சமூட்டும் வகையில் நம் முகத்தில் வந்து மோதுகிறது. ஊர்ச்சாதிக் குழந்தைகளின் பிஞ்சு ரத்தத்தில் தீண்டாமை நஞ்சை குடும்பத்தினர் ஊட்டச்சத்துபோல் ஊட்டி வளர்க்கிறார்கள். அக்குழந்தைகள் பள்ளிகளில் தம்முடன் படிக்கும் தலித் குழந்தைகளின் மீது தீண்டாமை வன்கொடுமையை செலுத்துகிறார்கள். இதை ஆதிக்க சாதி ஆசிரியர்கள் கண்டிக்காததோடு அங்கீகரிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சமூக யதார்த்தத்தை ஒரு ஆவணம் போல் விளக்குகிறார். இந்தச் சமூக அவலத்துக்கும் கொடுமைக்கும் காரணமாக அமைவது குடும்பத்தினால் சமூக ஒழுங்கு என்ற பெயரில் கற்பிக்கப்பட்ட மனித நேயமற்ற மன அமைப்பு.

இது சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதுடன் நியாயப்படுத்தவும் செய்கிறது. இந்த அமைப்பில் எந்த மாற்றமும் நெகிழ்வும் நிகழவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறது குடும்பம். ஒரு குடும்பத்தின் கடமை தனது சாதிக்குள் அடங்கி நடக்கும் அடிமைகளை உருவாக்குவதும் தமக்குக் கீழ் உள்ளவர்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க குணமுடையவர்களை உருவாக்குவதுமென இரண்டு வகையில் நடக்கிறது. சாதிக் கலப்போ சாதி அடுக்குமுறையைக் கலைக்கும் நகர்வோ ஒரு பெண் மூலம் நிகழ முடியும் என்ற நிலையில் பெண்ணுடைய உடம்பும் மனமும் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு சாதித் தூய்மை பாதுகாக்கப்படுகிறது. இதை மீறும் சாத்தியம் ஏற்படாத வகையில் ஒரு பெண்ணின் மீது எல்லா விதமான வன்முறையையும் செலுத்தி அடக்கி ஒடுக்குவதன் மூலம் சமூகம் ஒரு பெண்ணொடுக்குதல் சமூகமாக உருவாகிறது. இதைச் செயல்படுத்தும் பிரதிநிதியாக தந்தை நியமிக்கப்படுவதும் அந்தப் பணிக்கு சன்மானமாக பல உரிமைகள் சலுகைகள் வழங்கப்படுவதும் நடந்துவருகிறது.

குடும்பத்தில் உள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளை வழங்க முடியாதவனாக இருந்தாலும், சமூக ஒழுங்குகளின் காவல்காரன் என்ற உரிமையை ஒரு ஆண் விட்டுக் கொடுப்பதில்லை. இந்த காவல் புரியும் ஒரே ஒரு அதிகாரமே கடைசிவரை ஆணுக்கான சமூக அங்கீகாரத்தை வழங்கிவிடுகிறது. இந்த காவல் கண்காணிப்பு உரிமை சமூக, குடும்ப நிகழ்வுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் கூடுதல் சலுகையையும் கூடுதல் பங்கு அளவையும் ஆணுக்கு நிரந்தரமாகப் பெற்றுத்தந்து விடுகிறது. இந்த கூடுதல் பங்கு பெண்ணைவிட எல்லாவற்றிலும் ஆணுக்குக் கூடுதல் இன்பத்தையும் வலிமையையும் கொடுப்பதை நியாயப்படுத்துகிறது. தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பலமற்றவளாக பெண்ணை மாற்றிவிட்டு, பிற இனம் மற்றும் சமூகத்திடமிருந்து அவளைப் பாதுகாக்கும் பெரிய பணியை ஆணிடம் வழங்கியதன் மூலம் அரசு, அரசியல் அனைத்திலும் ஆணை மையமாக்கி விடுவதுடன் பேரதிகாரம் உடையவனாகவும் உருவாக்கிவிடுகிறது. அச்சம் என்ற ஒன்றால் பீடிக்கப்பட்ட பெண் எப்பொழுதும் தனது அடிமைத்தனத்தை பாதுகாப்பு என்று நம்பி இரட்டை அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சமூக உளவியல் வரலாற்று அடிப்படையில் தொடர்ந்து வருகிறது.

எனவே ஒரு ஆணின் சமூக உரிமைகள் கடமைகள் என்பவை எந்த நிலையிலும் பெண்ணுக்குச் சமமாகவோ கீழாகவோ இருந்துவிட நேர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கற்பு, தனிமனித ஒழுக்கம் போன்ற சமூக விதிகளை ஆண் மீறும்போது அது அவன் சுதந்திரத்தின் அடையாளமாகவும் ஆணின் சாகசமாகவும் பெருமைப்படுத்தபடுவதுண்டு. பெண்ணைவிட எல்லா விதத்திலும் மேலானவன் உயர்ந்தவன் என்ற மன அமைப்பில் ஒரு துணிச்சலை இச்சமூகம் வழங்குகிறது. சமத்துவம், சமநீதி என்பவை முதலில் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் அமையவேண்டியது என்பதைப் பற்றி பொதுவான சமூக அரசியல் இயக்கங்கள் அக்கறைக் கொள்வதில்லை. இதற்குத் தனியான கருத்தியலும் இயக்கமும் போராட்டமும் தேவைப்படுகிறது. சாதி, வர்க்கம், இனம் போன்றவற்றுக்கு இடையில் சமத்தும், சமநீதி என்பவை மையப்படுத்தப்படும் அளவுக்கு பாலின ஒடுக்குமுறை என்பது ஒரு மிகமுக்கியமான பிரச்சனையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. சமூகம் என்ற அமைப்பு மட்டுமின்றி சமூக மாற்றம் பற்றிய கோட்பாடுகளும் ஒரு கட்டம் வரை ஆணை மையமாகக்கொண்டே இருந்து வந்துள்ளது. பெண்ணியம், பெண் விடுதலை என்ற மிகத் தனித்த அரசியல் உருவாகும் வரை வரலாற்றின் மிகப்பெரிய புரட்சிகர கருத்தியல்கள்கூட பெண்ணின் இடம்பற்றி சரியான கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளும் ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவாக பெண் இன்றுவரை இருக்க நேர்ந்திருக்கிறது. இந்தியச் சூழலில் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்படும் நிலையில் தலித் பெண்கள் வைக்கப்பட்டுள்ளனர். தலித் பெண்கள் குடும்ப வன்முறைக்கும், சாதிய வன்முறைக்கும், போலீஸ் போன்ற அதிகார நிறுவனங்களின் வன்முறைக்கும் தொடர்ந்து ஆளாகவேண்டிய மிகக் கொடுமையான நிலையில் இருக்கின்றனர். பிற சாதிப் பெண்கள் மீதான சமூக வன்முறை என்பதும் பாலியல் வதைகளும் அவர்களின் சாதியின் அடிப்படையில் நடப்பதில்லை. ஆனால் தலித் பெண் என்பதாலேயே அவர்கள் மீதான சாதிய, பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தலித் பெண் என்ற ஒரே அடையாளம் பல சமயங்களில் அச்சமூகப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிடுகிறது. அதை விடவும் தலித் அல்லாத சமூகத்தினர் அந்த வன்முறையை மிக இயல்பான ஒன்றைப்போல புறக்கணித்து விடும் நிலையும் இங்கு இருக்கிறது.

கிராமியச் சூழலில் மிகச்சிறு வயதில் பாலியல் கொடுமைக்குள்ளாகும் பெரும்பான்மையான பெண்கள் தலித் பெண்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள். இதைப் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் தலித் அரசியல் மூலமே முதன் முதலில் உருவானது. (வன்கொடுமை என்பது பாலியல் சார்ந்தது மட்டுமில்லை என்றாலும் இந்தியச் சமூகங்களில் இதுவே மிக உச்சகட்ட குறியீட்டு வன்முறையாக உணரபட வேண்டி யுள்ளது. சொற்கள், சைகைகள், வசைகள், நடத்தப்படும் முறைகள் என எத்தனை வகையான வன்முறைகள் இந்தியக்கிராமச் சூழலில் தலித் பெண்கள் மீது தினமும் செலுத்தப்படுகின்றன. என்று எண்ணிப் பார்க்கும்போது இந்திய அறம், அன்பு என்பதைப்பற்றிய கேவலமான பொய்கள் நமக்குப் புரியவருகிறது.)

தலித் அரசியல் உருவான அதே சூழலில் தலித் பெண்ணியமும் உருவாக வேண்டிய தேவை இதன்மூலம்தான் உணரப்படுகிறது. எந்த ஒரு பொதுவிடுதலையும் பெண் விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்று சொல்லிவருவது மிக மோசமான ஆணாதிக்க அரசியலின் அடையாளம். இப்படி இல்லாமல் தலித் அரசியலிலும் தலித் இலக்கியத்திலும் தலித் பெண்ணியம் என்ற ஒரு பிரக்ஞை உருவாகிவுள்ளது மிக ஆக்கப்பூர்வமானது. இந்திய அரசியலில் தலித் அரசியலின் உருவாக்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவமும் தேவையும் உள்ளதோ அதே அளவுக்கு தலித் பெண்ணியத்திற்கும் தேவையும் முக்கியத் துவமும் உண்டு. ஒருவகையில் தலித் பெண்ணியம் என்பதே இந்திய மாற்று அரசியலின் மிகமிக அடிப்படையான முதல்கட்ட இயக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது. இந்த தலித் பெண்ணியப் பார்வை எல்லா அரசியலுக்கும் வழிகாட்டு நெறியாகவும் வழி மாறும்போது கேள்வி கேட்கும் நெறியாகவும் இருக்ககூடியது. இதனை மறுக்கும் அல்லது வெறுக்கும் எந்த ஒரு சமூக அரசியல் கோட்பாட்டையும் புரட்சிகர கோட்பாடு என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தப் பார்வை தமிழ் தலித் பெண் எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் எனக்குள் உறுதிப்படுகிறது. ஒவ்வொரு தலித் பெண் எழுத்தும் எனக்குப் புதியப் புதிய எதிர்ப்பு புரிதல்களை, மாற்று அழகியல் மற்றும் அரசியலை நினைவூட்டிக்ù காண்டே இருக்கிறது. வேறு எந்த எழுத்துக் களிலும் காணப்படாத அளவுக்கு இந்திய யதார்த்தம் என்பது வலிமையாகவும் ஆழமாக வும் இவர்களுடைய எழுத்துக்களில் இயல்பாகப் பதிவாகிவிடுகிறது. மிக எளிமை யான ஒரு வாக்கியம்கூட எனக்கு மிக நீண்ட வரலாற்றுக் கொடுமைகளை நினைவூட்டி எதிர் அரசியல் பற்றிய கேள்விகளை எழுப்பிவிடுகிறது. அழகியல், கலை இலக்கியம், அறம், ஒழுக்கம் என்பவை பற்றிய மிக அடிப்படையான சிக்கல்களை இவை வெளிப்படுத்திவிடுகின்றன.

பாமாவின் ஒரு சிறுகதையை இங்கு வாசிப்போம், கதையின் தலைப்பு “எளக்காரம்”

“பள்ளிக்கொடத்த பூரா கூட்டிப் பெறுக்கி அள்ளுறது நம்ம பிள்ளைகதானாம். அந்த பிள்ளைக வந்து அலுங்காமெ குலுங்காமெ படுச்சுட்டுப் போவாகளாம்.” என்கிறாள் சின்னபொண்ணுவுடன் படிக்கும் பெண்ணின் தாய். அவளே தொடர்ந்து சொல்கிறாள்.

“எங்க வீட்டுக்காரம் போயி கேட்டதுக்கு, நம்ம பிள்ளைகதாஞ் சுத்தமா நல்லாக் கூட்டுதுகளாம். அந்தப் பிள்ளைகளுக்குச் சரியாக் கூட்டத் தெரியலைன்னு பசப்பி உட்டுடாக.”

“இது நல்ல வேலதாண்டி. அப்ப நம்ம பிள்ளைக நல்லா கூட்டிக்கிட்டே இருக்கட்டும்; இந்தா நம்ம வயக்காட்டுகள்ள ரணபாடுபட்டு வேல செய்ய அவுக ஒக்காந்து சொகமா திங்கறாகள்ள, அது கணக்காதான்.” என்கிறாள் சின்னப்பொண்ணுவின் அம்மா பரிபூரணம். இந்த எளிமையான ஒரு உரையாடல் இந்தியச் சமூகத்தின் மிகப் பழமையான கருத்தியல் வன்முறையை நம் முகத்தில் வந்து அறையும்படி உணர்த்தி விடுகிறது.

இந்த ஆண்டு உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது என்று போராடிய மேல்சாதி வெறியர்கள். உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு நாங்கள் என்ன தெருக்கூட்ட போக வேண்டுமா என தெருப் பெறுக்கும் போராட்டம் நடத்தினார்கள். உயர்கல்வி கற்று நாங்கள்தான் உயர்பதவிக்குப் போக வேண்டும். நீங்கள்தான் தெருக் கூட்ட வேண்டும் என்று தங்களின் சாதிவெறியை வெளிப்படையாகக் காட்டினார்கள். இது இன்றைய சமூக எதார்த்தம். இந்தச் சாதிவெறியை பள்ளிக்கூடங்கள் கற்றுத் தருவதைத்தான் பாமாவின் “எளக்காரம்” கதை பேசுகிறது. மிக எளிமையான இந்தக் கதை மிக சிக்கலான வலிகளை நமக்கு ஞாபகப் படுத்துகிறது.

பாமாவின் மற்றொரு கதையான “பொன்னுத்தாயி” இந்தியக் குடும்பம் பற்றிய மயக்கங்களையும் மாயைகளையும் உடைக் கிறது. பொன்னுத்தாயி என்ற பெண் தன் குடிகாரக் கணவனுடன் வாழப்பிடிக்காமல் தனது நான்குக் குழந்தைகளையும் அவனிடத் திலேயே விட்டுவிட்டு தாய்வீட்டுக்கு வந்துவிடுகிறாள். தன்னுடன் வந்துவிடும்படி கணவன் தகராறு செய்கிறான். அப்போது ஏற்பட்ட சண்டையில் அவளது மண்டை உடைந்து ரத்தம் கொட்டுகிறது. அத்துடன் காவல் நிலையம் சென்று முறையிட்டு தன் கணவனுக்குத் தண்டனை வாங்கித் தருகிறாள். ஊர் அவளை இதற்காக இழிவாகப் பேசுகிறது. குழந்தைகளை விட்டுவந்த அவளை பாசமற்றவள் என்று குற்றம்சாட்டுகிறது. என்றாலும் தனது கணவனை பிரிந்து தனித்து வாழ முடிவு செய்துவிட்ட அவள் தன் தாலியை அறுத்து எறிந்துவிடுகிறாள். அதைவிற்றே தனக்கென்று ஒரு சிறு பழ வியாபாரத்தைத் தொடங்குகிறாள். இக்கதையில் தாய்மை, தாலி, குடும்ப வன்முறையை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற விதி என்பவை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவள் சிந்தும் ரத்தமும் அவள் எடுக்கும் முடிவும் மறுக்க முடியாத உண்மைகளாக உறைந்துவிடுகின்றன. இப்படி ஒரு கதை நிகழ்வை தலித் பெண்ணியப் பார்வையில் மட்டும்தான் எழுதவும் புரிந்துகொள்ளவும் முடியும்.

“ஒத்த” என்ற பாமாவின் மற்றொரு கதை இல்லாமல்லி என்ற பெண்ணைப் பற்றியது. சிறுமியாக இருக்கும் போது பன்றிக்கடித்து அவளது வலது மார்பு ஊனமாகிவிடுகிறது. வளர்ந்த பிறகு ஒற்றை மார்பகத்தோடு இருக்கும் அவளை ஊரார் “ஒத்த” என்று கேலியாகக் கூப்பிடுகிறார்கள். அவளுக்கு அதனால் திருமணமும் நடக்கவில்லை. அவளின் முப்பது வயதில் வயற்காட்டில் புல்லறுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு மேல்சாதிக்காரன் கேவலப்படுத்தி பேசு வதுடன் அவள் ஒற்றை மார்பைத் தொட முயற்சிக்கிறான். அப்பெண் அறிவாளால் அவனைத் தாக்க அவனது ஒருகண் குருடாகிவிடுகிறது. “இப்பிடிச் செஞ்சாத்தான் பெயல்களுக்குப் புத்தி வரும்”. என்று ஒரு பாட்டி சொல்கிறார். இச்செய்தி ஊர்முழுக்க பரவியபின் அப்பெண்ணை யாரும் ஒத்தை என்று கேலி செய்வதில்லை.

ஒரு தலித் பெண்மீது பாலியல் வன்முறை செலுத்துவதை தினசரி செயல்போல் மிகச்சாதாரணமாக ஒரு மேல்சாதி ஆண் நடந்துகொள்வதை நேரடியான எளிய மொழி நடையில் இக்கதை விளக்குகிறது. அதற்காக கிராமத்தில் பெரிய எதிர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்ற குறிப்பும் தரப்படுகிறது. இந்த தனிப்பட்ட எதிர்த்தாக்குதல் மட்டுமே ஒரு எதிர்ப்பாக இருக்கிறது. கண் தாக்கப்படுதல் ஒரு சிறிய எதிர் வன்முறை அடையாளமாக வைக்கப் படுகிறது. இவை மேலோட்டமாக ஒரு சம்பவத்தைச் சொல்வதுபோல் தலித் சமூகத்தின் மொத்த வலியையும் கூறிவிடுகிறது. இந்த எளிமை சார்ந்த உரையாடல் வழியாக மிகப்பெரிய வரலாற்று வன்முறைகளை நினைவூட்டுவதுதான் தலித் எழுத்துக்களின் தனிப்பட்ட வலிமையாகக் கொள்ள முடிகிறது. அதிலும் தலித் பெண்படைப்புகள் இரட்டை வன்முறையின் பல்வேறு அடுக்கு களையும் மிகத் தீவிரமாகப் பேசுகின்றன.

பாமாவின் “கருக்கு” “சங்கதி” “வன்மம்” என்ற மூன்று நாவல்களும் தலித் சமூகத்தின் வாழ்வியல், சமூகவியல் அவலங்களை விரிவாகப் பதிவு செய்கின்றன. கதை சொல்லும் மொழி தலித் வட்டார வழக்கில் அமைந்து ஒரு பொது மொழிநடைக்கு எதிர் கதைக்கூறலை உருவாக்குகிறது. கருக்கு, சங்கதி இரண்டு நாவல்களும் =தன்வாழ்க்கை+ கதைகளாக அமைந்து ஒரே சமயத்தில் தலித் மற்றும் பெண் என்ற இரு அடையாளங்களின் சிக்கல்களை நேரடியாகவும் ஒரு கால கட்டத்தின் பின்னணியிலும் பேசுகின்றன. அதே சமயத்தில் தலித் பெண்ணியப் பார்வை கொண்ட படைப்பாளரின் எண்ணங்களை யும் பதிவு செய்கின்றன. தலித் சமூகத்தின் வாழ்க்கைமுறை, கிராமத்தின் சாதிய அமைப்புமுறை, அவற்றுக் கிடையிலான முரண்பட்ட வன்முறை நிறைந்த உறவுகள் அதற்குள் நிகழும் தனிமனித வாழ்வு என்பவை ஒரு பெண்ணின் நினைவு வழியாகக் சொல்லப்படுகின்றன.

இந்நாவல்களின் சொல்லும் முறை தமிழ் நாவல்களின் பழகிய வடிவத்திலிருந்து முற்றிலும் மாறி நேரடித்தன்மையும் கடுமை நிறைந்த பேச்சும் கொண்டவையாக உள்ளன. நாசுக்கான உரையாடல்கள் என்ற தமிழின் கதைச் சொல்லும் மரபு அரசியல் நோக்கத்தோடு மீறப்பட்டுள்ளது. இந்த மீறல் தலித் வாழ்வின் இருப்பையும் இயக்கத்தையும் தீவிரமாக அரசியல்படுத்தும் உத்தியாகச் செயல் படுகிறது. இந்த நாவல்களின் வாசிப்பின் ஊடாக எத்தனையோ கேள்விகளும் தலித் வாழ்வின் வரலாற்றுப் பதிவுகளும் அடுக்கடுக் காக வெளிப்படுகின்றன. தீண்டாமை கொடுமையிலிருந்துத் தப்பிக்க எண்ணி மதம்மாறிய தலித்துகள் அங்கும் தலித் கிருத்துவர்கள் என்ற பெயருடன் அதே அளவு கொடுமையை அனுபவிக்கும் சமூக அவலம் இவர் நாவல்களின் பின்னணியாக அமைந்துள்ளது.

தலித் சமூகத்தின் தினசரி வாழ்க்கைக்கான போராட்டங்கள் ஒருபுறம், தங்கள் உயிரை பாதுக்காத்துக்கொள்ள வேண்டிய போராட்டம் ஒருபுறம், தங்களுக்கான அடையாளத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய போராட்டம் ஒருபுறமென பலகட்ட போராட்டங்களுக்கு இடையே ஒரு பெண்ணாக இருத்தல் என்பதின் பயங்கரத்தை கருக்கு, சங்கதி என்ற இரண்டு நாவல்களும் ஒரு அடங்கிய தொனியில் அதே சமயம் மிகத் தீவிரமாகப் பதிவு செய்கின்றன. தலித் வாழ்க்கையில் திணிக்கப்பட்ட வறுமை மற்றும் பயம் என்ற வலிகளுக்கிடையேயும் மனித உறவுகளின் மென்மை, எளிய மனங்களின் சிறு சிறு சந்தோஷங்கள், கனவுகள் அனைத்தும் கூட மனதை பற்றும் வகையில் பதிவாகியுள்ளன. மற்ற கதை கூறல்களைப் போல இல்லாமல் இவை ஒவ்வொன்றுக்கும் கூடுதல் அரசியல் அர்த்தமும் தொடர்ந்து உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. ஒடுக்குதலை பதிவு செய்யும் அதே வேளையில் அதிலிருந்து விடபடவேண்டும் என்ற ஏக்கமும் கனவும் தொடர்ந்து நினைவூட்டப்படுகிறது. தலித் பெண்ணியப் பிரக்ஞைதான் இந்த நினைவூட்டும் மொழிக்கு அடிப்படையாக உள்ளது.

“எங்க ஊரு ரொம்ப அழகான ஊரு.” என்று தொடங்கும் =கருக்கு+ நாவல் “நாய்க்கமார்க கிட்டதா நெலமே இருக்குது. ஒவ்வொரு நாய்க்கமாரு காடுகளும் பல மைல்களுக்கு பரவிக்கெடக்கும்.” எனக்கூறி காடு, மலை, கழனி, கம்மாய், குளம் என்று பரந்து கிடக்கும் வெளியில் வெறும் கூலிகளாக மட்டும் நிறுத்தப்பட்டுள்ள மனிதர்களைப் பற்றி பேசுகிறது. இவர்களுக்கான புழங்கும் வெளி, பொது வெளி இரண்டையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. தலித்துகளின் மீது நடத்துப்படும் தாக்குதல்களும் சுரண்டல்களும் இல்லாத ஒரு இடத்தை, உலகை கதைசொல்லி வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டே இருக்கிறார். ஆனால் தீண்டாமை காற்றுபோல் எல்லா வெளியிலும் இயல்பாகப் புழங்கிக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் சகல அமைப்புகளும் சாதியின் பெயரால் நடத்தும் அவமரியாதையும் கொடுமைகளையும் வன்முறைகளையும் கண்டு முடங்கிவிடாமல் திமிறி எழுகிறார். விடுதலையைத் தேடி கன்னியாஸ்திரியாக மாறுகிறார்; பிறகு தனது அடையாளத்தை மீட்டுடெடுக்க கன்னியாஸ்திரி மடத்திலிருந்தும் வெளியேறுகிறார். இம்முடிவு இவரின் சுதந்திர பிரகடனமாகப் பதிவாகிறது.

“சங்கதி” நாவலோ ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட இனமான பெண்களைப் பற்றியது. இந்நாவலும் கதைசொல்லியை முன்வைத்து பாலின ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. தலித் பெண் என்ற அடையாளத்தை நேரடியாக முன் வைத்துக் கூறப்படும் இவ்வாழ்க்கைக்கதை பல்வேறுவிதமான பெண்களையும் அவர் களின் வாழ்க்கைப்பாடு களையும் அவர்களுக் குள்ளாகவே ஏற்படும் தவறான புரிதல் களையும் பற்றி விரிவாகப் பேசுகிறது. தலித் சமூகத்துக்குள்ளேயே பெண்கள் விடுதலை நோக்கி நகர்வதை கசப்புடன் எதிர்கொள்ளும் நிலை பற்றியும் துயரத்துடன் கூறுகிறது. பெண்கள் கல்வி பெறுவதையோ சிந்திப் பதையோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் அறியாமை பற்றியும் முறையிடுகிறது. சாதிக் கலப்பு ஏற்படுவதன் தேவை சில இடங்களில் சுட்டிக்காட்டப் படுகிறது. ஆனால் கதையின் இலக்கு தனித்த அடையாளமுடைய சிந்திக்கும் பெண்ணைப் பற்றியதாக அமைந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட இரு சாதிகளுக்குள் நேரும் வன்முறையை துயரத்தோடு பதிவு செய்யும் நாவல் =வன்மம்+. ஒரே வகையான ஒடுக்குமுறைக்கு உட்பட்ட இரண்டு தலித்சாதிகள் அரசியல், சமூக விழிப்புணர்வு இன்றி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளவதும் அதற்குப் பின்னணியில் ஆதிக்கசாதியினரின் திட்டமிட்ட தூண்டுதல் இருப்பதும் பதிவு செய்யப்படுகிறது. சாதி மோதல் வன்முறையின் போது அதிகமாக பாதிக்கப்படுகிறர்வர்களாக பெண்கள் இருப்பது தெளிவாக விவரிக்கப்படுகிறது. காவல்துறை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் பெண்களை வீடு புகுந்து தாக்குவதும் இழிவு படுத்துவதும் ஒரு தேசிய நடைமுறையாக மாறிவிட்ட கொடுமை ஒரு உதாரண ஆவணமாக பதிவு செய்யப் பட்டுள்ளது. இரு தலித் சாதிகளுக்கிடையில் நேரும் மோதலில் பலர் இறந்துவிட, சடலங்களை பெற்றுக்கொள்ளச் செல்லும் பெண்களை காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்கிறார்கள். இந்த ஒரே சித்தரிப்பே தலித் பெண்கள் விலங்குகளுக்கும் கீழான ஒரு நிலையில் நடத்தப்படுவதை அதன் கொடூரத்தோடு விவரித்துவிடுகிறது. தலித் பெண்களைப் பற்றி பாமாவின் நாவல்கள் விவரிக்கும் முறை அவர்களின் சில தனிப்பட்ட வலிமையான பண்புகளை சொல்லிச் செல்கிறது. உழைப்பு என்பதோடு சமூகச் செயல்பாட்டுப் போராட்டங்களில் அதிகமாக பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் தாக்குதல் போன்றவற்றைக்கூட நேரடியாக எதிர்கொள்கிறார்கள் என்பதும் இவருடைய எழுத்துகளில் பதிவாகிறது. எந்தவொன்றைப் பற்றியுமான பெண் களுடைய கருத்து இவர் எழுத்துக்களில் முதன்மை பெறுகிறது.

“பழயன கழிதலும், ஆனந்தாயி” என்ற இரு நாவல்கள் மூலம் தலித் பெண்பார்வை பற்றிய விரிவான விவாதத்தைத் தொடங்கிவைத்த சிவகாமி, தமிழில் எழுதிவரும் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். தலித் அரசியலிலும் தலித் பெண்ணியத்திலும் தொடர்ந்து பங்களித்து வருபவர். இயக்க நடவடிக்கைகளில் நேரடியாக செயல் படுகிறவர். இவருடைய எழுத்துக்களில் தலித் சமூகத்திற்குள் பெண்கள் நடத்தப்படும் முறைபற்றிய கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பழையன கழிதல் நாவலில் தலித் அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு ஆணின் கீழ் அவனது குடும்பத்துப் பெண்கள் படும் கொடுமையை ஈவு இரக்கமின்றி சித்தரித்துள்ளார். பெண்ணின் பார்வையிலிருந்து அடக்கமுடியாத கோபத்துடன் இந்தக் கடுமை பீறிட்டு வெளிப்படுவதை காண முடிகிறது. சாதி என்பதைக் கடந்த ஆண்மையின் அதிகாரக் கடுமை பழியன கழிதல் நாவலில் மிக விரிவாகப் பேசப்படுகிறது. காத்தமுத்து என்ற அரசியலில் ஈடுபடும் ஊர் பெரிய மனிதர் ஆதிக்க சாதியினரின் கொடுமைகளை எதிர்த்து நிற்கும் அதே வேளையில் தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் துரோகம் செய்தல், பழிவாங்குதல், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைச் செய்கிறார்.

இதனை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து கதைசொல்லி அதிக கோபத்தோடு விவரித்துச் செல்கிறார். இதன் மூலம் தலித் அரசியலுக்கு இருக்க வேண்டிய பெண்ணியப் புரிதலை வலியுறுத்தவே செய்கிறார். முதல் பார்வையில் ஒரு தலித் அரசியல்வாதியை கொடூரமான வனாக சித்தரிப்பது போன்ற தோற்றத்தை இந்நாவல் தந்தாலும் அடிப்படையான மாற்றத்தையும் கருத்தியல் தெளிவையும் இந்நாவல் முதல் தேவையாக வலியுறுத்துகிறது. இது பெண் என்ற பார்வையின் மூலம்தான் சாத்தியமாகியிருக்கிறது.

சிவகாமியின் “ஆனந்தாயி” நாவலோ தலித் பெண்களின் துயரம், கொடுமை அனைத்தை யும் அச்சமூட்டும் வகையில் விவரிக்கும் ஒரு எழுத்து. நிலையான நீடித்த ஒரு துயரம், ஆறுதலே இல்லாத ஒரு தொடர்வலி என இந்த நாவல் மனதை பிழியும் வகையில் நீண்டு செல்கிறது. இந்தத் துயரம் தலித் சமூகத்தின் நீண்ட வரலாற்றுத் துயரக் குறியீடாகவும் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுகிறது.

ஆனந்தாயியின் கணவன் பெரியண்ணன் கேள்விமுறையற்று வீட்டுக்கே பிறப் பெண்களை அழைத்துவந்து அவர்களுடன் உடலுறவு கொள்கிறான். இதனால் எழும் சச்சரவுகளில் ஆனந்தாயி தினம் தினம் அவனிடம் அடிப்பட்டு செத்துச் செத்துப் பிழைக்கிறாள். லெட்சுமி என்ற பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்திவரும் இவன், காலப்போக்கில் அவள் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவளை தனக்கே உடமையாக்க வேண்டி வீட்டுக்கே அழைத்துவந்து வைத்துக்கொள்கிறான். இதனால் எழும் குடும்ப சண்டைகள் அடிதடிகள் என தொடரும் வாழ்க்கையிலிருந்து லெட்சுமி தப்பிக்க நினைக்கிறாள். இந்த நரகத்திலிருந்து விடுபட்டால் போதுமென்று பழக்கமாகும் ஆண்களுடன் சில முறைகள் ஓடிப் போகிறாள். அவள் எங்கு சென்றாலும் பெரியண்ணன் அவளைத் தேடி இழுத்துவந்து கொடூரமாக அடிக்கிறான்.

ஒவ்வொரு முறையும் அவளைத் தேடி கண்டுப்பிடிக்கவே தனது சொத்தையெல்லாம் விற்றுத் தீர்க்கிறான். அவள் ஓடிப்போகும் ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கிறது. ஆனந்தாயி இவனை திருமணம் செய்துகொண்ட நிர்பந்தத்துக்காக இவனிடம் வதைபடுகிறாள் என்றால் லெட்சுமி அவனிடம் அடைக்கலம் வந்த பாவத்துக்காக இவனிடம் கொடுமைப் படுகிறாள். ஆனந்தாயியின் மகள் கலாவுக்கு தாயைப் போலவே ஒரு வாழ்க்கை அமைந்து விடுகிறது. அவர்கள் இருவருமே தங்கள் கணவன்மாரிடம் எந்நேரமும் உதைபட்டு சாகும் நிலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இவர்கள் பேச்சற்ற பெண்கள். தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் தப்பித்து சென்று இந்த உலகின் எந்த மூலையிலும் ஒளிந்து கொள்ள சக்தியற்றவர்கள். ஒரு ஆண் தான் ஒரு ஆண் என்ற காரணத்தைக்கொண்டே பெண்களின் மீது எல்லாவித வன்முறை யையும் செலுத்தும் உரிமை எடுத்துக் கொள்ளவதை இந்த நாவல் மிகக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறது.

இந்த வன்முறை சாதிப் பிரிவுகள் தாண்டி நிகழ்வதும் நியாயப்படுத்தப்படுவதும் இவ்வளவு கடுமையாகப் பதிவாவதற்கு சிவகாமியின் பெண்ணியப் பார்வையே காரணமாக இருப்பதை அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் உணர முடிகிறது. இந்த பெண்ணியப் பார்வை ஏற்கனவே நினைவில் இல்லாதவற்றை நினைவுக்குக் கொண்டுவரும் புதிய கதைகூறலை சாத்தியமாக்குகிறது.

இந்த நினைவு ஏற்கனவே இருந்த இலக்கிய வரலாற்று மறதிகளை உடைத்து ஒவ்வொரு பேச்சையும் அரசியலாக்கும் செயலைச் செய்கிறது. இவரின் இரண்டு நாவல்களுமே தந்தை என்ற ஆண் பாத்திரத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது. தலித் அல்லாத சாதிகளின் அதிகாரத் தந்தையையும் தலித் சமூகத்துக்குள் உள்ள அதிகாரத் தந்தையையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் கொடூரத்தை இவருடையப் பெண்கள் அனுபவிக்கிறார்கள். சாதிகளை நிலைநிறுத்தும் தந்தை அதிகாரம், சாதிக்குள் பெண்ணின் இடத்தை வரையறுக்கும் தந்தை அதிகாரம் இரண்டையும் எதிர்கொள்வதற்கான அரசியல் தலித் பெண்ணிய அரசியலின் பேச்சாக தலித் பெண் எழுத்துக்கள் இருக்கின்றன.

தற்போது பெண்விடுதலை, பெண்ணியம் என்ற குரல் எழும்போது அதை முடக்க எல்லா பக்கங்களிலிருந்தும் மிரட்டல்கள் விடப்படுகின்றன. பெண் விடுதலையின் அடிப்படையுடன் தலித் பெண்ணியம் சேரும்போது உண்மையான ஆண் அதிகாரம், தந்தையதிகாரம் என்பவற்றின் பிரதிநிதிகள் யார் என்பது எதிர்நிலையில் அடையாளப் படுத்தப்பட்டுவிடும். இந்த அடையாளப் படுத்தலின் அரசியலும் மறதிக்கு எதிரான அரசியலும் ஒரு வன்முறையுடன் தான் எழுத்தில் தொடங்கவேண்டியிருக்கிறது.

இந்த அரசியலின் தொடர்ச்சியை கோட்பாட்டு வகை எழுத்தில் அரங்க மல்லிகாவிடமும் கவிதை எழுத்தில் சுகிர்தராணியிடமும் காண முடிகிறது. வெளிப்படையான பேச்சு. மௌனத்தைக் கலைக்கும் தொந்தரவுகள். மறதியை உடைக்கும் நினைவுகள் என அமைதியை குலைக்கும் எழுத்துக்கள் இனி நிறைய தலித் பெண் படைபாளர்களிடமிருந்து உருவாக இருக்கிறது. அதற்கான அழுத்தமும் வலியும் தற்போதுதான் உணரப்பட்டு வருகிறது. சுகிர்தராணியின் இக்கவிதை இம்மாற்றத்தை முன்மொழிவதாக இருக்கிறது.

மெல்லிய
புலால் நாற்றம் வீசுகின்ற
நானும்
தசைகளை முற்றாகப்
பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்
என் வீடும்
கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி
பறையொலி பழகும்
விடலைகள் நிறைந்த
என் தெருவும்
ஊரின் கடைசியில் இருப்பதாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
முதலில் இருப்பதாக.

(நன்றி:அணங்கு)

3 comments:

Anonymous said...

ஏன் "நம் மாமியாரைக் கொல்வது எப்படி" என்று எழுதினால் பொருந்தாதாக்கும்? ;)

--fd

இளங்கோ-டிசே said...

FD,
தங்களின் கோரிக்கை மணிமேகலைப்பிரசுரத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது :-).

ஜமாலன் said...

விவாதத்தை நோக்கும் மீள்பதிவுகள். அதனை நீங்கள் தொடங்கினால் தொடர்வார்கள். தமிழ் இலக்கிய உலகில் மெளனம் சம்மதம் என்பது மெளனமாய் நிற்கும் ஒரு பெண் உடலை அடைவதற்கான ஏற்பாடே தந்திரமே ஒழிய.. இலக்கிய தந்திரம் மெளனம் என்பது புறக்கணிப்பு அல்லது அமுக்குதல். இவ்வளவு ஆழ்ந்த பிரச்சனைகளை தமிழ் இலக்கிய உலகமே விவாதிக்காது அதனை பதிவுகளில் எதிர்பார்க்கிறீர்களே.