Monday, December 22, 2008

இலங்கை பிரச்சனையும் யுத்த குற்றவாளிகளும்

-தமிழவன்

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் கொடுத்த விருந்துகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர்களில் பலர் சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். பௌத்தமத்தைப் பின்பற்றக் கூடியவர்கள். இலங்கையை வெளிநாட்டார்களிடம் நல்லமுறையில் அறிமுகப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அவர்கள். வெறிபிடித்த சிங்களவனைப் போல் இவர்கள் நடந்துகொள்ளமாட்டார்கள். நாகரிகமானவர்கள்.

இன்றைய சூழலில் அமெரிக்காவில் தூதுவராக இருப்பவர்களுக்குத்தான் அதிக மதிப்பு. மூன்றாமுலகத்தைச் சார்ந்த பல நாடுகளுக்கும் அமெரிக்கா தான் முக்கியம். எனவே அங்கிருக்கும் தூதுவர் தங்கள் தங்கள் நாட்டைப் பற்றி அமெரிக்கர்களிடம் நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும். அதற்காகத் தான் அவருக்கு அந்த நாடு சம்பளம் கொடுக்கிறது. இலட்சக்கணக்கான டாலர் பணத்தை ஏழை நாடுகளின் தூதுவர்களும் பணக்கார நாடுகளில் செலவு செய்து அந்நாடுகளின் விருந்தும் உபச்சாரமும் நடத்தி ‘நண்பர்களை’ அந்தந்த நாடுகளில் உருவாக்க வேண்டும். அந்தந்த நாடுகளின் சுதந்திரதின விழாக்களும் குடியரசு தினவிழாக்களும் இத்தகைய சந்தர்ப்பங்களாகும். தூதரகங்கள் பற்றித் தெரிந்தவர்களுக்கு இவை தெரியும்.

இப்படிப் பணத்தை நீராக இறைத்த பிறகும் அமெரிக்கா இலங்கையை மோசமான மனித உரிமைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடாகவே கருதுகிறது. 2007-ஆம் ஆண்டின் அமெரிக்க நிபுணர்கள் தயாரித்த மனித உரிமை ரிப்போர்ட் இலங்கையை ஒரு பயங்கரவாத அரசாகவே கருதுகிறது. State Terrorism என்னும் அரச பயங்கரவாதம் என்ற தொடரை விடுதலைச் சிறுத்தைகள் சமீபத்தில் இலங்கைப்படுகொலைகளை விளக்கப் பயன்படுத்தியது தமிழ் நாட்டினருக்கு தெரிந்திருக்கும். இலங்கை அரசு ஒரு பயங்கரவாத அரசு என்பதை அமெரிக்கா அறிந்திருக்கிறது. இந்து ‘ராம்’ அறியவில்லை. மன்மோகன் சிங்கும் அறியவில்லை.

ஆனால் அமெரிக்கா இன்னும் அதிகாரபூர்வமாக இலங்கையை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே ஐந்து நாடுகளை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசுகளைக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்கா. அவை: க்யுபா, சூடான், வடகொரியா, சிரியா மற்றும் இரான் ஆகும். ரோனால்ட் ரீகனின் முன்னாள் அட்டார்னியான, வழக்கறிஞர் புரூஸ் ஃபீன், இந்த ஐந்து நாடுகளை விட கொடூரமான பயங்கரவாதத்தை, அதாவது ஜீனோசைட் என்றழைக்கப்படும், சொந்த நாட்டு மக்களையே விமானத் தாக்குதல் செய்துகொல்லும் செயலைச் செய்கிறது இலங்கை அரசு என்கிறார் இவர்.

மேலும் புரூஸ் ஃபீன் அவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரான கோதபைய ராஜபக்ஷ அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர். அவர்தான் இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலர். அவர் மீது அரச பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டதற்கு வழக்கு தொடுக்க முடியும் என்கிறார். அரசபொறுப்பில் இருப்பவர்கள் தன்குடிகளில் ஒரு பகுதியினருக்குத் துன்பம் விளைவித்தால் அவர்களைத் தண்டிப்பதற்கு அனைத்துலக சட்டத்தில் விளைவித்ததில் வழிவகைகள் உள்ளன. இதற்கான முன் உதாரணங்கள் உள்ளன.

இலங்கை அரசு மெதுமெதுவாக ஒரு பயங்கரவாத அரசாக மாறியதை அறியமுடியும்.
1. குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்து குடியேறி, இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் சுமார் மூன்று நான்கு தலைமுறைகள் உழைத்தவர்கள், இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிறகு 1948-இல் தேர்தலில் வாக்கு கொடுக்க முடியாதவர்களாக மாற்றப்பட்டனர். கொடூரமான இந்த மனித உரிமை மீறலை இந்தியா கவனிக்காமல் இருந்தது. நேரு தான் இந்த கொடுமையைச் செய்தவர். உலகில் சமாதானம் வேண்டுமென்ற இந்த மனிதர் ஏழை, கூலித் தமிழர்களை மறந்ததுமட்டுமின்றி மனித உரிமை மீறலுக்குத் துணைசெய்தார். அதன் பின் மலைப்பிரதேசத்தில் வாழும் கூலி மக்களில் ஒரு பகுதியினர் மட்டும் தேர்தலில் பங்கெடுக்கும் உரிமை பெற்றனர். இந்த கூட்டு அநியாயத்தை சாஸ்திரி- பண்டாரநாயகா ஒப்பந்தம் என்றனர்.
2. அடுத்ததாக இலங்கை ஒரு பயங்கரவாத நாடு என்ற பாதையில் போவதற்கான எத்தனத்தை 1956-இல் செய்தது. சிங்களம் மட்டும் என்ற அறிவிப்பின்மூலம் அதிகாரபூர்வ மொழியாக முஸ்லிம்களும் தமிழர்களும் பேசும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது.
3. அதற்கடுத்ததாக இலங்கை அரசு 1961-இல், தமிழர்கள் காந்தி வழியில் சாத்வீகமாகப் போராடிய போது கைதுசெய்தும், துப்பாக்கி சூடு நடத்தியும் சித்திரவதை செய்தும் மனித உரிமைகளை துவம்சம் செய்தது. அந்த நேரத்தில் மா.பொ. சிவஞானம் இலங்கைக்கு சென்று நிலவரத்தை அறிய விரும்பியபோது இலங்கை அரசு ‘விசா’ வழங்கவில்லை. முதலில் இலங்கைத் தமிழர்களை ஆதரித்த தமிழக கம்யுனிஸ்டுகள் பின், வழக்கம்போல் பின்வாங்கினார்கள். இலங்கை கம்யுனிஸ்டுகளுடன் தொடர்புகொண்டிருந்த பி.ராமமூர்த்தி இலங்கை செல்ல இலங்கை விசா வழங்கியது. சென்று திரும்பிய ராமமூர்த்தி, தமிழர்களுக்கு அநியாயம் செய்யப்படவில்லை என்பது போல் பிரச்சாரம் செய்ததாக மா. பொ. சி கூறினார். (தினமணியில் சமீபத்தில் பி.ராமமூர்த்தியைப் பற்றிக் கட்டுரை எழுதிய அவருடைய மகள் இந்தச் செய்தியையும் சேர்த்து எழுதியிருக்க வேண்டும்.)

மா. பொ. சி அதன் பின்பு ராஜாஜியை அழைத்து தமிழர்களுக்கு நடக்கும் அநியாயத்தைப் பற்றிக் கூறும்படிக் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு இசைந்து ராஜாஜி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அன்று மா. பொ. சி. எழுதினார். தொடர்ந்து பொருளாதாரக் கோட்பாட்டை மட்டும் கவனித்த அன்றைய கம்யுனிஸ்டுகளின் பூதங்களால் மூளைச் சலவைச் செய்யப்பட்ட இன்றைய இடதுசாரி கம்யுனிஸ்டுகளும் இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தைச் சரியாகக் கணிக்கவில்லை. கலாச்சாரம் பொருளாதாரத்தைவிட முக்கியமானது என்று இன்றைய மார்க்சியம் கூறுகிறது. இன்றைய மார்க்சியம் பற்றி அமைப்பியல் சார்ந்த பல சிந்தனையாளர்களின் கருத்துகளும் இன்று தமிழில் பிரசுரமாகியுள்ளன. எனினும் இடதுசாரி கம்யுனிஸ்டுகள் தங்கள் திட்டங்களை மாற்றவில்லை.

4. பின்னர் 1972-இல் இலங்கையில் அரசில் இருந்தவர்களே போதிய பெருவாரி ஆதரவு இன்றி அரசியல் சாசனத்தை மாற்றினர்.
5. 1983-இல் அரசின் ஆதரவுடன், வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்தபடி தமிழர்களைத்தேடி சிங்கள ரௌடிகள் தமிழ் மக்களைத் தாக்கினர். ஜெயவர்த்தனே இதனை ஆதரித்ததாக வெளிப்படையாகக் கூறினார்.
6. இதற்கிடையில் செல்வநாயகம் 1974-இல் தமிழர் விடுதலை முன்னணி என்ற பெயரில் உபதேர்தலில், தனிஈழம் கோரிக்கையை முன்வைத்தபோது அதற்கு மக்கள் ஆதரவு கொடுத்தனர். கொஸாவா, மக்கள் பாராளுமன்றம் மூலம் தனிநாடு அடைந்தது போல் இலங்கை பாராளுமன்றம் மூலம் ஈழம் எப்போதோ தனிநாடாகியிருக்க வேண்டும். குறைந்தது தனி அரசாகவாவது(separate State) ஆகியிருக்க வேண்டும். 1983 கலவரத்தில் 4000 தமிழர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் சொல்கிறது. இது ஒரு ஐரோப்பிய தேசமாக இருந்தால் எப்போதோ பிரச்சனை ஐ.நா. சபைக்குச் சென்றிருக்கும். மூன்றாமுலக மக்களில் ஒரு பகுதித் தமிழர்களின் பிரச்சனையாக இருப்பதால் இது தமிழ் பயங்கரவாதமாக அழைக்கப்படுகிறது.
7. 1979-இல் இலங்கை அரசு ஒரு ‘போட்டா’ சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் பெரும்பாலும் எல்லாவித தமிழர்களின் எதிர்ப்பையும் பயங்கரவாதமாகப் பார்க்கவும் எந்தவித தண்டனையும் கொடுக்கவும் வகை செய்தது.
8. 1970-இல் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களைவிட அதிகம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.இவ்வாறு ஒரு அரசு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த, குறிப்பிட்ட மொழியைப் பேசும், குறிப்பிட்ட மதவழிபாட்டைக் கைக்கொண்ட தனது நாட்டு மக்களை எல்லா வகையிலும் அடிமைபோல் நடத்துகிறது.அனைத்துலக சட்டங்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்கிறது. குடியுரிமைச் சட்டத்தை இயற்றி பக்கத்திலிருக்கும் இந்திய நாட்டை ஆண்ட வடநாட்டுத் தலைவர்களின் மூலம் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை நாசம் செய்துள்ளது.

சமீபத்தில் ஜூலை மாதம்(2008) ராஜபக்ஷவின் படைத்தளபதி சரத் பொன்சேகா இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும் உரிமையுள்ள நாடு என்று கூறியுள்ளார். இலங்கையின் படைகள் சிங்கள மக்களால் மட்டும் அமைக்கப்பட்டது. அமெரிக்க ராஜபக்ஷ கோதபையா பாதுகாப்பு செயலாளர் ஆனபிறகு சட்டத்துக்குப் புறம்பாக சுமார் 1500 கொலைகளை தனது அரசு ஆட்கள் புரிய காரணமாகவுள்ளார். பல நியாயமற்ற கைதுகள், சிறைக்கூட சித்திரவதைகளுக்குக் காரணராகியுள்ளார். சுமார் 2 இலட்சம் மனிதர்களும் அவர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் பல மாதங்களாக நோய்க்கு ஆளாகி போதிய உணவுக்கும் வழியில்லாமல் வாழுகின்றனர். யுத்தத்திற்கு நடுவில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணமான அமெரிக்க குடியுரிமை பெற்ற ராஜபக்ஷவின் சகோதரன் ராஜபக்ஷ கோதபையா ஒரு யுத்த- குற்றவாளி(War Criminal) ஆகும். ஆசியாவின் மனித உரிமை கமிஷன் 2007 பெப்ருவரி மாதம் இரண்டாம் தேதிய ரிப்போர்ட்டின் படி ஒவ்வொரு 5 மணி நேரத்திலும் ஒருவர் இலங்கையில் காணாமல் போவதற்கு ராஜபக்ஷ கோதபையாவும், ராஜபக்ஷவும், சரத்பொன்சேகாவுமே காரணம் என்கிறது. இப்படி மக்கள் காணாமல் போவதற்குச் சட்டத்திற்குப் புறம்பான கைதும், சித்திரவதையும், செத்த உடல்களை அரசாங்கம் தன்னிச்சைப்படி புதைப்பதும் காரணங்களாகும். 2007-இல் அமெரிக்க ஸ்டேட் மனித உரிமை அமைப்பின் ரிப்போர்ட்டின்படி இளவயதுள்ள தமிழர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் காணாமல் போகிறார்கள்; அரசாங்கத்துக்கு ஆதரவான குழுக்களும் ரௌடிகளும் யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் இத்தகைய கொடுமைகளைப் புரிகிறார்கள் என்கிறது.

இவை எல்லாவற்றையும் விட அகில உலகத்தின் மனசாட்சியை உலுக்கியிருப்பது ஒரு முக்கிய உண்மையாகும். 1983 இனக்கலவரங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் எந்தத் தண்டனையும் பெற்றதில்லை. அதுபோல் இன்றுவரை எந்த சிங்களத் தரப்பினரோ, அரசு தரப்பினரோ தமிழர்களை இனஅழிப்பு செய்ததற்காகத் தண்டிக்கப்படவில்லை. சரத் பொன்சேகா கூறியுள்ளது போல் இது சிங்களவரின் அரசு என்பது உண்மை.

இதற்கான ஒரே தீர்வு சிங்களவர் அல்லாதவர்களுக்கான ஒரு அரசு அந்த தீவில் தோன்றுவது தான். செர்பியாவிலிருந்து கொஸாவோ, பிரிந்தது போல், பிடிக்காத மக்களை அவர்கள் விருப்பப்படி பிரிந்துபோக அனுமதிப்பது தான் அகில உலக சட்டங்கள் எல்லாம் கூறுவது. தேர்தல் மூலம் கிழக்கு திமோர், எரித்திரியா, மான்ட்நிக்ரோ சிறு தேசங்களாக முடியுமென்றால் ஈழமும் தனியாகப்போவதில் தவறில்லை. கனடாவில் க்யுபெக் தனியாகப் போகவேண்டுமா என்று இருமுறை தேர்தல்கள் நடந்தன. அது தேசத்துரோகம் என்றோ பயங்கரவாதம் என்றோ அனைத்துலக மக்கள் கருதவில்லை. அமெரிக்கா கூட ப்யுர்டோ ரிக்கோவுக்கு தனியாகப் போக விரும்பினால் பிரிந்துபோகும் உரிமையைக் கொடுத்துள்ளது. நான்கு சதமானம் மக்கள் கூட பிரிந்துபோக விரும்பவில்லை. பிரிந்துபோவதைத் தடுக்கும்போது வரலாறு இரத்தத்தால் கறைபடும். இவ்வளவு சாவுகள் தேவையா என்று தான் கேட்கத் தோன்றும்.

வரலாற்றில் ஈழத்தமிழர்கள் தனியான மொழி, நடை, உடை, வழிபாடு கொண்டவர்கள். ஆங்கிலேயர் வருவதுவரை யாழ்ப்பாண இராச்சியம் என்று தனிநாட்டை வைத்திருந்தவர்கள் பெருவாரிமக்கள் அவர்களை குறையின்றி பாதுகாக்காததால் ஏற்பட்ட குரல் பிரிவினை. இனி வேறு வழியில்லை என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிலவித மனோபாவங்கள் பரவலாக காணப்படும். அந்த மனோபாவங்கள் காரணகாரியத் தொடர்பற்றுக் கூடச்செயல்படும். அடிப்படையில் இந்த மனோபாவம் மத மனோபாவம். எனவே பெரியாரின் கருத்தைக்கூட ஒரு மதமனோபாவனையாய்தான் புரிந்து கொண்டிருக்கிறது தமிழகம். இத்தகைய மனோபாவங்களே பிரிவினை என்ற கருத்தைச் சுற்றியும் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் பிரிவினையை ஒரு மதக்கருத்துருவச் சாயலில் கருதுகிறார்கள். அண்ணாத்துரையவர்களின் பிரிவினை/ பிரிவினையைக் கைவிடுதல் என்பது ஒரு இயங்கியல் கருத்தாக்கம். எந்தச் சிந்தனையையும் புதிதாக, இன்று தோன்றிய பிரச்சனை என்பதுபோல் மதஉணர்வகற்றிச் சிந்திக்க வேண்டும். பெரியார் கற்பித்தது சிந்திக்கப் பயப்படக்கூடாது என்பதைத் தான்.

சிந்திக்கப் பயப்படாமல் இறங்குபவர்களுக்கு இலங்கைப் பிரச்சனையின் அடிப்படைகள் தெளிவாக விளங்கும்; தீர்வும் கூட எளிதாக விளங்கும்.


ந‌ன்றி: உயிரோசை(22.12.2008)

Friday, December 19, 2008

நீயும் நிழ‌லும் நாம் ந‌ம்பிய‌வையும் க‌ரைந்துபோன‌ வ‌ச‌ந்த‌கால‌த்தின் குறிப்புக‌ள்

-க‌லீஸ்தினோ மிகுந்த‌ன்

xx.xx.20xx
இசையில் ஓவியத்தில் இலக்கியத்தில் அமிழ முன்முடிவுகள் அவசியமற்றது. ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது எழுத்தாளரின் பெயரும் அடையாளமும் இன்றி வாசித்தால்தான் அந்தப்படைப்பில் முற்றாக அமிழ்ந்து போகமுடியும் என்று எப்போதோ வாசித்த கவிதை நினைவுக்கு வருகின்றது. உண்மையில் இந்த தன்மை எனக்குள்ளும் தலைதூக்கியபடிதான் இருக்கின்றது. விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக்கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவறவிடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்துபோக விரும்புகின்றேன். ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புக்களை வாசித்துவிட்டு அவற்றிற்கு பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளி விட்டுப்போக விரும்புகின்றேன். பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர விரும்புகின்றேன். ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை.

xx.xx.20xx
நீ சிலவேளைகளில் குழந்தையாய், பலவேளைகளில் உக்கிரமான காளியாய் விசுவரூபம் எடுக்கிறாய். நீ பேசுகின்ற/உபயோகிக்கின்ற மொழி, பல தடவைகளில் நான் கேள்விப்படாத மொழியாக இருக்கிறது. இந்த உக்கிரமான மொழியைத்தான் எனது அம்மாவும் அக்காவும் பேசவிரும்பி தங்களுக்குள் அடக்கிக்கொண்டிருக்கவும் கூடும். உனது தனித்துவமான இந்த மொழி எந்த நேரமும் இதத்தைத் தருகின்றது என்று பொய் சொல்லமாட்டேன். சிலவேளைகளில் அவையென் மனக்குளத்தில் கல்லெறிந்து அலையலையாய் கேள்விகளை உருவாக்குகின்றன. என்னை, எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற பதட்டத்தை எனக்குள் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.


xx.xx.20xx
இரத்த ஆறு பெருகிக்கொண்டிருக்கும் நோயுற்ற நாட்டிலிருந்து பிரசவிக்கப்பட்ட நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளையும், புல்வெளிகளையும், பூக்களையும் பேசிக்கொண்டிருத்தல் எவ்வளவு இயல்பானது - இயல்பற்றது என்பதனைவிட இவ்வாறான நெகிழ்வான கனவுகளும் இல்லாவிட்டால் நாமும் எப்போதோ மனப்பிறழ்வானவர்களாய் ஆகியிருக்கவும் கூடும் என்ற அச்சந்தான் என்னில் உறைகிறது.


xx.xx.20xx
ஒரு குழந்தையால் எப்படி தனது அழுகைக்கான காரணத்தை வாய்திறந்து சொல்லமுடியாதோ….ஒரு சகமனிதர் தான் உணர்கின்ற வலியை எப்படி வார்த்தைகளால் விபரிக்கமுடியாதோ…அப்படித்தான் பலபொழுதுகளில் ஒருவரை எப்படி ஆழமாய் உள்ளார்த்தமாய் நேசிக்கின்றோம் என்பதையும் அந்த நபருக்கு வெளிப்படுத்துவிடமுடியாது. துரோகங்களையும் பழிவாங்கல்களையும் அப்படியே இன்னொரு சகமனிதருக்கு பிரதிபலித்துக் காட்டுவதற்கான அனைத்து வழிகளையும், முயற்சிகளையும் அறிந்து வைக்கின்ற நாம், உறவுகளை ஆழமாய் பிணைத்து வைத்திருக்கக்கூடிய அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அதிகம் கவலைப்படாமல் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுவதுதான் மிகவும் அவலமானது.


xx.xx.20xx
சூரியன் இந்த நாளை மிக மிக வேகமாய் விழுங்கிக்கொண்டிருக்கின்றது. Patioவில் இருந்து மூன்று பியர்களும், ஒரு 5oz ஷொட்டும் அடித்து முடிக்க மழை பொழியத் தொடங்குகிறது. நாம் சிலிர்த்த, நம்மால் சிலிர்க்கவைக்கப்பட்ட பெண்களைப் பற்றிப் பேசும்போது மனம் முழுதும் நிரம்பும் விகசிப்பும் நிதானமும் ஏன் நண்பா நாம் அரசியல் பேசும்போது மட்டும் வருவதில்லை? முகமெல்லாம் இருண்டு உலகின் கடைசிக்கணம் மாதிரியல்லவா நாம் குரைக்கத் தொடங்கிவிடுகின்றோம். உனக்கு ஏறிவிடுகின்றது; கெட்ட வார்த்தைகள் கலந்து உனக்கான அரசியலைப் பேசத்தொடங்குகின்றாய். வழமைபோல நானும் ஒமோம் போட்டபடி கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இடைமறித்து உரையாடத் தொடங்குகின்றேன். உனது குரல் உனக்குரிய தார்மீக ஆவேசத்துடன் உயரத்தொடங்குகின்றது. மழையில் அரையும் குறையுமாய் நனைந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் எம்மைப் பார்த்து waitress பெண், Why don’t you guys come inside and talk here? என்கிறார். நண்பா, நமக்குள் இருக்கும் விமர்சனங்கள்/பலவீனங்களை மீறி, நமக்குரிய ஒரே ஆதர்சனம் ‘சே’ என உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதுபோல நமக்கான கடைசி நம்பிக்கையாய் இன்னமும் நம்மில் தேக்கிக்கொண்டிருப்பது மார்க்சிசத்தையும், பெரியாரியத்தையும் என்பதையும், இதோ விழுந்துகொண்டிருக்கும் இந்த மழைத்துளிகளும், பச்சை patioவுக்கு கருமை வர்ணம் பூசும் இந்த இரவும் மிக நன்கு அறியும்.


xx.xx.20xx
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று இடம் பொருள் ஏவல் அனைத்தையும் துறந்து பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்து, பலவீனங்களுடன் மனிதர்களை இன்னும் நேசிக்க வைக்கிறது. மனிதர்களை எந்தவளவுக்கு நேசிக்கின்றேனோ அந்தவளவுக்கு மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவும் விரும்புகின்றேன்.


xx.xx.20xx
நள்ளிரவைத் தாண்டி மணித்தியாலங்கள் கடந்திருக்கும் இந்தப்பொழுதில், மனிதர்களும், கொட்டிய பனியும் உறங்கிக்கிடக்கும் இந்தக்கணத்தில், உன்னைப் பற்றிய நினைவுகள் என் அறையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கத் தொடங்குகின்றது. உனக்கான என் பிரியத்தைக் கூற எந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தாலும் நான் விரும்பும் நெகிழ்வும் உயிர்த்திருத்தலும் இல்லாதிருப்பதைக் கண்டு ஒருவித சலிப்பு வருகின்றது. உன்பொருட்டேனும், இதுவரை கற்றிராத ஏதோவொரு புதுமொழியைக் கற்று, அந்தமொழியின் வனப்புமிகு வார்த்தைகளை ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் முதற்சொற்களைப்போல உனக்குச் சொல்லவேண்டும் போல ஆசை நிரம்புகின்றது.


ஏற்க‌ன‌வே ப‌திவிலிட்ட‌ ப‌குதிக‌ள்:
(1)க‌விழ்ந்த‌ வான‌த்தில் மேல் முளைத்த‌ காளான்க‌ள்
(2)உறைந்த‌ ந‌தியின் மீது ப‌ற‌ந்துகொண்டிருந்த‌ கொள்ளிவால்பிசாசுக‌ளை ஆடு தின்ற‌ ஆதிக்க‌தை
(3)மேய்ப்பரின் களவுபோன ஆடுகளைத் தேவதைகள் தேடிப்போன குளிர்காலத்தின் கதை
(4)சிற‌கு முளைத்த‌ க‌விதைக‌ளைச் சிதைத்துப்போன‌ கோடையைக் கொல்ல‌ விரும்பிய‌வனின் க‌தை
(5)க‌ரைக‌ளையுடைத்து பாய்ந்த‌ ந‌தியை தும்புக்க‌ட்டையில் ப‌ற‌ந்த‌ சூனிய‌க்காரி குடித்து முடித்த‌ க‌தை
(6)ஜிப்சிக‌ளுட‌ன் க‌ள்ளுக்குடித்துக்கொண்டிருந்த‌வ‌னோடு கோபித்துப் ப‌ற‌ந்துபோன‌ புறா த‌ன் சாம்ப‌ல் வ‌ர்ண‌த்தைப் வான‌த்திற்குத் தாரை வார்த்த‌ க‌‌தை

Wednesday, December 10, 2008

க‌விஞ‌ர்க‌ளின் க‌ண‌ட‌ன‌ப்போராட்ட‌ம் குறித்த‌ இர‌ண்டு ப‌திவுக‌ள்

இலங்கையில் நடைபெற்று வரும் இன அநீதிகளை கண்டித்து கவிஞர்களின் கண்டன கவிதை போராட்டம் சென்னையில் நடைபெற்றது

-யசோதா (இந்தியா)



இலங்கையில் நடைபெற்று வரும் இன அநீதிகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் கவிஞர் இன்பா சுப்ரமணியம் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்துகொண்டு கண்டன கவிதையை வாசித்தனர்.

இந்த கண்டன கவிதை போராட்டத்தில் கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி, கவிஞர், சுகிர்தராணி,கவிஞர் இன்குலாப், கவிஞர் ஜெயபாலன், கவிஞர் லீலா மணிமேகலை உள்ளிட்ட பல முன்னணி படைப்பாளிகள் கலந்து கொண்டு தங்கள் கவிதை மூலம் இலங்கை அரசிற்கு கண்டனத்தை தெரிவித்தார்கள். இங்கு கிராமியப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் போன்றனவும் பெண்களால் பாடப்பட்டது


இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்த கவிஞர் லீனா மணிமேகலை கூறுகையில் "இலங்கையில் நடைபெற்று வரும் இன அழித்தொழிப்பு நடவடிக்கையினை நிறுத்துவதற்காகவும் முதலில் சமாதானத்திற்கான உரையாடலை தொடங்கவேண்டும். அதன் முன் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நியாயமான அரசாக இலங்கை அரசு நடந்து கொள்ளாததால் அங்கு நிலவி வரும் இன பிரச்சினை உள்நாட்டு பிரச்சினை என்ற எல்லையை தாண்டி சர்வதேச பிரச்சினையாக மாறிவிட்டது,என்றும் தமிழக மீனவர்களையும் இலங்கைத் தமிழர்களையும் அழித்தொழிக்கும் இலங்கை அரசுக்கு எதிராகவே இக் கவிதைப்போராட்டம் என்றும் . இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்யவேண்டும் சமாதானம் பேசும் போது கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றவர்களையும் உள்ளடக்கவேண்டும் என்றும் அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

ந‌ன்றி: ஊட‌று
------------------


கண்டனக் கவிதைப் போராட்டம்-ஓர் பதிவு (தமிழ் நதி)

கடலலைகளின் பின்னணியில்
கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டம்

பல்லாண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர்கள்பால் தமிழகத்தின் கவனமும் அனுதாபமும் குவிந்திருப்பதன் நீட்சிகளில் ஒன்றாக, கடந்த ஏழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெரீனா கடற்கரையில் நடந்தேறிய கண்டனக் கவிதைப்போராட்டத்தைக் கூறலாம். இந்நிகழ்வானது, ஈழத்தில் இடம்பெயர்ந்து அகதிகளாக அலைக்கழியும் மக்களின் துயரத்தினை வெளிப்படுத்தி அவர்களை நோக்கி ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது.

காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழகத்திலின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கண்டனக் கவிதைப் போராட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய கவிஞர் லீனா மணிமேகலை, அகதிகளாகி ஈழத்தமிழர்கள் படும் அவலங்களை எடுத்துரைத்ததுடன், அப்பிரச்சனை குறித்த அரசியல் மௌனங்களைச் சாடிப்பேசினார். பறையொலிக்கும், கற்பனை வளம் மிகுந்த ஒப்பாரிக் கலைஞரான லஷ்மியின் பிரலாபத்திற்கும் அலையோசை பின்னணி இசைத்தது. பல்வேறுபட்ட உணர்வுடையவர்கள், கருத்துடையவர்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காகக் கூடியிருப்பதையிட்டு மகிழ்வதாக கவிஞர் சுகிர்தராணி தனது உரையில் குறிப்பிட்டார். கவிஞர் இன்பா சுப்பிரமணியம் பேசுகையில், "நமது முதுகில் இருக்கும் உலகத்திற்குக்
கண்கள், காதுகள் மட்டுமே இருக்கின்றன. வாய் கிடையாது. அதனால் நாம்
பிரயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்"என்றார். எந்த அரசையோ
தனிமனிதரையோ சாடிப் பேசுதல் ஆகாது என்ற நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி, அத்தனை கவிஞர்களுக்குமிடையில் சப்பணமிட்டு அமர்ந்திருந்ததை நிகழ்வு நெடுகிலும் காணக்கூடியதாக இருந்தது.

யவனிகா ஸ்ரீராம், எஸ்.தேன்மொழி, கம்பீரன், தமிழச்சி தங்கபாண்டியன், தாரா கணேசன், கு.பழனிச்சாமி, ராஜா சந்திரசேகர், தமிழ்ச்செல்வன், செல்வகுமாரி, சரவணகுமார், மரகதமணி, நிஷாந்தினி, பாலை நிலவன், அக்கினி சிவகுமார்,அ.வெண்ணிலா, லதா ராமகிருஷ்ணன், பழ.புகழேந்தி, கண்டராதித்தன்,அய்யப்பமாதவன், ஸ்ரீதேவி, டி.எஸ்.எஸ்.மணி, சக்தி அருளானந்தம், இளங்கவி அருள், பத்தினாதன், சுகுணா திவாகர், இன்குலாப், இளம்பிறை, கோணங்கி,பாக்கியம் சங்கர், சல்மா பிரியதர்சன், நரன், கு.உமாதேவி, ராஜதுரை,வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்நதி,பிரியம்வதா,இசை,கனகபாரதி,ஐகோ, யாழன் ஆதி,இன்பா சுப்பிரமணியம், பவுத்த அய்யனார், வ.கீதா, அ.மங்கை, ரேவதி, உமாஷக்தி பிரசன்னா ராமஸ்வாமிஅபிலாஷ், விஜயலஷ்மி, கனிமொழி, சுகிர்தராணி, தினகரன், சந்திரா, கிருஷாங்கினி, ஆனந்த், செந்தமிழ் மாரி, யூமா வாசுகி, ரமேஷ் பிரேதன், அரங்கமல்லிகா இவர்களோடு மேலும் பலர் கவிதை வாசிப்பில் கலந்துகொண்டனர். செம்பை மணவாளன், றொபேட், ரவி சுப்பிரமணியன் ஆகியோரால் இடையிடையே உணர்வெழுச்சி மிக்க பாடல்களும் பாடப்பட்டன.

ஈழத்துக் கவிஞர்களான கருணாகரன், சேரன், பா.அகிலன், சிவரமணி ஆகியோரின் கவிதைகளும் அங்கு வாசிக்கப்பட்டன. ரவி சுப்பிரமணியனின் கணீரென்றதும் உருக்கமானதுமான வாசிப்பு அக்கவிதைகளை மெய்யான பொருளில் வெளிக்கொணர்ந்தன.

கவிஞர் யூமா வாசுகி தனதுரையில், 'கவிஞர்களின் கண்டனப் போராட்டமானது உணர்வெழுச்சி மிக்க எதிர்ப்புக்குரல்'என்றார். மதியத்தின் பின்னான நிகழ்வுகளை எழுத்தாளர் கோணங்கி, கவிஞர் ரவி சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்தளித்தனர். கவிஞர்களின் போராட்டத்திற்குஆதரவு தெரிவித்து கனடாவிலிருந்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இளங்கோ, இலண்டனிலிருந்து எழுத்தாளர் நாகார்ஜுனன் ஆகியோர் அனுப்பியிருந்த அஞ்சல்கள் அக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டன. இறுதியாக, வளர்மதியின் நெறியாள்கையில் நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலையை மையமாகக் கொண்ட அவ்வளிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றது.

கண்டனப் போராட்டத்தின் தீர்மானங்களை தமிழில் கவிஞர் லீனா மணிமேகலையும் ஆங்கிலத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும் வாசித்தார்கள். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு : தமிழ் நதி

ந‌ன்றி: tamilpoets.blogspot.com

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க)

-ஆதவன் தீட்சண்யா


அஞ்சலி என்ற பெயரில் 'இந்தியா டுடே' கீழ்க்கண்ட கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது

----------------------------------------------------------------------------------

அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.

அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.

அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.

அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.

-எஸ். பி

----------------------------------------------------------------------------------


இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.

இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.

( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா...? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்.... இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை... ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.

ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.

மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்.... கொலைகள்... கொள்ளைகள்... பாலியல் வன்கொடுமைகள்.... காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.

மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ... வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.

-------------------------------
குறிப்பு: மேலேயுள்ள‌ ஆத‌வ‌னின் க‌ட்டுரையிலுள்ள‌ அழுத்த‌ம்( bold) என்னுடைய‌து. ~டிசே
ந‌ன்றி: கீற்று

Sunday, December 07, 2008

அ.முத்துலிங்கத்தின் நேர்காணல்

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை

நேர்காணல்: அ.முத்துலிங்கம்

அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கும். அதுவே அவற்றின் சிறப்பு. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்லும்; பிரமிக்கவைக்கும். அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் செல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்கும்.

அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்து நடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. யாழ்ப்பாணத்தில் பிறந்த அவரும் ஒரு நவீன பாணர்தான். ஊர் ஊராகச் சென்று பாடிய பாணர்கள்போல தேசம் தேசமாக சுற்றி மானுடத்தைப் பற்றி பேசுகிறார். இதுவரை கட்டுரைகள் `சிறுகதைகள்' நேர்காணல்கள் விமர்சனங்கள் என்று பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவருடைய நாவல் `உயிர்மை' வெளியீடாக இந்த டிசம்பரில் வருகிறது. ஐ.நா.வில் அதிகாரியாக பல வருடங்கள் பணியாற்றியவர் தற்போது ஓய்வில் கனடாவில் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.

தற்போது இலங்கையில் தமிழ்ப் புத்தகம் வைத்திருப்பதும், படிப்பதும் குற்றம் என்று கருதப்படுவதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புக்குப் போய்வந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் சில தமிழ்ப் புத்தகங்கள் கொண்டுவரும்படிச் சொல்லியிருந்தேன். அந்த சாதுவான பெண்ணும் சம்மதித்து புத்தகங்களை வாங்கி விமான நிலையத்துக்கு எடுத்துப் போனார். அங்கே அவரை அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டுத் தொல்லை கொடுத்தார்கள். என்ன புத்தகம், அதிலே என்ன இருக்கிறது, யாருக்கு எடுத்துப் போகிறீர்கள்? என்றெல்லாம் கேள்விகள். அவர் பயந்துவிட்டார். சூட்கேசை தலைகீழாகக் கொட்டி ஆராய்ந்தார்கள். கடைசியில் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது அவரை விடுவித்தார்கள்.

ஆனாலும் சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தகவல் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. `இங்கே இப்பொழுது தமிழ்ப் புத்தகத்தை வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது? என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது' என்று எழுதியிருந்தார். நான் இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் இது வழக்கமாக நடப்பதுதான் என்றார். காவல் அரண்களில் இருக்கும் ராணுவம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படும். அவர்களுக்கு பதில் சொல்லி லேசில் திருப்திப்படுத்த முடியாது. யாராவது தமிழ்ப் புத்தகத்தை அல்லது சஞ்சிகையை காவினாலோ அவர் உடனே பயங்கரவாதி ஆகிவிடுகிறார். அகப்பட்ட ஆளை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (Terrorism Investigation Division) கொண்டு போவார்கள். அப்படிப் போனவர்களில் பலர் திரும்பி வருவதே இல்லை.

அந்த நண்பர் இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னார். கனடாவில் கணவன் வெளிநாட்டிலிருக்கும் மனைவியை ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம். ஆனால், மனைவி வன்னியைச் சேர்ந்தவரென்றால் ஸ்பொன்சர் செய்யவே முடியாது. போலீஸாரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால்தான் கனடாவுக்கு வர முடியும். வன்னியில் பிறந்தவருக்கு சான்றிதழ் எப்படி கிடைக்கும்? இதுதான் இன்றைய நிலை.

ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னரே புலம் பெயர்ந்து விட்டார்கள். இன்று அங்கே நிகழ்பவற்றை ஆவணமாக்கவோ, இலக்கிய ரீதியில் பதிவு செய்யவோ எழுத்தாளர்கள் இல்லை என்பது உண்மையா?

சமீபத்தில் கனடா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொடுத்த பேட்டியை கனடாவில் ஒளிபரப்பினார்கள். இவர் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுதினார். முற்றிலும் போர்ச் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலையில், தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். நூலை முடித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்காக அலைந்தார். சரிவரவில்லை. இந்தியா சென்று பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கினார். ஒருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் தன் வாழ்நாள் சேமிப்பைச் செலவழித்து புத்தகத்தை வெளியிட்டதாகக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு மனம் துணுக்கென்றது. ஒருவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணம் செய்து நூலை எழுதியது மட்டுமில்லாமல் தன் சேமிப்பையும் கொடுத்துத்தான் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது. இதுதான் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் நிலை.

ஒன்றைப் பதிப்பித்தால்தான் அவர் எழுத்தாளர் என்பதில்லை. அவர் எழுதினாலும் எழுத்தாளர்தான்; எழுதாமல் சிந்தித்தாலும் எழுத்தாளர்தான். புலம் பெயர்ந்த சூழலில் என்ன நடக்கிறது என்றால் அதிக வசதிகள் உண்டு. ஒரு கணினியும் சிறு பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம் போட்டுவிடலாம். இணையம் வந்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைய தளங்களில் எழுதி தங்கள் எழுத்தைக் கூர்மைப்படுத்துகிறார்கள். உலகம் அவர்கள் எழுத்தைப் படிக்கிறது. உடனுக்குடன் எதிர்வினை கிடைப்பதால் எழுத்தாளர் தன்னை மேம்படுத்திக்கொள்ள நல்ல வசதி கிடைக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் அதிக எழுத்தாளர்கள் உருவாவதற்கு இதுவே முக்கிய காரணம்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வாசகர் என்னை அழைத்துப் பேசினார். அவர் எல்லா தீவிரமான இலக்கியப் பத்திரிகைகளையும் பசியோடு படிக்கிறார். அது எப்படி என்று கேட்டேன். அவர்களுக்கு ஆறு மாதம் பிந்தித்தான் பத்திரிகைகள் கிடைக்கின்றன என்றாலும் அவர் ஒன்றையும் விடுவதில்லை. எழுதுகிறீர்களா என்று கேட்டேன். எழுதி எழுதி வைத்திருக்கிறேன். எங்கே, எப்படி அனுப்புவது என்பதுதான் பிரச்சினை என்றார்.

ஆனால் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது சரியாகாது. தலை சிறந்த எழுத்தாளர்கள் இன்னமும் ஈழத்தில் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் அவை எமக்குக் கிடைப்பதில்லை. மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியாளர்களில் கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு தமிழ் எழுத்தாளர் பல நாடுகளில் பணிபுரிந்து அனுபவங்களைப் பெறுவது என்பது அபூர்வமாக நிகழ்கிற ஒன்று. உங்களுக்கு அந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட உலகளாவிய கண்ணோட்டத்தில் சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன?

நான் எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டு இலக்கியங்களைப் படிப்பேன். அந்த நாட்டு எழுத் தாளர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு எண்ணம் தோன்றி வலுப் பெற்று வந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தி லிருந்து தமிழ் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி தென்படுகிறது. அமோகமான படைப்புகள் தமிழில் வெளிவரத் தொடங்கியிருந்தன. நவீன தமிழ்ப் படைப்புகளுடன் வேற்று நாட்டு இலக்கியங்களை ஒப்பிடும்போது எங்கள் இலக்கியத்தின் தரம் சமமாகவே இருக்கிறது. இன்னும் பார்த்தால் மேலானது என்று கூடச் சொல்லலாம்.

சு.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ்.பொ. போன்றவர்களுடைய படைப்புகள் எல்லாம் உலகத் தரமானவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் நாவல்களை மொழிபெயர்த்தால் அவை உலக நாடுகளில் பெரிய அலையை கிளப்பும். எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் இன்னொரு சிறந்த படைப்பு.

தமிழின் மறுமலர்ச்சிக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று புலம்பெயர்ந்த தமிழர்கள். இரண்டு, தமிழ் கணிமை வளர்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்கள் நிறையப் படிக்கிறார்கள். அத்துடன் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள். சமீபத்தில் கனடாவில் நாள் கூலிக்கு வேலை செய்யும் ஒரு தமிழர் தன் சம்பளத்தில் 10 சதவீதம் புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவழிப்பதாகச் சொன்னார். இரண்டாவது, தமிழ் கணினிப் புரட்சி. பல எழுத்தாளர்கள் கணினியில் நேராக எழுதத் தொடங்கிவிட்டார்கள். அது எவ்வளவு எளிது. வலைப்பூக்கள் வந்து நிறையப்பேர் எழுதினார்கள். நிறைய எழுதினால் நிறையத் தேறும். இன்று எழுதும் பல புதிய எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் உருவாகியவர்கள்தான்.

இன்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் சிறந்த இடத்தில் இருப்பவர் 31 வயதான சிமமண்டா என்ற பெண். சென்ற மாதம் இவருடைய Half of a yellow Sun புத்தகத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்திருக்கிறது. நம்பமுடியாத பெரிய தொகை, 500,000 டொலர்கள். நாவல் அருமையான நாவல். ஆனால் இவருடைய நாவலிலும் பார்க்கச் சிறந்த நாலு தமிழ் நாவல்களையாவது என்னால் சொல்ல முடியும். ஆனால் யாரும் அவற்றைத் தேர்ந்து பரிசு கொடுப்பதில்லை. காரணம் அப்படி ஒன்று இருப்பதே தெரியாது.

இதைத்தான் நான் திருப்பித் திருப்பிச் சொல்லியும் எழுதியும் வருகிறேன். தமிழின் இன்றைய அவசரத் தேவை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள். உலக இலக்கியத் தரத்தில் மேலான படைப்புகள் தமிழில் இருக்கின்றன. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ப.சிங்காரம், அசோகமித்திரன், ஜெயமோகன், பிரமிள், அம்பை, மு.தளையசிங்கம், சல்மா என நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்லலாம். அவை வெளியுலகத்துக்குத் தெரிய வருவதில்லை. காரணம், அவற்றை மொழிபெயர்க்க ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்தவர்கள் முன்வராததுதான்.

போருக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இரு பெரும் அணிகளாக இன்று தமிழகம் பிரிந்து நிற்கிறது. போரில் இரண்டு பக்கத்தினரும் வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் விடுவதாயில்லை. இரு தரப்பும் திறந்த மனத்துடன் சமாதான உடன்படிக்கைக்கு வந்தால்தான் அமைதி சாத்தியம் என்ற யதார்த்தமும் தமிழ் மக்களுக்குப் புரிந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஈழத்தில் அமைதி நிலவ என்ன மாறுதல் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

1995-ம் ஆண்டு கனடாவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கியூபெக் மாகாணம் தனி நாடாகப் பிரிவதற்கு ஒரு வாக்கெடுப்பு மிக அமைதியான முறையில் நடந்தது. கனடா முழுவதும், ஏன் உலகமே அதை அவதானித்தது. முடிவில் கியூபெக் மக்கள் 51, 49 விகிதத்தில் பிரிவினைக்கு எதிராக வாக்களித்து தொடர்ந்து கனடாவின் ஓர் அங்கமாக வாழ்வதற்குத் தீர்மானித்தார்கள். ஒரு மயிரிழையில் கனடா பிரிந்து இரண்டு நாடாவது தடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1980-ல் கூட அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடந்தது.

1962-ல் எத்தியோப்பியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எரித்திரிய பிரதேச மக்கள் 31 வருடங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இறுதியில் 1993-ல் ஐ.நா.சபை கண்காணிப்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற எரித்திரியா, எத்தியோப்பியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்து ஐ.நா. சபையில் உடனே ஓர் உறுப்பினராகவும் சேர்ந்தது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் கொசோவோ (20 லட்சம் மக்கள் கொண்ட அல்பேனிய மொழி பேசும் பிரதேசம்) சேர்பியாவில் இருந்து தனியாகப் பிரிந்துபோய் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. அதை 52 உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமான, 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட, ஹவாய் தீவை எடுத்துக்கொள்வோம். இது அமெரிக்காவில் இருந்து 1600 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே ஹவாயும் ஆங்கிலமும் அரச மொழிகள். ஒரு பேச்சுக்கு அவர்கள் தனி நாடு கேட்டால் என்ன நடக்கும்? கனடாவில் நடந்ததுபோல ஒரு நாகரிகமான வாக்கெடுப்பு நடக்கலாம். ஆனால் தனி நாடு கேட்கும் அளவுக்கு அவர்கள் உரிமைகள் மறுக்கப்படவில்லை. அவர்களுக்கு நிறைந்த சம உரிமை கிடைக்கிறது ஆகையால் தனிநாடு என்ற கோரிக்கையை யாருமே விரும்பமாட்டார்கள்.

உலகத்தில் இரண்டாயிருந்த நாடுகள் ஒன்றாக இணைவதும் ஒன்றாயிருந்த நாடுகள் பிரிவதும் நடந்துகொண்டே இருக்கிறது. மத ரீதியில் பிரிந்தது பாகிஸ்தான். மொழி ரீதியில் பிறந்தது பங்களாதேஷ். 1948-ல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக மொகமட் அலி ஜின்னா பேசியபோது உருது மொழியை அரச கரும மொழியாக பிரகடனம் செய்தார். அன்று அவர் உருது மொழியையும் வங்காள மொழியையும் அரச மொழிகளாக அறிவித்து சம உரிமை வழங்கி இருந்தால் இன்று பங்களாதேஷ் பிரிந்திருக்காது என்று சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சிறுபான்மை உள்ள ஜனநாயக நாட்டில் சம உரிமைகளுடனான கூட்டாட்சி இருக்கலாம். அல்லது தனிநாடு வழங்கலாம். கூட்டாட்சி என்றால் சிறுபான்மையினரின் உரிமைகள் அந்த நாட்டு அரசியல் சட்டத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதுமாத்திரம் போதாது. ஒரு மூன்றாவது நாடோ (பிராந்திய வல்லரசான இந்தியாவாக அது இருந்தால் நல்லது) ஐ.நா. சபையோ சிறுபான்மையினரின் நலனுக்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். ஆனால் சமீபத்தில், கனடாவில் வெளியாகும் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை இராணுவத் தளபதி கொடுத்த பேட்டி ஒன்றில் `இலங்கை சிங்களவருடைய தேசம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்' என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் சிறுபான்மையினரின் உரிமை காக்கப்படும் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்?

இந்தியாவின் பிராந்தியப் பலம் இலங்கையில் அமைதி நிலவுவதற்கு உதவியாக இருக்கும். முதலில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தை. இரு தரப்பாலும் முடியும். மக்கள் பின்னுக்கு நிற்கிறார்கள். இந்தியாவும் நிற்கவேண்டும்.

அமெரிக்க அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேசும்போது constitutional democracy என்று சொல்வார்கள். அதன் தாத்பரியம் பெரும்பான்மையினரின் அரசியல் சட்டம் அல்ல; சிறுபான்மையரின் அமெரிக்கரான பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிங்கள பௌத்தரே ஜனாதிபதியாக முடியும் என்று அரசியல் சட்டத்தில் எழுதிவைத்திருக்கும் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் என்பது எவ்வளவு சாத்தியமானது?

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் எழுதப் பேசத் தெரியாத நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறதே. இதைப்பற்றி?

ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். அவர் மணம்முடித்து பல வருடம் ஆகியும் அவருக்குப் பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும், அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார். `உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா? அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?' மிருகண்டு முனிவர் யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டினார். மீதி உங்களுக்குத் தெரியும்.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நான் அவர்களைப் பற்றியே பேசுகிறேன். மீதிப் பேருக்கும் இது பொருந்தும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். ஆங்கில மொழியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொற்கள் எவை? சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களுக்கு இந்த ஆராய்ச்சி தேவைப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

12 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் கால்வாசியாகும்.

100 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் அரைவாசியாகும்.

300 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் முக்கால்வாசியாகும்.

இதே மாதிரி தமிழிலும் 500, 600 தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தெரிந்தால் ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்கவும் எழுதவும் முடியும். ஆயிரம் வார்த்தைகள் தெரிந்தால் வீரகேசரியையும், தினத்தந்தியையும் படிக்கலாம். ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம். தமிழ் படிப்பது என்பது இப்போது கம்ப்யூட்டரில் வெகு இலகுவாகிவிட்டது. ஐந்து வயதில் `அணில், ஆடு, இலை, ஈ' என்று எழுதிப் படிக்கத் தேவையில்லை. ஒரு 15 வயது மாணவர், இரண்டு வாரப் பயிற்சியில் 500 வார்த்தைகளைக் கற்றுவிடலாம்.

வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. கடந்த மாநாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50-60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள். நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவு செய்து கட்டணம் கட்டியாக வேண்டும். அப்படியிருந்தும் பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ்ப் படிக்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை.

புலம் பெயர் தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது ஆயிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில் இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள். இந்தச் சமயத்தில் புலம் பெயர் தமிழர்கள் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி உண்டு. `உங்களுக்கு என்ன வேண்டும். நாலாம் வகுப்பு தமிழில் எழுதப் படிக்கத் தெரியும் பத்து லட்சம் பேரா அல்லது தமிழில் உலகத் தரத்துக்கு உயர்ந்த இலக்கியம் படைக்கும் 10,000 பேரா?'

மிருகண்டு முனிவர் தன்னுடைய முடிவைச் சொல்ல ஒரு வித தயக்கமும் காட்டவில்லை.

ஓர் இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும் என்ற கருத்தை ஒரு கட்டுரையில் தாங்கள் சொல்லியிருந்தீர்கள். (அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு கனடிய வாழ் சிகையலங்காரர் சொல்வதாகிய கட்டுரை) தமிழ் மொழி அழித்தல் இலங்கையில் எப்படி எந்தெந்த வகைகளில் நடத்தப்படுகிறது?

நான் என்னுடைய கட்டுரையில் எழுதியது ஒரு முடி திருத்துபவர் சொன்னதைத்தான். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராபிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். ஆனால் அராபிக் மொழிக்கு நாடு இல்லாததால் அது அழிவை நோக்கி நகர்கிறது.

ஒரு தமிழ் எழுத்தாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். `ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.'

மாநிலம் வேறு, நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள மால்ட்டா என்ற சின்னஞ்சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ்.

அந்த மொழி அழியுமா? அழியாது. அவர்களுடைய மொழி அழிய வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நாடு அழிய வேண்டும். ஒரு மாநிலம் செய்ய முடியாததை நாடு செய்துவிடும். தமிழைச் செம்மொழியாக்க நாங்கள் எத்தனை வருடங்கள் பாடுபடவேண்டியிருந்தது. ஒரு நாடாக இருந்திருந்தால் இதை எளிதாகச் செய்து முடித்திருக்கலாம். ஒரு காலத்தில் உலகிலே 50,000க்கும் மேலே மொழிகள் இருந்தன. உலகம் சுருங்கச் சுருங்க மொழிகளின் எண்ணிக்கையும் சுருங்கிக்கொண்டே வந்தது. இப்பொழுது 7000 மொழிகள் இருக்கின்றன. அவையும் வரவரக் குறைந்து கொண்டே வரும்..

உலகத்திலே அதிகம் பேசப்படும் 12 மொழிகளை வரிசைப்படுத்தினால் அது இப்படி இருக்கும்.

மண்டரின், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், ரஷ்யன், வங்காளம், போர்ச்சுகீயம், அராபி, ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான், உருது. இவை எல்லாவற்றுக்கும் தேசம் உண்டு. இதற்குப் பின்னே வரும் தெலுங்கு, மாராத்தி, தமிழ் போன்ற மொழிகளுக்கு தேசம் இல்லை. உலகத்தின் அரைவாசி சனத்தொகை இந்த 12 மொழிகளைப் பேசுகிறது. உலகம் சுருங்கச் சுருங்க சின்ன மொழிகளை பெரிய மொழிகள் விழுங்கும். ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும். இன்று 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியை விட மூன்று லட்சம் மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியின் எதிர்காலம் பிரகாசமானது. ஏனென்றால் அதற்கு ஒரு நாடு உண்டு. யேசு பேசிய மொழியான அராமிக் இன்று அழிந்து போகிறதென்றால் அதற்குக் காரணம் அராமிக் மொழிக்கு ஒரு நாடு இல்லை.

ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னிடம் சொன்னார், `பிரிட்டிஷ் அரசாங்கம் வருடம் தோறும் எத்தனையோ மில்லியன் பவுண்டுகளை சேக்ஸ்பியரைப் பரப்ப செலவு செய்கிறது' என்று. ஒரு நாடு இருப்பதனால்தானே அவர்களால் அப்படிச் செய்யமுடிகிறது.

ஐ.நா. சபையில் ஒரு அதிகாரியாக பல நாடுகளில் பணியாற்றியவர் நீங்கள். எத்தனையோ நாடுகளில் ஜனநாயக சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் வலிமை மிகுந்த ஐ.நா.சபையினால் கையைப் பிசைந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையைக் காண்கிறோம். ஐ.நா.சபையும் சுதந்திரமின்றி இருக்கிறதா?

1945-ல் 50 உலக நாடுகள் ஒன்றுகூடி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கின. ஐக்கிய நாடுகளின் எண்ணிக்கை வரவர அதிகரித்தாலும் சுவிட்சர்லாந்து மட்டும் சபையில் சேரவில்லை. 2001 இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தும் ஐ.நா.வின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேர்ந்தது. இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான பணிகளில் ஒன்று அங்கத்துவ நாடுகளுக்கிடையில் தீர்மானங்களை நிறைவேற்ற மட்டுமே முடியும், அதனால் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதுதான் கையைப் பிசைந்துகொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கிறது.

ஐ.நா. சபையின் சாதனைகளை குறைவாக மதிப்பிட முடியாது. 1948-ல் மனித உரிமை பிரகடனத்தைக் கொண்டு வந்து உலகமெங்கனும் மனித உரிமையின் முக்கியத்துவத்தை அதனால் நிலைநாட்ட முடிந்தது. இது பெரிய சாதனை. உலக நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்களில் அகதிகளான கோடிக்கணக்கான மக்களுக்கு வதிவிடமும், உணவும் சிலசமயங்களில் நாடும் அளித்து உதவி செய்தது UNHCR அமைப்பு. அதன் சேவைக்காக அதற்கு இரண்டு தடவை சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. UNICEF, ILOபோன்ற அமைப்புகளுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. உலகத்திலிருந்து பெரிய அம்மை நோய் ஒரேயடியாக ஒழிந்துவிட்டது என்று உலக சுகாதார மையம் (கீபிளி) 1980-ல் அறிவித்தது. இந்த மையம் இல்லாவிட்டால் இது ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது.

1988-ல் உலக சமாதானத்துக்காகப் போராடிய 10,000 ஐ.நா. சமாதான வீரர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போரில் 700 வீரர்கள் சமாதானத்தை நிறுவுவதற்காக மாண்டார்கள். இவர்கள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், சைப்பிரஸ், லெபனான் போன்ற நாடுகளை போரிலிருந்து காப்பாற்றினார்கள். இன்னும் முக்கியமாக கம்போடிய, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முறையாக தேர்தல் நடப்பதற்கு உதவியாக இருந்து, புது நாடு உருவாவதற்கும் காரணமாக அமைந்தது ஐ.நா. சபைதான். 1993-ல் எரித்திரியா சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டதற்கு ஐ.நா. சபையின் முயற்சி முக்கியமானது.

இப்பொழுது உள்ள உலக நாடுகளை அடக்கிய ஆகப்பெரிய சபை ஐ.நா.சபைதான். இந்தச் சபையின் தோல்விகளைப் பட்டியலிட்டு அதைக் கலைத்துவிட வேண்டும் என்று சில வருடங்களாக குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. இதனிலும் சிறந்த செயல்திறன் கொண்ட ஓர் அமைப்பு உருவாகும் வரை ஐ.நா.சபை தொடரத்தான் செய்யும்.

உங்களுடைய பால்ய காலமும், இளமைக்காலமும் இலங்கையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த இனிய நிகழ்வுகளை பல படைப்புகளில் பதிவு செய்திருக்கிறீர்கள். அந்த நாட்களை மீண்டும் மீட்டெடுக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? மறுபடி உங்கள் நினைவுகள் உருவான இடங்களைக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டதா? அப்போ உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்ன?

என்னுடைய பால்ய, இளமைக்கால வாழ்க்கையை நான் ஒரு நாவலாக பதிவு செய்திருக்கிறேன். சுயசரிதைத் தன்மையான அந்த நாவலில் உண்மையும், கற்பனையும் கலந்திருக்கும். அதனால்தான் தலைப்பாக `உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்று பெயர் வைத்திருக்கிறேன். `உயிர்மை' பதிப்பக வெளியீடாக டிசம்பர் மாதம் வருகிறது.

போர் தொடங்கிய பிறகு என் பிறந்த ஊருக்குப் போய்வரும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. சமீபத்தில் எங்கள் அண்ணார் இறந்துபோனார். அவருக்கு இரு சகோதரிகள், நாலு சகோதரர்கள். நான் இன்றைக்கு இந்நிலையில் இருப்பதற்கு அவரே காரணம். அவருடைய மரணச்சடங்கில் ஒரு சகோதரரும் கலந்து கொள்ளவில்லை. அப்போது அங்கே ஊரடங்குச் சட்டம் இருந்தது. மருந்துகள் இல்லாத, கூரையில் ஓட்டை விழுந்த ஒரு சின்ன ஆஸ்பத்திரியில் அவர் தனியாகக் கிடந்து உயிர் நீத்தார்.

என் மீதி வாழ்நாளில் நான் பிறந்த பூமியை திரும்பவும் பார்க்கக் கிடைக்காது என்றே நினைக்கிறேன். அப்படி கிடைத்தால் நான் பார்க்க விரும்புவது மரங்களை. எங்கள் வீட்டு வளவில் தென்னை, பனை, வேம்பு, இலுப்பை, பலா, மா, நாவல், கொய்யா, இலந்தை, மாதுளை, எலுமிச்சை என்று நிறைய மரங்கள் இருந்தன. 20 வகையான மாம்பழங்கள். மிகச் சின்ன வயதிலேயே ஒரு பழத்தைச் சாப்பிடும்போது அது எந்த மரத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிடுவேன்.

கிணறுகளைப் பார்க்க விருப்பம். யாழ்ப்பாணத்தில் ஆறே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிணறு இருக்கும். எங்கள் வீட்டுக்குக் கிட்ட நடு வீதியில் ஒரு கிணறு இருந்தது. அதை பொதுவாக ஐந்து, ஆறு குடும்பங்கள் பாவித்தன. அடிக்கடி யாராவது தவறி விழுந்து சாவார்கள். மாடு, நாய் விழுந்து செத்துப்போகும். நாங்கள் சிறுவர்கள் எங்கே தவறி அதற்குள் விழுந்துவிவோமோ என்று அம்மா பயந்தபடியே இருப்பார்.

இன்னொன்று கொக்குவில் ரயில் ஸ்டேஷன். என்னுடைய ஐயா சிறுவனாக இருந்தபோது ரயில் நிலையம் அங்கே வந்தது. என்னுடைய சிறு வயதில் ரயில் நிலையம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் கிராமத்து மணிக்கூடு அதுதான். விருந்தினர்கள் ரயிலில் வந்து இறங்குவார்கள், நாங்கள் போய் அழைத்து வருவோம். பரிசுகள் கிடைக்கும். ரயில் கூவும் சத்தத்துக்காக காத்திருப்போம்.

இன்று ஸ்டேஷன், தண்டவாளம் சிலிப்பர் கட்டைகள் எல்லாமே அழிந்துவிட்டன. அது இருந்த இடமே இல்லை. குண்டு விழுந்து நடுவீதிக் கிணறும் முற்றிலுமாக அழிந்து மூடப்பட்டுவிட்டது என்று கேள்விப்படுகிறேன். ஒரு அழிவு துக்கமானது; மற்ற சந்தோசமானது.

பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது?

சில நாட்களுக்கு முன்னர் நான் ஒரு புலம் பெயர்ந்த தமிழ் இளைஞரைச் சந்தித்தேன். இவருக்கு முப்பது வயதிருக்கும். உலகத்துப் பாரத்தை எல்லாம் சுமப்பதுபோல மற்றவர்கள் தோற்றமளிப்பார்கள். இவர் உற்சாகமாக இருந்தார். நூற்றுக்கணக்கான புலம் பெயர் கதைகளைக் கேட்டிருக்கிறேன். இவருடையது வித்தியாசமானது. இலங்கையில் இவரை மூன்று தரம் பிடித்து சிறையில் அடைத்தார்கள். பாங்கொக்கில் சிறையில் இருந்திருக்கிறார். ரஷ்யாவில் பனிப்புதையலில் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். சிங்கப்பூரில் இவரைக் குப்புறக் கிடக்க வைத்து ஒன்பது பிரம்படிகள் கொடுத்திருக்கிறார்கள். ஒன்பது நாள் விசா கெடுவை மீறித் தங்கியதற்காக கழுத்திலே மரப்பூட்டைப் போட்டுவிட்டு ஒரு தடியான மனிதன் பிரம்பினால் அடித்தான். அடித்து முடிந்த பிறகு அதே இடத்தில் ஒரு சீனக் கிழவி மயிலிறகால் முதுகில் எண்ணெய் பூசிவிட்டாள். இருவருக்கும் சிங்கப்பூர் அரசு சம்பளம் கொடுத்தது. அமெரிக்கா போய்ச் சேர்ந்தபோது அவருடைய கள்ளப் பாஸ்போர்ட்டை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆறுமாதம் சிறையில் வைத்தார்கள். கடைசியில் மூன்று வருட பயணத்துக்குப் பிறகு கனடாவுக்கு வந்து சேர்ந்தார்.

அகதியாக இருந்தபோது 17 கம்பனிகளில் வேலைக்கு நேர்முகத் தேர்விற்குப் போனார். எல்லோரும் அவரிடம் `உங்கள் கனடிய அனுபவம் என்ன? உங்கள் திறமை என்ன?' என்றே கேள்வி கேட்டார்கள். 18வது இடத்தில் அவர் இப்படி பதில் சொன்னார். `ஐயா, எனக்கு கனடா அனுபவம் இல்லை, ஆனால் என்னிடம் நிறைய உலக அனுபவம் உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வது. இன்று வரைக்கும் உயிர் தப்பி நான் வாழ்கிறேன் என்றால் அது என்னுடைய திறமை.' அப்போதும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்பொழுது அவர் கனரக வாகனம் ஓட்டுகிறார். அவருடைய வருமானம் சராசரி கனடியரின் வருமானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகம்.

இது ஓர் உதாரணம்தான். கனடாவில் வாய் வேலை செய்ய வேண்டும். அல்லது கை வேலை செய்ய வேண்டும் அல்லது மூளை வேலை செய்ய வேண்டும். நீங்கள் உயர்ந்துவிடலாம். மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு புது நாடு கிடைத்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒருவரும் பிறந்த நாட்டை மறப்பதில்லை. தங்கள் சொந்தங்களுக்கு தொடர்ந்து உதவி செய்கிறார்கள். அவர்களையும் வரவழைக்கிறார்கள். கடுமையாகப் படித்து முன்னேறுகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்குக் கைகொடுக்கிறார்கள்.

இன்றைய ஈழத் தமிழர்களின் அவலங்களைக் கண்டு பெரும் எழுச்சியாகத் திரண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பல வேற்றின தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து தொடர் உண்ணாவிரதம், கவனயீர்ப்பு என்று பல நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். போரை நிறுத்த இலங்கை அரசை இணங்கச் செய்வதற்கு கனடிய அரசு தனது பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்று ஒருமித்து அழுத்தம் கொடுக்கிறார்கள்.

ஈழத்தில் நிகழும் போர் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தங்களின் திறந்த விமர்சனத்தை வைக்கக் கூடிய ஜனநாயக சுதந்திரம் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இன்று இருக்கிறதா?

ஆரம்பத்திலிருந்தே ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் என்பன கேள்விக்குறியாகவே இலங்கையில் இருந்தன. இவை படிப்படியா இறுக்கப்பட்டு 2005-ல் மகிந்த ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம் இருக்கட்டும், போர் நடக்கும் பிரதேசங்களில் ஊடகவியலாளர்களே இல்லை. தொண்டு நிறுவனங்களும் இல்லை. ஐ.நா. குழுக்களும் இல்லை. நிலைமை எப்படி இருக்கும் என்று ஊகித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கொழும்பிலே பயங்கரவாத விசாரணைப் பிரிவு இயங்குகிறது என்று சொன்னேன். அவர்கள் யாரையும் பிடித்துப் போகலாம். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் தடுத்து வைக்கலாம். அங்கே போனவர்கள் திரும்பி வருவது மிக அரிதாகவே நடக்கும். 2006-ம் ஆண்டு பரமேஸ்வரி முனுசாமி என்ற ஊடகவியலாளர் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் உலகப் பிரசித்தி பெற்ற தாரகி சிவராம் என்ற ஊடகவியலாளருக்கு நடந்தது என்னவென்று எல்லோருக்கும் தெரியும். கொழும்பு காவல் நிலையம் ஒன்றின் முன்பாக அவர் நம்பர் இல்லாத வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டார். இலங்கைப் பாராளுமன்றம் அருகிலுள்ள புதருக்குள் இவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தலையிலே துப்பாக்கியால் சுடப்பட்டு மரணித்திருந்தார். உலகமெங்கும் இந்தக் கொலைக்கு கண்டனம் எழும்பியது. அமெரிக்க எழுத்தாளர் பெயர் இல்லை என்ற அமெரிக்கர் இவருடைய வாழ்க்கையை `வாழ்வும் மரணமும்' என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கிறார்.

இவருடைய சாவுக்குப் பிறகு பிடிபடும் பத்திரிகைக்காரர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் `நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் உங்களுக்கு தாரகி சிவராமுக்கு நடந்ததுதான் நடக்கும்' என்று வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறார்கள் என்று சமீபத்தில் பிடிபட்ட இன்னொருத்தர் கூறுகிறார்.

ஜே.எஸ். திஸ்ஸநாயகம் என்ற ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இவர் தன் மனுவில் `அடிப்படை மனித உரிமை மீறல்' என்று அரசை குற்றம் சாட்டியிருக்கிறார். தன்னை முறையற்ற விதத்தில் போலீஸார் நடத்துவதாகவும், தன்னை விடுவிக்கக் கோரியும் விண்ணப்பித்திருக்கிறார்.இன்றுவரை, எட்டு மாதங்கள் கழிந்த பிறகும், அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் ஆயுதம் தூக்கவில்லை. அவர்கள் தூக்கிய ஆயுதம் பேனாதான். இவர்களுடைய எழுத்துக்களை அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதிலே ஒரு சிறப்பு இருக்கிறது. மகிந்த ராஜபக்ஷே 23 வயதில் பாராளுமன்ற உறுப்பினரானார். 35 வயதில் சட்டம் பயின்று பாஸ் பண்ணினார். அவர் பிரதானமாக மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் வழக்குகளையே எடுத்தார். இன்று அவர் படித்த மனித உரிமை மீறல் சட்டங்களிலுள்ள நுணுக்கங்கள் அத்தனையையும் மனித உரிமை மீறல்களை மூடுவதற்காகவே பயன்படுத்துகிறார்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் பொதுவாக நிறைந்திருக்கும் சாதியக் கட்டுப்பாடுகள், சாதி வெறி, தீண்டாமை, சாதிச் சுரண்டல் போன்றவை ஈழத்திலும் உண்டு என்று சொல்லப்படுகிறதே. இதைப் பற்றிய உங்கள் எண்ணம்?

ஈழத்து சாதி அமைப்பு என்பது இந்தியாவில் இருப்பதுபோல அல்ல, முற்றிலும் மாறுபட்டது. பிராமண மேலாதிக்க நிலை இல்லை. சாதியில் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டபோதும் அதிகாரம் வெள்ளாள சமூகத்தினரிடையேயே கிடந்தது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் வரலாற்றின்படி இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட பிரபுக்கள் தங்கள் அடிமைக் குடிகளுடன் வந்து குடியேறி தங்களை ஸ்தாபித்துக் கொண்டனர். இந்தப் பிரபுக்கள்தான் வெள்ளாளர். அரசியல் அதிகாரத்தை ஆரம்பத்திலிருந்தே கைப்பற்றியிருந்தனர்.

ஒரு குறைந்த சாதிக்காரனுக்கு ஒரு பிள்ளை பிறந்தால் அவன் அதைப் பதிவு செய்ய கச்சேரிக்குப் போவான். அங்கே பெயரைப் பதிவு செய்ய ஒரு வெள்ளாளர் இருப்பார். இவன் `கந்தப்பிள்ளை' என்று பெயர் கொடுத்தால் அவர் `கந்தன்' என்று பதிவில் எழுதுவார். இவன் `சுப்பிரமணியம்' என்று பெயர் கொடுத்தால் அவர் `சுப்பன்' என்று பதிவார். இப்படி சாதி அடையாளம் குழந்தை பிறந்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.

நான் ஆரம்பத்தில் படித்தது ராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்கூடத்தில். இது புதிதாகக் கட்டிய பள்ளிக்கூடம். இதன் தலைமையாசிரியர் காந்தி பக்தர். குறைந்த சாதிகளையும் பள்ளிக்கூடத்தில் அனுமதிக்க வேண்டும் என்றார். மேல்சாதியினர் எதிர்த்தனர். இவர் விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் வகுப்பின் கடைசியில் வாங்குபோட்டு அவர்களை உட்கார வைத்தார். எங்கள் வகுப்பில் அப்படி இரண்டு பேர் படித்தார்கள். அவர்களுடன் சேரக் கூடாது என்ற கட்டளை இருந்தது. அந்தக் காரணத்தினாலேயே நாங்கள் அவர்களை எங்கள் விளையாட்டுகளில் சேர்த்துக்கொள்ள போட்டி போடுவோம்.

உண்மையில் சாதி அதிகம் பாராட்டப்பட்டது திருமணங்களிலும் திருவிழாக்களிலும்தான். கோயில் திருவிழாக்களில் பஞ்சமர்கள் அமர்வதற்கென்று சதுரமாகக் கயிறு கட்டி அதற்குள்ளே உட்கார்த்திவிடுவார்கள். கே.டானியல் தன்னுடைய பஞ்சமர் நாவலில் இதை முழுமையாக விவரிப்பார். திருமணம் என்று வரும்போது விதிகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். இலங்கையிலிருந்து துரத்தப்பட்டு கனடாவுக்கு அகதியாக வந்தவர்கள் அங்கே வீட்டைத் துறந்து, பொருள்களைத் துறந்து, உறவுகளைத் துறந்து வந்தாலும் சாதியை மட்டும் துறக்காமல் தங்களுடன் கொண்டு வந்திருந்ததை சமீபத்தில் கண்டுபிடித்தேன்.

அவள் ஒரு பையனைக் காதலித்தாள். அவனும் ஈழத்தைச் சேர்ந்தவன்தான் என்றாலும் பெண்ணின் பெற்றோர்கள் எப்படியோ துருவி ஆராய்ந்து அவன் சாதி நுனியைப் பிடித்துவிட்டார்கள். மகளிடம் அவன் `அங்காலிப் பக்கம்' என்றார்கள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெற்றோரிடம் அவள் ஒரு கேள்வி கேட்டாள். `நான் ஒரு ஜமாய்க்கன் பையனையோ, போலந்து பையனையோ பிடித்திருந்தால் நீங்கள் சம்மதித்திருப்பீர்கள். சொந்த நாடு என்றபோது சாதியின் வேர்களைத் தேடி மறுக்கிறீர்கள்.' அவர்களிடத்தில் பதில் இல்லை. அந்தப் பெண் அவனையே மணம் முடித்தாள்.

மார்ட்டின் லூதர்கிங்கின் அஹிம்சைப் போராட்டத்தில் சம உரிமைச் சட்டம் அமெரிக்காவில் வந்தபோது பாராக் ஒபாமாவின் வயது நாலு. இன்று சரியாக 44 வருடங்கள் கழித்து அவரை அடுத்த ஜனாதிபதியாக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு 44 வருடங்களில் இப்படி மாற்றம் நிகழ முடியும் என்றால் மேலும் ஒரு 44 வருடத்தில் ஏன் விடுதலையும், சமத்துவமும், அன்பும் உலகில் நிறைந்திருக்க முடியாது.

தற்போது தமிழ்நாட்டில் அரசியல், சமூகம் மற்றும் திரைப்படத்துறை இவற்றில் எழுந்திருக்கும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவற்றினால் ஈழத்தமிழனுக்கு உண்மையிலேயே நன்மை ஏதேனும் விளையுமா? இவற்றைத் தவிர தமிழ்நாடு இலங்கைத் தமிழனுக்கு எந்த விதத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

இலங்கையில் சமீபத்தில் ஏதேனும் வெள்ளச் சேதம் ஏற்பட்டதா? அல்லது கொடிய புயல் வீசியதா? அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதா? அப்படி ஒன்றுமே இல்லை. ஓர் அரசு தன் மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. மூன்று லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உடுக்க உடை இல்லாமல், உணவு இல்லாமல், மரங்களின் கீழ் வாடுகிறார்கள். இலங்கை அரசிடம் பணம் இல்லையா? உணவு இல்லையா? மருந்து இல்லையா? கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் ராணுவத்துக்காக வருடா வருடம் செலவழிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிடம் உதவி கேட்கவில்லை. பின் எதற்காக இன்று இந்திய அரசாங்கம் 800 டன் உணவுப் பொருள்களை அனுப்பிவைக்கிறது? எதற்காக தமிழ்நாடு பணத்தை மக்களிடம் திரட்டுகிறது. இதை யாரிடம் கொடுக்கப் போகிறார்கள்? அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேருமா? பழ.நெடுமாறன் சேர்த்த உணவுப் பொருட்களும், மருந்துகளும் ஒரு வருடத்துக்கும் மேலாக இன்னமும் போய்ச் சேராமல் அழிந்துவிட்டனவே.

ஈழத்து மக்கள் குரல் இவர்கள் காதுகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் கேட்பது இதுதான்.

அ) உலக தொண்டு நிறுவனங்களை திரும்பவும் அனுமதியுங்கள். அவர்களிடம் உணவுப் பொதிகளையும் பணத்தையும் கொடுத்தால் அது உரியவர்களிடம் போய்ச் சேரும்.

ஆ)இந்திய மண்ணில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க வேண்டாம். இலங்கை ராணுவத்துக்கு போர் ஆயுதங்கள் கொடுக்க வேண்டாம். இலங்கைப் போர்க்களத்தில் இந்திய ராணுவத்தினர் பங்குபற்ற வேண்டாம். ஏழு கோடி தமிழ் சகோதரர்களை உள்ளடக்கிய இந்தியா, ஈழத்துத் தமிழர்களை அழிக்க நடக்கும் போரில் உதவி செய்யக் கூடாது.
இ) இலங்கை அரசிடம் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் வழி என்று சொல்லி வரும் இந்திய அரசு தொடர்ந்து படை ஆயுதங்களும், ராணுவ, ஆள் உதவியும் வழங்குவதுதான் ஈழமக்களால் தாங்க முடியாததாக இருக்கிறது. தமிழகத்தில் இப்போது ஏற்பட்ட எழுச்சியும், ஒருமித்த ஆதரவும் ஈழமக்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் பெரும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வேண்டும்தான். ஆனால் அது வந்து சேராது என்பது அவர்களுக்குத் தெரியும். முன்பு ஒருமுறை இந்தியா அனுப்பிய உணவு, மக்கள் இறந்தபிறகுதான் அங்கு போய்ச் சேர்ந்தது. ஈழ மக்கள் அதை `வாய்க்கரிசிக்கு வந்த அரிசி' என்றுதான் இப்பவும் குறிப்பிடுவார்கள். சமீபத்தில் ஓர் ஊடகவியலாளர் இப்படி வர்ணித்தார்.' எங்களுக்கு உணவு எதற்கு? ஆரோக்கியமாகச் சாவதற்கா? நாங்கள் கேட்பது சாவை நிறுத்த, பசியை நிறுத்த அல்ல.' போர் நிறுத்தச் செய்திக்காகவே ஈழமக்கள் ஏங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.

இலங்கை ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஓர் அதிகாரி என்னிடம் ஒருமுறை சொன்னார். `விமானிகள் குண்டுகளை எடுத்துக்கொண்டு இலக்கு நோக்கிப் புறப்படுவார்கள். சிலவேளை இலக்கு கிடைக்காமல் திரும்ப நேரிடும். குண்டுகளுடன் திரும்பி வந்தால் மற்ற விமானிகள் கேலி செய்வார்கள். அதற்குப் பயந்து வழியிலே எங்கேயாவது தள்ளிவிடுவார்கள். இப்படிச் சாவு தினம் நடக்கிறது.'

800 டன் உணவும் 40 கோடி ரூபாயும் சாவை நிறுத்தப் போவதில்லை.

சந்திப்பு: கிருஷ்ணா டாவின்ஸி

நன்றி: தீராந்தி (டிசம்பர், 2008)

Wednesday, December 03, 2008

தமிழுணர்வு பற்றிய மார்க்சிய நிலைபாடு

-தமிழவன்

ஈழப்பிரச்சனையைப் பொறுத்தவரையில் சி.பி.எம்-மும் சி.பி.ஐ-யும் வேறுவேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன என்று செய்தித் தாளில் படித்தேன்.

ஆச்சரியமாக இருந்தது.

தேசிய இனப்பிரச்சனை பற்றி மிக அதிகமாகச் சிந்தித்துள்ளவர்கள் மார்க்ஸியர்கள். ஸ்டாலின், லெனின், மார்க்ஸ், காட்ஸ்கி, ரோஸா லக்ஸம்பர்க் என்று இப்படிப்பவர்.

ஆனால் தமிழகத்தில் மார்க்ஸியத்தின் பெயரால் செயல்படுகிற இரண்டு கட்சிகள் இரண்டு நிலைப்பாடுகளை எடுக்கின்றன.

இந்த இரண்டு கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இரு அணியாகப் பிரிகிறார்கள். இரு அணியினரும் தமிழர்கள்தாம். என்றாலும் கட்சியின் மத்தியக் கமிட்டிகள் கூறுவது போல்தான் நிலைப்பாடு எடுக்க முடியும். அந்த மத்தியக் கமிட்டியில் பலமாநிலங்களையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குரல்தான் ஓங்கி ஒலிக்கும். அதில் பொலிட்பீரோ உறுப்பினர்கள், பழைய முதலமைச்சர்கள், பெரிய பெரிய படிப்பாளிகள், சட்ட நிபுணர்கள் இருப்பார்கள். அவர்களைத் திருப்தி படுத்த ஒரு வரதராஜனுக்கு முடியுமா?

ஆக சி.பி.எம்மின் தமிழர்கள் பற்றிய நிலைபாட்டைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள்.

மார்க்சியம் பற்றித் தெரிந்தவர்கள் மொழி, இனம், பிராந்திய உணர்வு அற்ற நியாய உணர்வு மட்டும் கொண்டவர்கள் மார்க்ஸியவாதிகள் என்பார்கள். இதனையும் தாண்டி இன்னொரு விஷயமும் சொல்வார்கள். மார்க்சியக் கருத்தால் வழி நடத்தப்படுகிறவர்கள் மார்க்சீயவாதிகள் என்பார்கள்.

இங்கு இரண்டு கட்சிகளுக்கும் இருவித மார்க்சீயம் இருக்கமுடியாது. மார்க்சியம் என்பது ஒன்றே தான்.

அப்படியென்றால் சி.பி.எம்மின் நிலைப்பாடு அனைத்திந்தியா என்ற கருத்தின்பக்கம் சாய்ந்துள்ளது. சி.பி.ஐ-யின் கருத்து பிராந்தியங்கள் தான் முக்கியம் என்ற கருத்தின் பக்கம் சாய்ந்துள்ளது.

அனைத்திந்தியா என்ற கருத்தாக்கம் பெரும்பாலும் பிரிட்டிஷார் வந்த பிறகு உருவானது. அதுவும் 1947-ன் பிறகு உருவானது. பாக்கிஸ்தான், இலங்கை, பர்மா இவைகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்குள் இருந்தவை தாம். பாகிஸ்தான் தனி தேசம் என்று ஏன் உருவானது? இலங்கை ஏன் தனித்தே சமானது? (பணிக்கர் போன்றவர்கள் இலங்கையை இந்தியாவுடன் சேர்ப்பதில் தவறில்லை என்று பிரிட்டிஷாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.)

அதன் பிறகு திராவிடஸ்தான், தமிழ்நாடு போன்றன பிரிய ஆசைப்பட்டன. காஷ்மீர் பிரச்சனை தொடர்கிறது. வங்காளதேசம் இடையில் பிரிந்தது. அஸ்ஸாம், பஞ்சாப் பிரச்சனைகள் தோன்றின.

முதலில் இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியமாகத் தான் இருந்தது. பின்பு பிரிவினைத் தடைச் சட்டம் வந்தது.

சோவியத் யூனியன் பல நாடுகளாகப் பிரிந்து போனது. யூகோஸ்லேவேக்கியா பலநாடுகளாகப் பிரிந்து போனது.

இதுபோல் முதல் உலகப் போரின் சந்தர்ப்பத்தில் இருந்த தேசங்கள் அல்ல இரண்டாம் உலகப் போர் நடந்த சந்தர்ப்பத்தில் இருந்தவை. நாடுகள் தோன்றுவதும் மறைவதும் சகஜம்.

உலகத் தொழிலாளர்கள் உலகத்தைத் தீர்மானிக்கிறார்கள் என்ற தத்துவத்தைப் பின்பற்றுகிறவர்கள் கம்யுனிஸ்டுகள். குறிப்பிட்ட நாடுகள் என்று பெரிதாய் கவலைப்பட மாட்டார்கள் அவர்கள். உலகமே அவர்களுக்கு ஒன்று.

என்றாலும் லெனின், மார்க்ஸ் போன்ற எல்லோருமே சுய உரிமையுடன் பிரிந்து போக மக்கள் குழுக்களுக்கு உள்ள உரிமையை மறுக்கவில்லை. இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்துபோக ஆசைப்பட்டால் போகட்டும் என்றுதான் மார்க்ஸ் சொன்னார்.

அதுபோல் பிரிந்துபோனால் அப்படி ஒன்றும் நல்ல வாழ்க்கை கிடைக்காது என்று கருதுகிறவர்கள் மீண்டும் கூட விரும்புகிறார்கள். ஐரோப்பிய யூனியனை அப்படித்தான் பார்க்க வேண்டும். சில அம்சங்களில் தனித்தனியாக வாழ மனிதக் குழுக்கள் விரும்புகின்றன. வேறு சில அம்சங்களைப் பொறுத்தவரையில் சேர்ந்து, இன்னொரு மொழி பேசுபவனோடு, இன்னொரு பிராந்தியத்திலிருந்து வந்தவனோடு ஒன்றிணைந்து வாழ சில குழுக்கள் விரும்புகின்றன. சேர்ந்து வாழ்வதும் பிரிந்து போவதும், வரலாறு, பொருளாதாரம் - எல்லாவற்றிலும் முக்கியமாய் கலாச்சாரத் தேவையைப் பொறுத்தது.

தமிழ்க் கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் நீண்ட பாரம்பரியமும் மிகப் பெரும் இலக்கிய வரலாறும் தனிப் பண்பாட்டு, தத்துவக் கூறுகளும் அது கொண்டது. பல விஷயங்களில் தனிக் கூறுகளால் வரையறுக்கப்பட்ட மக்கள் கூட்டம்.

ஆனால் உலக மார்க்சியமும் இன்று மாறிவிட்டது. மார்க்சியம் என்றால் பொருளாதாரம் என்ற காலகட்டம் மாறிவிட்டது. தொழிலாளர் யூனியன் மட்டுமே மார்க்சியர்கள் செய்ய வேண்டியது என்ற பொருளாதாரப்பார்வை கலாவதியாகிவிட்டது. சாதியும் பெண்விழிப்புணர்வும் பொருளாதாரம் காலாவதியாகி விட்ட பார்வை என்பதை சுட்டுகின்றன. தலித் அரசியல் இதைத்தானே சுட்டுகிறது? ஆக, மேலை மார்க்சியர்கள் அறுபதுகளுக்குப் பிறகும் - சோவியத் யூனியன் உடைந்த பிறகும் வலியுறுத்தியது கலாச்சார மேன்மையைத்தான். சோவியத் ஒன்றியம் தனி தேச அடையாள முக்கியத்துவத்தை அங்கீகரித்தது. அதனால் உடைந்தது. கோர்பச்சேவ் அண்ணா வழியை அனைத்துலக அரசியலில் பின்பற்றினார்.

இந்த கலாச்சாரம் தான் பொருளாதாரத்தை விட முக்கியம் என்ற வாதம் தான், தி.மு.க.வால் இந்திய அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமை. ஆட்சிக்கு வரும்வரை அண்ணாதுரை கூறிய புதிய தத்துவம் இதுதான்.

இந்திய அரசியலானது பொருந்தாத மேற்கத்திய அரசியல் கலைச் சொற்களால் கஷ்டப்பட்டபோது, அண்ணாத்துரை பிராந்தியப் பண்பாட்டை வலியுறுத்தியது முக்கியமான செயல். இந்தியாவுக்குப் பொருத்தமானது கலாச்சார அரசியல்.

நாகாலாந்து, காஷ்மீர், அஸ்ஸாம், அந்தீராவின் விசாலாந்திரா இயக்கம், சிவசேனா கண்ட மகாராஷ்டிரா, இந்தப் பிரச்சனைகளெல்லாம் நாளைய புதிய இந்தியாவின் மாறுபட்ட பிரச்சனைகளைக் காட்டுகின்ற அடையாளங்கள்.

சி.பி.எம். தோழர்கள் பல பிரச்சனைகளில் சரியான நிலைப்பாடு எடுக்கிறார்கள். ஆனால் அனைந்திந்தியாவின் பண்பாட்டு அரசியலைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே. நாளை வரப்போகிற பெரிய பிரச்சனையாக பண்பாட்டு அரசியல் அமையப்போகிறது. எனவே தான் ஈழப்பிரச்சனையில் அவர்கள் எடுக்கும் நிலைப்பாடு சி.பி.ஐ-யை விட வேறுபடுகிறது.

அண்ணாத்துரையையும் அவரது அரசியல் தத்துவத்தையும் சி.பி.எம். பொலிட்பிரோ கவனமாகப் படித்து ஆயும் நாள் வரும். அல்லது தங்கள் மேற்கத்திய தத்துவக்கனவில் மூழ்கி மாய்ந்து போகப் போகிறார்கள். எவ்வளவு பெரிய படிப்பாளிகள் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள்? இருந்தார்கள்? எவ்வளவு பெரிய தியாக வரலாற்றைக் கொண்ட கட்சி அது? ஆனால் தத்துவத்தில் சோடை போகிறதே என்று வருத்தமாக இருக்கிறது.

இன்று வங்காளப் பிராந்திய கலை இலக்கிய ஆய்வை - கேரள வரலாற்றை, பிராந்திய மக்கள் உணர்வை அடிப்படையாகக் கொண்டு அல்லவா ஆய வேண்டும்.

தொல்காப்பியத்தை ஆய்ந்து அதன் வழி ஓர் அனைத்துலகப் பார்வையை நீங்கள் உருவாக்கினார்கள் அணு எதிர்ப்புப் பார்வை வேறு என்னவாம்? அப்படிப்பட்ட அற்புதமான பார்வையைக் கொடுத்த யெச்சூரியும் பிரகாஷ் காரத்தும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் இ.எம்.எஸ் நம்புதிரிபாட் அங்கு செய்தது போல் தமிழக சி.பி.எம், தமிழக வரலாற்றை எடுத்து ஆயாததாலோ என்னவோ தமிழ் உணர்வைப்புரிந்து கொள்ள முடியவில்லை. ஈழப்பிரச்சனையை ஒரு பிரிவினைப் பிரச்சனையாய் பார்க்க முடியாது. அது ஒரு மூலப்படிமப் பிரச்சனை என்று பார்க்க வேண்டும். இதற்கு சொந்த மார்க்சிய அறிவு வேண்டும். மிகப்பெரிய விஞ்ஞான அறிவு என்பது மக்களின் உணர்வைப் புரிந்து கொள்வதுதான்.

இப்போது சி.பி.எம். தோழர்களை அலைக்கழிக்கிற மார்க்சியப் பார்வை, கடன்பெற்ற வெளிநாட்டுப் பார்வை; பழைய பொருளாதாரப் பார்வை; சுயத்தன்மையற்ற பார்வை. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இருக்கிற பார்வையல்ல; 1962-ற்கு பிறகு தமிழக அரசியலில் சி.பி.எம், ஏன் பிற கட்சிகளை அண்டி நிற்க வேண்டியிருக்கிறதென்று இப்போது தெரியும். அகில உலகத்தை ஆச்சரியப்பட வைத்த வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தையும் இயங்கியல் பொருள் முதல்வாதத்தையும் தமிழனின் உணர்வு கலந்த மூச்சில் படிக்கலாம். படிக்கத்தெரிய வேண்டும். ஜீவானந்தத்திற்கு மட்டும் அது சாத்தியமாகியிருந்தது. அந்தக் குரலின் நீட்சியைத்தான் தா.பாண்டியனிடமும் மகேந்திரனிடமும் நான் சில கணங்களிலாவது கண்டேன்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை, ஆதிவாசிகள் போன்ற தனிப்பண்பாட்டு அடையாளம் உள்ள மக்கள் கூட்டத்தினர் எந்த நாட்டிலிருந்தாலும் சுய நிர்ணய உரிமை பெறலாம் என்று கூறியுள்ளது.

அகில உலகமும் மீண்டும் மார்க்சியம் சரியான அறிவுமுறை என்பதைச் சுட்டுகின்றது. பொருளாதாரமும் பண்பாடும் இணைந்த பார்வையே இன்றைய மார்க்சியம். இந்த அடிப்படையில் சுரண்டுகிறவர்களையும் சுரண்டப்படுகிறவர்களையும் வேறு வேறு அளவுகோல்களை வேறு வேறு பிராந்தியங்கள் மூலம் காண வேண்டும். அதுதானே இன்றைய மார்க்சிய அடிப்படை. பெஞ்சமின் History against the grain என்று சொன்ன விஷயம் இத்தகைய பார்வை தானே.

அண்ணாத்துரை அவர்கள் தொடக்கத்தில் தமிழக அரசியல் வானில் முப்பதுகளில் தோன்றி செயல்பட்டபோது அவரது அரசியல் நிலைப்பாடுகளில் வெளிப்பட்ட பல உணர்வுகள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை. மேலே நான் கூறிய சிந்தனைகள் அப்படிப்பட்டவை.

ஆனால் தி.மு.கவே அண்ணாவின் அந்த பாதையில் நடைபோடவில்லை என்பது வேறு. அப்படி நடை போடாது என்பதை உணர்ந்ததால் தானோ என்னவோ அண்ணா அவர்கள் 1967- தேர்தலில் வெற்றி பெற்ற தன் கட்சி வேட்பாளர் எண்ணிக்கை 110-யைத் தாண்டியதும் கவலைகொண்ட முகத்தோடு காட்சி தந்தார்?


ந‌ன்றி: உயிரோசை (12-01-2008)

Tuesday, December 02, 2008

கண்டனக் கவிதைப் போராட்டம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம்.

சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே,
நாள்: 07.12.2008, காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை

நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள். சேர்ந்து குரல் கொடுப்போம்.

இவண்
தமிழ்க் கவிஞர்கள்

தொடர்புக்கு: tamilpoets@gmail.com
9841043438, 9884120284, 9952089604


------------------

{த‌க‌வ‌லை அனுப்பியுத‌விய‌ த‌மிழ‌க‌த்து ந‌ண்ப‌ருக்கு ந‌ன்றி. இன்னொரு ந‌ண்ப‌ர், இதே நாளில் நாட‌க‌ம் ஒன்று செய்வ‌த‌ற்கான‌ முய‌ற்சியில் ஈடுப‌ட்டிருக்கின்றார் (இதே நிக‌ழ்விற்கா என்று தெரிய‌வில்லை). ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், க‌ல‌ந்துகொள்ள‌ப்போகின்ற‌வ‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி.
~டிசே}